அதிகார விளக்கம் :-
ஒற்றாடல் என்பது ஒற்று+ஆடல் என விரியும். ஒற்று என்பது உளவறிதலைக் குறிக்கும். ஆடல் என்பதற்கு ஆளுதல் என்பது பொருள். ஒற்றாடல் ஒற்றை ஆளுதல் எனப் பொருள்படும். இவ்வதிகாரத்துக் குறட்பாக்கள் ஒற்று என்ற சொல்லை வரையறுக்கும்போது அஃறிணைப் பொருளையே சுட்டுகிறது. ஆனால் உரையாசிரியர்கள் 'ஒற்று' பொருளால் உயர்திணையாயினும் சொல்லால் அஃறிணை எனச் சொல்லி இவ்வதிகாரத்தை ஒற்றரை ஆளுதல் என விளக்குவர். ஒற்றை அதாவது ஒற்றுத் தொழிலைக் கையாளுதல் என்ற பொருள் கொள்வதில் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது எனத் தெரியவில்லை.
அறம் கூறவந்த திருக்குறளில் மாறுவேடங்கள் பற்றியும் கள்ளத்தனங்கள் பற்றியும் ஏன் கூறப்படுகிறது என்ற வினா சிலருக்கு எழலாம். இதற்குப் பதில் இறுப்பது போன்று தெ பொ மீனாட்சிசுந்தரம் 'உலகம் உயர்நிலையாகிய அறிவு நிலையை எய்தவில்லை யாதலால் ஒற்றும் கூறுகின்றார் வள்ளுவர். இப்பெரியார் உயர்நிலையை அறிந்திருந்து வற்புறுத்தினாலும், உலகநிலையை அறியாது கண்மூடித் தவங்கிடப்பவர் அல்லர். உயர்நிலை ஒன்றே கூறி உலகநிலை கூறாதுவிட்டால், கயவரும் கல்லாரும் பகைவரும் எழுந்து உலகத்தை அழித்தேவிடுவர்' எனக் கருத்துரைப்பார்.