அதிகார விளக்கம் :-
சொல்வன்மை என்பது தாம் சொல்லக் கருதியதை திறம்படச் சொல்லத் தெரிந்த ஆற்றல் குறித்தது. இவ்வதிகாரத்தில் நாநலம் என்ற தொடர் ஓரிடத்தில் வந்துள்ளதால் பேச்சுச்சொல்வன்மை அக்குறளில் சொல்லப்பட்டது அறியலாம். எழுத்துச் சொல் பற்றிய குறிப்பு வெளிப்படையாக எங்கும் இல்லை. ஆயினும் இது பேசும் திறம், எழுத்துத் திறம் ஆகிய கருத்துரை திறன் (Communication skill) தொடர்பானது எனக் கொள்வதில் குற்றமில்லை. சொல்லுந்திறன் படைத்தவர்க்கு எக்காலத்திலும் உலகில் மதிப்புண்டு. எத்துறையிலும் இருப்பவராயினும் வாழ்க்கையில் வெற்றி பெற ஒருவருக்குச் சொல்வன்மை வேண்டியதாகிறது. மாற்றாரிடம் ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடுதல், அவைகளில் கருத்துரைத்தல், மேடைப் பேச்சு, வணிக பேரம் பேசுவது, நேர்காணல்களில் பதிலுரைக்கும் திறம் முதலியன சொல்வன்மை காட்ட தகுந்தவான சில இடங்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இந்த சொல்வன்மை என்ற உடைமை மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.