மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.
ஏமாற்றமும் கோவமுமாக கணவனை பார்த்தாள்.
“டிக்கெட் கிடைக்கல தேனு”
“பொய் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டன.
“முதல்ல ஏறு, இதுலேயும் மனுஷங்க டிராவல் பண்றாங்கதான்” என ஆனந்த் சொல்ல, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஏறினாள் தேன்.
நல்ல வேளையாக அவர்களுடையது கீழே உள்ள பெர்த்.
“இப்படினு முன்னாடியே சொல்லியிருந்தா ஏர் பில்லோ, பெட் ஷீட் எல்லாம் எடுத்து வச்சிருப்பேன். எதையுமே என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என அவள் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை.