Advertisement

ரயிலின் சத்தம் மட்டும் தடா தடா வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.

மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு மொழிகள் தெரியாது. எதை தேடி போகிறான் எதை நோக்கி போகிறான் அவனுக்கே புரியவில்லை தெரியவில்லை

ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லை, ஊரில் இருப்பவர்களிடம் நிச்சயம் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மும்பையை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.

ஆம் அர்ச்சனாவை தேடி செல்கிறான். அவளின் வேலை மும்பையில். திருமணம் முடிந்த இரண்டே நாளில் நான் வேலையை நேரில் சென்று தான் ரிசைன் செய்து வர வேண்டும் என்று சொல்லியவள் ஒரு வாரத்தில் கிளம்பினாள்.

===============================

 

சண்டை சச்சரவு எதுவும் யாரிடமும் போடவில்லை. ஒரு ஒதுக்கம், எல்லோரிடமும். எல்லோரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னவள் ஷக்தி ப்ரியாவிடம் பேச செய்யவேயில்லை. அவள் பேசியது எல்லாம், சடங்கு அது இதுன்னு எதுவும் ஏற்பாடு செய்ய வேண்டாம். கொஞ்சம் நாள் போகட்டும். இதையாவது எனக்கு செஞ்சு கொடு என்பது தான்

அதன்படி அவர் நாயகியிடம் பேச, இரு அம்மாக்களுமாக, சரி இருவரும் ஒருவருக்கொருவர் பேசி பழகட்டும் என்று நினைத்து சிறிது நாள் போகட்டும் என்றே நினைத்தனர்.       

விருந்து என்று யார் அழைத்ததற்கும் இங்க நான் வந்த பிறகு போய்க்கலாம் என்ற பொதுவான பதில் அது அவளின் அம்மாவை பார்த்து சொன்னாளா இல்லை மாமியாரை பார்த்து சொன்னாளா தெரியாது.

அந்த ஒரு வாரமும் அவளின் முகத்தை முகத்தை தான் ஆராய்வான் வல்லபன். ஏதாவது தெரிகிறதா அவளின் முகத்தினில் என்று. அவனால் எதையும் கண்டறிய முடியவில்லை

==============================

சிவசு அந்த ஆளின் பின்புலம் ஆராய்ந்து அவனின் குடும்பத்தை தூக்க, அந்த ஆளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் தான் செய்தேன் என்று விட்டான் ராஜமாணிக்கம் அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விட்டார். ஆனாலும் அவன் மோகனசுந்தரத்தை காட்டிக் கொடுக்கவில்லை

ஒரு வேலை நீ பிடிபட்டு விட்டால் என்னை காட்டிக் கொடுக்க கூடாது என்று அவர் அதற்கும் ரேட் பேசியிருக்க தப்பித்து விட்டார்

இப்படி வேலைகளும் வல்லபனை இழுத்துக் கொள்ள என்ன தான் செய்வான் அவன் அர்ச்சனாவை அவனால் பெரிதாக நெருங்கி விட முடியவில்லை

இதற்குள் அவள் மும்பை கிளம்பிவிட்டாள்.

நானும் வரட்டுமா என்று கேட்கவில்லை வல்லபன், வருகிறேன் என்றே அவளிடம் சொன்னான்

==============================

வல்லபன் பிடிபிடியென்று ராஜமாணிக்கதையும் ஷக்தி ப்ரியாவையும் பிடித்தான்

ஒரு பொண்ணு எங்க வேலை பார்க்கறா யாரோட தங்கி இருக்கா எதுவும் உங்களுக்கு தெரியலை என்ன பண்றீங்க நீங்க என்று எகிற

எல்லாம் பாலாவிற்கு தான் தெரியும் அவர்களின் வீட்டினில் ஒருவன் போல இருந்தவன் திடீரென்று எல்லாம் மாறிப் போகும் என்று யார் கண்டார்

அர்ச்சனா வேலை பார்க்கும் கன்சர்னின் பெயர் மற்றும் ஊர் தெரியும், வேறு எதுவும் தெரியாதே. அவளின் தோழிகளிடம் பேசுவார் தான் ஆனால் அதுவும் அவளின் கைபேசியில் இருந்து தானே சமீப காலமாக யாரிடமும் பேசியது போல ஞாபகம் கூட இல்லை

அவ வேணும்னே நம்மை அவாய்ட் பண்றாளா இல்லை ஏதாவது பிரச்சனையா நமக்கு எப்படி தெரியும் என்று கடந்து பத்து நாட்களாய் அவள் தொடர்பில் வராமல் இருக்க தவித்து போனான்

Advertisement