Advertisement

பனி சிந்தும் சூரியன்


அத்தியாயம் 38


பணியாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே, இரண்டு பெரிய அறையாகத் தடுத்து, இரண்டு ஆசிரியர்களும் போட்டு, அங்கேயே பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் பெரிய பிள்ளைகளை, பக்கத்தில் இருந்த பள்ளியில் சேர்த்து விட்டனர்.


பிள்ளைகள் பாடம் படிக்கச் சென்றதால்… அவர்களுக்காக வீட்டில் இருந்த பெண்களும் வேலைக்கு வந்தனர். எந்தப் பக்கமும் பாதிப்பு இல்லாமல் அபர்ணா நிலைமையைத் திறமையாகவே கையாண்டாள்.


வீட்டிலேயே இருந்தால்… பொழுதும் போகவில்லை. அதோடு ராம்மை வேறு சீக்கிரம் வா என்று உயிரை எடுப்பதற்கு, எதாவது உபயோகமாகச் செய்வோம் என, இவர்கள் உதவும் இல்லத்திற்கும் அடிக்கடி ஸ்வர்ணாவோடு சென்று வந்தாள்.


அங்கே அந்த இல்லத்தின் தலைவியிடம், “உங்களுக்கு எப்படி இப்படி ஒரு இல்லத்தை ஆரம்பிக்கணும்னு தோனுச்சு.” என ஸ்வர்ணா கேட்க,


“நான் இந்த இல்லத்தை ஆரம்பிக்கலை… இதை ஏற்கனவே சச்சிதானந்தம் அய்யா பார்த்திட்டு இருந்தாங்க. நான் இங்க வந்து அவரோட சேர்ந்துகிட்டேன்.  இப்ப அவர் காலத்திற்கு பிறகு நான் பார்த்துகிறேன்.”

“உங்களுக்கு ஒன்னும் வயசு அதிகமா இல்லையே… அதுதான் கேட்கிறேன். எப்படி இங்க வந்தீங்க?”

அந்த இல்லத்தின் தலைவி சித்ரா முகத்தில் ஒரு கசந்த முறுவல்.


“நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவ. எங்க அப்பா பையன் வேணும்னு சொல்லி, நிறையக் குழந்தைகள் பெத்துகிட்டார். நாங்க அக்கா தங்கைகள் ஆறு பேர்.”


“நாங்களே கஷ்ட்டப்பட்டு அரசாங்க பள்ளி, கல்லூரி இப்படின்னு எப்படியோ படிச்சோம். அப்ப எனக்கு ஒரு வரன் வந்தது. ரொம்பப் பெரிய இடம். என்னடா இவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்து நம்மைக் கேட்கிறாங்கன்னு ஒரே ஆச்சர்யம்.”


“நீ அழகா இருக்க இல்ல… அதுதான். அவங்களுக்குப் பணம் பெரிசு இல்லைன்னு. எங்க அம்மா சொன்னாங்க. எப்படியோ கல்யாணம் நடந்தது.”


“மாப்பிள்ளை வெளிநாட்டில வேலை பார்க்கிறார். இங்க அவங்க அம்மா மட்டும் இருக்காங்க. அவங்களோட நான் இருக்கணும். அப்புறம் அவர் அடிக்கடி வந்திட்டு போவாருன்னு சொன்னாங்க.”


“என்னையும் அழைச்சிட்டு போங்கன்னு நான் சொன்னதுக்கு. அது சரி வராது மா… அம்மாவும் இங்க தனியா இருப்பாங்க. அம்மா காலத்துக்கு அப்புறம் வேணா பார்க்கலாம்.” என்றார்.


“கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் கூட இருந்தவர், அதுக்குப் பிறகு வெளிநாடு போயிட்டார். அந்தப் பத்து நாளும் என்னை ராணி மாதிரிதான் பார்த்துகிட்டார்.”


“அவர் வெளிநாடு போனதும், நானும் என் மாமியாரும்தான். என் வீட்டு ஆளுங்க யாரையும் என் மாமியார் சேர்க்க மாட்டாங்க. மத்தபடி என்கிட்டே நல்லாத்தான் இருந்தாங்க. அவங்களுக்கு அப்பவே கொஞ்சம் உடம்பு முடியலை. அதனால வேலை எதுவும் செய்ய முடியாது.”


“நான்தான் வேலை எல்லாம் செய்வேன். ஆனா நான் மேல படிக்கிறதுக்கு அவங்க எதுவும் தடை சொல்லலை. நான் கரஸ்பாண்டன்ஸ் மேலே படிச்சேன்.”


“என் வீட்டுக்கார் வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் வருவார். பத்து நாள் இருப்பார். போய்டுவார். குழந்தையும் எதுவும் இல்லை. பின்னாடிதான் தெரிஞ்சிது குழந்தை வராம அவர் பார்த்துகிட்டாருன்னு.”


“நாலு வருஷம் கழிச்சு, என் மாமியார் இறந்துட்டாங்க. அதுக்கு வந்தவர், நீ தனியா இருக்க வேணாம். உங்க அம்மா வீட்ல இருன்னு சொல்லிட்டுப் போனார். நானும் எங்க அம்மா வீட்ல இருந்தேன்.”


“அப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு வந்தார். நான் இனிமே வெளிநாட்டிலேயே இருக்கப் போறேன். நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது, அதனால பிரிஞ்சிடலம்ன்னு சொன்னார்.”


“எங்க அப்பா அம்மாகிட்ட ரெண்டு லட்சம் பணம் கொடுத்து, விடுதலை பத்திரத்தில கையெழுத்து கேட்டார்.”


“எங்க அப்பா அம்மாவும் அவர்தான் பணம் கொடுக்கிறார் இல்ல. கையெழுத்து போட்டுடுன்னு சொன்னாங்க. அவங்களுக்கு அந்தப் பணம் பெரிசா தெரிஞ்சிது.”


“அப்ப எனக்குப் புரிஞ்சுது, இவருக்குப் பொண்டாட்டியா என்னைக் கல்யாணம் பண்ணிக்கலை… இவங்க அம்மாவை பார்த்துக்க ஒரு வேலைக்காரியா, என்னைக் கல்யாணம் பண்ணி இருக்காருன்னு.”


“நான் அதை அப்படியே அவர்கிட்ட சொல்ல, மறுக்காமல் ஆமாம்.” என்றார்.

“அவருக்கு வெளிநாட்டில் ஏற்கனவே வேறு ஒரு குடும்பம் இருக்குன்னு தைரியமா சொன்னார். உன்னை ஒன்னும் நான் சும்மா விடலையே… பணம் தான் கொடுக்கிறேன்னே… இத்தனை நாள் எங்க வீட்ல நீ கஷ்ட்டமா பட்ட, சொகுசா தானே இருந்தேன்னு.” திமிரா வேற பேசினார்.


“அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்திருக்கும். ஏழைங்கன்னா அவங்க வாழ்க்கையில் எப்படி வேணா விளையாடலாமா? அவருக்கு ஒரு பாடம் புகட்ட நினைச்சேன்.”


“நான் அவர் கொடுத்த விடுதலை பத்திரத்தில கையெழுத்து போடலை. இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடுற வக்கீல் சஹானாவை போய்ப் பார்த்தேன்.(நம்ம வல்லமை தாராயோ ஹீரோயின்)


“தைரியமா கேஸ் போடுங்க, அந்த ஆளை ஒருவழி ஆக்கலாம். இனிமே பொண்ணுங்க வாழ்க்கையில விளையாட யாருக்கும் தைரியம் வரக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் அதே மாதிரி கேஸ் கொடுத்தேன்.”


“கோர்ட்ல அந்த ஆளை கூண்டுல நிற்க வச்சு, சும்மா விட்டு விலாசிட்டாங்க சஹானா. எங்க கிட்ட இருக்கிற ஆதாரத்தை எல்லம் கோர்ட்ல கொடுத்து, நான் அவரோட சட்டபடியான மனைவின்னு ப்ரூப் பண்ணி. வெறும் ரெண்டு லட்சத்டோட தப்பிக்கப் பார்த்த அவர்கிட்ட இருந்து, முக்கால்வாசி சொத்தையும் பிடிங்கிட்டாங்க. அதோட அவருக்கு ஜெயில் தண்டனையும் வாங்கிக் கொடுத்தாங்க.”


“அப்புறம்தான் இந்த இல்லத்துக்கு வந்தேன். ஒரு கல்யானதுனால முட்டாள் ஆக்கப்பட்ட நான், திரும்ப கல்யாணம் பண்ணிக்க விரும்பலை. மிச்சம் மீதி வாழ்க்கையை மத்தவங்களுக்கு உபயோகமா கழிக்கலாமேன்னு இந்த இல்லத்தில அந்து சேர்ந்தேன். நான் இங்க வந்து ஆறு வருஷம் ஆச்சு.


சித்ரா சொல்லி முடித்ததும் , இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என அதிர்ச்சியாக இருந்தது. அந்த நிலையில் சித்ராவின் துணிச்சலும், அவர் அதிலேயே தேங்கி விடாமல், மற்றவர்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதும், ஸ்வர்ணாவுக்குப் பிரம்பிப்பாக இருந்தது. திரும்ப வரும் வழியில் அதையே யோசித்துக் கொண்டு வந்தார்.


“என்ன அத்தை ஒரு மாதிரி இருக்கீங்க.” அபர்ணா கேட்க,


“நான் என்னோட பிரச்சனையிலேயே தேங்கி நின்னுட்டேன். எனக்கு ஏன் இந்தச் சித்ரா மாதிரி மத்தவங்களைப் பத்தி நினைக்கத் தோணலை.” என்றார் வருத்தமாக.


“உங்களுக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க அத்தை. நீங்க அவங்களையும் பார்க்கணும் இல்லையா?”


“நீ சொல்றது சரிதான். ஆனா ஒரு வயசுக்கு மேல ராம் அகிலா அவங்க படிப்பு, வேலைன்னு பிஸியா இருந்தாங்க. நான் அப்பவாவது இதுமாதிரி யோசிச்சு இருக்கலாம்.”


“இப்ப கூட ஒன்னும் லேட் இல்லை அத்தை. நாம இனி செய்யலாம். இந்த மாதிரி பாதிகப்பட்ட பெண்கள், திரும்பத் தங்கள் வாழ்க்கையை மறுசீரமைப்புச் செய்ய நாம உதவலாம்.”


“நமக்கு ஹெல்ப் பண்ண சித்ரா இருக்காங்க. சஹானாவையும் நம்மோட சேர்த்துக்கலாம்.” அபர்ணா நம்பிக்கையாகச் சொல்ல, அதைக் கேட்டு ஸ்வர்ணாவுக்கும் நம்பிக்கை வந்தது.


அபர்ணா சொன்னது போலச் சித்ராவையும் ,சஹானாவையும் வரவழைத்து பேசினாள். சஹானாவை பார்த்ததும், இந்தச் பெண்ணிற்கு எப்படி இவ்வளவு துணிச்சல் என ஸ்வர்ணா வியந்தே போனார்.


அபர்ணா ராம்மை சஹானாவுக்கு அறிமுகம் செய்ய, “எல்லாச் சக்திகளும் ஒண்ணா சேர்ந்திட்டீங்க போலிருக்கு, கலக்குங்க.” என்றான்.


“எல்லாச் சக்திகளும் சொன்னீங்களே? அதுல காளி யாருன்னு சொன்னா நல்லா இருக்கும்.” எனச் சஹானா வேண்டுமென்றே கேட்க,


“அதுல என்ன டவுட்? அது என் பொண்டாட்டிதான்.” என்றான்.


அபர்ணா அவனை முறைத்தாலும், “அது உங்களுக்கு மட்டும். ஆனா உண்மையிலேயே அது சஹானாதான்.” என்றாள்.


“அசுரனை வதம் செய்யும் காளி போல… கலியுகத்தில் அசுரர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது அவள் தானே.”

அபர்ணா அவர்கள் தொடங்கும் திட்டம் பற்றி சொல்ல, “நல்லா பண்ணுங்க, என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னைக் கேளுங்க.” ராம் சொல்ல, இடையில் புகுந்த அபர்ணா, “அப்படியே என் பொண்டாட்டியை பிஸியா வச்சுக்கோங்க, நான் நிம்மதியா இருப்பேன்னு சேர்த்து சொல்லுங்க.” எனச் சொல்ல,


“அதுதான் நீயே சொல்லிட்டியே. உன்னை விட என்னை யாரும் புரிஞ்சு வச்சிருப்பாங்களா.” என்றவன், புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றான்.


சித்ராவின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான, ‘பெண்கள் நலவாழ்வு’ மையம்,  தொடங்கப்பட்டது. கணவரால் கைவிடப் படும் அல்லது பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதே அவர்களின்  முக்கிய நோக்கம்.


அபர்ணா கர்ப்பமாக இருப்பதால்… முடிந்தவரை அவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, ஸ்வர்ணா தான் சென்று பார்த்துக் கொள்வார்.


இங்கே கார்த்திக்கு, சுஜா சொன்னதை நினைத்து ஒரே குழப்பம். அகிலாவுக்கும் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவனது பிடிவாதத்தைக் கைவிட்டான்.


முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சம் எதிர்பார்த்து ஏமாந்தனர். ஆனால் மூன்றாம் மாதம் அகிலா கருவுற்றாள். சுஜாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி, மருமகளைத் தாங்கு தாங்கு என்று தாங்கினார்.


அபர்ணாவுக்கு இப்போது ஆறு மாதங்கள், அவள் வயிறு இப்போது நன்றாகத் தெரிய, கொஞ்சம் உடம்பு வைத்து, இன்னும் அழகாக இருந்தாள். ராம்மிற்கு அவளிடம் இருந்து பார்வையைத் திருப்புவதுதான் சிரமமாக இருக்கும்.


அஞ்சலியை தேடி உமேஷ் தைரியமாக வீட்டிற்கே வர… பிரகாஷிற்கு விஷயம் தெரிய வந்தது. அவர் அஞ்சலியை கண்டிக்க. நீலீமாவிடம் பேசியதை போலவே அவள் பேசி வைக்க, ப்ரகாஷ் அவளைப் பெல்ட் எடுத்து விலாசினார்.


அப்போதும் அஞ்சலி பிடிவாதமாகவே இருக்க, நீலீமா மகள் விருப்பத்திற்கு ஆதரவு தர… அதில் பிரகாஷின் கோபம் நீலீமாவின் மீது திரும்பியது.


தினமும் இருவருக்கும் இடையே சண்டை, வாக்குவாதம் எனப் பிரச்சனை வலுக்க ஆரம்பித்தது.


“நான் தவறு செய்து விட்டேன். கடைசியில உங்க புத்தியை காமிச்சிடீங்க.” என ப்ரகாஷ் சொல்ல,


“நீங்க என்னை ஏமாத்திடீங்க. உங்களுக்குக் கல்யாணம் ஆனதை மறைச்சு, டைவர்ஸ் பண்றதா பொய் சொல்லி ஏமாத்திட்டீங்க.” என்றாள் நீலீமா.


“எனக்குக் கல்யாணம் ஆனது சொன்னப் பிறகுதானே உன்னோட வாழ ஆரம்பிச்சேன். ஏன் நீ அப்பவே போய் இருக்க வேண்டியது தானே.” என ப்ரகாஷ்அலட்சியமாகக் கேட்க,


இப்படி அவர் கேட்பார் என எதிர்ப்பார்க்காத நீலீமா அதிர்ச்சி அடைந்தாள். இவர்தானே போக விடாமல் தடுத்தது. அதை வசதியாக மறந்துவிட்டு பேசினார்.  


ஒரு நாள் நீலீமா அலுவலகத்திற்கு வந்தபோது, அபர்ணா சட்டமாக ராம்மின் இருக்கையில் அமர்ந்து, எதோ தீவிரமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


ராம் வேறுவேலையாக இருந்தாலும், அடிக்கடி மனைவியைப் பார்வையால் வருடவும் தவறவில்லை. அதில் காதல், அக்கறை, பெருமிதம் எல்லாமே இருந்தது.


போன் பேசிக் கொண்டிருந்தவன், அபர்ணா உட்கார்ந்திருந்த இருக்கை ஆடுவதைப் பார்த்து, பதறி அவளிடம் சென்றான். அவளை எழுப்பி, வேறு ஒரு இருக்கை கொண்டு வந்து, அவளை உட்கார வைத்தான்.


நீலீமாவும் தினமும் இந்த அலுவலகத்திற்கு வருகிறாள்தான், அவளால் பிரகாஷின் இருக்கையில் இப்படி அதிகாரமாக உட்கார முடியுமா என்றால்… முடியாது. தான் எங்கையோ தோற்று விட்டது போல இருந்தது.


நீலீமா அன்றிலிருந்து அலுவலகம் செல்வது இல்லை. அதைக் குறித்து ராம்மும் வீட்டில் ஆச்சர்யபட்டான். அகிலாண்டேஸ்வரி சொல்லி, அஞ்சலி வீட்டில் பிரச்சனை செய்வது இவர்களுக்குத் தெரியும்.


அபர்ணாவின் வளைகாப்பை வீட்டிலேயே செய்தனர். அகிலாவும் கருவுற்றிருப்பதால்… அவளைத் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர். அதனால்  அபர்ணா அகிலா இருவருக்குமே வருத்தம். இருவரும் எதிரெதிரே பார்த்துகொள்ளக் கூடாது என்பதால்தான்.


குழந்தை பிறப்பதற்கு முன் கடைசி ஒரு மாதம் அபர்ணா தாய் வீட்டில் இருக்க, அவளோடு ராம்மும் அங்குதான் இருந்தான். இங்கே அகிலா பிறந்த வீட்டிற்குச் சீராட வந்திருந்தாள்.


அபர்ணாவிற்கு ஒரு நாள் அதிகாலை வலியெடுக்க, அவளுக்குச் சிங்க குட்டி பிறந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்க. அபர்ணா, “ஐயோ ! புலிக் குட்டி மிஸ் ஆகிடுச்சே.” என வருத்தம் கொள்ள,


“கவலைப்படாதே, நாம புலிக்குட்டி வர்ற வரை விடுறது இல்லை.” என்றான் ராம்.


“எஸ், நாம அந்தக் காட்டுக்கே இன்னொரு தடவை போறோம்.” என்றாள் அபர்ணா.
அவர்கள் இருவரும் பேசுவதைப் பார்த்த சுஜா, “என்ன இதுங்க பையன் பிறந்திருக்கான், ஆனா புலி சிங்கம்ன்னு பேசுதுங்க. எதாவது ஜூ வைக்கப் போதுங்களா…” எனக் கேட்க,


“அதுங்க ரெண்டும் ஹனிமூன் போயிட்டு வந்ததுல இருந்து, இப்படிதான் மா லூசு மாதிரி பேசிட்டு இருக்குங்க.” என்றான் கார்த்திக். அவன் சொன்னதைக் கண்டுகொண்டால் தானே, ராம் அபர்ணா இருவரும் அவர்கள் உலகில் இருந்தனர்.


அபர்ணா ஒரு மாதம் முடிந்ததும், குழந்தையைத் தூக்கிக் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஏழு மாதத்தில் அகிலாவுக்கு வளைகாப்புச் செய்து, அவளையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டாள். அகிலா வந்தால்… கார்த்திக்கும் இங்குத் தானே இருப்பான்.


“குழந்தை பிறந்து மூன்று மாதம் கழிச்சுதான், அகிலாவை நாங்க  அனுப்புவோம்.” என அவள் சுஜாவிடம் சொல்ல,


“நீ மட்டும் ஒரு மாசத்தில வருவ, ஆனா என் மருமகளை மட்டும் மூன்னு மாசம் கழிச்சு அனுப்புவியா? நீ நடத்து, அதுக்குப் பிறகாவது அனுப்பினா சரிதான்.” என்றார் அவர்.


வீடு இப்போது பழைய கலகலப்பிற்குத் திரும்பியது. அபர்ணா கார்த்திக்கின் அளப்பரையோடு, குழந்தையின் வரவு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்க, ராம்மும் இப்போது சீக்கிரமே வீடு திரும்ப ஆரம்பித்தான். அகிலா எப்போதும் போல அதிக அலட்டல் இல்லாமல்…இனிமையாக நடந்து கொண்டாள்.

ஸ்வர்ணா ரொம்பப் பிஸியாக இருந்தார். காலை பத்து மணிக்கு இல்லத்துக்குச் சென்றால்… மதிய உணவு நேரத்திற்குத்தான் வீட்டிற்கு வருவார். வீட்டில் இருக்கும் நேரம் பேரனோடு சென்றது.


அகிலா தனக்குக் குழந்தை பிறக்கும் நாளை எண்ணிக் கொண்டு இருந்தாள். அண்ணன் மகனை அவள் பார்த்துக்கொள்ள, கார்த்திக் வந்துவிட்டால் அவனும் சேர்ந்து பாத்துக் கொள்வான்.


இரவு உணவுக்குப் பிறகு ராம் அபர்ணா இருவரும் மாடி பால்கனி தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ராம் அபர்ணா மடியில் தலைவைத்து கதை பேசிக் கொண்டு இருப்பான். அல்லது அவளைத் தன் மடி சாய்த்து இருப்பான்.


இவர்கள் இருவரையும் கவனித்த கார்த்திக், “நாம என்ஜாய் பண்ண முடியாதுன்னு தானே குழந்தை பெத்துகிறதை தள்ளி வச்சோம். ஆனா இதுங்க பாரு… எந்தச் சூழ்நிலை வந்தாலும், இதுங்க ரொமான்ஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்றான்.


“உங்களை யாரும் ரொமான்ஸ் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாங்களா?” அகிலா சிரிப்புடன் கேட்க,


“அதைச் சொல்லு, குழந்தையை உங்க அம்மாகிட்ட கொடுத்திட்டு வா… நாமும் முயற்சி பண்ணுவோம்.” என்றான்.


அகிலாண்டேஸ்வரி விருப்பத்திற்கு இணங்கி, ஐந்தாம் மாதம் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை, பெரிய வீட்டிலேயே வைத்தனர். வீட்டை நன்றாக அலங்கரித்து, நிறையப் பேரை அழைத்துச் சிறப்பாகச் செய்தனர். ப்ரகாஷ் மட்டும் வந்திருந்தார்.

தங்கள் வீட்டில் நடக்கும் விழா என்பதால்… வீட்டின் இளையபட்டாளதிற்குக் கொண்டாட்டம். அகிலாவுக்கு ஒன்பதாம் மாதம் என்பதால்… ஒரு சேரில் உட்கார்ந்து இருந்தாள். கார்த்திக் விருந்தினரோடு பேசிக் கொண்டு இருந்தான். சோனாவும் கர்ப்பமாக இருப்பதால்… விழாவுக்கு வரவில்லை. அவள் பிரசவத்திற்குக் காயத்திரி லண்டன் செல்கிறார்.

தேக்கு மரத்தில் செய்த பெரிய தொட்டில். அவர்கள் பரம்பரை தொட்டில் அது. அதை நடு ஹாலில் வைத்து, மலர்களால் அலங்கரித்து, ஸ்வர்ணாவின் பட்டு புடவையை அதில் விரித்து இருந்தனர்.


ராம்மும் அபர்ணாவும் தங்கள் திருமண உடையில் பொருத்தமான ஜோடியாக ஜொலிக்க, குழந்தை கொழுக் முழுக் என அழகாக இருக்க, அவனுக்குப் பேன்ட் மாடலில் வேஷ்ட்டியும், தங்க நிறத்தில் குர்தா மாடல் சட்டையும் அணிவித்து இருந்தனர்.


கழுத்தில் தங்க செயின், கையில் வைர காப்பு, காலில் தங்க கொலுசு எனக் குழந்தை ராஜக்களையில் இருந்தது. ஐந்து மாதங்கள் ஆனதால்.. எல்லோரின் முகம் பார்த்து, தன் பொக்கை வாய் தெரிய அழகாகச் சிரித்தது.


ஸ்வர்ணா பட்டுபுடவையில் கம்பீரமாக வளம் வந்தார். மனதின் மாற்றம் உடலிலும் தெரிந்தது. முன்போல் இல்லாமல் இப்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். அதோடு முகம் கொள்ளா மகிழ்ச்சி… அவரை இன்னும் அழகாகக் காட்டியது.


“நல்ல நேரத்தில் குழந்தையைத் தொட்டிலில் போடுங்க.” அகிலாண்டேஸ்வரி குரல் கொடுக்க, அபர்ணா ஸ்வர்ணாவிடம் குழந்தைக் கொடுத்தாள்.


“நீங்க தான் போடணும்.” ஸ்வர்ணா தயங்க,


“நீங்க போட்டாலும், நாங்க போட்டாலும் ஒன்றுதான்.” என்றாள். ராம்மும், “நீங்க போடுங்க மா.” என்றான்.


ஸ்வர்ணாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி, குழந்தையைக் கையில் வாங்கியவர், அதை அனைத்து முத்தமிட்டு, பின்பே தொட்டிலில் மெதுவாகப் படுக்க வைத்தார்.


“நீங்களே பேர் சொல்லுங்க.” என்றதும், அவர் தேர்வு செய்த பெயரான,

‘ரிஷிகேஷ் ஈஸ்வரன்’ என்ற பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லி, பேரனுக்கு வாயில் தேன்தடவி, அட்சதை தூவினார்.

 

அடுத்து சுகன்யா ஸ்ரீகாந்த், அதன் பிறகு ராம் அபர்ணா என எல்லோரும் வரிசையாக வாழ்த்தினர். விழா முடிந்ததும், குழந்தையைத் தூக்கி வைத்து விதவிதமாகப் போட்டோ எடுத்தனர்.


ப்ரகாஷ் எல்லாவற்றையும் ஓரமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். தான் எதோ பெரிதாக இழந்துவிட்டது போல இருந்தது.


“சரி போய் வந்தவங்களைக் கவனிங்க.” என அகிலாண்டேஸ்வரி குழந்தையை வாங்கி வைத்துக் கொண்டார்.


அவர் அறைக்குள் செல்லும் போது, பிரகாஷை ஒரு பார்வை பார்த்து செல்ல, சிறிது நேரம் சென்று ப்ரகாஷ் உள்ளே சென்றார்.


கட்டிலில் படுத்து இருந்த தன் பேரன் கையும் காலும் ஆட்டுவதைப் பார்த்து அவர் பரவசப்பட…


“எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை நீ இழந்திருக்கன்னு இப்பவாவது உனக்குப் புரியுதா?” அகிலாண்டேஸ்வரி கண்ணீருடன் தன் மகனைப் பார்த்து கேட்க,


“ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன் மா… இவனைப் பார்க்கும் போது, என் ரத்தம்ன்னு என் மனசு தவிக்குது. இவனைத் தூக்கி கொஞ்சனும்ன்னு ஆசையா இருக்கு.” என்றவர், பேரனை கையில் தூக்கிக் கொண்டார்.


“இவன் அப்படியே ராம் மாதிரி இருக்கான்.”


“உன் பையன் உன்னை மாதிரி இருக்கான். அவன் பையன் அவனை மாதிரி இருக்கான்.”


ப்ரகாஷ் குழந்தையைத் தூக்கி பிடித்து ரசிக்க, “உரிமையா கொஞ்ச வேண்டியவன, இப்படித் திருட்டுத்தனமா கொஞ்சுறியே டா…” என அகிலாண்டேஸ்வரி வருத்தப்பட்டார்.


பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டி வளர்க்கும் பெற்றோர் கூட, தங்கள் பேர பிள்ளைகளுக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பர். வீராப்பாகத் பேசி திரியும் ஆண்கள் கூடப் பேரப் பிள்ளைகளிடம் தோற்றுப் போவார்கள். பேர்க் குழந்தைகளிடம் மயங்காதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன? பிரகாஷும் விதிவிலக்கு அல்ல.


“சரி நீ வெளிய போ. ராம் பார்த்தா பிரச்சனை ஆகும்.”


ப்ரகாஷ் மனமே இல்லாமல் குழந்தையைக் கட்டிலில் விட்டு சென்றார்.
அவர் அறைக்குள் சென்றதை ராம் பார்த்தே இருந்தான். அவன் முகம் இறுகி இருக்க, அபர்ணா அதைப் பார்த்து பயந்து போய் இருந்தாள். ப்ரகாஷ் வெளியே வந்ததும், இருவரும் உள்ளே சென்றனர்.


“என்ன உங்க மகன் வந்தார் போல…” என அகிலாண்டேஸ்வரியிடம் அவன் கேட்க,


“அவன் ரொம்ப வருத்தபட்டான் டா…” என்றார்.


“அதுக்குதானே பாட்டி இங்க விசேஷத்தை வைக்க ஒத்துகிட்டேன். நாங்க அப்பா இருந்தும் இல்லாம இருந்தோமே, அந்தக் கஷ்ட்டத்தை அவரும் உணர வேண்டாம்.”


“இப்படி ஒரு பேரனை, இனி அவர் எப்பவும் தூக்கவோ கொஞ்சவோ முடியாது. இன்னைக்கு அவனைப் பார்த்ததை நினைச்சே, அவர் காலம் எல்லாம் ஏங்கணும்.” ராம் கொஞ்சம் கூட இறக்கம் என்பதே இல்லாதது போலப் பேச…


“அடப்பாவி ! வேணுமுன்னே தான் பண்ணானா? நாம வேற இது தெரியாம பயந்து போய் இருந்தோமே.” என அபர்ணா நினைத்தாள்.


குழந்தையைத் தூக்கியவன், “இவன் எங்க மகன். ஸ்வர்ணாவோட பேரன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

Advertisement