Advertisement

மின்னல் – 1

               பகல் முழுவதும் வான் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடுதேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலைகதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்துகொண்டிருந்தது.

பெங்களூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர்ரக ஒய்வு விடுதியில்   கவிழ்ந்துகொண்டிருக்கும் இரவுக்காய் விளக்கொளியை ஒளிரசெய்து அந்த ஒளிவெள்ளமானது அவ்விடத்தையே பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது.

      மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா

என்ற பாடல் அந்த பார்ட்டி ஹால் முழுவதும் புயலென ஆக்கிரமித்து அங்கிருந்த இளைஞர்களை சுழற்றியடித்துக்கொண்டிருந்தது. அனைவரும் ஆட்டம் பாட்டமென ஆல்கஹாலினால் மிதந்துகொண்டிருந்தனர்.

அந்த அழகிய ரெசார்ட் விட்டு வெளியே வந்த அதிரூபன் ஆறடிக்கும் சற்றே அதிகமான உயரத்துடன் ஸ்டைலிஷ் லுக்கோடு பார்ப்பவரின் மனதை கவரும் விதமான அழகன்.

“தேங்க்ஸ் மச்சி, நீ வந்தது எனக்கு அவ்வளோ சந்தோஷம்…” தன் நண்பனை அணைத்து விடுவித்த ப்ரனேஷின் தோளில் தட்டிய அதிரூபன்,

“நீ என் க்ளோஸ் ப்ரெண்ட். உனக்கு வராம இருப்பேனா?…” கூறி புன்னகைத்தவன்,

“உன்னோட ரிசார்ட் ரொம்ப அழகா இருக்கு. இன்னொரு முறை கண்டிப்பா வந்து ஸ்டே பண்ணனும்…” என அதிரூபன் சொல்ல,

“ஈஸிட், வித் ப்ளஷர். இருந்தாலும் நான் நினைத்ததே வேற. நீ நாளைக்கு கல்யாணத்துக்கு டைம்க்கு தான் வருவன்னு நினைச்சேன்…” என்றதும் அதிரூபனின் புன்னகை மேலும் விரிந்தது.

“உன் பிஸி ஷெட்யூல் அப்படி. நான் வேற என்ன நினைக்க?…”என சொல்லிக்கொண்டிருக்க,

“மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?…” என்று தள்ளாடியபடி வந்த தம்பி கவினேஷை பார்த்து முறைத்த ப்ரனேஷ்,

“அடங்கமாட்டியாடா நீ? உன்னை யாரு இங்க கூப்பிட்டா?…” என திட்டிக்கொண்டே அவனை உள்ளே அனுப்பிவிட்டு,

“சாரிடா, அவனுக்கு கொஞ்சம் ஓவராகிடுச்சு…” மன்னிப்பை கோரும் விதமாய் கேட்க, அதை கண்டுகொள்ளாதவனாய் சிறு புன்னகையோடு,

“ஓகே, நீ போய் மத்த ப்ரெண்ட்ஸ் எல்லோரையும் கவனி. நான் கிளம்பறேன். பார்த்து சேஃபா கிளம்புங்க எல்லோரும். கல்யாண மாப்பிள்ளை நீ. ஓவரா குடிச்சுடாதே…”

“கண்டிப்பா, நாங்க பார்த்துக்கறோம். நீ தான் உடனே கிளம்பிட்ட…” லேசாய் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல,

“நைட் பிஸ்னஸ் மீட் ஒண்ணு இருக்கு ப்ரனேஷ்…”

அதற்கு மேல் அதிரூபனை வற்புறுத்த முடியாது என தெரியும் என்பதால் அவனின் காரின் அருகே வரை வந்து விடைகொடுக்க அதற்குள் அதிரூபன் காரின் லாக்கை விடுவிக்க அவனின் மொபைல் இசைத்தது.

“நீ உள்ளே போ ப்ரனேஷ். நான் பேசிட்டு கிளம்பிடுவேன்…” தயக்கமாய் நின்றவனை கண்டு,

“அட கிளம்புடா, எனக்கு போக தெரியும். நீ போய் மத்தவங்களை கவனி…” அவனை அனுப்பிவிட்டு மொபைலை ஆன் செய்து காரில் சாய்ந்துகொண்டே பேச ஆரம்பித்தவன் பேசிக்கொண்டே சற்று தூரம் வந்துவிட்டான்.

பேசி முடித்ததும் சுற்றிலும் பார்க்க, இயற்கை அழகு மொத்தமாய் குடிகொண்டதை போல அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கார்டனை ரசனையோடு பார்த்தான்.

“லவ்லி பிளேஸ்…” அவனின் அழுத்தமான இதழ்கள் மெலிதான முணுமுணுத்து  மெச்சுதலான பார்வையோடு ஒப்புக்கொண்டது.

சுற்றிலும் பார்த்தபடி அங்கிருந்து நகர சட்டென்று ஒரு சலசலப்பு. உடலில் தானே ஒரு விரைப்பு நொடியில் பரவ கண்கள் கூர்மையானது.

ஒவ்வொரு அடியாய் எடுத்துவைத்தவன் சத்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்து சட்டென மரத்தின் பின்னால் நின்றவனை இழுத்து முன்னிறுத்தினான்.

“விஷால் நீயா?…” அதிர்ந்தவன் விளக்குகளின் வெளிச்சத்தில் தெரிந்த அவனின் தோற்றத்தில் இன்னும் அதிர்ந்தான்.

தலைமுடி கலைந்து சட்டையின் ஒரு பகுதி கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. கன்னத்தில் அடிவாங்கிய தடமும் கையில் யாரோ நகத்தால் பிராண்டிய ரத்த வரிகளும் தெளிவாய் தெரிந்தது.

“என்னடா இது? என்ன பிரச்சனை?…” ஆராய்ச்சியோடு கூடிய பார்வையில் விஷால் என்பவன் தான் ஆடிப்போனான்.

“அண்ணா, வந்து…” வார்த்தைகள் வராமல் தடுமாற உடல் நடுங்கியது.

“நீ எப்படி இங்க வந்த? நீ ப்ரெண்ட்ஸ் கூட கோவா ட்ரிப் போறதா தான சொன்னாங்க வீட்ல. இங்க என்ன பன்ற?…” கோபமான குரலில் வினவ அதற்குள் மேலும் இருவர்  விஷாலின் அருகில் வர அவர்களையும் பார்த்து,

“சந்தோஷ்?…” இடுங்கிய கண்களோடு அதிரூபன் கேட்க நடுநடுங்கி போயினர் இருவரும்.

“அத்தான், நீங்க…” சந்தோஷ் விழிகளில் அவனை கண்டதும் அதிர்ச்சியோடு சிறு நிம்மதியும் பரவ அதை சட்டென கண்டுகொண்ட விஷாலுக்கு கோபம் கொந்தளித்தது.

சந்தோஷின் பின் நின்றிருந்த அர்னவ் அதிரூபனை நிமிர்ந்தும் பார்த்தானில்லை. பார்வை மொத்தமும் விஷாலிடமே மையம் கொண்டிருந்தது.

“அர்னவ் ஸ்பீக் அவுட்…” என்ற மிரட்டலில் உடல் வெடவெடக்க பதறியவன் வாய் திறக்கும் முன்பே விஷால்,

“நத்திங் அண்ணா, இங்க ப்ரெண்ட்ஸ் கூட வந்தோம். இன்னொரு ப்ரெண்டை பிக்கப் பண்ணிட்டு இங்க இருந்து அப்படியே கோவா கிளம்பறதா ப்ளான். வந்த இடத்துல கொஞ்சம் தகறாரா ஆகிடுச்சு. அது அடிதடி வரை போய்…” என,

“யார் அவன் உன் மேலையே கை வச்சவன்?…” கோபத்தில் உறுமிய அண்ணனை கண்டு உள்ளுக்குள் நடுக்கமே தான் என்றாலும்,

“அண்ணா, இது ப்ரெண்ட்ஸ் எங்களுக்குள்ள எதிர்பாராத விதமா நடந்தது. பெருசு பண்ண வேண்டாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நாங்க மேனேஜ் பண்ணிப்போம்…” என்ற விஷால்,

“என்னங்கடா சைலன்ட்டா நிக்கிறீங்க? அண்ணாட்ட சொல்லுங்க… என தூண்ட,

“ஆமா அத்தான். பாவத்த. விட்ருங்க. பொழைச்சு போகட்டும்…”சந்தோஷ் பல்லை கடித்துக்கொண்டு பேச அதில் புருவம் உயர்த்திய அதிரூபன்,

“சந்தோஷ்…”

“அண்ணா அவனுக்கு கோவம் இன்னும் குறையலை. அதான் இப்படி பேசறான்…” விஷால் கொடுத்த தைரியத்தில் அர்னவ் வாயை திறக்க,

“இப்போ ட்ரிப்பை கண்டினியூ செய்யறீங்களா? இல்லை ட்ராப்பா?…”

“ட்ராப் தான் அத்தான். ஊருக்கு கிளம்பறோம். இந்த சுட்சுவேஷன்ல ட்ரிப் போக வேண்டாம்னு தோணுது…” மற்ற இருவரையும் முந்திக்கொண்ட சந்தோஷ் முடிவாக சொல்லிவிட,

“குட். நானும் அதைத்தான் நினைச்சேன். கிளம்புங்க. பர்ஸ்ட் ஹாஸ்பிடல் போய் பர்ஸ்ட் எய்ட் முடிச்சுட்டு போகலாம். கம் ஆன்…” அதிரூபன் முன்னே நடக்க,

“அத்தான் நீங்க கிளம்புங்க. உங்களுக்கு பிஸ்னஸ் மீட் இருக்கு தானே? நாங்க பார்த்துக்கறோம். கார்லயே மெடிக்கல் கிட் இருக்கே. நத்திங் வொர்ரி…” சந்தோஷ் கூற,

“ஆர் யூ சூர்…” என்க,

“எஸ் அத்தான். நாங்க பார்த்துக்கறோம். நீங்க மீட்டிங் முடிச்சிட்டு அப்டியே இன்விடேஷன்ஸ் கொடுத்துட்டு வாங்க. இப்பவே முடிச்சா தானே? இல்லைனா திரும்ப வந்து குடுக்க வேண்டியதாகிடும்…” என சந்தோஷ் சொல்ல,

“ஆஹாங், அவ்வளோ பெரிய மனுஷனா நீ?…” என சிரிப்போடு கேட்க,

“பின்ன? மாப்பிள்ளை நீங்களாச்சே. அம்மா சொல்லியிருக்காங்க அத்தான். கல்யாணத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னால இருந்து நீங்க எங்கயும் வெளில போகக்கூடாதுன்னு. பந்தக்கால் ஊன்றிட்டா நோ அவுட்டிங். சோ இன்னும் ஒன் மந்த் தான் இருக்கு. அதுக்குள்ளே உங்க ஷெட்யூல் எல்லாம் முடிச்சிடுங்க…” என,

“டேய் அதுக்குன்னு நீங்களா எப்டி ட்ரைவ் பண்ணி?…”

“அத்தான், இங்கயே ட்ரைவர் கிடைப்பாங்க. நான் அதுக்கு ஏற்பாடு செஞ்சிடறேன். சோ நீங்க வொர்ரி பண்ணிக்க வேண்டாம்…” மீண்டும் உறுதியாய் கூறியவனின் தோள் தட்டிய அதிரூபன்,

“பார்த்து போகனும். ஸ்லோவா ட்ரைவ் பண்ண சொல்லு. ட்ரைவர் டீட்டய்ல்ஸ் எனக்கு சென்ட் பண்ணிடு…” என சொல்லி மற்ற இருவரையும் பார்த்து,

“வலிக்குதாடா?…” குரல் இறங்கிப்போய் ஒலித்தது. அவனின் பாசத்தில் கண்கள் கசிய,

“இல்லைண்ணா, வலியெல்லாம் இல்லை. பாருங்க காயமும் அவ்வளவா இல்லையே. சின்னப்பிள்ளைங்க சண்டை மாதிரி லேசா தான்…”

அண்ணனின் கவலை பொறுக்காமல் தம்பிகள் மாற்றி மாற்றி சமாதானம் செய்ய சந்தோஷிற்கு தான் எரிச்சலாய் போனது.

“கிளம்பலாம் அத்தான்…” எரிச்சல் மண்டிய மனதை காட்டாமல் அமைதியாய் சொல்ல,

“ஓகே பாய்ஸ். டேக் கேர்…” என்று சொல்லி அதிரூபன் கிளம்பவும் தான் மூவருக்கும் சென்ற உயிர் திரும்பி வந்ததை போல் இருந்தது.

தன் அண்ணனின் கார் கிளம்பி செல்லும் வரை பொறுமையாக நின்றிருந்த விஷால் கார் அவ்விடத்தை விட்டு வெளியேறிய நொடி பரபரப்பாகிவிட்டான்.

“இன்னைக்கு விடக்கூடாதுடா. எங்க ஒளிஞ்சிருந்தாலும் இன்னைக்கு கண்டுபிடிச்சு ஒருவழி பண்ணாம விடமாட்டேன்…”ஆத்திரத்தில் பொங்கிக்கொண்டே தேட,

“டேய், டேய் மடையனுங்கடா நீங்க. இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சும் இங்க இருந்து எஸ்கேப் ஆகாம வந்து என்னை பிடிச்சுக்கோன்னு இங்கயே காத்திட்டு இருப்பாங்களாக்கும்? இந்நேரம் பறந்திருக்கமாட்டாங்க…”

சந்தோஷ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேச அர்னவ் அவனை கொலைவெறியோடு முறைக்க,

“போதும்டா, கிளம்புவோம். அதான் மண்ணை கவ்வியாச்சுல. இன்னும் இங்கயே நின்னு ஸீன் எதுக்கு? போறவன் வரவன்லாம் ஒருமாதிரியா பார்க்க போறானுங்க…”

“உனக்கு ரொம்ப சந்தோசம் போல?…” விஷாலின் நக்கலில்,

“நிச்சயம் இல்லைடா. அத்தான்கிட்ட உண்மையை சொல்லியிருந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன்…”

“ஏன் சொல்லியிருக்க வேண்டியது தானே?…”

அர்னவ் அப்படி கேட்டாலும் அவனுக்கு தெரியும். உயிரே போனாலும் சந்தோஷ் நடந்ததை சொல்லியிருக்கமாட்டான் என்பதில் அத்தனை நிச்சயம் நிறைந்திருக்க அந்த இறுமாப்பில் சந்தோஷை சீண்ட,

“ஏண்டா கேட்கமாட்ட. எல்லாம் என் நேரம். நான் சொல்லியிருந்தா இந்நேரம் நீங்க ரெண்டு பேரும் இங்கயா இருந்திருப்பீங்க? உங்கள விட்டுட்டு என்னால மட்டும் இருந்திடவா முடியும்?…”

கேலிபோல் கூறினாலும் அதுதான் உண்மை. ஒருவரை பிரிந்து மற்றவர்கள் இருக்கவே முடியாது. அப்படி ஓர் பாசப்பிணைப்பு. அவர்களின் அன்பின் அளவை வார்த்தைகளில் வரையறுக்க இயலாது.

அந்த அன்புதான் இன்று இவ்விடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. தங்களின் ஒழுக்கம் தவறாத வளர்ப்பையும் மீறிய இப்படி ஒரு செயலை செய்யும் அளவிற்கு ஊக்கியது.

சந்தோஷின் குரலில் தென்பட்ட வேதனையில் மற்றவர்கள் கலங்கினாலும் முதலில் அர்னவ் தான் சுதாரித்தான்.

“நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா உன்னத்தான்டா கட்டியிருப்பேன். இப்படி ஏமாத்திட்டியே? உன்னை போல ஒருவன் எங்களுக்கு கிடைப்பானா?…”  என சீண்ட,

“இப்போ மட்டும் என்ன? பொண்ணா வேணும்னா பொண்ணாவே மாத்திடுவோம்…” அர்னவின் தோளில் சாய்ந்துகொண்டு சந்தோஷை பார்த்து கண்ணடித்த விஷால்,

“உனக்கு ஓகேவா?…” என கேட்க,

“சனியனே, நீ லாம் திருந்தவே மாட்ட…” என்று அவனை அடிக்க இருவரும் சேர்ந்து ஹேய்ய்ய்ய் என கத்திக்கொண்டே சந்தோஷை தூக்கி சுற்றினர்.

அந்த நிமிடம் அவர்கள் வந்தது, நடந்தது அனைத்தையும் மறந்து அடுத்து நடக்கவிருப்பதை பற்றி கவலைகொள்ளாமல் குதூகலித்தனர்.

ஆனால் அவர்களை போல அப்படியே விட்டுவிட்டு செல்ல அதிரூபன் சாதாரணப்பட்டவன் இல்லையே. அவனின் கண்ணிலிருந்து ஒன்று தப்புவதா? இல்லையே.

‘சம்திங் ராங்’ அவனின் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. காரில் சென்றுகொண்டே பிரனேஷிற்கு அழைத்தவன் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு இரவிற்குள் முடித்துவிடுமாறு சொல்லி போனை வைத்தான்.

ரிசார்ட்டில் வைத்து எந்த ஆராய்ச்சியும், விசாரணையும் வேண்டாம் என்று தான் அவர்களிடம் அதிகம் துருவாமல் அங்கிருந்து கிளம்பினான். ஆனால் அப்படியே விட்டுவிட அவன் தயாரில்லை.

“என் தம்பிகள் மேல் ஒருவன் கை வைப்பதா?…” கோபம் குமிழிட சென்றுகொண்டிருந்தான் அதிரூபன்.

ஆம், அதிரூபனை பொறுத்தவரை அது கைகலப்பு என்றே நினைத்திருக்க அவர்கள் செய்துவைத்திருக்கும் விபரீதம் மட்டும் தெரிந்தால் அந்த நொடி அவனின் மறு பக்கத்தை கண்டிருப்பனர் தம்பிகள்.

அண்ணனிடமிருந்து தப்பித்த நிம்மதியில் சென்னை வந்தடைந்தனர் மூவரும். ஆனால் சந்தோஷின் உள்ளம் மட்டும் குற்றவுணர்ச்சியில் குன்றிக்கொண்டு இருந்தது.

இது மட்டும் தன் தாய் அன்னபூரணிக்கு தெரியவந்தால்? நினைவே நெஞ்சை அறுத்தது. தலை நிமிர்ந்தும் பார்க்கமுடியுமா அவரை? இந்த உணர்விலிருந்து மீட்சியே இல்லையா என முகத்தை அழுந்த துடைத்தவன் கார் வீட்டின் அருகே செல்வதை கண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

அருகில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்க அவர்களை அடித்து எழுப்பியவன்,

“வீட்டுக்கு வந்துட்டோம். எழுந்திரிங்கடா…” என மொத்த,

“அதுக்குள்ளையுமா? நோ. ட்ரைவர் இன்னொரு ரவுன்ட் சென்னையை சுத்துங்க. கொஞ்சம் தூங்கிக்கறேன்…” என்றபடி அர்னவ் சந்தோஷின் மடியில் படுக்க,

“மரியாதையா எழுந்திரு. நானே உங்க ரெண்டு பேர் மூஞ்சியையும் பார்த்து யார்லாம் என்னலாம் கேட்பாங்களோன்னு பயத்துல இருக்கேன். உங்களுக்கு எப்படிடா தூக்கம் வருது?…” என்றவன்,

“அண்ணா அந்த பெரிய கேட் வீடு. அதுதான். வாசல்ல செக்யூரிட்டி காட்ஸ் நிக்கிறாங்க பாருங்க…” என்ற அடையாளம் காண்பித்தான்.

மத்திய அமைச்சர் ரத்தினசாமி இல்லம் அவர்களை மிக பிரமாண்டமாய் வரவேற்றது.

சந்தோஷிற்கு தான் பரபரப்பு தாங்கவில்லை. தங்களுடன் வந்த ட்ரைவருக்கு விஷால் பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வர,

“ஹேய்ய் அர்னு வந்துட்டான்…”  என கத்திக்கொண்டே வந்தாள் சந்தோஷின் தங்கை ஸ்வேதா. மாடியிலிருந்து வேகமாய் இறங்கி வர,

“ஏய் பாப்பு மெதுவா வா…” என்று அவளை நோக்கி ஓடிய அர்னவ் அவளை பிடித்து நிறுத்த,

“ஆரம்பிச்சிடுச்சுங்க பாச மலருங்க…” என சோபாவில் சாய்ந்தமர்ந்த விஷால் சொல்ல,

“எல்லாரும் என்னை விட்டுட்டு கோவா கிளம்பினேங்கள. எப்டி திரும்பி வந்தீங்க பாருங்க…” என சுடிதார் காலரை தூக்கிவிட்டு கெத்தாய் சொல்ல,

“விஷால்…” என்றபடி அவனின் தாய் பத்மினி வர அவரை கண்டதும் எழுந்தவன்,

“ம்மா, குளிச்சிட்டு வந்திடறோம்…” என சொல்லியவன் மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துகொண்டான்.

“இப்ப எதுக்குடா அத்தைட்ட பேசக்கூட விடாம தரதரன்னு இழுத்துட்டு வந்த?. அம்மாவையும் பார்க்கலை…” சந்தோஷ் கோபப்பட,

“முதல்ல குளிச்சுட்டு முகத்துக்கு கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்க்கனும்ல அதுக்கா இருக்கும். இல்லையாடா?…” அர்னவ் சொல்ல,

“தெரியுதுல. போய் குளிங்கடா…” என சொல்லி குளிக்க சென்றுவிட இங்கே பத்மினி அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்.

பத்மினி ரத்தினசாமியின் மனைவி. அக்குடும்பத்தின் தலைவி. அவரின் அருமை புதல்வன் அதிரூபன். ஒரே மகன்.

ரத்தினசாமியின் தம்பி சங்கரன் மனைவியை இழந்தவர். அவரின் பிள்ளைகள் சந்தியா, விஷால், அர்னவ்.

ரத்தினசாமி தங்கை அன்னபூரணி, அவரின் கணவர் வைத்தியநாதன். பிள்ளைகள் சந்தோஷ், ஸ்வேதா.

ரத்தினசாமியின் குடும்பம் கூட்டு குடும்பம். தம்பி குடும்பம், தங்கை குடும்பம் அவர்களின் பிள்ளைகள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.

அதுதான் அவரின் விருப்பமும் ஆசையும். அனைவரும் ஒன்றாய் இருப்பது. யாரையும் அடக்கிவைக்கவோ, அதட்டிவைக்கவோ மாட்டார். அனைவருக்கும் சுதந்திரம் தான். ஆனாலும் அனைத்தும் அவரின் கைக்குள்ளே தான் இருக்கும்.

அவரை மீறி எதுவும் நடக்காது. யாரின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் தடை நிற்கவும் மாட்டார். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையில் அவரை யாரும் நிறுத்தவும் இல்லை.

இதுவரை அவ்வீட்டில் ரத்தினசாமி வைத்தது தான் சட்டம். ஆனால் இனியும் அப்படி நடக்க சாத்தியமில்லை என்பதுதான் அவர் அறியாதது.

——————————————————–

அதிரூபன் மீட்டிங் நடக்கும் ஹோட்டலுக்கு காரை விரைவாய் செலுத்த ப்ரனேஷிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்றதும்,

“சொல்லுடா…”

“அதி, நீ கேட்டதை அனுப்பிட்டேன்டா. மெயில் செக் பண்ணிக்கோ…”

“ஓகே டா…” என்றவன்,

“ப்ரனேஷ் எனக்கு செகென்ட் கால் வருது. உன்னை திரும்ப கூப்பிடறேன்…” என்று சொல்லி ப்ரனேஷ் கூற வருவது என்னவென கேட்காமல் அழைப்பை துண்டித்துவிட்டு இன்னொரு அழைப்பில் பேசிக்கொண்டே சாலையில் லேசாய் கவனம் சிதற நொடியில் சுதாரித்து காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

ஒரு ஐந்து நிமிடங்கள் நிதானித்த பின் காரை கிளப்ப ஈனஸ்வரத்தில் ஏதோ ஒரு குரல் செவிகளை தீண்ட,

“ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ்…” தனக்கு பின்னால் இருந்து அந்த குரல் மீண்டும் கொஞ்சம் சப்தமாகவே கேட்க திடுக்கிட்டவன் காரின் விளக்கை ஒளிரவிட்டான்.

பின் சீட்டின் அடியில் ஒரு பெண் நலுங்கிய உடையில் தலையில் காயத்தோடு தீனமான குரலில் முனங்கிக்கொண்டிருக்க அதிர்ச்சியில் உறைந்தே போனான் அதிரூபன்.

 

மின்னல் தெறிக்கும் …

 

Advertisement