அத்தியாயம் 9
தினசரி வழமை போல மறுநாள் ரங்காவும் மஹதியும் ரேவா அலுவலகம் சென்றனர். முடிந்தவரை ஓர் அறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்த மஹதி, ரங்கராஜனோடு மொத்த அலுவலகமும் வலம் வருவாள். அனைத்து தொழிலாளர்களும் தனக்கு ஓரளவாவது பரிச்சயமாக வேண்டுமென்பது ஒரு புறம் இருக்க, அப்பாவின் அறைக்கு சென்றால், அவரது நினைவு அலையெனத் தாக்குமே?
சுந்தருக்கோ, ரங்காவுக்கோ இப்படியொரு தொல்லை இல்லை. இருவருக்குமே அவர்களது துறையின் அருகே அவர்களுக்கென தனித்தனி அலுவலக அறைகள் இருந்தது.
மஹதிக்கு அப்படியில்லை, எனவே அப்பாவை நினையாமல் இருக்க இப்படி ஒரு உபாயத்தை கையாண்டாள்.  ஆனாலும் எத்தனை மணி நேரம் இப்படி அலுவலகத்தை சுற்றிக்கொண்டே இருக்கமுடியும்? 
எப்படியாயினும் மதியம் நெருங்குகையில் அங்கே சென்றுதான் ஆகவேண்டும். அப்பாவின் நாற்காலியை காலியாக விட்டு, அதனருகே இவளுக்காக ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் போடச்சொல்லி இருந்தாள். ரங்காவும் மஹதியுடன் சென்று மதிய உணவு இடைவேளை வரை சிறிது நேரம் இருந்த பின்னர், அவனது அலுவல்களை கவனிக்கச் செல்வான்.  
ஆனால் இன்றோ ரேவா-வின் இயந்திரம் தேவையென்று கேட்ட ஒரு நிறுவனத்தோடு, ரங்கராஜன் கூகிள் மீட்டில் கலந்துரையாடிக் கொண்டிருந்தான்  எனவே அவனை விட்டு மஹதி, நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்த இவளது அறைக்குச் சென்றாள். 
சென்ற சில நிமிடங்களிலேயே மஹதியை ஒரு வித வெறுமை ஆக்கிரமிப்பதை அவளால் உணர முடிந்தது. அதை போக்க என்ன செய்வது என்பதறியாமல் அவளது கணினியை உயிர்ப்பித்த நேரம், “குட் மார்னிங் மேம்”, என்ற உற்சாகமான ஆஷுதோஷின் குரல் கேட்டது.
மனம் சட்டென இலகுவாக, அவனது உற்சாகம் மஹதிக்கும் தொற்றியது. நிமிர்த்து வாசலைப் பார்த்தவளுக்கு, அங்கே யாரையும் காணாமல் மூடிய கதவு மூடியபடி இருக்க குழப்பமாக பார்த்தாள். “மேம்,இங்க சைட்-ல பாருங்க”,என்று சொல்லியவாறே, பக்க வாட்டில் இருந்த கதவை தனது முழங்கையால் திறந்துகொண்டு உள்ளே வந்தான் ஆஷுதோஷ்.
ஒரு கையில் பல கோப்புகளும், மற்றொரு கையில் மக் என சொல்லப்படும் பெரிய சைஸ் கோப்பையும் இருந்தது. 
அதை மஹதியின் டேபிளில் வைத்து, ”வெல்கம் ட்ரின்க் டு மை பாஸ்”,என்றான்.
“ஹஹ, தேங்க்யூ”
“சொல்லுங்க மேம், எப்படியிருக்கு ரேவா?”
“ப்ரம்மாண்டமா இருக்கு. கொஞ்சம் நெர்வஸா வும்.”
“அதெல்லாம் போகப்போக சரியாயிடும் மேம்”
“எங்க நாலஞ்சு நாளா ஆளைக் காணோம்?”
“ரங்கா சார் சொல்லலியா?அவர்க்கு தெரியுமே?”,என்று சிலநொடி தாமதித்தவன், புருவம் சுருக்கி, “ஒருவேளை சொல்ற நிலைமைல அவர் இல்லியோ? மறுபடியும்..?”, என்று கேள்வியாக பார்த்தான். 
“சேச்சே அப்படியெல்லாமில்ல. நானும் அண்ணாவும் வேற பேசிட்டு இருந்தோம் டிபார்ட்மென்ட்ஸ் எல்லாமும் பாத்தோம். பர்டிகுலரா அவனோட டிபார்ட்மென்ட் பத்தி சொல்லிட்டு இருந்தான். வேற எங்கயும் வெளிய போகல”
“நிஜமாவே ராஜ் ஸாரால பண்ண முடியாத விஷயம்.நீங்க சாதிச்சு இருக்கீங்க மேம்”
“ஹ்ம்ம். அதான் யோசிக்கிறேன்.நா இருக்கிற வரை ஓகே, நா போயிட்டா மறுபடியும் அவனோட பழைய லைஃப் ஸ்டைலுக்கே ரங்கண்ணா போயிடுவானோன்னு பயமா இருக்கு”
“போயிட்டா…ன்னா? எங்க போகப்போறீங்க?”
“என் ஸ்டடீஸ் முடிக்க லண்டன் போயிட்டா.. என்ன பண்ணுவான்னு யோசனை பண்றேன்”
“ஓ!”, என்று யோசனையானவன், “அப்ப இங்க..?”, என்று இழுத்தான்.
“கோர்ஸ் முடிக்க ஜஸ்ட் ஒரு ரெண்டு மாசம்தான் ஆகும். எல்லாமே அல்மோஸ்ட் முடிஞ்சா மாதிரிதான். சோ அது வரைக்கும் சுந்தரண்ணாவையும் ரங்கண்ணாவையும் கம்பெனிய பாத்துக்க சொல்லலாமாங்கிற ஐடியா இருக்கு”,என்ற மஹதி ஆஷுவைப் பார்த்து, “நீங்க என்ன சொல்லறீங்க மிஸ்டர் ஆஷுதோஷ்?”,என்று அவனது அபிப்ராயம் கேட்டாள்.
இதற்கு பதில் சொல்வதற்கு முழுமையாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டான்ஆஷு. அப்போது அவன் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின. 
“ஹ்ம்ம். என்ன சொல்றது..? சுந்தர் சாரை நீங்க கணக்குல சேர்க்காதீங்க.ஏன்னா, இன்னும் ஒரு மாசத்துக்கு அவரோட பட ரிலீஸ் விஷயமா அவர் ரொம்ப பிசியா இருப்பார். சோ முக்கியமான டெசிஷன் எடுக்கணும்னா மட்டும்தான் ஆபிஸ் வர்றதா சொல்லிட்டு இருந்தார்”
“?”,அப்படியா என்பதுபோல மஹதி பார்க்க, 
‘ஆம்’ என்று உறுதியாக தலையசைத்து ஆமோத்தித்தவன், தொடர்ந்து, ”நெக்ஸ்ட் ரங்கா.. அவரைப் பத்தி? மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கறா மாதிரி..”, அப்போது மஹதி குறுக்கே எதோ சொல்ல வர.., கையமர்த்தி தடுத்த ஆஷு, ”இருங்க இருங்க, முடிச்சிடறேன். அவர் உண்மையா  திருந்திட்டாலுமே இங்க எல்லா டிபார்ட்மென்ட்ஸ் பத்தியும் அவர்க்கு தெரியுமான்னு கேட்டா.. ப்ச். இல்லன்னு தான் சொல்ல முடியும்”, என்றான்.
இதைக் கேட்டு மஹதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். “சுந்தரண்ணா என்னவோ அவங்க பட ரிலீஸ்-ல ப்ராப்ளம் இருக்குனு சொன்னாங்களே?”
“எஸ்.. கொஞ்சம் பணம் தேவைப்பட்டது, நா லோன் ரெடி பண்ணி குடுத்தேன்.“

“லோனா?”

“யா லோன் தான். என் பேடண்ட் மேல லோன் போட்டு தந்தேன்.”
“அப்படி கடன் வாங்கியாவது அந்த பிசினெஸை பண்ணித் தீரணும்னு என்ன கட்டாயம்? நீங்க ஏன் அதுக்கு சப்போர்ட் பண்றீங்க மிஸ்டர் ஆஷுதோஷ்?”, எனக் கொஞ்சம் கோபமாகவே கேட்டாள் மஹதி.
“ மேம், உங்களுக்குத் தெரியுமான்னு தெரில, சொந்தமா பிசினெஸ் ஆரம்பிக்கறதுதான்.. என்னோட லட்சியமும். சுந்தர் பிசினெஸ் ஆரம்பிச்சு அதை வெற்றிங்கிற கொடு வரைக்கும் கொண்டு வந்துட்டார். சக்ஸஸுக்கு கிட்ட வந்துட்டு அதை எட்டி பிடிக்க முடியாம இருக்கறது ஒரு அவஸ்தை. சுந்தர் அதுக்காக பாடுபடறார். சோ..”, என்று வாக்கியத்தைப் பூர்த்தி செய்யாமல் விட்டான். 
மஹதி பதில் ஏதும் சொல்லாமல் ஆஷுதோஷையே ஒப்புதலின்மையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். 
“யூ சீ மேம், அவங்கவங்களுக்கு ஒரு இலக்கு இருக்கில்லியா? நமக்கு தெரிஞ்ச ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையை வச்சே சொல்றேன். சுந்தரை பொறுத்தவரை ரேவா-ங்கிறது அவரோட அப்பா கம்பெனி. பனி படர்ந்த அழகான காடு. இங்க கொஞ்ச நேரம் இளைப்பாறலாம் ஆனா அவரோட பார்கவி ப்ரொடக்ஷன்-ங்கிறது..”
அதிர்ச்சியாக, “வாட்? பார்கவி புரொடக்ஷன்ஸா?”,என்று குறுக்கிட்டாள் மஹதி. 
மென்னகையோடு, “யா உங்க அண்ணி பேர்தான். ஆறுமாசத்துக்கு முன்னாடியே கம்பெனிக்கு பார்கவி ப்ரொடக்ஷன்-ன்னு பேர் வச்சிருக்கார். இவங்க சண்டைக்கெல்லாம் முன்னாடியே”
“ஓஹ்?”
“அவரோட ரொம்ப நாள் கனவு மேம் இது. யாருக்குத் தெரியும்? இதுதான் அவருக்குன்னு இருக்கோ என்னவோ? அவரோட டெஸ்டினேஷனாக்கூட  கூட சொல்லலாம். இன்ஃபேக்ட், அவரோட ஜாதகமெல்லாம் கூட பாத்துட்டுதான் இதுல தீவிரமா இறங்கி இருக்கார்.”
“ப்ச். கைல இவ்ளோ பெரிய கம்பெனி இருக்கும்போது..?”
“ஆங். அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. ராஜும் இங்கேதான் தப்பு பண்ணியிருக்கார். என்கிட்டே கேட்டிருந்தா, ‘விடுங்க ராஜ் ஒரு முறை முயற்சிக்கட்டும்’னு  சொல்லியிருப்பேன் மேம். பட், மேம்போக்கா சுந்தரோட பிரச்சனைன்னு சொன்னாரே தவிர இதுதான் ப்ராப்ளம் ன்னு சொல்லாம விட்டுட்டார்”, என்றான். 
மஹதி தலையில் கை வைத்துக் கொண்டாள். “இப்போ நா என்ன பண்றது?”, தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
அவளைப் பார்க்கும்போது ஆஷுதோஷ்க்கு, ‘‘குருவி தலையில் பனங்காய்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது 
அவளது கவலையை மறக்கடிக்கும் விதமாக, “இதுல உங்க கையெழுத்தை போடற வேலைய பண்ணலாமே?”, என ஒரு ஃபைலை நகர்த்தினான். 
தலையில் இருந்த கையை எடுத்து விட்டு, “என்ன ஃபைல் இது?”, சலிப்போடு கேட்டாள். 
“பேமெண்ட் ஆதரைஸ் பண்ற லிஸ்ட். பத்து லட்சத்துக்கு மேல நாம யாருக்காவது பேமெண்ட் பண்றதா இருந்தா, டாப் மேனேஜ்மேண்ட்-ல ஒருத்தர் வெரிஃபை பண்ணிட்டு அதை எம்.டி. ஆதரைஸ் பண்ணனும். அப்போதான் அவங்களுக்கு அக்கவுண்ட் செக்ஷன்லேர்ந்து பணம் அனுப்புவாங்க மேம்.”
“ம்ம்”
அந்த கோப்பினை மஹதியின் எதிரே வைத்து, “இது நமக்கு மெட்டீரியல் அனுப்பறவங்க லெட்ஜர்ஸ். எல்லாத்தையும் நா வெரிஃபை பண்ணி கையெழுத்து போட்டுட்டேன். நீங்க ஓகே பண்ணிடுங்க”, என்றான் பேனாவை நீட்டியபடி.
அந்த பக்கங்களை பார்வையிட்ட மஹதி, அந்த கணக்குகள் தேதி வாரியாக ரசீது வாரியாக சரி பார்க்கப்பட்டு இருக்க, விறுவிறுவென கையெழுத்திட்டாள். 
அப்போது அங்கே ரங்கராஜன் வர, “மஹி.. ஒரு பெரிய ஆர்டர் ஒன்னு முடியும்போல இருக்கு. ஆனா அவங்க மெஷின் அனுப்பும்போது அதை ஆபரேட் பண்றதுக்கு ஆட்களையும் அனுப்ப சொல்றாங்க. மூணு வருஷ காண்ட்ராக்ட். நல்ல ஆஃபர். ஓகே சொல்லலாம்னு தோணுது.”
“ஆனா லேபர்ஸ் வச்சு வேலை வாங்கறது கொஞ்சம் கஷ்டம்ன்னு ஸார் சொன்னாரே..?”, என்று இழுத்தான் ஆஷுதோஷ். இந்த விஷயத்தை அலுவலகம் வந்த புதிதில் கோடிட்டு காட்டி வரதராஜனுக்கு முன்மொழிந்தது ஆஷுதானே? 
“கரெக்ட்தான். ஆனா எதுவுமே ஆரம்பிக்கும்போது கஷ்டமா இருக்கும் பழகிடுச்சுன்னா சரியா வரும். முதல் ஆறு மாசத்துக்கு லேபர் காண்ட்ராக்ட் எடுத்துக்கலாம்னு இருக்கேன். அண்ட் அங்கே வேலை நடக்கற இடத்துல நா கூடவே நின்னு பாக்கலாம்னு இருக்கேன்”, என்று ரங்கா சொன்னதும் மஹிக்கு உடனடியாக சரி என்று ஒப்புக் கொள்ளத் தோன்றியது. இட மாறுதல் மற்றும் சூழ்நிலை மாற்றம் ரங்கராஜனுக்கு தேவையான ஒன்றாக இப்போது அவளுக்குத் தோன்றியது. 
ஆனாலும் உடனடியாக அவளது கருத்தை சொல்லாமல், “நீங்க என்ன சொல்றீங்க AT?”, என்று ஆஷுதோஷ்ஐப் பார்த்துக் கேட்டாள். 
அவளது AT விளிப்பு புதிதாக இருந்தபோதும், கேள்வி அவனுக்கானதாக இருக்க, “நம்ம சைட்லேர்ந்து  பொறுப்பா ஒரு ஆள் இருந்து பாத்துக்கிட்டா, தாராளமா பண்ணலாம் மேம். ப்ராஜெக்ட் எந்த ஊர்ல ஸார்?”, எனக் கேட்டான். 
“ராம்கிரி பத்ரம்பள்ளி கோல்ட் மைன் தெரியுமில்ல?”
“யா, சார் நான் அனந்தப்பூர் காரன். எங்க வீட்லேர்ந்து ஒரு மணி நேர ட்ராவல் டிஸ்டன்ஸ்லதான் ராமகிரி”, என்று குதூகலமாக சொன்ன ஆஷு, “அந்த தங்க சுரங்கத்தை மறுபடியும் தோண்ட ஆரம்பிச்சிட்டாங்க இல்ல?”
“எஸ், அதுக்காகத்தான் நம்ம மெஷின் கேட்டு இருந்தாங்க, லேபர் உட்பட எல்லாமே நம்ம ஸ்கோப்”
“ப்ளீஸ் சார், இந்த ஆர்டர் ஓகே பண்ணிடுங்க , இந்த சாக்குலயாவது நா அடிக்கடி வீட்டுக்கு போய்ட்டு வருவேன்”, என்று ஆஷு சொல்ல..
“அடப்பாவி, கோடிக்கணக்கான ஆர்டரை வீட்டுக்கு உன் போற டிக்கட் மாதிரி யோசிக்கறயே?”, என்று ரங்கா கிண்டல் செய்தான்.
ரங்காவோடு அங்கிருந்த மற்ற இருவரும் சிரித்தனர்.
“அண்ணா, பாரு உன்னால முடியும்னா ஆஃபர் அனுப்பு. ஆனா..”, என்று ஆரம்பிக்க..
“நோ ஆனா ஆவன்னா.. நம்ம போட்டி கம்பெனிக்கு இந்த ஆர்டர் கிடைக்கக்கூடாது. அதும் அப்பா இல்ல, இனிமே ரேவா உருப்படாதுன்னு அவன் ரொம்ப எகத்தாளமா பேசினானாம். இவங்க நம்ம ரெகுலர் கஸ்டமர்ங்கிறது தெரிஞ்சும் அவன் உள்ள நுழைய முயற்சி செய்திருக்கான். இதை அப்படியே விடக்கூடாது”, என்று விபரமாகப் பேசியவன், ஆஷுவிடம், “ஆஷு நமக்கு தெரிஞ்ச நல்ல காண்ட்ராக்டர் யாருன்னு பாருங்க. என்ன சொல்லறீங்க நம்மளால பண்ண முடியும்தானே?”, என்ற ரங்காவின் முகத்தில் தீவிரம் தெரிந்தது.   
“நீங்க அங்க பொறுப்பா நிக்கறீங்கன்னு தெரிஞ்சாலே எல்லா வேலையும் சரியா நடக்கும் சார். நீங்க கேட்டது உடனே ஏற்பாடு பண்றேன்”, என்று விட்டு அவனது அறைக்கு விரைந்தான். 
“என்னண்ணா வேலைல இவ்ளோ சீரியசாயிட்ட? அப்பா இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார்”, என்றாள் மஹதி.
“ப்ச். அவருக்கு அட்டாக் வந்ததுகூட தெரியாம ஒரே வீட்ல அவர் கூடவே இருந்துருக்கேன். ரொம்ப கில்டியா ஒரு மாதிரி ஷேமா இருக்கு மஹி. சின்ன பொண்ணு நீ, நீயெல்லாம் அட்வைஸ் பண்ற நிலைமைல நா இருந்துருக்கேன் பாரேன்”, என்றான் வருத்தமாக. 
“அவர் போய்தான் உனக்கு அறிவு வரணும்னு இருந்ததோ என்னமோ, மே பி அவர்தான் உன்னை கைட் பண்ணிட்டு இருக்காருன்னு தோணுது. விடுண்ணா”
“ஸார், காண்ட்ராக்டர் இன்னும் அரைமணி நேரத்துல வருவார். அதுக்கு முன்னாடி அவரோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் என்னென்ன பேசனும்னு தயார் பண்ணி வச்சிக்கோங்க”
“ஓஹ். வரவு செலவு விபரம் கொஞ்சம் கணக்கு பண்ணனுமே? ஓகே மஹி. நா என் ஆபீஸ்க்கு போறேன்”, என்று தங்கையிடம் சொல்லி, ஆஷுவிடம், ”தேங்க்ஸ் ஆஷு, சொன்னதும் உடனே ஏற்பாடு பண்ணிடீங்க”, என்று கை கொடுத்து முறுவலித்தான்.
“மை ப்ளஷர். அன்ட் குட் லக் சீனியர்”, என்று ஆஷு பதிலுக்கு கைகுலுக்கி சிரிக்க, ரங்காவின் முகம் புன்னகை பூசியது. இது சக IIT மாணவனாக ஆஷுவிடம் இருந்து வந்து வாழ்த்து என்பதால், ரங்கா இன்னமும் விரிய சிரித்தான்.  
“பை மஹி”, சொல்லி ஆஷுவிடம் தலையசைத்து விடை பெற்று அவனது அலுவலைத் தொடரச் சென்றான் ரங்கராஜன்.
ஆஷுதோஷின் மனதிலிருந்து, ‘ஓகே. மூணாவது விக்கெட்டையும் நகர்த்தியாச்சு. இனி இந்த மேம்-மை டீல் பண்ணினா போதும். ம்ம். மஹதியை லண்டன் அனுப்பலாமா? இல்ல கூடவே வச்சுகிட்டு நாம சொல்றதுக்கெல்லாம் தலையாட்டற மாதிரி பண்ணிடலாமா?’, குரல் வந்தது.