அத்தியாயம் - 1

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 1

சூரியனின் வெட்பம் தலையினுள் நுழைந்து மூளைக்குள் உட்புகுந்து சென்று தலையைக் கிறுகிறுக்க வைக்க “அப்பா சாமி என்னமா போடு போடுது வெயிலு ஆத்தி!... என்ன வெயிலு!…. என்ன வெயிலு!……ப்பா.ஏன்டா சீயான் உனக்கு இந்தச் சூடு சொரணை இதெல்லாம் இருக்கானே?” அதற்கு சீயான் என்று அழைக்க படும் துரைப்பாண்டி முறைக்க.

“இல்லடா தம்பி பையா வெயிலு இந்த போடு போடுது நீ என்னனா சொரணையே இல்லாம வாரியே அதேன் கேட்டேன்” வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் தனது உயிர் நண்பன் மற்றும் உறவுமான துரைப்பாண்டி செய்யும் செயல் ஒரு பக்கமென தாங்க முடியாமல் பாண்டியை பார்த்து கேட்டான் எசக்கி முத்து.நண்பனது கேள்விக்கு அவனை முறைத்து பார்த்த பாண்டி “நீ எதைப் பத்திடா கேட்கிற?”

“சத்தியமா வெயில பத்திதான் சாமி பேசினேன்” அவனை நம்பாத பார்வை பார்த்த பாண்டி “நம்பிட்டேண்டா”அந்த ஒற்றைச் சொல்லோடு திரும்பி தனது வண்டியில் கவனம் செலுத்தினான்.அவனது உள்ள கொதிப்பிற்கு ஏற்ப வண்டி அச்சம்பட்டியை நோக்கி சீறி பாய்ந்தது.

அவர்கள் ஊருக்குள் நுழையும் முன்பு அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் ‘துரைப்பாண்டி’ அங்காயி மற்றும் முனியாண்டிக்கு பிறந்த ஒரே புத்திரன் மதுரை மாநகரில் உள்ள அச்சம்பட்டி என்னும் சிறு கிராமத்தில் செல்வந்தராக வாழும் குடும்பத்தில் பிறந்தவன்.

அனைவராலும் அழைக்கப்படும் பெயர் சீமை சீயான்.செய்யும் சேட்டை அப்படி சண்டை என்று வந்தால் கை தான் அதிகம் பேசும்.சீண்டும் வரை பசு சீண்டிவிட்டால் புலி என்பதால் இளவட்டம் அனைத்தும் கூடி இப்பெயரை பாண்டிக்கு சூட்டி மகிழ்ந்தது.நமது சீயானுடன் அட்டை போல் ஒட்டி கொண்டு சுற்றும் எசக்கி முத்து முனியாண்டியின் அண்ணன் மருதமுத்து - வீராயி மகன் இளம் வயதில் தந்தையை இழந்தவன் என்பதால் கூடுதல் சலுகை பாண்டியும் முத்துவும் சேர்ந்தால் சொல்வதற்கில்லை….

நடப்புக்கு வருவோம்…..

வண்டி ஊருக்குள் நுழைய ஒப்பாரியின் ஓலம் விண்ணைப் பிளந்தது, பாண்டியின் தலையைக் கண்டவுடன் ஓடி வந்து கட்டி கொண்ட அங்காயி அழுக தொடங்கினார் “ஏ!.... அப்பு பாத்தியா இந்தப் புள்ள அம்புட்டையும் தொலைச்சுட்டு நிக்குதே எஞ்சாமி நான் என்னத்த செய்வேன் நெஞ்சே வெடுச்சுடும் போல இருக்கே ஐயோ!....” கதறி துடித்தவரை அனைத்தவாரே எந்த வீட்டிக்குள் அடி எடுத்து வைக்கக் கூடாது என்று எண்ணினானோ அதே வீட்டுக்குள் சென்றான்.

முகத்தில் அத்தனை கோபம் அதையும் தாண்டி ஓர் இயலாமை.எல்லாம் அவளைப் பார்க்கும்வரை தான் பார்த்த பின் உனக்கு இது தேவை தான் என்ற அலட்சியத்தோடு ஒரு முறை அங்குக் கிடந்த உயிரற்ற சடலத்தைப் பார்த்து விட்டு ஆண்களுடன் அமர்ந்து கொண்டான்.

ஆம் அவனைப் பொறுத்தவரை அது வெறும் உருவம் தான் தன்னை மறந்து, தன் பெற்றோரை மறந்து, திருமணம் செய்து மூன்றே மாதங்கள் ஆன மனைவியை மறந்து உறங்கி கொண்டு இருந்தான் ஓர் இளைஞன்.அவனைச் சொல்லி என்ன செய்வது அவனது பயணம் முடிந்து விட்டது கடவுளின் கணக்கு விந்தை தான் போலும்.

மனமும், கண்களும் என்ன முயன்றும் அவனது பேச்சை கேட்காமல் அவளிடம் தான் சென்றது.சுற்றி பெண்கள் ஏதேதோ பேச தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் வேம்பு.அவளை பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது இருக்கும் சூழ்நிலை கருதி அவனை அடக்கி கொண்டான் பாண்டி.

அவனது வரவை அறிந்த வேம்புவின் பெற்றவர்கள் பார்வையோ துரைப்பாண்டியிடமே. என்ன பார்வை அது? தவறு செய்து விட்டோம் மன்னித்து விடு என்பதா? இல்லை இல்லை உன்னை மீறி செய்த செயலால் வந்த வினை என்பதா?அதுவும் இல்லை உன்னை வஞ்சம் செய்ததற்குக் கடவுள் கொடுத்த பதில் அடி என்பதா? தெரியவில்லையே!...

என்ன வருந்தியும் கிட்டாத பலன் கண்ணிலிருந்து வரும் நீர் கூட அழுக உனக்குத் தகுதி இல்லையென்று அவ்விடமே தேங்கி விட்டது தான் கொடுமையின் உச்சம்.
இவர்கள் எண்ணத்தைத் தடை செய்தது சபையில் கூடிய பெரியவர் குரல் வேம்புவின் கணவன் வழி சொந்தமாம் “செய்ய வேண்டிய காரியத்தை அந்தப் புள்ளைக்குத் தொடங்க வேண்டியது தானே நேரம் போகுது வெரசா” ஒப்பாரியின் ஓலத்தைத் தாண்டி கேட்டது அவர் குரல்.

அவரது பேச்சுக்கு ஒரு நிமிடம் தலை தூக்கி பார்த்த வேம்பு மீண்டும் குனிந்து கொண்டாள்.அவளுக்குக் கண்ணீர் வற்றிவிட்டது பெற்றோர் சொல் படி நடக்கும் பிள்ளைகளுக்குக் கடவுள் கொடுக்கும் பரிசு இது தான் போலும்.

அவளின் நிலையை எண்ணி கத்தியை எடுத்து குத்திய இடத்திலே குத்தியது போல வலி உயிர் போகத் தான் செய்தது பெற்றவருக்கும், உற்றவனுக்கும் ஆனால் சூழ்நிலை கருதி தன்னை அடக்கி கொண்டனர்.

நடக்கும் கூத்தை வலிக்க வலிக்க அதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் சீயான்.வலிக்கட்டும் எனக்கு நன்கு வலிக்கட்டும் அவனுக்கு இன்றோடு இந்த வலிகள் எல்லாம் மறையட்டும் என்ற எண்ணமோ என்னவோ மனதை இறுக்கமாக வைத்துக் கொண்டு நடக்கும் சடங்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.

துரைப்பாண்டியிடம் எதிர்ப்பை எதிர் பார்த்த அவனது பெற்றோர்களுக்கு ஏமாற்றமே.அவர்களைப் பொறுத்தவரையில் துரைப்பாண்டியும்,வேம்புவும் உயிருக்கு உயிராய் விரும்பியவர்கள்,ஆனால் உண்மையில் இருவருக்கும் அந்த எண்ணமே இல்லை.
நீ எனது மாமன் மகள்….நீ எனது அத்தை மகன் என்ற பாசம் மட்டுமே உறவாய்க் கொண்டு பழகிய பழக்கம்.


அன்று நடந்த ஒற்றை நிகழ்வு ஊர் மக்களால் திரி திரிக்கப்பட்டு விளக்கு தூண்டி அது பிரகாசமாய் இன்று வரை சுடர் விட்டு எரிகின்றது அச்சுடர் தீப்பந்தமாகி ஊருக்குள் பரவியது அவர்களுக்கே தெரியாது பாவம். இதில் பெரும் ஆச்சிரியம் என்னவென்றால் அவர்களே உணராத காதல் ஊர் மக்கள் உணர்ந்தது தான்.

தற்காலிகமாகத் தங்களது எண்ணத்தைத் தள்ளி வைத்து மனதை கற்பாறை கதவு கொண்டு மூடி அந்தச் சடங்கில் பங்கு கொண்டனர்.அனைத்தும் முடிந்து சடலம் எடுக்கப்படக் கண்ணில் வெறுமையுடன் தனது கடந்த காலத்தைப் பார்த்து நின்றாள் வேம்பு.

முடிந்தது வேம்புவின் கடந்த காலம் இதோ சென்று விட்டது என்ன வாழ்க்கை இந்த வாழ்க்கை நேற்று வரை நடமாடி கொண்டு இருந்த ஓர் உயிர் இன்று பிணமாய் நிலையற்ற இந்த வாழ்க்கையில் இழப்பு பெரிய ஏமாற்றம் தான்.

எத்தனை கனவுகள்,எத்தனை திட்டங்கள், திருமணம் நடந்த கையோடு கணவன் மனைவி வகுத்த திட்டமெல்லாம் இன்று காலாவதி ஆகிவிட்டது. இன்னும் வேம்புவாள் நம்ப முடியவில்லை மனம் ஏற்றுக்கொள்ள சண்டித்தனம் செய்ய எதையும் தாங்கும் சக்தியாவது அந்தக் கடவுள் கொடுத்து இருக்க வேண்டாமா?

அனைத்தும் முடிந்து ஓய்ந்த நிலையில் இருக்கும் வேம்புவின் பெற்றோர்களிடம் வந்த அங்காயி “அண்ணே நீயும் இப்படி இருந்தா புள்ளைக்கு யாரு தைரியம் சொல்லுறது துண்டை உதறி தோளுல போடுண்ணே புள்ளைக்குத் துணையா நில்லு பெத்தவளுக்குத் தவிப்பு அடங்காது அதுக்குக் கொஞ்சம் நாளாகும் நீ உன் சோகத்தை உள்ளுக்குள்ள போதைச்சுகிட்டு நிமிர்ந்து நில்லுண்ணே”

அதற்கு மேல் தாங்க முடியாமல் அவரது கைகளைப் பற்றிக் கதறிவிட்டார் பொன்னுரங்கம் “என்ன மனுச்சுடு அங்காயி நீ கேட்டப்பவே புள்ளய உனக்குக் கொடுத்து இருந்தா இந்நேரம் அது பொழச்சு இருக்குமே நான் பாவி! நான் பாவி!................ மாரில் அடித்து அழுக.

கதறி அழுகும் அண்ணனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அங்காயின் கண்கள் கணவனையும், மகனையும் துணைக்கு அழைத்தது.இருவரும் ஒருசேர அவரது கண்களைப் பார்க்க தவிர்த்து வெளியேறினர் தனது இயலாமையை கண்ணில் தேக்கி ஒரு பெருமூச்சுடன் அங்காயியும் அவர்களைப் பின் பற்றிச் சென்றார்.

செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார் பொன்னுரங்கம்.தனது வலது பக்க மார்பு வலிப்பது போல இருந்தது மனதில் உள்ள பாரமோ என்ற எண்ணத்தில் நாற்காலியில் சரிந்து அமர்ந்துவிட்டார் ‘இனி என் மகளின் வாழ்க்கை?’ மூடிய கண்களில் இருந்து குருதி வழிந்ததோ!.
**************************
வழமை போல் வயல்,தோப்பு என்று சுத்தி விட்டு,காலை சுமார் பத்துமணிக்கு மாட்டுத்தாவணியில் உள்ள தங்களது ஜவுளி கடைக்குச் செல்ல தயார் ஆகி கொண்டு இருந்தான் பாண்டி,வீராயி கணவன் இழப்புக்கு பிறகு அவரது தொழிலும் துரைப்பாண்டியிடம் பாண்டியின் சொல்லபடி தான் எசக்கி முத்துவும் நடப்பது.

“என்ன சீயான் கிளம்பிட்டி யா” முத்து வாசலில் இருந்து குரல் கொடுக்க.

"வரேன் டா" காலை உணவை தவிர்த்து தனது தாய்க் கொண்டு வந்த தண்ணீரை கூடத் தவிர்த்து முகம் பார்க்காமல் சென்று விட்டான்.தாயின் முகம் பார்த்தால் அவர் வைக்கும் கோரிக்கையை மறுக்க முடியாது.இன்று இருக்கும் சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்கவும் முடியாது இரு கொல்லி நெருப்பாகத் தகித்தது மனது.

செல்லும் பாண்டியை பார்த்து அங்காயி கண்ணீர் வடிக்க முனியாண்டி அவரைச் சமாதானம் செய்யும் பொருட்டுக் “காயம் பெருசு விடு பார்த்துக்கலாம்” என்று மட்டும் சொன்னவர் வயலுக்குச் சென்றுவிட்டார்.

அங்காயி வாய்விட்டு அழுது விட்டார் முனியாண்டியால் அழுக முடியவில்லை மனம் முழுக்க ரணம் அவருக்கு நெஞ்சை அடைப்பது போல் இருக்க வயலை நோக்கி சென்று விட்டார்

வண்டியில் கனத்த மௌனம் சீயானின் நிலையை அறிந்த முத்து அவனது மனநிலையை மாற்றும் பொருட்டு “சீயான்” என்று அழைத்துத் தனது வயிற்றைத் தொட்டு காட்டி “காலைல இருந்து ஒன்னும் போடல உன் பெரிய ஆத்தா போடுற காப்பிப் பத்தி தான் தெரியுமே கொஞ்சம் நம்ம கருப்பன் டீ கடையில் கட்டிங் போட்டுட்டு போவோம் வாடா”

அவன் சொன்ன தினுசில் சிரித்த சீயான் வண்டியை கருப்பன் கடையில் நிறுத்தினான் வண்டியில் இருந்து இறங்கிய பாண்டி ஒற்றைக் கால் விரலில் வேட்டியை பிடித்து மடித்துக் கட்டும் அழகை ரசித்த வாரே, தனது வேட்டியை பட்டாபட்டிக்கு மேல் கட்டி கொண்டு இறங்கினான் முத்து, இருவரிடமும் மதுரை காரனுக்கே உரிய வீரம் தம்பட்டம் அடித்தது.

"ஏலேய்!....கருப்பா சூடான பாலுல பதமா நாட்டுச் சக்கரப் போட்டு இரண்டு காப்பிக் கொடுடா"

"சரிண்ணே செத்த இரு போட்டு தரேன்… ஆமா நம்ப வேம்பு....................." அவனது வாக்கியம் முற்றுப் பெறாமல் அந்தரத்தில் தொங்கியது முத்துவின் செயலில் நாக்கை துருத்தி மிரட்டி வேலையைப் பாருடா வாய் அசைவில் சொன்ன முத்து.

'எங்க இருந்துடா வரீங்க ஒருத்தன் சிக்கிட கூடாது ஆறுதல் சொல்லுறேங்க பேருல அளந்து விட்டு அவனை ஒன்னும் இல்லாம பண்ணிட வேண்டியது’ மனதுக்குள் டீ கடை காரனை ஆத்து ஆத்து என்று ஆத்தினான் முத்து.


காப்பி கொண்டு வந்து கொடுக்க சீயான் ஒரே மூச்சில் காப்பியை குடித்து முடிக்க முத்துவோ காப்பி லோட்டாவை ரசித்து பார்த்து அதன் பின் காபியின் வாசனையை ஆழ மூச்செடுத்து நுகர்ந்து அதனை வாய்க்குள் கொண்டு செல்லும் பொது கேட்டது ஓர் அபாய குரல்,

“சீயான் மாமா”!..........

அவள் கத்திய கத்தில் தூக்கி வாரி போட “வந்துட்ட டா கருவாச்சி இனி நான் காப்பி குடிச்ச மாறித்தேன்" முத்து மூனு முனுத்தவாறே காபியை பருக

சீயான்,முன் மூச்சு வாங்க நின்றாள் பிச்சி கண்ணில் கண்ணீர் அதையும் தாண்டி கோபம் .

"என்ன தேவைக்கு அந்த வீட்டு வாசப்படி மிதிச்ச நீ,சூடு சொரணை இல்லை,கோபம் கண்ணை மறைக்க உணர்ச்சி பொங்க பேசியவளின் உள்ளம் புரிந்து தலையில் கை வைத்து சமாதானம் செய்தான் சீயான்.

தலையில் இருந்து அவனது கையை தட்டிவிட்டவள், “போ தொடாத என்னை, உனக்கு அவ தானே ஒசத்தி,போ இனி என்கூட பேசாத" அழுது கொண்டே பின்னே செல்ல பின் இருக்கும் முத்துவின் மேல் மோதி நின்றாள் அவள் மோதியதில் கையில் வைத்திருக்கும் அவனது காப்பி சிதறியது.

விழுந்த காபியை நிராசையாகப் பார்த்த முத்து கோபமாக திரும்பி “அடி பாதகத்தி.. கருவாச்சி… ஆசை ஆசையா ஒரு வாய் காப்பிக் குடிக்க வந்தா இப்படி பண்ணிட்டியே உன் மாமன் கூடச் சண்டை போடுறதுனா அந்தாண்ட எம்புட்டு இடம் தரிசா கடக்கு அங்கன போய்க் கட்டி உருள வேண்டியது தானடி இங்க வந்து லந்து கொடுக்குற கருவாச்சி!... கருவாச்சி!...மூஞ்சியும் முகரையும் பாரு”

அதுவரை சீயானிடம் சண்டையிட்டவள் முத்துவின் பேச்சில் கோபம் கொண்டு “யோவ்!...யாரை பார்த்து கருவாச்சினு சொல்லுற,நீ ரோசா பூ கலரோ இன்னொரு தரம் கருவாச்சினு சொன்ன சொன்ன நாக்க நறுக்கி நாய்க்கு போட்டுருவேன்”

“என்னது நாக்க நறுக்குவியா? எம்புட்டு தைரியமடி உனக்கு வாடி வந்து நறுக்கு பார்ப்போம்” வேட்டியை இன்னும் ஏற்றி கட்டி கொண்டு அவளுடன் மல்லுக்கு நின்றான்.

“வாயப் பார்ப்போம்” எதற்கு வந்தோம் என்பதை மறந்து முத்துவிடம் மல்லுக்கு நின்றாள் பிச்சி

இருவரது சண்டையும் தற்போது ஓயாது இது தான் சமயமென வந்த சுவடே தெரியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கடை யை நோக்கி சீயான் செல்ல பார்க்க (கடைக்கு செல்ல பல கிலோமீட்டர் நடந்து வர வேண்டும் முத்துவிற்கு வண்டி ஓட்ட தெரியாது என்பது குறிப்பிட தக்கது)
சீயான் சிறிது தூரம் சென்ற பின்பே சுற்றுபுறம் உணர்ந்த முத்து,”டேய் சீயான் நிறுத்துடா” என்று அவனை நோக்கி ஓட

“யோவ் என்ன பதில சொல்லாம போற பயமா?” என ஓடும் முத்துவை பார்த்துப் பிச்சி குரல் கொடுக்க,

ஓட்டம் பிடித்தவாறே "அடியேய் ராங்கி சிறுக்கி வந்து உன்ன வச்சுக்கிறேண்டி.......”

“முடுஞ்சா” என்று கேத்தாகச் சொல்லி தனது தலை முடி பாதம் தொட சிலுப்பிக் கொண்டு சென்றாள் பிச்சி.

இவர்களை ஏதோ ஜந்துவை போல் பார்த்துக் கொண்டு இருந்தனர் டீ கடையில் உள்ள மக்கள் நேற்று தான் நெருங்கிய உறவில் ஒரு துக்கம் நடந்து இருக்கின்றது.அதன் தாக்கம் சிறிதுமின்றி இவர்கள் மூவரும் நடந்து கொள்வது விந்தையாக இருந்தது.

அவர்கள் வலிகளை யார் அறிவார் புறம் பேசும் காக்கைகளாய் ஊர் மக்கள் கூட்டம்.எருதின் புண்ணாய் புரையோடி போய் இருக்கும் அவர்களது குடும்பத்தைக் கொத்தி கொத்தி பதம் பார்த்தனர்.

அங்கு உள்ளுக்குள் இருக்கும் ரணத்தை மறைத்து கொண்டு இளவட்டங்கள் சுற்றி வர இங்கோ ஆறுதல் என்ற பெயரில் பொன்னுரங்கம் உயிரை கொள்ளாமல் கொன்று நின்றனர் மகனை பெற்ற மகராசன் குடும்பத்தினர்.முற்பகலின் விளைவை தாங்க முடியாதவர் தங்கையின் கரம் பற்ற துணிந்து விட்டார் இனியும் தனித்து நின்று போராட உடலில் வலு இல்லை.

இனி வேம்புவின் நிலை என்ன? யார் இந்தப் பிச்சி ? சீயான் ஏன் வேம்புவின் குடும்பத்தின் மேல் அத்தனை கோபம் கொண்டான்? விடை இனி வரும் காலத்தின் நிழலில்.







 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top