மதுரை_குஞ்சரத்தம்மாள்- வாட்ஸப் பகிர்வு

Advertisement

SahiMahi

Well-Known Member
#மதுரை_குஞ்சரத்தம்மாள்

ஒரு மாத லாக்டவுனுக்கே விழி பிதுங்கி நிற்கிறோமே, தாது வருடப் பஞ்சம் என்ற பெயரையாவது கேள்விப்பட்டதுண்டா?

1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து
திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது.

குஞ்சரம் தாசி குலத்துப் பெண்மணி.
மதுரையில் கொடிகட்டிப் பறந்த அழகே வடிவான தாசி. பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து
வந்தவள். மதுரை நகரைச் சுற்றி இருந்த செல்வந்தர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்த காலம் அது. வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள சந்தில் இருந்த இரண்டு பெரும் வீடுகளும் அவளுடையவைதான்.
தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அந்த முடிவினை எடுத்தாள்.
கொடும் பஞ்சத்தில்
மக்கள் கஞ்சிக்கு வழியின்றி, கணக்கின்றிச் சாவதைப் பார்த்து, வேதனையால் துடித்து தினமும் கஞ்சி காய்ச்சி ஊற்றத் துவங்கினாள்.
பெரும் வட்டையில் காய்ச்சிய கஞ்சியை விசாலமான தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் ஊற்றும் செய்தி ஊரெங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
வடக்கு ஆவணி வீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்-

இவளுக்கு எதற்கு இந்த வேலை? சொத்தையெல்லாம் விட்டுட்டு தெருவுக்கு வரப்போறா என்று பெருந்தனக்காரர்கள் பேசிக் கொண்டனர். அவளின் செய்கை அவர்களை கூசச் செய்தது. ஆனால், கஞ்சி ஊத்தும் செய்தி கேட்டு மக்கள் வந்து
கொண்டேயிருந்தனர். அந்தக் கூட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. பரட்டைத் தலையும்
எலும்பும் தோலுமாக துணியென்று சொல்ல முடியாத ஒன்று இடுப்பிலே சுற்றியிருக்க குழந்தைகளைத் தூக்கியபடி வரிசை, வரிசையாக வந்து கொண்டிருந்தனர். ஒரு வட்டையில் துவங்கியது, மூன்று வட்டையானது, அதற்கு மேல் அதிகப்படுத்த முடியவில்லை. தினமும் ஒரு வேளைக் கஞ்சி ஊற்றப்பட்டது. அந்தக் கஞ்சியை வாங்க, காலையிலிருந்தே கால்கடுக்க நின்றனர்.

தேவையின் பயங்கரம் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி இருந்தது. ஆனாலும், அவள் அடுப்பிலே விறகுகளைத் தள்ளி தன்னம்பிக்கையோடு எரித்துக் கொண்டிருந்தாள்தாது

வருடத்தின் ஆறாவது வாரத்தில் தான் கலெக்டர் கஞ்சித்தொட்டியைத் திறக்க முன் வந்தார்,
ஒரு வகையில் அதற்கு குஞ்சரத்தின் செயல்தான் காரணம். நகரில் மூன்று இடங்களில் அரசு கஞ்சித்தொட்டியைத் திறந்தது. நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என இருந்த நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனாலும்,
தாது வருடம் முழுவதும் குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது.

பதிமூன்று மாத காலம் எரிந்த அடுப்பு
எல்லாவற்றையும் எரித்தது. அவள் தனது வாழ்க்கை முழுவதும் சேமித்த சொத்துக்களை உலையிலே போட்டாள்.
கல் பதித்த தங்க நகைகள், வெள்ளி நகைகள், முத்துக்கள், காசு மாலை, மோதிரம்,
ஒட்டியாணம், தோடு-ஜிமிக்கி எல்லாம் கஞ்சியாய் மாறி தட்டேந்தி நின்ற நீண்ட வரிசைக்கு பசிப்பிணி தீர்த்தது.
தொடர்ந்து எரிந்த அடுப்பின் புகையடித்து கரி படிந்திருந்த இரண்டு பெரிய வீடுகளும் விற்கப்பட்டு கஞ்சியாய் மாறியது. தாது கழிந்த இரண்டாவது மாதத்தில் அவள் அடுப்பு அணைந்தது.

அவள் ஓட்டு வீட்டிற்குள் படுத்த படுக்கையானாள்,யாரைப் பற்றிப் பேச
யாரிடமும் எதுவும் இல்லாத கொடும் பஞ்சத்தில் கூட குஞ்சத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள். அவள் முகம் மலர்ந்திருந்தது. தாய்மையின் பூரிப்போடு அவள் படுத்துக்கிடந்தாள்.

ஒரு நாள் மலர்ந்த முகத்தோடு
விடைபெற்றாள் அந்தத்
தெய்வத்தாய்.
தங்கள் வீட்டில் நடந்த சாவாகத்தான் நகரவாசிகள் பலரும் பார்த்தார்கள் அவர் இறப்பை. சின்ன ஓட்டு வீட்டிலிருந்து குஞ்சரத்தாயை வெளியில் தூக்கிய பொழுது வடக்கு ஆவணி வீதி கொள்ள முடியாத அளவு கூட்டம் நின்றது. கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்கள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதி வைத்தார்.

நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அவளின் ரத்தமென நினைத்து நினைவுகளின் வழியே கட்டிப்புரண்டு கதறியழுதனர். அவள் நாதியற்றவர்களின் பெரும் தெய்வமானாள். எண்ணிலடங்கா மனிதக் கூட்டம் அந்தத் தெய்வத்தை நாள்தோறும்
வணங்கிச் செல்ல வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள உள் சந்துக்கு அலையலையாய் வந்து கொண்டிருந்தது.
அவளுக்கு எதைப் படையலிட்டு வணங்குவது எனத் தெரியாமல் தவித்த பொழுது, சலங்கையைப் படையிலிட்டு வணங்கி தெய்வமாக்கிக் கொண்டனர். மதுரை மக்கள்.
 

Kala Sathishkumar

Well-Known Member
சூப்பர் சிஸ்டர்... இப்ப வரைக்கும் இது தெரியாது... ரொம்ப நன்றி சகோதரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top