Dharanika
Active Member
"என்னை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்து இருக்க? யாரு வீடு டா இது?"
"என்னடா இவ அதுக்குள்ளே கண் முழிச்சுட்டா? மறுபடியும் மயக்க மருந்து கொடுக்கலாமா?" என்றான் குமரவேலுவின் நண்பன் அரசு.
"வேண்டாம் அரசு.. ஏற்கனவே கை, கால் கட்டி போட்டு தான் வச்சிருக்கோம்.. அதுவும் இந்த இருட்டுல எப்படி தப்பிக்க முடியும்?" என்றான் குமரவேல்.
"அதுவும் சரி தான்.."
"தாத்தாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி என்னை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்திருக்கே? எங்க வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சது உன்னை என்ன பண்ணுவாங்கனே தெரியாது..ஒழுங்கா என்னை எங்க வீட்ல விட்டுடு.. நடந்தது எதையும் நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்.."
"என்னது வீட்ல விட்றதுக்கா இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை தூக்கினேன்? என்ன சொன்ன.. உங்க வீட்ல தெரிஞ்சா என்னை என்ன பண்ணிடுவாங்க? தாலி கட்டுன அன்னைக்கே உன்னை விட்டுட்டு போனானே உன் புருஷன்.. அவன் வந்து என்னை வெட்டி போட்ருவானா? ஒழுங்கா நான் சொல்றதை கேளு... நானே உங்க வீட்ல வந்து பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே உங்க அப்பத்தா பண்ண வேலையால நீ எனக்கு கிடைக்காம போயிட்ட.. இப்போவும் ஒன்னும் ஆகல.. உனக்கும் எனக்கும் நாளைக்கு கல்யாணம்.. அப்புறம் உன்னை கூட்டிட்டு ஒரு மாசம் கேரளா போறோம்.. அதுக்கு அப்புறம் நம்மளை யாராலும் பிரிக்க முடியாது.."
"அடச்சீ.. நிறுத்து.. ஏற்கனவே கல்யாணமான பொண்ணை மறுபடியும் கல்யாணம் பண்றன்னு சொல்லுற.. உனக்கு வெட்கமா இல்லை? இது மட்டும் ஏன் புருஷனுக்கு தெரிஞ்சா உன்னை உயிரோட விடமாட்டார்"
"டேய் அரசு.. இவ ரொம்ப பேசுறா..அந்த மயக்க மருந்தை இவ மூக்குல வைடா.."
மீண்டும் மயக்கமானாள் மதியழகி..
நள்ளிரவு மணி இரண்டு. அன்புவும், மனோவும் மதியை தேடி அலைந்து கொண்டிருக்க "அன்பு.. என்னடா பண்றது? ரெண்டு பேரோட போனும் சுவிட்ச் ஆப்ல இருக்கு.. எங்க இருக்காங்கன்னு தெரியாம எங்கன்னு நாம தேடறது?"
"எனக்கும் ஒன்னும் புரியலை மனோ.. விவேக்கிற்கு போன் பண்ணி கேளு.. ஏதாவது தகவல் தெரிஞ்சுதான்னு"
"ப்ச்.. ரெண்டு பேரோட போன்ல யாரவது ஒருத்தரது ஆன் ஆச்சுன்னா கண்டுபிடிச்சுடலாம்னு சொல்றான் டா.. இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாரு?”
அவங்க தேடிட்டு இருக்கோம்னு சொல்றாங்க டா.. வேற எந்த தகவலும் இல்ல.. குமரவேல் பிரண்ட்ஸ் யாரவது உனக்கு தெரியுமா? அவங்களை விசாரிச்சா ஏதாவது தகவல் கிடைக்கலாம்"
"ஏற்கனவே விசாரிச்சாச்சு அன்பு.. அவங்களுக்கும் ஒன்னும் தெரியல.."
"அண்ணா.. அண்ணா.." என நாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்த அரசுவை அழைத்தாள் மதியழகி.
மதுவை அருந்திவிட்டு குடிபோதையில் இருந்த அரசு அவளின் குரலில் கண்முழிக்க "என்ன வேணும்?" என்றான் குளறலுடன்.
மது அதிகமாக அருந்தியதால் கண்கள் சிவந்து அவனை பார்க்கவே சற்று பயமாக இருக்க தன் பயத்தை மறைத்து கொண்டு "பாத்ரூம் போகணும்" என்றாள்.
"ம்ம்.." என தள்ளாடியவாறே கழிவறையை காட்டியவன் "தப்பிக்கனும்னு நினைச்சு ஏதாவது பண்ணா அப்புறம் உயிரோட இருக்க மாட்ட" என மிரட்டியவன் அவளுக்கு வழிவிட்டு நிற்க கழிவறைக்குள் சென்றவள் அங்கே இருந்த ஜன்னலில் வெளியே எட்டி பார்க்க கும்மிருட்டாக இருந்தது. தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல், என்ன செய்வதென தெரியாமல் கண்களில் கண்ணீர் வர கண்ணை துடைத்து கொண்டு தப்பிக்க வேறேதாவது வழி கிடைக்குமா என அந்த கழிவறையை சுற்றி பார்க்க அதற்குள் கதவு தட்டப்பட்டது. "இன்னும் என்ன பண்ற?" என வெளியே இருந்து அரசு குரல் கொடுக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் அந்த அறையை வேகமாக ஆராய்ந்தாள். ஒரு குண்டு பல்பு மட்டுமே எரிய அந்த அறை காலியாக இருந்தது. மீண்டும் அவளின் கை, கால்களை கட்டியவன் மீதியிருந்த மதுவை குடிக்க ஆரம்பித்தான்.
போதையில் இருந்ததால் மதியின் கை, காலை சரியாக கட்டாததால் மதி அமைதியாக கயிறை அவிழ்க்க முயற்சித்து கொண்டிருந்தாள். தன் கட்டுகளை அவிழ்த்தவள் அரசுவை பார்க்க அவன் அரை போதையில் இருந்தான். மெதுவாக சத்தம் எழுப்பாமல் அவன் அருகில் சென்றவள் அவனின் கைபேசியை எடுத்து கொண்டு தன் இடத்திற்கு வந்தாள். முதலில் தன் தாயின் கைபேசிக்கு அழைக்க நினைத்தவள் பின் தன் பேச்சு சத்தத்தை கேட்டு அரை மயக்கத்தில் இருக்கும் அரசு எழுந்து விட்டால் தனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் பறிபோக கூடும் என உணர்ந்து "யாருக்கு, எப்படி தகவல் சொல்லுவது?" என யோசித்து கொண்டிருக்க, "மனோவிற்கு தகவல் அனுப்பலாம்" என முடிவு செய்தவளுக்கு அவனின் கைபேசி எண் தெரியாததால் அந்த யோசனையும் செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தவள் குமரவேல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என மூளை எச்சரிக்கை தன் மனதில் பதிந்த அன்புவின் கைபேசி எண்ணிற்கு தகவல் அனுப்பினாள்.
அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழம்பி இருந்த அன்புவின் கைபேசி தகவல் வந்ததின் அடையாளமாக ஒலி எழுப்பியது. அவன் இருந்த பதற்றத்தில் அதை சட்டை செய்யாமல் மனோவுடன் பேசிக்கொண்டிருக்க, இங்கே மதியழகி தகவல் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள். அரை மணி நேரம் கழித்தும் தகவல் வராமல் போக மதியழகிக்கு இருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே போனது.
மீனாட்சி, அன்புவின் கைபேசிக்கு அழைக்க "அம்மா.. மதிய பத்தி இன்னும் ஒன்னும் தெரியல.. நானே உங்களுக்கு கூப்பிடுறேன்" என சொல்லி வைத்தவன் புது எண்ணில் இருந்து வந்த "மதி ஹியர்.." என்று தொடங்கிய செய்தியை பதட்டத்துடன் படிக்க, அவனின் பதட்டம் பார்த்து மனோவும் என்ன என்று கைபேசி பார்க்க "என்னை எங்கயோ அடைச்சு வச்சிருக்காங்க.. எந்த இடம்னு எனக்கு சரியா தெரியல.. குமரவேலுவும் அவனோட பிரண்ட் ஒருத்தனும் இருக்காங்க.. காலைல கேரளாக்கு எண்ணை கடத்திட்டு போக போறதா சொல்றாங்க.." என தகவலை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தாள்.
"மனோ.. மதி தான் மெசேஜ் பண்ணிருக்கா.. நீ உடனே விவேக்கிற்கு போன் பண்ணி எங்க இருந்து இந்த மெசேஜ் வந்திருக்குனு கண்டுபிடிக்க முடியுமான்னு கேளு"
"விவேக்.. உனக்கு ஒரு நம்பர் அனுப்பி இருக்கேன் பாரு.. அந்த நம்பர் எந்த இடத்துல இருக்குனு கண்டுபிடுச்சு சொல்ல முடியுமா?"
"அண்ணா.. ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க.. இதோ பார்த்து சொல்றேன்.."
"என்னடா சொல்றான் விவேக்?"
"ஒரு பத்து நிமிஷத்துல சொல்றேன்னு சொல்லிருக்கான் டா..நீ கவலைப்படாத.. மதிய சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்.."
பத்து நிமிடம் சென்று விவேக் அழைக்க "அண்ணா அந்த நம்பர் தஞ்சாவூர்ல காட்டுது.. உங்களுக்கு அந்த அட்ரஸ் அனுப்பி இருக்கேன்.."
"சரி விவேக்.. ரொம்ப தாங்க்ஸ்.."
"அன்பு, மதி அனுப்பிய நம்பர் தஞ்சாவூர்ல இருக்காம்..அடுத்து என்ன பண்றது?"
"மனோ.. நா அந்த அட்ரெஸ்க்கு போய் பாக்குறேன்.. நீ இன்ஸ்பெக்டர்ட்ட சொல்லி அவரை கூட்டிட்டு அங்க வந்திடு.." என்றவன் தன் காரை எடுத்து கொண்டு தஞ்சாவூர் விரைந்தான்.
திருச்சியில் இருந்து சுமார் ஒரு மணிநேரத்தில் தஞ்சாவூர் சென்றடைந்தவன் விவேக் அனுப்பிய விலாசத்தை கண்டுபிடிக்க மேலும் அரை மணி நேரம் பிடித்தது. அதற்குள் விடிய தொடங்க கதவு திறக்கும் சத்தம் கேட்டு மதியழகி தன்னிடம் இருந்த கைபேசியை அரசுவின் பக்கத்தில் வைத்துவிட்டு தன்னிடத்தில் வந்து கை, காலை கட்டிவிட்டு படுத்து கொண்டாள். உள்ளே வந்த குமரவேல் அரசுவின் நிலையை பார்த்து கோபத்தில் அவனை எட்டி உதைத்தான். "ஆ.. அம்மா" என அலறியடித்து கொண்டு எழுந்தவன் "எதுக்குடா வேலு இப்படி எட்டி உதைக்குற?" என்றான் தன் காலை அமுக்கியபடி.
"ஏண்டா அவளை ஜாக்கிரைதையா பார்த்துக்கோன்னு சொன்னா நீ இப்படி சரக்கு அடிச்சிட்டு மயங்கி கிடக்குற?"
"ஹீ..ஹீ.. அவ நல்ல மயக்கத்துல இருந்தா டா.. அது தான் கொஞ்சமா சரக்கு அடிச்சேன்.."
"என்னது இது உனக்கு கொஞ்சமா?" என அங்கே காலியாக இருந்த மது பாட்டில்களை காட்டியவன், “சரி விடு வேலு.. நீ போன காரியம் என்னாச்சு? பணம் கிடைச்சுதா?"
"ம்ம்.. கிடைச்சிடுச்சு டா.. சரி சரி.. இப்போவே பொழுது விடிஞ்சிடுச்சு.. இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பினா தான் சரியா இருக்கும்.."
இவர்களின் பேச்சில் கண் விழித்திருந்த மதியழகி "இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பனும்" என்ற குமரவேலுவின் பேச்சில் பயத்தில் கண்கள் கலங்க, அவளை பார்த்தவன் "இன்னும் ரெண்டு மணி நேரத்துல நமக்கு கல்யாணம்..சீக்கிரம் குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிட்டு வா" என அவளிடம் ஒரு பையை கொடுத்தான்..
"பிளீஸ்.. என்னை விட்ருங்க.. நீங்க கடத்துனதை நான் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்"
"இங்க பாரு.. கிடைச்சிருக்க வாய்ப்பை என்னால விட முடியாது..ஒழுங்கா நா சொல்றதை கேளு.. தப்பிக்கணும்னு நினைச்சி ஏடாகூடமா ஏதாவது பண்ணினா அப்புறம் உன் உயிர் இருக்காது".
"நான் மதி இருக்க இடத்துக்கு வந்துட்டேன் மனோ..நீங்க எங்க இருக்கீங்க?"
"நாங்க பக்கத்துல வந்துட்டோம் அன்பு.. நீங்க அவங்க வெளியே போறாங்களானு மட்டும் கண்காணிச்சிட்டு இருங்க.. உள்ளே போக முயற்சி பண்ணாதீங்க.. அவங்க ஆயுதம் ஏதாவது வச்சிருக்கலாம்.." என்றார் இன்ஸ்பெக்டர்.
அவர்களின் வருகைக்காக அன்பு காத்து கொண்டிருக்க இங்கே மதியழகி தப்பிக்கும் வழி தெரியாது தவித்து கொண்டிருந்தாள்.
அன்பு தொடரும்...