விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள்.

“என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை வாங்கறா போல?” என்றார் அவளின் சித்தி முறையான ஒருவர்.

அதனுடனே “ஆமா, உங்க அப்பாவும் அம்மாவும் பேசினாங்களா?” என்று கேட்க, ஒரு சிரிப்பு மட்டுமே சைந்தவியிடம்.

விஜயன் பக்கத்தில் இருக்க அவனை “வாங்க” என்று சொன்ன உறவுகளிடம் மட்டுமே அவள் வாய் திறந்து பேசினாள். மற்றவர்களிடம் ஒரு புன்னகை, தலையசைப்பு அவ்வளவே.

“உங்கப்பா அம்மா பேசலைன்னா என்ன? நீ போய்ப் பேசு” என்று ஃப்ரீ டிப்ஸ் கொடுக்க… அதற்கும் ஒரு சிரிப்பே.

“பாரு, இவங்கப்பா அம்மாக்கிட்ட பேசினாலும் வாய்த் திறக்கலை. இவளும் வாய்த் திறக்கலை”

“நாளைக்கு எல்லாம் சேர்ந்துக்குவாங்க, நீ பேசாம வா” என்று அந்த பெண்ணின் கணவர் அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

“ஆர் யு ஓகே” என்று விஜயன் சைந்தவியை பார்த்து கேட்க,

“எஸ், பெர்ஃபெக்ட்லி, இதெல்லாம் எதிர்பார்த்தது தான்” என்று சொல்லும் போதே விஜயனின் நண்பர்கள் வர, அவர்களிடம் பேசியபடியே குழந்தைக்கு ஊட்டி முடித்தனர்.

பின்னர் அனைவரும் மேடை ஏற… சைந்தவி குழந்தையோடு கீழேயே இருந்து கொண்டாள்.

ப்ரித்வியை காணவில்லை.

மேடையில் நண்பர்கள் ஆரவாரமாய் மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கீழிறங்கி, உணவுண்ண சென்றனர்.

எல்லாம் ரித்திகாவோடே… ஸ்கந்தநாதனும் மேகலாவும் பார்த்து தான் இருந்தனர்.

புஃபே முறையில் உணவு…. முதலில் ரித்தியை விஜயன் வைத்திருக்க, சைந்தவி உண்டாள். அதன் பின் சைந்தவி வைத்திருக்க விஜயன் உண்டான்.

கூட்டம் வெகுவாகக் குறைந்திருக்க, மணமக்களும் உண்டனர். “நீங்க இங்கேயே இருங்க” என்று விஜயனிடம் ஜீவன் தனியாக சொல்ல,

“இல்லைடா, நாங்க வீட்டுக்குப் போயிட்டு காலையில வருவோம்” என்று சொல்லியே வந்தான்.

காஞ்சனா அவளின் அப்பா அம்மாவுடன் உணவுண்டாள்.

அவளின் பார்வை முழுவதும் முறைப்பாய் இயலாமையாய் தன் மகளை வைத்திருக்கும் இருவர் மேல் தான் இருந்தது.

அழகான பெண்கள் அங்கே பலர் இருக்க… எல்லோரையும் விட சைந்தவி தனித்து தெரிந்தாள். உணவுண்ட ரித்திகா அவள் மேலேயே உறங்கியிருந்தாள்.

“நான் போய் ரித்தியை வாங்கி வரவா” என்று காஞ்சனாவின் அம்மா கேட்க,

“வேண்டாம்” என்று விட்டார் மேகலா.

உறக்கத்தில் கை மாறினால் ரித்திகா அழ ஆரம்பித்து விடுவாள் என்பதினால் ப்ரித்வி வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று மேகலா சொல்ல,

மகளை பார்த்ததும் பாசம் பொங்குகிறது என்று அர்த்தம் கொண்டனர், காஞ்சனாவும் அவளின் பெற்றோரும்.

பின்பு உறவுகள் இருக்க, அவர்களோடு பேசவே நேரம் சென்றது.

மேகலா ப்ரித்வி உணவுண்ணவில்லை என்றழைக்க அவரின் அழைப்பு ஏற்கப்படவில்லை.

கணவரிடம் சொல்ல, “சின்ன பிள்ளையா அவன். ஃபிரண்ட்ஸ்ஸோடா இருப்பான் வந்துடுவான்” என்றார்.

சைந்தவியும் கவனித்தாள், ப்ரித்வியை வெகு நேரமாக காணவில்லை. பட்டுவை வைத்திருப்பது அவளுக்கு ஒன்றுமில்லை, ஆனால் ப்ரித்வி எங்கே?

விஜயன் அருகில் வரவும் “ப்ரித்வி எங்கே ரொம்ப நேரமா காணோம்” என்று சைந்தவி கேட்கவும்…

“தெரியலையே”

“எதுவும் பார்ட்டி போகுதா தனியா?”

“போகுது, ஆனா அவன் பார்ட்டி பண்ற ஆள் கிடையாதே”

“எங்க இருக்கான்னு பாருங்க” என்று சைந்தவி சொல்ல, ப்ரித்வியைத் தேடி விஜயன் சென்றான்.

நண்பர்களிடம் விசாரிக்க…. மண்டபம் பக்கத்தில் இருந்த ஒரு உயர்தர ஹோட்டலின் பாரில் இருப்பது தெரிய… விஜயனுக்கு அதிர்ச்சி.

அவனுக்குத் தெரிந்த ப்ரித்வி குடிக்க மாட்டான், குடிக்கவே மாட்டான். ஏன் குடிப்பவர்களின் அருகில் கூட நிற்க மாட்டான்.

வேகமாக அங்கே செல்ல… அங்கிருந்த டேபிள் மேல் தலை கவிழ்த்து படுத்திருந்தான். இவன் எழுப்பவும், அவனால் நிற்க முடியவில்லை.

ப்ரித்வியை கை தாங்களாக பிடித்து அவனின் கார் வரை வந்து… அவனின் பாக்கெட்டில் இருந்த சாவியால் கதவை திறந்து அவனை உள்ளே அமர வைத்து… அந்த ஆடியை மண்டப வாசலில் நிறுத்தியவன்….

நண்பன் ஒருவனுக்கு அழைத்து ஸ்கந்தநாதனை அழைத்து வரச்சொன்னான்.