Advertisement

மின்னல் – 10

               “இது உங்க வீடா?…” என கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என யோசித்ததெல்லாம் ஒரு நொடி தான். சட்டென முகத்தை பீதியிலிருந்து மாற்றிகொண்டவன்,

“என்னடா எழுந்தாச்சா? செம்ம தூக்கம் போல துவாக்கு…”

விளையாட்டு போல கேட்டுகொண்டே ஜூஸை எடுத்து அவளிடம் நீட்ட வாங்காமல் அவனையே பார்த்தவளுக்கு வியர்த்துக்கொண்ட ஆரம்பித்தது.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மாமா, என்னை உங்க வீட்டுக்கு தான கூட்டிட்டு வந்திருக்கீங்க?…”

“முதல்ல போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு ப்ரெஷ் ஆகிட்டு வா. இந்த ஜூஸை குடி. இல்லைனா சூடா காபி கொண்டுவர சொல்றேன். அது உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்…”

துவாரகாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேண்டுமென்றே பேச்சை திசைதிருப்பியதை கண்டுகொண்ட துவாரகாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“நான் தான் இங்க வரமாட்டேன்னு சொன்னேன்ல. என்னை எதுக்கு இப்படி தூங்க வச்சு தூக்கிட்டு வந்தீங்க? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…”

“துவா, இப்ப எதுக்கு இந்த ஆர்க்யூமென்ட்? நீ மாட்டேன்னு சொன்னா அப்படியே விட்டுட்டு வந்திருவேனா?…”

“விட்டுட்டு வரவேண்டியது தானே? நான் கேட்டேனா? என்னை இங்க கூட்டிட்டு வாங்கன்னு…”

“நீ கேட்டா தான் கூட்டிட்டு வரனுமா? நீ இப்ப என்னோட மனைவி. இந்த வீட்டோட மருமகள். இங்க வராம எங்க போவியாம்? இந்த வீட்ல இருக்கிற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு…” என்றுதான் சொல்லி முடித்தான். அவனை தீப்பார்வை பார்த்தவள்,

“அப்பாவ பார்க்கனும்னு ஆசையா உங்க வீட்டு வாசல்ல வந்து நின்ன அன்னைக்கு என்னை நாயை விரட்டற மாதிரி விரட்டினாங்க. அன்னைக்கு எங்க போச்சு இந்த உரிமை?. உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு என் உரிமையை பத்தி அன்னைக்கே நீங்க பேசியிருக்க வேண்டியதானே?…”

இப்படி படபடவென அவள் பொரிந்து தள்ளுவாள் என எதிர்ப்பார்த்திடாத அதிரூபன் திகைத்து தெளிந்து சிறு சிரிப்போடு அவளருகே அமர்ந்தவன்,

“வாவ்.. துவாக்கு இவ்வளோ பேச தெரியுமா? உனக்கு இவ்வளோ கோவம் வருமா?…” என அவளின் கையை பிடித்துக்கொண்டு அவள் முகம் நோக்கி குனிந்து பார்த்து கேட்கவும் தான் துவாரகாவிற்கே தான் என்ன பேசியிருக்கிறோம் என புரிந்தது.

‘தானா இப்படி இவனிடம் கோபம் கொண்டது?’ என வியப்போடும், கோபப்பட்டு பேசியதற்கு எதுவும் திட்டிவிடுவானோ என்கிற பயத்தோடும் அவனை பார்த்தவள் விழிகள் கலங்க துவங்கின.

“ச்சோ, இதுக்கு போய் அழுவாங்களா? இப்பத்தான் நீ நல்லா பேசறன்னு சந்தோஷப்பட்டேன். நீ என்னனா அதுக்குள்ளே அழ ஆரம்பிக்கிற…”

குழந்தைக்கு கூறுவதுபோல அவள் கண்களை துடைத்துக்கொண்டே கூற அவனை இன்னும் பயத்துடனே பார்த்தவள்,

“கோவமா இருக்கீங்களா?…” என கேட்க,

“எதுக்கு கோவப்படனும்?…”

“இல்ல நான் பேசினதுக்கு…”

“துவா பேச்சுன்றது மத்தவங்களுக்காக என்னைக்குமே இருக்க கூடாது. நமக்கு என்ன தோணுதோ அது நியாயமாக இருக்கும்பட்சத்தில் பேசறது தவறே இல்லை. அதுமாதிரி பேச வேண்டிய நேரத்தில் பேசாம இருக்கிறதும் தப்பு தான். இத்தனை நாள் நீ பேசாம இருந்தது ரொம்பவே தவறு…”

“அப்ப கோவமில்லையா?…” துவாரகா மீண்டும் அதிலேயே நிற்க,

“ஹைய்யோ உனக்கு எப்படி நான் புரியவைக்க?…” என புலம்பியவன்,

“நீ இப்படி பேசறது எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு. உனக்கு மனசுல பட்டதை உன்னோட பிடித்தமின்மையை நீ சொன்ன. எப்பவும் இப்படி தான் நீ பேசனும்னு நான் எதிர்பார்க்கிறேன். நான் திட்டுவேனொன்னு எல்லாம் பயப்பட கூடாது. பேசிடனும். போதுமா?…”

“அப்ப நான் என்ன சொன்னலும் திட்டமாட்டீங்களா?…” என்றவள்,

“அப்ப நான் கிளம்பறேன். அம்மாட்ட போறேன். இங்க இருக்கமாட்டேன்…”

“நீ பேசறது சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசுகொடு ஸீனோட இன்னொரு வெர்ஷன் மாதிரி இருக்கு…”

“நீங்க தான எனக்கு தோணினதை சொல்ல சொன்னீங்க?…” அவள் அவனுக்கே திருப்ப,

“இதை தவிர நீ என்ன வேணும்னாலும் பேசு. இந்த வீட்டை விட்டு போகனும்னு இனி எப்பவும் நீ நினைக்க கூடாது…” குரலில் கடினத்தை வரவழைத்து,

“என்னால இந்த ஜென்மம் இல்லைனா இன்னொரு ஜென்மம் எல்லாம் வசனம் பேசிட்டு இருக்க முடியாது. இந்த ஜென்மத்திலையே உன்னோட மொத்த வாழ்க்கையையும் நான் காதலா வாழ்ந்து பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டேன். புரியுதா?…” கடுமையாக கூற அவனையே பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொள்ள,

“என்னை பிடிக்கும் தான துவா?…” இறங்கி வந்தான் அவளுக்காக.

“இங்க இருக்க எனக்கு பிடிக்காது. பிடிக்கலை…” அவன் ஒன்று கேட்க அவள் ஒன்று கூறினாள்.

“ஓஹ், இந்த வீட்ல இருக்கிற என்னையும் பிடிக்காதுன்னு சொல்லாம சொல்றியா துவா?…” அவன் கேட்ட ஷணம் பதறிப்போய் பார்த்தவள்,

“மாமா நான் எப்ப உங்களை பிடிக்காதுன்னு சொன்னேன்?…”முனகலான குரலில் சொல்ல அதை கண்டு புன்னகை புரிந்தவன்,

“நீ இன்னும் தெளிவா சொல்லலையே என் முயல்குட்டி…” அவளை தன் தோளில் சாய்த்து கூற கண்களை ஒளிர நிமிர்ந்து பார்த்தவளை மீண்டும் சாய்த்துக்கொண்டு,

“ஞாபகம் இருக்கா? முயல்குட்டி எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க என்னை கல்யாணம் பண்ணி என்னோட இருக்கிறதா. ஞாபகம் இருக்கா?…”

அந்த நாளின் நினைவுகளில் கண்கள் கலங்கியவள் சுதாரித்துக்கொண்டு,

“ஆனா அப்ப எனக்கு எதுவும் முழுசா தெரியாதே? அதுக்கு பின்னால தானே எல்லாமே தெரியும்…” என கசப்பாய் சொல்லி,

“இப்பலாம் என்னை ரொம்ப பேச வைக்கிறீங்க. எனக்கு முடியலை. அம்மாட்ட நான் இவ்வளவு பேசினதில்லை. இப்ப இன்னைக்கு நான் எவ்வளவு பேசிட்டேன். அம்மா இருந்திருந்தா பேசவே விட்டிருக்க மாட்டாங்க. நானும் பேசினதில்லை. அம்மா சொன்னா சரின்னுடுவேன். அவ்வளோ தான். என் லைப்ல நான் இவ்வளோ பேசினது உங்க கூட மட்டும் தான். உங்களை பார்த்த பின்னாடி…”

துவாரகா சிணுங்கலாய் கூற பதில் கூறாமல் குறும்பாய் சிரித்தவனுக்கு அஷ்மிதா இருந்தால் என்ன கவுன்ட்டர் குடுத்திருப்பாள் என நினைத்து பார்த்தவனுக்கு அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“ஏன் இப்படி சிரிக்கிறீங்க. எனக்கு பயமா இருக்கு…”

“அடிப்பாவி சிரிச்சா கூடவா பயப்படுவ…” என கேட்டு,

“இந்த நேரம் நீ சொன்னதுக்கு அஷ்மியா இருந்தா செம்மையா கலாய்ச்சிருப்பா. அத நினைச்சு தான் சிரிப்பு வந்திருச்சு…”

“என்ன? என்ன சொல்லியிருப்பாங்க?…” துவாரகாவிற்கே ஆர்வமாக இருக்க,

“அதெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது. அவளே நாளைக்கு வருவா பாரு. வந்ததும் நீ சொன்னதை உன் முன்னாடியே சொல்றேன். நீயே லைவ்ல பார்த்து தெரிஞ்சுப்ப…”

“நாளைக்கா?. அதுவரைக்கும் இங்கயா?…” மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற,

“இங்கதான். திரும்பவும் தொடங்காத துவா…” கொஞ்சம் கடுப்பும் ஆகிவிட்டான் மீண்டும் அவள் ஆரம்பித்ததில்.

“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். நான் போறேன்…” என சொல்லி வேகமாய் துவாரகா எழுந்துகொள்ள,

“அப்பறம் எதுக்குடி ஊரறிய என் கையால தாலி வாங்கின?  நான் கேட்டப்பவே வேண்டாம்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?…”

“நான் வேண்டாம்னு தான் சொன்னேன். நீங்க தான் கேட்கலை. மாமான்னு கூப்பிடு, கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை சொன்னீங்க…”

“மாமான்னு நான் உன்னை கூப்பிட சொன்னேனா? எங்கோ சும்மா இருந்தவனை பார்த்த முதல் தடவையே மாமான்னு வந்து கட்டிப்புடிச்சு எனக்குள்ள காதலை வரவழைச்சு உன் நினைப்பாவே சுத்தவச்சது நீ தான். அப்ப இருந்து உன் நினைப்பாவே இருக்கிற நான் எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டு போவேன்னா நினைச்ச?…”

அதிரூபனின் பேச்சில் பேரதிர்விற்கு ஆட்பட்டவள் பதில் பேசமுடியாத மௌனியாய் நின்றாள்.

“அப்படியெல்லாம் விட்டுட்டு யாருக்கோ விட்டுகொடுத்துட்டு போக என்னை என்னனு நினைச்ச?…”

“உங்கம்மா வேண்டாம்னு சொல்லியும் அப்பவே திரும்ப திரும்ப உன்னை வந்து பார்த்தவன் நான். உனக்கும் என்மேல விருப்பம்னு தெரிஞ்சும் விலக நான் என்ன முட்டாளா? பதில் சொல்லுடி….” அவள் வாயை திறப்பதற்கு முன்,

“அதுக்கும் மேல இவ்வளவு ரிஸ்க் எடுத்து இத்தனை பேரை தாண்டி உன்னை என் மனைவியா இந்த ஊர் உலகம் அறிய மதிப்பா கல்யாணம் செஞ்சிருக்கேன். அன்டர்க்ரவுன்ட்ல இவ்வளவு வேலை நான் பார்த்திட்டு இருக்க பட்டுன்னு விட்டு போறேனா விட்டுடுவேனா?…”

“அதிலும் உன்னை இங்க கூட்டிட்டு வர ஸாரி, ஸாரி, தூக்கிட்டு வர என்னவெல்லாம் பண்ண வேண்டியதானது. அதும் மீடியா யாரும் பார்த்திடகூடாதுன்னு. அஷ்மி என்னை சரியான கிரிமினல்னு சொல்லிட்டா…”

“காதலிச்ச பொண்ணை கல்யாணம் முடிச்சமா பொண்டாட்டியை கொஞ்சினோமான்னு இல்லாம உன்ட்ட கெஞ்சிட்டு இருக்கேன் பாரு என்னை சொல்லனும்…”

அவளிடம் பேசிக்கொண்டே தன்னுடைய ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி அவளருகே வந்து நெருங்கி நிற்க,

“கிட்ட வராதீங்க. நீங்க என்ன பேசினாலும் நான் இங்க இருக்க மாட்டேன். ஏன்னு ஏன் யோசிக்க மாட்டேன்றீங்க. நான் போகனும்…”

இவள் பேச பேச அவனின் வலிய கரங்கள் கொண்டு அவளை வளைத்துக்கொண்டான். அவனின் அருகாமையை என்ன முயன்றும் தவிர்க்க முடியாமல் அவன் மார்போடு மோதி நின்றாள்.

வெறும் பனியனோடு மடித்துக்கட்டிய வேஷ்டியில் அவனிருந்த கோலம் மனைவியாய் அவளின் மனதை மயக்கத்தான் செய்தது. ஆனாலும் அவனை விட்டு திமிறி விலக அவனும் விட்டுவிட்டான்.

அதையும் ஏமாற்றத்துடன் பார்த்தவள் இப்படியே நின்றால் இங்கிருந்து கிளம்ப முடியாது என நினைத்து முயன்று மனதை அடக்கியவள்,

“என்னைக்கோ நடந்ததை எல்லாம் சொல்லி ப்ளாக்மெயில் பன்றீங்க நீங்க. என்னை என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. எனக்கு இங்க இருக்க வேண்டாம்…”

“நான் கூடவா?…” கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளை கூர்மையாக பார்த்தபடி அதிபன் கேட்க,

“உங்களுக்கு தெரியும் மாமா எல்லாமே. ஆனாலும் என்னை படுத்தறீங்க. தப்புதான். நீங்க யார்ன்னு தெரிஞ்ச பின்னாலையும் உங்க மேல ஆசைப்பட்டேன் பாருங்க. தப்புதான். ஆனா ஒன்னு இங்க இருந்தா உங்க அப்பா, இவங்களை நினைச்சே ஒருநாள் நான் செத்துடுவேன்…” என்றவள் முகத்தை மூடி கதறிக்கொண்டு அழ சலனமின்றி அவளை பார்த்தான்.

அத்தனை வேதனை அவன் முகத்தில். இந்த வார்த்தைக்கு பின்னும் அவளை இங்கே நிறுத்திவைக்க முடியுமா? ஆனாலும் அவளே மனது வைத்து போகாமல் இருந்தாலே தவிர யாராலும் அவளை தடுக்க முடியாது என புரிந்துகொண்டான்.

“ஓகே துவா, நீ கிளம்பு…” அவளுக்கு முதுகை காட்டிக்கொண்டு திரும்பி நின்று சொல்ல இன்னும் அதிகமாய் அழுதாள்.

“இப்போ என்ன? அதான் கிளம்புன்னு சொல்லிட்டேனே? என் கூட இருந்தா செத்துருவேன்னு சொல்லி நீ தான் பிளாக்மெயில் பண்ணியிருக்க துவா. அதுக்கு மேலையும் செத்தாலும் என் கூடவே இருன்னு உன்னை இருக்க வைக்க என்னால முடியாது. உன்கூட எப்படியெல்லாம் வாழனும்னு கனவுகண்டிருந்தேன்…”

“மாமா…”

“நீ கூப்பிட வேண்டாம். திரும்பி பார்த்தேனா உன்னை அனுப்பவே முடியாது எனக்கு. ப்ளீஸ், கிளம்புமா…”

சில நொடிகள் நின்று அவன் திரும்பி தன்னை பார்ப்பானா என பார்த்தவள் அவன் இப்போதைக்கு திரும்ப மாட்டான் என உணர்ந்துகொண்டு உயிரெல்லாம் வலிக்க வலிக்க அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

மாடிப்படியில் இறங்க ஆரம்பித்தவள் பாதியில் ரத்தினசாமியும் விஷாலும் மேலே ஏறி வருவதை பார்த்ததுமே உடல் மொத்தமும் நடுநடுங்க ஆரம்பித்தது.

கால்களை அசைக்க முயன்று தோற்றவள் அப்படியே நிற்க அவளை அப்போதுதான் பார்த்த ரத்தினசாமி கோவத்தோடு அவளை முறைத்து பார்க்க விஷால் என்ன செய்வது என அப்படியே நின்றான்.

அவனுக்கு இப்போது ரத்தினசாமியை கீழே கூட்டி செல்வதா? இல்லை துவாரகாவை கடந்து மேலே செல்வதா என குழம்பினான்.

ஏனோ முன்பு போல் துவாரகாவை பார்த்ததும் எழும் வெறுப்புணர்வு இப்போது எழவே இல்லை.

அதிலும் தன் வீட்டில் தன் அண்ணனின் மனைவியாய் அவளை பார்த்த பின் சுத்தமாய் குன்றி போய் இருந்தான். இப்போதைக்கு தன் அண்ணன் தன்னிடம் பேசிவிட்டால் மட்டும் போதும் என்று தோன்றியது.

ரத்தினசாமியின் கோபம் அதிகரிப்பதை கண்கூடாய் கண்டவள் அவர் மேலே ஏற அடுத்த படியில் காலை எடுத்துவைக்கவும் அடித்துப்பிடித்துக்கொண்டு மீண்டும் அதிரூபனை நோக்கி ஓடிவந்தாள்.

அவனுக்கு தெரியும் கீழே ரத்தினசாமியை பார்த்தால் அங்கிருந்து கிளம்ப மாட்டாள் என. அதற்காய் அவளுக்காக அறையில் வாசலிலேயே காத்திருக்க புயல் வேகத்தில் விரைந்து வருபவளை கண்டு சிரிப்பு பொங்கியது அவனுக்கு.

“கடவுளே, பொண்டாட்டி புயல் வேகத்துல வரா. என்கிட்டே வரதுக்குள்ள குறுக்க மணல் லாரி எதுவும் வராம இருந்தா சரி…” என வானத்தை பார்த்து வாய்விட்டே வேண்டினான்.

வந்த வேகத்தில் அவனை கட்டிக்கொண்டவள் கண்களை இறுக மூடிகொண்டாள்.

“மாமா, உள்ள போங்க. எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ் உள்ள கூட்டிட்டு போங்க மாமா…” என கத்த அவனோ அசையாமல் ரத்தினசாமியை பார்க்க காத்திருந்தான்.

அவர் தலை தெரிந்து அவரும் தன்னை பார்த்த பின்பு அவரை கவனிக்காதவன் போல கள்ளச்சிரிப்போடு உள்ளே வந்து கதவடைத்துக்கொண்டான். அதே நேரம் விஷால் இந்தப்பக்கம் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவனுக்கு தெரியும் துவாரகாவை இனி தன் அண்ணன் தனியாக விடமாட்டன் என்று. அவளுக்கு பாதுகாவலனாக எப்பொழுதும் அவனின் பார்வை வட்டத்தில் தான் அவளை வைத்திருப்பான் என்று.

துவாரகா தனியாக வெளியில் வந்தால் அங்கே அவனும் இருப்பான் என்று உணர்ந்துகொண்டவன் குனிந்த தலை நிமிராமல் செல்ல ரத்தினசாமியோ மகனை பார்த்த நொடி கண்களை திருப்பிக்கொண்டார்.

அவன் இப்படி நிற்பான் என கனவா கண்டார்? துவாரகா மீது அத்தனை நிமிடம் இருந்த கோபம் பனியாய் கரைந்துவிட சங்கடத்துடன் சென்றுவிட்டார்.

மனைவியை உள்ளே அழைத்து வந்தவன் அவளை அங்கே அமரவைத்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்துவந்து கொடுக்க அவனின் இடையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“போதும் துவா. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் பயந்து பயந்து அழுகையில உன்னை கரைப்ப? இப்படி தைரியமில்லாத, முதுகெலும்பில்லாத பொண்ணாவா உன்னை உங்கம்மா வளர்த்திருக்காங்க? ஷேம் ஆன் யூ…”

அதிரூபன் அவளுக்கு எப்படியாவது புரியவைத்துவிடவேண்டும் என்கிற நோக்கில் அவளுக்கு வலித்தாலும் பரவாயில்லை என கடுமையாக பேச ஆரம்பித்தான்.

“உன்னை ஓட ஓட விரட்டறாங்களே? இவங்க முன்னாடி வாழ்ந்து காமிக்கனும்னு ஏன் உனக்கு தோணலை?. நீயும் உன் அம்மாவும் பயந்து ஒதுங்கி போக போய்தான் இவ்வளவு ஆட்டம் போட்டாங்க எல்லாரும். உங்கம்மாவும் பயந்து உன்னையும் இப்படி பயம்காட்டி…”

“இவங்கட்ட எல்லாம் வாழ்ந்து காமிக்கனும்னு எனக்கு ஏன் தோணனும்? விலகி போனா விரட்டுவாங்களா?…”என்றவள்,

“எங்கம்மா ஒன்னும் பயந்து போகலை. துஷ்டரை கண்டால் தூர ஒதுங்கி போகனும்னு தான் சொல்வாங்க. அதான் நாங்க விலகி நின்னோம். என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. இனி எங்கம்மாவை பத்தி பேசாதீங்க…”

“துவா…”

“ஆமா நான் பயந்தாங்கொள்ளி தான். ஆனா ஏன் இப்படி பயந்து சாகறேன்? எல்லாம் உங்க வீட்ல இருக்கிறவங்களால தானே…”

“நான் இல்லைன்னு சொல்லலையேடா. இனியும் எதுக்கு பயப்படனும்? அவங்க முன்னாடி நீ நல்லா வாழ்ந்து காமிக்கனும்னு தான் சொல்றேன்…”

“அது எனக்கா தான் தோணனும். திடீர்ன்னு வந்து நீ இப்படி ஆகிடுன்னு சொன்னா? நீங்க ஈஸியா சொல்லிட்டு போய்டுவீங்க. ஆனா நான்?…”

“துவா…”

“இன்னைக்கு நீங்க என் கழுத்தில தாலி காட்டிட்டா மட்டும் இத்தனை வருஷம் நடந்தது இல்லைனா ஆகிடுமா? இல்ல இனி எல்லாமே மாறிடுமா? என்னோட அம்மா, அம்மாக்கு இது கண்டிப்பா பிடிக்காது…”

“புரியுதுடா…” சமாதானமாக அதிபன் பேச,

“சத்தியமா இது யாருக்கும் புரியாது. இப்ப மத்த எல்லாரையும் விட நான் ரொம்ப பயப்படறது அம்மாக்கு தான். உங்களை பார்த்து பேசினதுக்கே நடந்தது வேற. இப்ப இந்த வீட்டுக்குள்ள நான் இருக்கிறது தெரிஞ்சா என்ன பண்ணுவாங்களோ?…”

அகிலாவை நினைக்கும் பொழுதே பயத்தையும் மீறிய ஒரு பயங்கரம் அவள் கண்முன்னே தோன்றி அவளை கலவரப்படுத்தியது.

“எனக்கும் தெரியும் கல்யாணம்னா என்ன? கல்யாணம் ஆகிட்டா என்னவெல்லாம் அந்த குடும்பத்துல நடக்கும்னு. ஒரு குடும்பமா நாங்க வாழலையே தவிர எனக்கும் தெரியும் மாமா. ஆனா இத்தனையும் மீறி நான் உங்களை கல்யாணம் செய்திருக்கேன்னா அதுக்கு காரணம்…”

பேசிக்கொண்டே வந்தவள் அவனின் விழிகளில் வழிந்த காதலில் பேச்சின்றி போனாள். அவன் இவளை சுவாரசியமாக பார்த்தபடி,

“ஹ்ம்ம் காரணம்?…” என ஊக்குவிக்க கண்களை மூடிக்கொண்டு திரும்பிவிட்டாள். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்,

“இப்ப நீ சொன்னதை எதையுமே மறுக்க மாட்டேன். இதுவரை நீ மிஸ். துவாரகா அகிலவேணியா இருந்திருக்கலாம். இனி நீ மிசஸ்.துவாரகா அதிரூபன். இப்படித்தான் இனி உன் வாழ்க்கை. அதுவும் உனக்கு பிடிச்ச மாதிரி மாறத்தான் போகுது…”

“அம்மா ஏத்துக்கமாட்டாங்க மாமா. பயமா இருக்கு…” முகம் திரும்பாமலே அப்படியே விசும்பலுடன் அவன் தோள் சாய அகிலாவின் பிடிவாதம் அறிந்தவன்,

“பார்த்துக்கலாம் விடு. நான்தான் இருக்கேன்ல…” என சமாதானம் செய்தவனுக்கும் அகிலாவை எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற கவலை உள்ளூர கரையானாய் அரிக்கத்தான் செய்தது.

ஒருவழியாக அழுகையை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்ட அவளோடு அவனுமே தன்னறையை பார்த்தான். ஏதோ புதுவித உணர்வொன்று அவனின் மனதை ஆக்கிரமிக்க சுகமாய் அனுபவித்தான்.

“எதாச்சும் வேணுமா துவா?…” அவள் வாயை திறப்பேனா மௌனம் சாதிக்க என இருக்க அவனாகவே கேட்டான். அவனை பார்த்துவிட்டு திருதிருவென விழித்தாள்.

“ரெஸ்ட் ரூம் போகனுமா?…” அவனாகவே ஊகித்து கேட்க ஆமாம் என தலையாட்டியவள்,

“குளிக்கனும்…” ஒற்றை வார்த்தையாக சொல்ல,

“அதுதான் பாத்ரூம். போய் குளிச்சுட்டு வா. உனக்கு ட்ரெஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்திருக்கேன். இப்போதைக்கு போட்டுக்கோ. அப்பறமா நாம போய் ஷாப்பிங் பண்ணலாம்…” என சொல்லி அவளுக்கு தேவையானதை எடுத்துக்கொடுக்க வாங்கியவளின் முகம் சிவந்துபோனது.

இன்னும் அங்கேயே ஆணியடித்ததை போல நிற்க புரியாமல் எதற்கு என பார்த்தவன்,

“இன்னும் ஏதாவது வேணுமாடா?…”

“இல்ல நான் பாத்ரூம்ல ட்ரெஸ் சேஞ் பண்ணமாட்டேன். ஈரத்துல ட்ரெஸ் மாத்தறது பிடிக்காது…” அவனை நிமிர்ந்து பார்க்காமல் கையிலிருந்த உடைகளை பார்த்தபடி தயக்கமாய் பேச கண்கள் மின்ன பார்த்தவன்,

“அதுக்கு நான் என்ன பண்ணனும்?…” அதிபனின் குரலில் திடீரென உல்லாசம் குடிகொள்ள பதில் சொல்லமுடியாமல் திணறினாள்.

“ஓகே இப்ப என்ன பண்ணனும்? இந்த ரூமை விட்டு போய்டவா?…”  

அவன் கேட்ட நிமிடம் பயந்துபோனவள் அவனருகே வந்து நின்றுகொண்டு,

“என்னை தூக்கிட்டு வந்துட்டு தனியா விட்டுட்டு போறேனா என்ன அர்த்தம்?. இதுதான் நீங்க பார்த்துக்கறதா மாமா?…” என கோபப்பட,

“இது என்னடா வம்பா போச்சு. நீ தான சொன்ன. அங்க ட்ரஸ் மாத்த முடியாதுன்னு. அதான் உனக்கு கஷ்டமேன்னு ஹெல்ப் பண்ணலாமேன்னு வெளில போறதா சொன்னேன். வெளிலனா இங்க தான்…” இதற்கு என்னதான் சொல்வாள் என பார்க்க சொல்ல,

“எனக்கு கஷ்டம்னு நான் எப்ப சொன்னேன்? அதெல்லாம் வெளில போகவேண்டாம்…”

“அப்போ கஷ்டம் இல்லைன்றயா?…” மீண்டும் வம்பாய் கேட்க,

“நீங்க உட்காருங்க இங்க. நான் குளிச்சுட்டு வரேன்…” அவனை உக்கார்த்திவிட்டு அவன் எதிர்பாராத நேரம் அவனின் கண்களை கட்டிவிட்டு வேறு செல்ல,

“என்னால இதை கழட்ட முடியாதுன்னா நினைக்கிறீங்க மிசஸ் அதிரூபன்…” குறும்பு கொப்பளிக்க கேட்டவனை பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்தவள்,

“கழட்ட மாட்டீங்கன்ற நம்பிக்கை தான்…”

“ரொம்ப நம்பாதேம்மா. இப்படியே இருக்கமாட்டேன்…” அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவள் குளிக்க சென்றுவிட முகம் கொள்ளா புன்னகையோடு அப்படியே அமர்ந்திருந்தான்.

துவாரகா குளித்து வந்து உடை மாற்றிய பின் அவளுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்து படுக்க வைத்தவன் இரவு உணவிற்கு கூட கீழே இறங்கி வரவில்லை. ஏனோ அதன் பின் கூட மனம் இலகுவாகாமல் கனத்து நகர்ந்தது அந்த நிமிடங்கள்.

துவாரகாவிற்கு ஓன்று மட்டும் தெளிவாக புரிந்தது. அதிபனிடம் மட்டுமே அவள் அவளாக இருக்கிறாள் என்பது. அவனிடம் மட்டும் தான் நினைத்ததை பேசி தோன்றுவதை சொல்லி இருக்கிறாள்.

இதே அகிலாவிடம் கூட இத்தனை வெளிப்படையான பேச்சுக்கள் என்பது வெகு குறைவு. அவர் சொல்வதை கேட்பாள். அவ்வளவே. இவனிடம் மட்டும் எப்படி என யோசித்துக்கொண்டே துயிலுலகம் அடைந்தாள்.

ஆனால அதிரூபனுக்கு மருந்திற்கும் கூத உறக்கம் கண்களை அண்டவில்லை. நேற்றுவரை எப்படி இவளை தன் மனைவியாய் கொண்டுவருவது என்கிற சிந்தனை மட்டுமே.

ஆனால் இன்றோ இக்குடும்பத்தில் எப்படி இவளை ஒன்றவைப்பது என்கிற யோசனை. அருகில் சலனமின்றி தூங்குபவளின் முகத்தில் தூக்கத்தில் கூட பயரேகைகள் விழித்துதான் கிடந்தன.

உறக்கத்தில் கூட அவ்வப்போது பதறி எழுந்துகொள்பவளை தட்டிகொடுத்து தூங்கவைத்தான். அவளின் உளறல்கள் மொத்தமும் விஷாலிடம் கெஞ்சியவையாகவே இருக்க கேட்டவனின் ரத்தம் கொதிக்கத்தான் செய்தது.

இன்று நேற்றல்ல ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து இப்படித்தான் பயந்து நடுங்கி அவனோடு ஒன்றுவாள். நிம்மதியான உறக்கம் என்பதே அவளுக்கு இல்லாமல் தான் போயிற்று.

சில நேரங்களில் கட்டுப்பாடில்லாமல் உறக்கத்தில் பதறி எழுந்து வாய்விட்டு அலறி துடிக்கும் பொழுதுகளில் தூக்க மருந்தை தான் கொடுக்கவேண்டியதாக இருக்கும்.

இப்பொழுது இங்கேயும் அதைப்போல எழுந்து தன்னை தேடி தான் இல்லாவிட்டால் அவள் நிலை மிகவும் மோசம் என எண்ணி அங்கிருந்து நகராமல் அவளுடனேயே இருந்தான்.

கீழே குடும்பத்தினர் இவர்கள் வருவார்கள் என பார்த்து பார்த்து காத்திருந்துவிட்டு சந்தியாவை அனுப்பிவைத்தனர். அவள் வந்து கதவை தட்டியதும் எழுந்து ஷர்ட்டை அணிந்துகொண்டு சென்றவன்,

“சாப்பாடு வேண்டாம்டா. அண்ணி தூங்கறா. நீங்க எல்லாரும் சாப்ட்டுட்டு தூங்குங்க…” என அனுப்ப சந்தியாவின் பின்னே வந்த பத்மினி,

“நாங்க எல்லாரும் சாப்ட்டாச்சுப்பா அதி. நீ கீழ போய் வெய்ட் பண்ணு. நாங்க துவாவை…” அவரை பேசவிடாமல் இடைமறித்தவன்,

“அம்மா வேண்டாம். அவ தூங்கட்டும்…” என்று சொல்லியும் பத்மினி அங்கேயே யோசனையோடு நிற்க,

“புரியுதும்மா. இன்னைக்கு இங்க வச்சு எதுவும் வேண்டாம். நீங்க போய் தூங்குங்க. நாளைக்கு பேசலாம்…” பட்டென கூறிவிட அதற்கு மேல் பேசமுடியாமல் சென்றுவிட்டனர்.

மீண்டும் வந்து படுத்தவன் லேசாக களைப்பில் கண்ணயர்ந்துவிட்டான். நள்ளிரவை எட்டும் நேரம் மொபைல் ரீங்காரமிட எடுத்து பார்த்தால் அஷ்மி.

‘இந்த நேரத்தில் எதற்கு அழைக்கிறாளோ?’ என வேகமாய் அட்டன் செய்ய,

“அதி, கீழ வாடா…” குழறலாய் அஷ்மிதாவின் குரல்.

“அஷ்மி. என்னாச்சு உனக்கு? உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு? எங்க வர?…” மீண்டும் கலையாத உறக்கத்தோடு கேள்விகளை அடுக்க,

“டேய், உன் வீட்டு ஹாலுக்கு வாடா என் டொமேட்டோ…” என்று கூறி போனை வைத்துவிட குரல் வேறு ஏதோவாக தெரிய அடித்துபிடித்து கீழே சென்றான் அதிரூபன்.

அங்கே அஷ்மி கையில் பாட்டிலுடன் நின்றுகொண்டிருக்க பார்த்தவனுக்கு மூச்சே நின்றுபோனது.

“வாடா புது மாப்பிள்ளை…” என அழைத்தவள்,

“எங்கிருந்தாலும் வாழ்க…” என பாட அதிரூபனின் விழிகளோ தெறித்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியில் விரிந்தது.

“அஷ்மி…”

 

மின்னல் தெறிக்கும்…

 

Advertisement