தூது என்பது இரண்டு நாடுகளுக்குமுள்ள உறவுகள் தொடர்பாகச் செய்தியனுப்புதலைக் குறிப்பது. இது அரசாட்சியில் ஒரு இன்றியமையாத அங்கம். தூதுவர் அமைச்சர்க்கு இணையாக மதிக்கப்படுபவர். அவர்க்கு உண்டான பண்புகளும் தகுதிகளும் செயல்திறன்களும் இந்த அதிகாரத்தில் கூறப்படுகின்றன.
பிற நாட்டு அரசரிடம் வெளிப்படையாய்ச் சென்று தன் நாட்டு அரசரின் செய்தியைச் சொல்வதும், அந்த நாட்டில் உள்ள நிலையை அறிந்துவந்து தம் நாட்டவரிடம் உரைப்பதும் தூதுவனின் கடமையாகும். சில வேளைகளில் அரசுப் பணியில் இல்லாத முனிவர்களும் புலவர்களும் தூது சென்றிருக்கிறார்கள். ஓளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றது நாம் அறிந்த ஒன்று; அக்காலத்திலேயே ஒரு பெண்பாற் புலவர் வெற்றிகரமாகத் தூதுச் செயலாற்றினார் என்பது எண்ணி மகிழத்தக்கது.