அதிகார விளக்கம் :-
மன்னரைச் சேர்ந்தொழுவோர்க்கான பழகும் முறைகள் பற்றிக் கூறும் அதிகாரம் இது. அமைச்சர்கள், படைத்தலைவர், தூதர், ஒற்றர்கள் மற்றும் தலைவருடன் நாளும் நேரிடையாகத் தொடர்புடைய மற்றவர்களும் மன்னரைச் சேர்ந்தொழுகுவார் ஆவர். மன்னர் எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரக் கருத்துக்கள் இன்றைய ஆட்சித்தலைவர்க்கும் நன்கு பொருந்துவதாக உள்ளன. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொது, தனியார் பெருநிறுவன நிர்வாகத் தலைவர்களைச் சார்ந்தார்க்கும் அவை உடன்படுவனவாக உள.
தலைமை தாங்குவரோடு பழகத் தனித்திறம் வேண்டும். உயர் நிலையிலிருப்பவர்களிடம் ஒழுகும் முறைமை தெரிந்துகொள்வதால் பல நன்மைகள் உண்டு. இக்கலையில் கைவந்தவர்கள் ஆட்சிச் செயல்பாடுகளைத் திறம்பட ஆள்வர். இதில் ஆற்றல் பெற்றோரே அதிகார மையத்தோடு சேர்ந்துபழகுவதில் வெற்றி காண்பர். இவ்வதிகாரத்தில் தரப்பட்டுள்ள அறிவுரைகள் தலைவரின் உள்வட்டத்தில் இருப்போர்க்கு நல்ல துணையாய் நிற்கும்.
ஆட்சித்தலைவரைக் குறிக்க வள்ளுவர் இகல்வேந்தர் என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். இதற்கு மாறுபடும் மனமுடைய மன்னர் எனப் பொருள் கூறுவர். அன்பும் சினமும் மாறிவரும் குணம் கொண்டவர் இவர். தலைமைப் பொறுப்பிலுள்ள அனைவருக்கும் இக்குணம் இயல்பாகிவிடும். இப்பண்பு கொண்டவரிடம் எவ்விதம் சேர்ந்துஒழுகுதல் வேண்டும் என்று இவ்வதிகாரத்தில் கற்றுக் கொடுக்கின்றார் வள்ளுவர். ஆட்சியைத் திறம்பட எடுத்துச் செல்வதற்கு உயர்நிலையிலிருப்பவர்களுக்கு நல்ல பழகுமுறை தேவை. நல்ல நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். இல்லாவிட்டால் அது ஆட்சியின் மாண்புக்கு கேடு உண்டாக்கும்.