மணமகனுக்கு அறிவுரைகள் இல்லை என்பதே ஒரு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு போலதான் தோன்றுகிறது. இன்று பெரும்பாலும், திருமணத்துக்குப் பின் தனிக்குடித்தனம்தான். காஃபி போடுவதற்கே அம்மாவை சார்ந்து நிற்கும் ஆடவன் மீது திடீரென்று ஒரு குடும்பத்தை சுமக்கும் பணி கொடுக்கப்படுகிறது. ஆகையால், ஆண்களுக்கே அதிகமான அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இருப்பினும் அடுப்பாங்கரை எங்கே இருக்கிறதென்றே வாழ்ந்து விட்ட எனது அப்பா போன்ற தலைமுறையினரை ஒப்பிடும்போது இன்று ஆண்கள் வெகுவாக மாறியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என் அப்பாவுக்கு வெந்நீர் கூட வைக்கத்தெரியாது. எனக்கு சாம்பார் முதல் கோழிக்குழம்பு வரை எல்லாமே அத்துப்படி.
இது காலமாற்றத்தின் எதிரொலி. ஆண்கள் மனநிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், அறிவுரைகள் தேவைப்படாது என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் குடும்பத்தின் சூழ்நிலை அறிந்தே வளர்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு குடும்பம் நடத்துவதில் ஆண்கள் அளவுக்கு சிக்கல்கள் வருவதில்லை. இருந்தாலும் நாம் இன்றும் பெண்களுக்கே மாறி மாறி அறிவுரைகளை வாரி வழங்கி வருகிறோம்.