வினை செயல்வகை
வினைத்திட்பம் உடையவர், ஆராய்ந்து ஓர்ந்து தெளிந்து, செயலை முடிக்கும் வழி கூறுவது இத்தொகுப்பு. செயலின் நோக்கத்தை அறிந்து திறம்படச் செய்யும் 'வினை செயல்வகை' எல்லாருக்கும் பொது. திண்ணியராகிய யாவரும் - குடிகள், அரசு, அமைச்சர் வினைகளைச் செய்யும் திறம் கூறுவது.
விரைந்து செய்யத்தக்கவை, காலம் தாழ்த்திச் செய்யலாம் எனப் பிரித்து அதன்படி செய்க; ஆராய்ந்து முடிவு எடுத்தபின் காலத்தாழ்ச்சியின்றி செய்யாவிட்டால் திட்டத்திற்கு தீங்கு நேரலாம்; எப்படி நெருப்பை முழுமையாக அணைக்காவிட்டால் தீமை விளைவிக்குமோ அவ்விதம் முற்றாக முடிக்காத செயல்களும் இழப்புகளை உண்டாக்கும். நோக்கம், தடைகள், பயன்கள் கருதி செய். தொழிலின் நுட்பம் யாருக்குத் தெரியுமோ அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதனைச் செய்யத் தொடங்கு. யானையை வைத்து யானையைப் பிடிப்பது போன்று ஒரு செயலைக் கொண்டு வேறு செயலையும் முடிப்பது செயல்திறனை மிகுவிக்கும். நண்பர்களுக்கு நன்மை செய்வதுடன், ஒதுங்கி இருப்போருடன் கூட்டு வைத்துக் கொண்டு உன் வலிமையைக் கூட்டிக்கொள். வலியாருடன் அமைதி வழியில் போவது வரவேற்கத்தக்கது. இவை இவ்வதிகாரப் பாடல்கள் கூறும் ஆலோசனைகள்.