அதிகார விளக்கம் :-
கொடுங்கோன்மை
நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்படுகிறது. கொடுங்கோலின் தன்மை கொடுங்கோன்மை. அநீதியான ஆட்சி கொடுங்கோலாட்சியாம். இவ்வதிகாரம் கொடுங்கோலரசன் இயல்பும், கொடுங்கோன்மையால் அரசுக்கு வருந்தீங்குகளும், அதனால் குடிகட்கும் நாட்டிற்கும் வரும் நலிவும் கூறுகிறது.
கொடுங்கோல் ஆட்சியாளன் நீதிக்கும் தண்டனைக்கும் உரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவன். பொது வாழ்வின் நன்மையைக் கருதிக் குற்றவாளிகள் சிலரைத் தண்டித்தல் தலைவனுடைய கடமை. ஆனால் அவனே தன் கடமையையும் பொறுப்பையும் மறந்து, ஆற்றலையும் அதிகாரத்தையுமே நினைந்து, பலரையும் வருத்தத் தொடங்கிக் கொடுமை செய்தால், அவன் கொலையாளிகளைவிடக் கொடியவன் ஆவான். மனம்போன போக்கில் ஒழுகுவதால் அவன் கொலைகாரனைவிடக் கொடியனாகிறான். மக்கட்கு உண்டாகும் சுமையை எண்ணாமல் கொடுங்கோல் அரசு ஆடும் வெறியாட்டத்திற்கு எல்லாம் செல்வம் வேண்டும் என்று வழிப்பறிக் கொள்ளையன் போன்று வரி விதிக்கும் கொள்கையால் நாடு செழிக்காது. நன்கொடை என்ற பெயரில் பொருள் இரப்பதும் கொடாவிடில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தால் ஒருவர் கொடுப்பதும் பகற்கொள்ளையாகவே முடியும். நாட்டில் என்ன தீங்கு நடக்கிறது என்று அன்றாடம் ஆராயாத அரசு நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டு போகும். கொடுங்கோல் ஆட்சி நடைபெறும் நாட்டைவிட்டு மக்கள் வேறுநாடு செல்வர்; அதனால் அந்நாட்டுச் செல்வமும் அழியும். மேலும் அவ்வரசின் செல்வத்தைக் கொடுங்கோன்மை கண்ட குடிமக்களின் கண்ணீரே படையாகி அழித்துவிடும். ஆட்சியாளன் மற்ற வகையில் ஏதாவது புகழ் கொண்டிருந்தாலும் அது அவனது கொடுங்கோன்மையால் மங்கும். மழை இல்லாத உலகம் எப்படியிருக்குமோ அதுபோல ஆட்சியாளன் கொடுங்கோலனாக இருக்கும்போது நாடு பாலைவனமாகித் துன்பம்தரும். எப்பொழுது தன் செல்வம் அரசால் கவரப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் கொடுங்கோலன் ஆட்சியில் செல்வம் உடைமையும் ஒருவர்க்குத் துன்பம் உடைமையாக மாறிவிடும். முறைதவறிய ஆட்சியாளனது நாட்டில் இயற்கையும் முறை தவறும்; மேகம் மழை பொழிதலத் தவிர்க்கும். தொழில் முனைவோர்க்கு ஆகும் பயன் உண்டாகாது; அவர்கள் ஊக்கம் குன்றுவர், தொழில் அறிவை மறப்பர்.