Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 34


ஸ்வர்ண ஹாலில் உட்கார்ந்து இருந்தால்… அபர்ணாவும் அங்குதான் இருப்பாள். காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பாள்.


அவர் உறங்க சென்று விட்டால். மாடியில் இருக்கும் ஊஞ்சலில் அல்லது கீழே முன்புறம் தோட்டத்தில் அமர்ந்து இருப்பாள்.


அபர்ணா அந்த வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் அவளே செய்ய ஆரம்பித்தாள். வீடு பெருக்கி துடைத்ததும், முன் வாசலில் அவளே கோலம் இடுவாள். கருப்பு நிற கிரானைட் கல்லில் கோலம் போடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.


பூஜை அறை வேலைகளை அவளே பார்த்துக் கொண்டாள். அவள் அறைக்குள் வேலை செய்பவர்களை, அவள் விடுவது இல்லை. அதனால் அவளே அவர் அறையைச் சுத்தம் செய்து கொள்வாள். தோட்டத்திற்குத் தண்ணீர் விடுவதும் அவளே. எதாவது செய்து பொழுதை போக்கிக் கொண்டு இருந்தாள்.


ஸ்வர்ணாவும் அவளோடு இரண்டு ஒரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.


காலை வேலையில் வீட்டின் முன்புறம் ராம் கார்த்திக் இருவரும் ஒரு அரைமணி நேரம் ஷட்டில் விளையாடுவார்கள். அபர்ணா தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடி அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


விளையாடி முடித்து இருவரும் வியர்த்து விருவிருத்து, இவள் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தனர்.


“நீயும் எங்களோட கொஞ்ச நேரம் விளையாடலாம் இல்லை.” ராம் அபர்ணாவை பார்த்து சொல்ல….


“இப்படி எல்லாம் கஷ்ட்டபடனும்ன்னு எல்லாம் அவசியம் இல்லை. சாப்பிடும் போது அளவா சாப்பிட்டு, கொஞ்சம் சுறுசுறுப்பா வீட்டு வேலை பார்த்தாலே போதும்.” என்றாள்.


அவள் சொல்வது உண்மைதான். எவ்வளவு சுவையாக இருந்தாலும், ஒரு அளவுக்கு மேல் அவள் உண்ண மாட்டாள். அதே போல், ஒரே மாதிரி மாவு சத்தாக இல்லாமல், பழங்கள், ப்ரோடீன் எனக் கலவையாக உணவு வகைகள் இருப்பது போலப் பார்த்துக் கொள்வாள். ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் கொஞ்சம் இடைவெளி விட்டு சாப்பிடுவதால்… அவள் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தாள்.


ஸ்ரீகாந்த முடியாமல் போன பிறகு அவருக்காக ஆரம்பித்தது. அதை அப்படியே அபர்ணா கடைபிடித்தாள். எல்லா நாளும் அப்படி இருக்கவும் மாட்டாள். பண்டிகை நாள், வெளியே செல்லும் போது விரும்பியதை சாப்பிடவும் செய்வாள்.


ராமிற்காவது வேலையில் அங்கே இங்கே கொஞ்சம் அலைவான். ஆனால் கார்த்திக் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பதால்… அவன் கண்டிப்பாக உடற்பயிர்ச்சி செய்ய வேண்டும் எனக் கட்டாயத்தில் இருந்தான்.


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, டைகர் அங்கு வர… அபர்ணா அலறுவாள் என்று பார்த்தால்… அவள் கூலாக நின்று கொண்டிருந்தாள். அவளிடம் வந்த டைகர் அவளைச் சுற்றி சுற்றி வர….


“என்ன டி புலிக் குட்டியா இருந்த என் நாயை இப்படிப் பூனைக் குட்டி ஆக்கி வச்சிருக்க…” என ராம் பொய் கோபம் கொள்ள….


“உன்னை மாதிரியே உன் நாயையும் ஆக்கி வச்சிருக்க டா.” என்றான் கார்த்திக்.
பகலில் தோட்டத்தில் இருக்கும் போது எல்லாம், இவள் சாப்பிடும் நொறுக்கு தீனி எல்லாம் அதற்கும் கொடுக்க… இதற்கு முன் அதற்கு யாரும் அப்படிக் கொடுத்தது இல்லை. அதனால் டைகர் அபர்ணாவுடன் ப்ரண்ட் ஆகிவிட்டது.


“ஹே இப்படித்தான் திருடன் பிஸ்கட் கொடுத்தாலும், அவன் கூட ப்ரண்ட் ஆகிடுவியா?” என அபர்ணாவே அதனிடம் கேட்டும் இருக்கிறாள்.


ராம்மும் அதையே கேட்க, “நீங்க வேணா என்னை அடிக்கிறது போல.. சும்மா கை ஓங்குங்க. என்ன பண்றான்னு பார்க்கலாம்?” அபர்ணா சொன்னது போல, ராம் அபர்ணாவை விளையாட்டுக்கு அடிக்க, டைகர் அவனைப் பார்த்து குலைத்து, அவனை அடிக்கவிடாமல் இருவருக்கும் இடையே வந்து காலைத் தூக்கி நின்றது.


“இப்ப நான் உங்களை அடிக்கிறேன்.” என அபர்ணா ராம்மை அடிக்க…. டைகரும் அவளை உற்சாகப்படுத்துவது போல… சுற்றி சுற்றி வர….


“போ… இனிமே நீ என் டைகர் இல்லை. இவளோட டைகர் …..” எனச் சொல்லிவிட்டு ராம் சென்றான். கோபமாகச் சொல்வது போல இருந்தாலும், உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே உணர்ந்தான்.


காலை பத்து மணி போல, சுகன்யா அபர்ணாவை செல்லில் அழைக்க… அபர்ணா தோட்டத்திற்குச் சென்று பேசிக்கொண்டு இருந்தாள். ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்.


மாடியை துடைக்கச் சென்ற பெண், வெறுமனே அந்த ஹாலை மட்டும் லேசாகத் தடவி விட்டு, துடைத்தது போலப் பாவானை செய்துவிட்டு கிளம்ப, சற்று நேரத்திற்கு முன்பே மேலே வந்திருந்த அபர்ணா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


தினமும் துடைப்பதால்… ஒருநாள் துடைக்கா விட்டால் ஒன்றும் தெரியாது என அந்தப் பெண் அடிக்கடி இப்படிச் செய்வதுதான். ஆனால் இன்று அபர்ணாவிடம் மாட்டிக் கொண்டாள்.


ராம் அகிலா இருவரின் அறையும் மாடியில் தான். அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் அறைக்குள் யாரும் நுழையக் கூடாது. ஆனால் அங்கிருந்து இருந்த இன்னொரு அறை, பால்கனி எதையுமே துடைக்க வில்லை.


“ஒழுங்கா வேலை செய்றதுன்னா செய்யுங்க… இல்லைனா வராதீங்க.” என்றாள் அபர்ணா கோபமாக.


அந்தப் பெண் திகைத்து போய் நிற்க, “நாங்க பார்க்கிறோம் பார்க்கலை… அது வேற விஷயம். ஆனா உங்களுக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கு இல்ல… அதுக்காகவாவது வாங்கின காசுக்கு ஒழுங்கா வேலை பண்ண வேண்டாமா.” என நறுக்கென்று அவள் கேட்க, ஸ்வர்ணாவுக்கு அவள் பேசுவது நன்றாகக் கேட்டது. ஆனால் அவர் எதிலுமே தலையிடவில்லை.


“இந்த மாசத்தோட நீங்க நின்னுக்கோங்க…. உங்களை மாதிரி ஆளையெல்லாம் நம்பி எப்படி வீட்டுக்குள்ள விட முடியும்.” என்றாள்.


அந்தப் பெண் சென்று ஸ்வர்ணாவிடம் முறையிட, “தப்பு உன் மேல தானே. இனி எல்லாம் அவ பொறுப்புதான்.” என்றுவிட்டார். அவர் சொல்வதை அபர்ணா மாடியில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்தாள்.


மறுநாள் சமையல்க்காரரை பிடித்தாள். அவர் எதோ சொந்த வீட்டில் இருப்பது போல மிதப்பாக வேலை பார்ப்பார். ராம் மதிய உணவுக்கு வீட்டிற்கே வருவது இல்லை. அகிலாவும் அப்படித்தான். இப்போது எல்லாம் அவளும் மதிய உணவுக்கு மாமியார் வீட்டிற்குச் செல்கிறாள்.


மதிய உணவு ஸ்வர்ணாவுக்கு மட்டும்தான். இப்போது இவள் வந்ததில் இருந்து இவளுக்கும். இரவு அனைவருக்கும் டிபன் தான். ஆனால் இதற்கு அவர் வாங்கும் சம்பளம் மிக அதிகம்.


“இனிமே தினமும் காய்கறி சூப் வைக்கிறீங்க. மதியம் இரண்டு பொரியலோட சாப்பாடு. அதுல கண்டிப்பா கீரை இருக்கணும். இனிமே மதியம் சாருக்கு வீட்ல இருந்து சாப்பாடு போகும்.” என்றவள்,


“நீங்க சமைக்கிறதுக்கு நீங்கதான் காய் நறுக்கிக்கணும். நாங்க சமையல் செய்ய ஒரு ஆள், காய்கறி நறுக்க ஒரு ஆள் எல்லாம் வைக்க மாட்டோம்.”


“இனிமே மதியானத்தோட நீங்க வீட்டுக்குப் போகலாம். நைட் நாங்க பார்த்துக்கிறோம்.” என்றாள்.


சமையல்காரர் ஸ்வர்ணா எதாவது சொல்வாரா என அவர் முகத்தைப் பார்க்க, ஸ்வர்ணா எதுவும் இதில் தலையிடவில்லை. அதனால் அபர்ணாவிடம் தலையாட்டிவிட்டு சென்றார்.


உதவிக்கு இருந்த பெண்ணை அழைத்து, “இனி நீ காய் நறுக்க வேண்டாம். காலையில் சாயங்கலாம் பத்திரம் தேய்க்கணும், அப்புறம் வெளிய நீதான்  கூட்டி வாசல் தெளிச்சுக் கோலம் போடணும்.இனி காலை வேலை முடிஞ்சதும், நீ கிளம்பலாம். திரும்பச் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்து பாத்திரம் தேச்சா போதும். காலையில இருந்து சாயந்தரம் வரை இங்க இருக்க வேண்டாம்.”அந்தப் பெண்மணி சரி எனத் தலையாட்டிவிட்டு சென்றார்.


வீட்டில் இத்தனை வேலைக்காரர்கள் சுற்றி இருந்தால்…. வீட்டில் சுதந்திரமாக நடமாடவோ, பேசவோ முடியவில்லை என்றே அப்படிச் செய்தாள்.


துணி துவைக்கும் பெண் ஒழுங்காக வேலை செய்ததால்…. அவரை விட்டுவிட்டாள். அந்தப் பெண் கனமான உருப்படிகளை மட்டும்தான் மெஷினில் போடுவாள்,  மற்றவற்றைக் கையில்தான் துவைப்பாள். அவரையே வீடு பெருக்கி துடைக்கச் சொன்னாள்.


அதே போல் ஏஜென்சியில் சொல்லி, ஒருவரை முழு நேரத்திற்குக் காவலுக்கு வைத்துக் கொண்டாள். வீட்டிற்குப் பின்புறம் ஒரு அறையும் பாத்ரூமும் உண்டு. அதனால் பிரச்சனையை இல்லை. பகலில் அவர் கேட் அருகில் உட்கார்ந்து இருப்பார். இரவு அவரை முன் வரண்டாவில் படுக்கச் சொல்லிவிட்டாள். டைகர் அவரது பொறுப்பு. அவருக்குக் காலை, மதியம் உணவு வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டது. இரவு அவர் வெளியில் பார்த்துக் கொள்வார்.


ராம் அவர்கள் வீட்டை மிகவும் பாதுக்காப்பாகக் கட்டி இருந்தான். அப்படி யாரும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து விட முடியாது. வீட்டில் அதிகமாக நகைகளை வைப்பதும் இல்லை. பேங்க் லாக்கரில் இருந்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது தான். சும்மா எதற்காக இரண்டு பேர், எப்போதும் வாயிலில் நின்று கொண்டு என நினைத்தாள்.


அன்று இரவில் இருந்து அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதல் நாள் எண்ணெய் இல்லாத ரொட்டியும், பன்னீர் குருமாவும் செய்தாள். யாரும் எந்தக் குறையும் சொல்லவில்லை.


“இவ சமைக்கிறதா இருந்தா…. இனி என்னால ரிஸ்க் எடுக்க முடியாது. நான் நைட்டும் எங்க அம்மா வீட்ல சாப்பிட போறேன்.” எனக் கார்த்திக் அலட்ட… அபர்ணா அப்போதே சுஜாவை அழைத்துச் சொல்ல, “அவனுக்கு இங்க எல்லாம் சாப்பாடு இல்லைன்னு சொல்லிடு.” என்றார்.


“எங்க அம்மா போதும், என்னை டேமேஜ் பண்ண.” என்றான் அவன். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.


“சரி நாளைக்கு என்ன வேணும் சொல்லுங்க. உங்களுக்குப் பிடிச்சதே பண்ணிடலாம்.” என அபர்ணா கார்த்திக்கை கேட்க, எதாவது கஷ்ட்டமா சொல்வோம் என நினைத்த கார்த்திக், “அடை தோசை பண்ணு.” என்றான்.


“எங்க அம்மா முன்னாடி எல்லாம் அடை தோசைக்கு அவியல் பண்ணுவாங்க. அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும்.” ராம் ரசித்துச் சொல்ல, அகிலாவும் ஆமாம் என்றாள்.


ஸ்வர்ணா தன் பிள்ளைகளைப் பார்த்தார். ஒரு காலத்தில் எவ்வளவு வேலையாட்கள் இருந்தாலும், அவர் கையால் பிள்ளைகளுக்குச் செய்து கொடுத்தால்தான் அவருக்குத் திருப்தி. ஆனால் அவருக்கும் கணவருக்கும் பிரச்சனை வந்தபிறகு, எல்லாவற்றிலும் இருந்த பற்று அவருக்கு விட்டுப் போய் விட்டது.


மறுநாள் காலை உணவுடன் இருந்த பழங்களைப் பார்த்து விட்டு, காலையில எப்படிச் சாப்பிடுறது என ராம் கேட்க, ஒரு இட்லி கம்மியா சாப்டிட்டு, கொஞ்சம் பழங்கள் சாப்பிடுங்க.” என்றாள். அவள் சொன்னபடியே செய்து விட்டுச் சென்றான்.


மதியம் டிரைவரிடம் அவனுக்குக் கேரியரில் உணவு கொடுத்து அனுப்பினாள். அவன் பிசைந்து சாப்பிட நேரம் இல்லை என்றதால்… சாத்தத்தில் குழம்பை பிசைந்தே அனுப்பினாள். தனியாகக் கொஞ்சம் தயிர் சாதம் வேறு.


மாலை அபர்ணா அடை தோசைக்கு ஊற வைத்தாள். சமையல் அறைக்கு வந்த ஸ்வர்ணா, “தொட்டுக்க, நான் அவியல் பண்ணறேன்.” என்றார். அபர்ணா அவர் செய்யட்டும் என வெளியே வந்துவிட்டாள்.


சாப்பிடும் நேரத்திற்கு அபர்ணா எல்லோருக்கும் அடை தோசை வார்க்க… அவியலோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது.


“அத்தை, உங்க சமயல் சூப்பரா இருக்கு. இனி ராத்திரிக்கு நீங்களே சமையல் பண்ணுங்க.” என்றான் கார்த்திக்.

அபர்ணா சாப்பிடும் போது ஸ்வர்ணா தோசை ஊற்ற செல்ல… அவரைத் தடுத்து, “ என் தங்கச்சிக்கு நான் ஊற்றிக் கொடுக்கிறேன்.” எனக் கார்த்திக் ஊற்றிக் கொடுத்தான்.


இத்தனை நாள் அங்கே ஒரு வீடு இருந்தது. ஆனால் இப்போதுதான் அந்த வீட்டுக்கு ஒரு களை வந்தது.


வெகு நாட்களாக அகிலாண்டேஸ்வரி ராம்மையும், அபர்ணாவையும் அழைத்துக் கொண்டு இருந்தார். அதனால் அந்த வார ஞாயிறு மாலை ஸ்வர்ணாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.


இவர்கள் வந்ததும் வீட்டு உறுப்பினர்கள், அனைவரும் அங்கே ஹாலில் கூட… வீடே கலகலவென்று இருந்தது. அஞ்சலியும் வந்திருந்தாள்.


“அபர்ணா உனக்குப் புது இடம் எப்படி இருக்கு. வீடெல்லாம் செட் ஆகிடுச்சா?” காயத்ரி கேட்க,


“அவதான் வீட்டையே செட் பண்றா? நீங்க அவளைப் போய்க் கேட்கிறீங்க. எங்களைப் பார்த்து கேளுங்க. உங்களை அபர்ணா நல்லா வச்சிருக்காளா அப்படின்னு.” என்றான் ராம் கேலியாக.


“அதுதான் பார்த்தாலே தெரியுதே… ஸ்வர்ணா முகம் கூட இப்ப தெளிவா இருக்கே.” என்றார் அகிலாண்டேஸ்வரி.


அங்கே வீட்டில் நடந்த மாற்றம் எல்லாம் அவருக்குத் தெரியும். ஸ்வர்ணா எல்லாவற்றையும் தன் மாமியாரிடம் சொல்லி விடுவார். மற்றவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அபர்ணா ராம்மை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த இடத்தில் நின்று பேசினர்.


“இங்க அப்படி உனக்கு என்ன பார்க்கணும்?”


“ம்ம்… இங்கதானே நான் உங்களை முதல் தடவை பார்த்தேன். நீங்கதான் வந்து என்கிட்டே பேசினீங்க. அப்புறம் கண்டுக்காமலும் இருந்தீங்க.”


தான் அப்போது நடத்துக் கொண்டது, அவளை மிகவும் பாதித்து இருக்கிறது என ராமிற்குப் புரிந்தது.


“லிப்ட்ல இருந்து வெளியே வந்தா… எதிர்ல தேவை மாதிரி ஒரு பொண்ணு, நிஜமாவே நான் ஸ்தம்பித்துத் தான் போயிட்டேன். அப்ப நான் இந்தப் பொண்ணு மேல, இப்படிப் பைத்தியம் ஆவேன்னு எல்லாம் நினைக்கலை.” ராம் அபர்ணாவை அனைத்துக் கொண்டு கிறக்கமாகச் சொல்ல…


“யாரு? நீங்க என் மேல பைத்தியமா இருக்கீங்க? வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கீங்க. எனக்கு உங்களோட கொஞ்ச நேரம்தான் கிடைக்குது. நாம அந்தக் காட்டிலேயே இருந்திருக்கலாம். நீங்க எப்பவும் என் பக்கத்தில இருந்திருப்பீங்க.”


“ஓ… நம்ம ஹனிமூன் ஸ்பாட் உனக்கு அவ்வளவு பிடிச்சிடுச்சா?”


“எங்கையோ கூப்பிட்டுப் போய்த் தொலைங்க. நீங்க பக்கத்தில இருப்பீங்க இல்ல.”


“சரி விடு, வேற எங்கையாவது சீக்கிரம் இன்னொரு ஹனிமூன் ப்ளான் பண்ணலாம்.


“அப்புறம் அபர்ணா உன்கிட்ட ஒன்னும் கேட்கணும்ன்னு நினைச்சேன். இந்த அஞ்சலியோட பார்வையே சரி இல்லையே? அவன் என்னை எப்பவும் முறைச்சிட்டு தானே இருப்பா? இப்ப என்ன பாசமா பார்க்கிறா?”


ராம் கேட்டதும், தானும் சோனாவும் அஞ்சலியிடம் பேசியதை பற்றி அபர்ணா சொல்லி விட,

“மண்ணாங்கட்டி, உங்களை யாரு அவகிட்ட எல்லாத்தையும் சொல்ல சொன்னது. ஏற்கனவே அவ யாரையும் மதிக்க மாட்டா. இனி அவ இஷ்டத்துக்கு ஆடுவா. அவ அப்பா அம்மா பேச்சையும் கேட்க மாட்டா?” என்றான் ராம், அஞ்சலியை பற்றித் தெரிந்தவனாக.


‘என்ன டா இவரு, நாம நல்லது நினைச்சு சொன்னா, இப்படிப் பேசுறார். அதெல்லாம் ஒன்னும் ஆகாது.’ என அபர்ணா நினைக்க, ராம் சொன்னதுதான் நடந்தது.


மறுநாள் வழக்கம் போல் ஸ்வர்ணா ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க, அபர்ணா அவள் லேப்டாப்பில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தாள். மதிய உணவு முடிந்ததும், நாடகம் பார்க்கும் ஆர்வத்தில் ஸ்வர்ணா மாத்திரை சாப்பிட்டுவிட்டு, அங்கேயே அந்த மருந்து டப்பாவை மறந்து வைத்துவிட்டார்.


அவர் உறங்க சென்ற பிறகே அபர்ணா அதைக் கவனித்தாள். என்ன மாத்திரை என எடுத்து பார்த்தால்… அவளுக்குத் தெரியவில்லை. உடனே தனது லேப்டாப்பில் அந்த மாத்திரை பெயரை டைப் செய்தாள்.


எந்த மாத்திரையாக இருந்தாலும் உடனே அதைப் பற்றி நெட்டில் ஆராய்ச்சி செய்வது அவளது வழக்கம். அந்தப் பழக்கத்தில் இப்போதும் பார்க்க தோன்றியது. ஒன்று பிரஷர் மாத்திரை, இன்னொன்று கொழுப்பு சத்து மாத்திரை. கடைசியாக இன்னொரு மாத்திரையின் பெயரை போட்டால்… அது இதயச் சம்பந்தமான பிரச்சனைகானது என வர, அவள் யோசனையில் இருந்தாள்.


ராம் இதுவரை தன் அம்மாவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது எனத் தன்னிடம் சொன்னதே இல்லை. அவன் வரட்டும் கேட்போம் என நினைத்தாள்.


இரவு அவன் வெகு தாமதமாக வர… கொஞ்ச நேரம் இருவரும் சண்டை பிடித்தனர். இருவரும் படுக்க வந்த பிறகுதான் அபர்ணாவுக்கு நினைவு வர, “ராம், அத்தைக்கு ஹார்ட்ல எதுவும் பிரச்சனை இருக்கா?” எனக் கேட்டாள்.


அபர்ணா அப்படிக் கேட்டதும் ராமிற்குக் கோபம் வந்துவிட்டது. “எதாவது உலராத.” என்றான்.


அபர்ணாவுக்குக் கோபம் வந்தாலும், “இல்லை… அவங்க சாப்பிடுற மாத்திரை வச்சு கேட்டேன்.” என்றாள்.


ராமிற்குப் பயங்கிற அதிர்ச்சி, “என்ன மாத்திரை?” என்றான்.


அபர்ணா விவரம் சொன்னதும், “அம்மாவுக்கு எப்பவும் கொஞ்சம் பிரஷர் இருக்கு, மத்தபடி அவங்களுக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றான்.


“நான் போய் அம்மாவை கேட்டுட்டு வரேன்.” என அவன் எழுந்துகொள்ள,


“அவங்க இப்ப தூங்கி இருப்பாங்க. வீணா அவங்களைப் பயப்படுத்தாதீங்க. காலையில பார்ப்போம்.” என அபர்ணா தடுத்தாள்.


ராம், அவள் சொன்னது கேட்டு இருந்தாலும், அன்று இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அபர்ணா விழுத்து பார்க்கும் போது எல்லாம், அவன் உறங்காமல் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்து இருந்தான்.


இவன்கிட்ட போய் இப்ப ஏன் சொன்னோம், காலையில் சொல்லி இருக்கலாம் என அபர்ணா நினைத்தாள். அவளுக்கு அவன் போல விழித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.


அவளுக்கு இப்போது எல்லாம் ரொம்ப உறக்கம் வருகிறது. ஏன்னென்று தெரியவில்லை. ஆனால் ராம் விழித்திருக்கிறான் என்ற எண்ணம், அவளை அசந்தும் தூங்க விடவில்லை. உறங்குவதும் விழித்து அவனைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

 









Advertisement