சஞ்சனா… கதைத்திரி-7

அத்தியாயம் 16

விவேக் பொறுப்பை எடுத்துக் கொண்டான் . ஓவியப் போட்டியின் வெற்றி சஞ்சுவை  பைன் ஆர்டஸில் சேர்க்கலாம் என்ற யோசனையை விவேக்கிற்குத் தர , அதைக் குறித்த தேடல்களைத் தொடங்கினான் . இணையத்தில் , நண்பர்களுடன் , அந்தத் துறையில் இருக்கும் பெரியவர்களுடன் பேசி , தனக்குத் தேவையான தகவல்களைத் திரட்டினான் .பின் அம்மாவிடம் , சஞ்சுவிடம் விளக்கினான்  .

பின் சஞ்சுவிடம் , எனக்கு என்னமோ இந்த வகையான படிப்பு உனக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நான் கவனித்த வரை கலை தொடர்பான விசயங்கள் உன்னை ஈர்க்கிறது , அந்த விசயங்களுக்கு உன்னிடம் மெனக்கெடல்களும் , நேர்த்தியும் இருக்கிறது சஞ்சு. ஆகையால் இந்தப் படிப்பு பற்றிய விவரங்களை இணையத்தில் பார்…” என்று அறிவுறுத்தினான்.

மேலும், “அப்படிப்பு படிக்கும் மாணவர்களின் போன் நம்பர்களை வாங்கிக் கொடுத்து , பேசச் சொன்னான் . அப்படிப்பில் இருக்கும் சாதக பாதகங்களை விளக்கினான்.”

பின், இரண்டு நாள் தருகிறேன்.நன்றாக யோசி. அதன் பின் உன் தெளிவான முடிவைச் சொல். அப்புறம் அப்பாவிடம் பேசலாம்….”

மஞ்சு தன் மகனின் பொறுப்பில் மகிழ்ந்து போனார் , கண் கலங்க, “ராஜா…” என்று கட்டிக் கொண்டார் . அப்பாவின் புறக்கணிப்பால் நொந்திருந்த சஞ்சுவிற்கு விவேக்கின் வழிகாட்டுதல் மிகுந்த ஆறுதலைத் தந்தது . நன்றி அண்ணா..” என்று நெகிழ்ந்தாள் .

 எனக்காக எதையும் செய்யாதே சஞ்சு , உனக்குப் பிடித்திருந்தால் மட்டும் சொல் . உனக்கு வேறு சாய்ஸ் இருந்தாலும் சொல். அதைப் பற்றியும் விசாரிப்போம்…” என்று தலை கோதிச் சென்றான் .

 ராதா , ராஜியிடம் விவரத்தைச் சொல்லி , மஞ்சுவும் விசாரிக்கச் சொன்னார் .  இவ்வளவு அகங்காரம் கூடாதப்பா. மகளின் வாழ்வையே தன் ஈகோவிற்காக பலியிடுகிறாரே…” என்று தோழிகள் வருத்தப்பட்டனர் .

பின், கவலைப்படாதே மஞ்சு ,  கீத்து அப்பாவிடம் விவரம் கேட்கச் சொல்லுகிறேன் , தைரியமாக இரு..” என்று நம்பிக்கை ஊட்டினார் ராதா. 

ராஜியும் தன் பங்கிற்கு , என் மகனின் நண்பர்கள் இல்லை தெரிந்தவர்கள் யாராவது இப்படிப்பை எடுத்திருக்கிறார்களா ? என்று விசாரிக்கச் சொல்கிறேன் என்று தைரியமூட்டினார் . தோழிகளுடன் பேசிய பின் , மஞ்சுவிற்கு மனதில் நம்பிக்கை ஒளி கீற்றுப் பிறந்தது .

இறுதியில் சென்னை அரசு கவின்  கலை கல்லூரியில் ஓவிய படிப்பு (BFA ) நான்கு வருடம் படிக்கலாம் என்று முடிவு செய்தார்கள் . அப்பாவிடம் முடிவைத் தெரிவிக்க , அவர் பெரிதாக ஆர்வம் காட்டாமல்,  ஒழுங்காகப் படித்திருந்தால் , நல்ல கல்லூரிக்குச் சென்றிருக்கலாம். பொறியியல் படித்து நிம்மதியாக செட்டிலாகி இருக்கலாம். ஆட்டம் பாட்டம் என்று இருந்தால் இப்படித்தான்...” என்று குறை சொல்ல, 

இடை புகுந்த விவேக் , பொறியியல் படிப்புக்கு நீங்கள் உதவுகிறீர்களா அப்பா ?”

 என் பேச்சைக் கேட்காதவளுக்கு, நான் எதற்கு செய்ய வேண்டும்? பெற்ற கடமைக்குப் ஃபீஸ் கட்டுகிறேன். மற்றபடி எதையும் எதிர்பார்க்காதீர்கள்… என்றார் விஜயன்  வீம்பாக.

பின் மஞ்சுவின் இடத்தை விவேக் எடுத்துக்கொண்டு , அவரிடம் கெஞ்சினான். போராடினான்.

பெரிய மனுசனாகிவிட்டாய்…” என்று அவனையும் திட்டினார். எல்லாம் நீ ஏத்திவிடுவது…” என்று மஞ்சு மீதும் பாய்ந்தார் . பின் சஞ்சுவை முறைத்தபடி , கடமைக்காகச் செய்கிறேன்.. என்றார் . 

ஒரு வழியாக சஞ்சுவின் கல்லூரிப் போராட்டம் முடிவுற்றது .

 

அத்தியாயம் 17

கீர்த்தனாவிற்குப் பொறியியல் தான் விருப்பம் என்பதால் கவுன்சிலிங்கிற்குக் காத்திருந்தாள் . ஆன்லைனில் கவுன்சிலிங் என்று வர , வீட்டுக்கு வரமுடியுமா விவேக்? இன்னும் இரண்டு நாளில் கவுன்சிலிங்கிற்குக் கல்லூரியின் தர வரிசை அனுப்ப வேண்டும். நீ கொஞ்சம் கீத்துவிற்கு உதவ முடியுமா…?என்று கேட்டார் ரமேஷ் .

என்ன அங்கிள் ? இப்படி பேசுகிறீர்கள். வா விவேக் என்று சொல்வதை விடுத்து…” என்று செல்லமாகக் கோபிக்க,

 சரி, சரி வாப்பா…”  என்று  சிரித்தபடி போனை வைத்தார். 

விவேக் வீட்டுக்கு வர நால்வரும் இணைந்து , துறை மற்றும் கல்லூரியின் சாதகபாதகங்களை ஆராய்ந்து , கீத்துவின் விருப்பத்திற்கேற்ப வரிசையைத் தயார் செய்தனர் . பின்பு சிறிது நேரம் அமர்ந்து அரட்டை அடித்தனர் . விவேக்கும் தன் கல்லூரியில் நிகழ்ந்த காமெடி நிகழ்வுகளை  சொல்ல , இடமே சிரிப்பால் அதிர்ந்தது.

அப்போது ராதா , ரொம்ப சந்தோஷம் விவேக். பொறுப்பான அண்ணனாக இருந்து சஞ்சுவை வழி நடத்திவிட்டாய்…”  என்று புகழ , 

அதெல்லாம் ஒன்றும் இல்லை ஆன்ட்டி. அங்கிளோட இன்புட் மற்றும் இத்துறையில் உள்ளவர்களின் அறிவுரைகளால் தான் இது நடந்தது என்றான் அடக்கமாக .

ரமேஷ் தோளில் தட்டிக் கொடுக்க , மஞ்சு ரொம்ப கவலைபட்டாள் , நல்ல வேளை எல்லாம் சரியாக முடிந்தது   என்று பெருமூச்சு விட்டார் ராதா.

நான் கிளம்புகிறேன்…” என்று விவேக் சொல்ல , 

அதெல்லாம் முடியாது சாப்பிட்டு போ என்றார் ராதா .

ஏன் அம்மா , இந்த கொலை வெறி ?  விட்டு விடும்மா , நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என்று கீத்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க , 

ராதா முறைக்க , இடைபுகுந்த ரமேஷ் , விவேக் ஓடிப் போய் விடு…” என்று கேலி செய்ய , கீத்துவும் , அவள் அப்பாவுடன் ஃஹைபை செய்ய ,  கீத்து முதுகில் ராதா செல்ல அடி போட்டாள் .

விவேக்கிற்கு இந்தக் காட்சிகளைப் பார்க்க , அவ்வளவு ரம்மியமாக இருந்தது . மனதோரத்தில் ஒரு ஏக்கம் கூடத் தோன்றியது . இந்த விளையாட்டில்  குதித்த விவேக் ,  உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடு வேண்டாமா அங்கிள்? என்று கண் சிமிட்ட , 

உடனே ரமேஷ் , அதை வேற ஏம்பா ஞாபகப்படுத்துகிறாய் , வயிறெல்லாம் புண்ணாகிக் கிடக்கு… என்று சினிமா வசனத்தைத் தனக்கு வசதியாக மாற்றிப் பேச , விவேக் வெடித்துச்  சிரித்தான் .

அய்யோ , உங்களுக்கு வயிற்றுப் புண்ணா ? அப்போ இரண்டு நாளைக்குக் கஞ்சி தான்..”  என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு , ஏற்ற இறக்கத்துடன் ராதா சொல்ல , 

“ஆஹா..!”  நாமே ஆப்பைத் தேடி உட்கார்ந்து விட்டோமே என்று ரமேஷ் திருதிருக்க , மீண்டும் சிரிப்பலை பரவியது .இங்கே கூடுதல் நேரம் இருக்க விரும்பியே விவேக் சாப்பிட ஒத்துக் கொண்டான் . ஒருவரை ஒருவர் ஓட்டி , கேலி செய்தபடி சாப்பிட்டனர். இந்த அன்யோன்யமும் , அன்பும் மிகவும் அழகாக இருந்தது . விவேக் மிகவும் ரசித்தான்.

அத்தியாயம் 18

கீர்த்தனா உயர்ந்த பொறியியல் கல்லூரியில் கணினி பிரிவில் சேர‌ , சஞ்சு கலைக்கல்லூரியில் சேர்ந்தாள் . அனைவருக்கும் ஆன்லைனில் கல்லூரி தொடங்கியது . விஜயன் வேலைக்குப் போக ஆரம்பித்தார். 

வீட்டில் அதிக நேரம் இருக்க இந்த ஆன்லைன் வகுப்புகள் தோதாக அமைய , வகுப்புகளுக்கிடையே பேச்சு, சிரிப்பு , அரட்டை என்று வீட்டில் ஒரு இலகுத்தன்மை வந்தது. வீட்டுச் சூழ்நிலை சற்று மாறியது . சஞ்சுவின் மனநிலையும் மாறியது .  பழைய துள்ளல், விளையாட்டுத்தனம் இல்லாத போதும், சற்று தெளிந்திருந்தாள் .

 விவேக் கல்லுரியில் சேர்த்துவிட்ட பிறகு, சஞ்சுவிற்கு அண்ணன் மீதான பார்வையும் மாறியது. தன் நன்மைக்குத் தான் அண்ணன் பேசியிருக்கிறான் என்ற புரிதல் உண்டாகியது . விவேக் சஞ்சுவிற்கிடையே பிரியம் கூடியது . எப்போதும் “அம்மா அம்மா…” என்பவள் , இப்போது “அண்ணா…” என்று வந்து நின்றாள், இதைக் கண்டு மஞ்சுவும் மகிழ்ந்தார்.

மாலையில் தோழிகளைச் சந்தித்த பொழுது , எப்போதும் ஒரு யோசனை ஓடிக் கொண்டே இருக்கும். எனக்குப்  பின்னே  பிள்ளைகள் எப்படியிருப்பார்களோ? என்று இப்போது அந்த கவலை தீர்ந்தது என்று வீட்டில் நடந்ததைத் தோழிகளுடன் பகிர்ந்தார்.

ரொம்ப சந்தோஷம் என்று தோழிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் .

சஞ்சுவும், தன் அண்ணனை நல்லவன் , வல்லவன் என்று புகழ , கீத்துதான் காதில் இரத்தம் வடிய கேட்க வேண்டியதிருந்தது . 

வாழ்க்கைச் சக்கரம் இலகுவாக ஓட, சஞ்சுவும் கல்லூரியில் நன்றாகவே படித்தாள்.  விவேக்கிற்கும் கேம்பஸில் அதிக சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைத்தது. ஐந்து இலக்கச்சம்பளம் என்றவுடன் விஜயனுக்கு பெருமை பிடிபடவில்லை ,  பணியிடத்தில் பந்தா காட்டினார் . 

ஒழுங்காக நான் சொன்ன மாதிரி படித்தான். இப்போது செட்டிலாகி  விட்டான் . நீயும் இருக்கிறாயே…  , என்ன செய்யக்  காத்திருக்கிறாயோ ?என்று கரித்துக் கொட்ட, 

 அண்ணனின் வெற்றியை சந்தோஷமாகக் கொண்டாட முடியாமல், சஞ்சுவை வருந்தச் செய்தார்.  

நாட்கள் ஓட ,  மூவரிடையே அன்பு கூடியது. நல்ல புரிதலும் உருவாகியது . சஞ்சுவும் பிடித்த பாடம் என்பதால்  நன்றாக ஆர்வமுடன் படித்தாள். முதல் செமஸ்டரில் நல்ல மதிப்பெண் வாங்கினாள். ஆனால் விஜயனுக்கு அது பெரிதாகப் படவில்லை . அவர் வழக்கம் போல் அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார் .

உன் வாழ்க்கையில் ஜெயித்து இதற்குப் பதிலடி கொடு என்று மஞ்சு தேற்றினார்

பாடங்கள் ஆன்லைனில் என்பதால் புரிவதும் , படிப்பதும் கடினமாகயிருக்க , கீத்து விவேக்கின் உதவியை நாடினாள் . 

விவேக்கிடம் படிக்க கீத்து வர , பயங்கரமாகப் பந்தா விட்டான். குரு என்று சொல். வணக்கம் வை. அப்போது தான் சொல்லித் தருவேன் என்று வம்பு செய்தான் .கீத்து கடுப்பானாள். வேறு வழியில்லாமல் மண்டையாட்டினாள் .

உங்க அண்ணன் ஓவராகப் பண்றான் , கீத்துவைப் பற்றி சரியாகத்  தெரியவில்லை , ஒரு நாள் இருக்கு… என்று சபதம் செய்தாள் .

என்ன வம்பு செய்தாலும் , பொறுமையாக , விளக்கமாகக் கற்றுக் கொடுத்தான். அவனின் நோட்ஸ்களைப் படிக்கக் கொடுத்தான் . விவேக்கின் அறிவு கண்டு வியந்தாள் . அவன் மீது தனி  மரியாதை வந்தது . முதலில் விவேக்கின் வற்புறுத்தலால் “குரு” என்று அழைத்தவள். பின்பு அவளாகவே உணர்ந்து அழைத்தாள் .  விவேக்குடன்  நட்பும்  நெருக்கமும் கூடியது .

ஒரு நாள் கீத்து வரும் போது விஜயனிருக்க , அவள் படிப்பைப் பற்றி எல்லாம் விசாரித்தவர் , பின், உன் கூடத் தானே இருந்தாள் , கொஞ்சம் சொல்லிக் கொடுத்து மதிப்பெண் வாங்க வைத்திருக்கலாமே? பார். இப்போது ஒரு உருப்படாதப் படிப்பை எடுத்துள்ளாள்….” என்று குறைபாடினார் . பின், உன்னைச் சொல்லி என்ன செய்ய? அவள் அடங்கினால் தானே?” என்று கீத்துவிடம் சஞ்சுவை அசிங்கப்படுத்தினார் .

கீத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்க, ,மஞ்சுவும் இடைபுகுந்து பேசினால் ஏழரையைக் கூட்டி விடுவார் என்று அமைதியாக நின்றாள்.

சஞ்சு அவமானத்தில் குறுகினாள் .

வா கீர்த்தனா , எனக்கு வேலையிருக்கிறது , ஒரு அரைமணி நேரம் மட்டும் தான் சொல்லித் தர முடியும்..” என்று அந்த இடத்தை விட்டு நகர்த்தினான்  விவேக்.

தொடரும்….