கொலுசொலி 6

Advertisement

achuma

Well-Known Member
திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்த நிலையில், கார்த்திக் வீடு கட்டி முடிந்து, வீடும் அழகாக வெள்ளை அடிக்க பட்டு காட்சியளித்தது.
திடீர் என்று, அவர்கள் வீட்டின் மாற்றம், பக்கத்தில் உள்ள புண்ணியக்கோடியின் உறவினர்களுக்கு ஆச்சர்யமே .

வாசலில் நான்கு படிக்கட்டு போல் கட்டி, வராண்டா போல் வரும் இடத்தில, இரு நாற்காலி போட்டு, இருந்த இடத்தில் கார்த்திக் அமர்ந்து இருந்தான்.
இவை எல்லாம் காவ்யாவின் செயல்.
அவளுக்கு அண்ணன் வீடு கட்டியது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இங்கு கொஞ்ச நாட்கள் கூட தங்க இயலாது அதற்குள், திருமணம் முடிவானது ஒரு பக்கம் வருத்தம் வேறு.

திருமணத்தை தள்ளி வைக்கலாம் என்று யாரிடமும் கேட்க முடியாது.
கார்த்திக் அங்கு அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தான்.
வீட்டின் செலவு அவனை பொறுத்த வரை இப்பொழுது தேவையில்லாத ஒன்றாக தான் இருந்தது.

காமாட்சி ஏற்கனவே நிறைய பட்டு விட்டார்.

காமாட்சியிடம் பணம் உள்ளது என்று அவரை சமாளிக்க கூறினான்.
காவ்யாவின் திருமணத்திற்கு மட்டும் தான் அவன் பணம் சேர்த்து வைத்தது.

அதன் பொருட்டே, கையில் தாரலாமாக பணம் உள்ளது என்று கூறி அன்னையை சமாளித்து, வீட்டிற்கு என்று செலவு செய்து விட்டான்.
காவ்யாவை பெண் பார்க்க வந்து அன்றும் மழை, அங்கங்கு வீட்டினில் மழையால் பாத்திரம் வைத்து, தண்ணீர் வீட்டினுள் வராமல் என்று வீட்டை பார்க்கவே அவனுக்கே ஒரு மாதிரி ஆனது.


இங்கு வசதியில்லாத காரணத்தால் தான், ப்ரியாவும் வர முடியாத சூழல் என்று காமாட்சி புலம்பி கேட்டு இருக்கிறான்.
சரி, ஓட்டு பிரித்து, தளம் எழுப்பி கட்டி விடலாம் .
இன்னும் ஒரு அறை கூடுதலாக இருந்தால், தங்கைகள் வந்து செல்ல வசதி, என்று கூடுதலாக ஒரு அறையும், ஒரு படுக்கையறையில் மட்டும் குளியலறை ஒன்றும், வெளியே முன்பு இருந்த குளியலறையை சீர் படுத்தி, மாடி எழுப்பி, என்று அப்படியே செலவுகள் அவனை இழுத்து சென்றது.


இப்பொழுது இந்த செலவு தேவையா என்று நொந்து கொண்டான்.
அதற்குள் காவ்யா அண்ணன் கூறியதின் பெயரில், அவனுடன் கடைக்கு செல்ல தயாராகி வந்தாள் .
அவனின் யோசனை படிந்த முகம் பார்த்தால் தங்கை ஏதேனும் கணிக்க கூடும் என்று, தன்னை சரி செய்து கொண்டு, "வயசு இருக்கு, வேலை இருக்கு, உழைக்கலாம், இந்த கடனை சமாளிக்க முடியாதா," என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.


இதுவரை, தங்கைகளை எங்கும் வெளியே என்று அழைத்து சென்றதில்லை.
இன்று அதுவும் அதிசியம் தான், நண்பர்களிடம் கேட்ட பணம் இப்பொழுது தான் கிடைத்தது.
தங்கைக்கு மற்றும் வீட்டினருக்கு தேவையான உடைகள் கொடுக்க வேண்டும்.
"ரெடியா பா," என்று கழுத்தில் தாலி சரடு, காதில் தங்க கம்மல் மற்றும் கையில் தங்க வளையல் மின்ன வந்தார் காமாட்சி.
அதிசியத்திலும் அதிசயமாக, புண்ணியகோடி, மகனின் கையில் தான் சேர்த்து வைத்த தொகை என்று, கார்த்திக்கிடம் பணம் கொடுத்தார்.


பிரியாவிற்கு தான் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை, கவிக்காவது தனது பங்கு இருக்கட்டும் என்று கொடுத்திருந்தார்.
அந்த பணத்தில் அப்படியே காமாட்சிக்கு என்று எடுத்து விட்டான்.
தந்தையின் மீது அன்னைக்கு ஒரு ஏமாற்றமும், ஆதங்கமும் உண்டு, அதே நேரத்தில் பிரியாவிற்கு தந்தை எதுவும் செய்யவில்லை, அவளுக்கும் எதுவும் மன குறை வேண்டாம் என்றே இப்படி செய்தான்.


இருக்கும் செலவில் அன்னைக்கு என்று தனியாக அவனால் எதுவும் இப்பொழுது செய்ய முடியாது.
இனியாவது அன்னை நன்றாக சேலை உடுத்தி சிறிது அளவிலாவது நகை இருக்கட்டும் என்றே இப்படி செய்தது.
அதில் காமாட்சிக்கு ஏக பெருமை.


அடிக்கடி, கழுத்தில் நகை தடவி பார்த்து கொண்டு, "டி கவி, நான் கோவிலுக்கு போகும் போது இந்த நகையோட தைரியமா போலாம் தானே, எவனும் வந்து திருடிட்டு போக மாட்டேங்களே, இப்போ தான் என்ன என்னவோ நடக்குதே, உன் இரண்டு பெரியம்மா கண்ணும் பொசுங்கிடும் பாரேன்," என்று மகளிடம் புலம்பி தீர்த்தார்.
இவை எல்லாம் நினைத்து கார்த்திக்கிற்கு சிரிப்பாக வரும்.


"அண்ணா, என்று காவ்யா அழைத்ததும், அவனின் யோசனை விட்டு, வா கவி, கிளம்புலாம், அம்மாக்கு சொல்லிடு," என்று முன்னே நடந்தான்.
"டேய், எது வாங்குறதா இருந்தாலும் இப்போவே வாங்கிடுங்க, நாளைக்கு பந்த கால் நடணும், அதுக்கப்புறம் எங்கயும் கவி நகர கூடாது சொல்லிட்டேன்," என்று பக்கத்தில் எட்டி பார்த்துக்கொண்டிருக்கும், அவரின் இரு ஒரேவத்திகளின் செவிகளில் விழ வேண்டும் என்றே உரக்க கூறினார்.


"அக்கா, இந்த காமாட்சிக்கு புது சேலை பார்த்தியா, சின்னவ, கல்யாணம் குறிச்ச நேரம், வீடு, ஆள் எல்லாம் மாறிடுச்சு," என்று இரண்டாம் ஒரவத்தி திலகா என்பவர், முதலமானவர் விலாசத்திடம் கூறி புலம்பினார்.
"விடு, திலகா, எனக்கு அப்போ தெரியாத, தப்பு எல்லாம் இப்போ, என் புருஷன் போனதுல தெரியுது."
"ஆம்பளைங்க இவங்க தான், இப்படி ஏமாத்தணும் நினைச்சாங்கன்னா நாமளும் கூட சேர்ந்து எவ்வளவு பண்ணோம்."
"இப்போ உன் மாமா எப்படி நோயில் வேதனை பட்டு போய் சேர்ந்தார் பார்த்தியா," என்று சமீபித்தில், இறந்து போன, புண்ணியகோடியின், முதல் அண்ணனை பற்றி எண்ணி அழுதார் விசாலாம் .
"அப்போ, இந்த காமாட்சி மாசமா வேற இருந்தா, எவ்வளவு வேதனை பட்டு சாபம் விட்டாளோ, அவருக்கு நல்ல சாவே வரல, நான் உன் நலத்துக்கு தான் சொல்றேன், உன் புருஷனும் சரி, நீயும் சரி, அந்த வீட்டுல இருக்குறவங்கள பத்தி கெடுதலா எதுவும் நினைக்காதீங்க, இப்போவாச்சும் அவங்க நல்லா இருக்கட்டும் ."


"கடைசி காலத்தில தான் உறவோட அருமை நமக்கு தெரியும் சொல்வாங்க அது எவ்வளவு உண்மைன்னு நான் இப்போ உணர்ந்துட்டேன்."
"பக்கத்திலேயே இருக்குறோம், அந்த பொன்னும் இப்போ அவ்வளவு தூரம் கல்யாணம் ஆகி போக போது, நம்மளுக்கு ஒரு பத்திரிகை இல்லை பார்த்தியா ."
"இந்த தெருவுக்கே பத்திரிக்கை கொடுத்தாங்க, ஆனா நமக்கு இல்லை."
"நம்ம தரம் எப்படி இறங்கி இருக்கு பாரு, வசதி இருந்து என்ன புண்ணியம்," என்று புலம்பி தீர்த்தார்.
அதற்கு திலகா என்பவர், நொடித்து கொண்டே அவர் இல்லம் நோக்கி சென்று விட்டார்.
அவர் திருந்தவும் நேரம் வர வேண்டுமே .

அண்ணனுடன் வெளியே கடைக்கு சென்று அவளின் திருமணத்திற்கு, மேலும் வீட்டினில் உடுத்த என்று அவளுக்கு தேவையானது எல்லாம் வாங்கி குவித்தான்.

அவளிடம் மேலும் சிறிது பணம் கொடுத்து, அவளுக்கு ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் வாங்கி வருமாறு கூறினான்.
அவளுக்கு காமாட்சியே நிறைய பார்த்து பார்த்து வாங்கி இருந்தார்.
இப்படி அண்ணனும் வாங்கி கொடுத்ததில் அவளுக்கு தான் மூச்சு முட்டியது.
ஒரே நேரத்தில் இத்தனை உடைகள் அவளும் எதிர்பார்க்கவில்லை.

எண்ணி வைத்தது போல் நான்கு சுடிதார், நான்கு சேலை என்று பழகியவளுக்கு, இவை எல்லாம் பெரிய விஷயமே.
ஆகையால், அண்ணனுடன் சென்று, சில பூ செடிகளும், விதைகளும் வாங்கி வந்தாள் .
அவளுக்கு இது எல்லாம் மிகவும் பிடித்த விஷயம்.
சாதாரண நேரம் என்றால் கார்த்திக் இது எல்லாம் தேவையா என்று மறுத்து இருப்பான்.
இப்பொழுது திடீர் திருமணத்தில் தங்கையும் மருகி கொண்டிருக்கிறாள் என்று தெரியும், ஆகையால், அவள் கேட்டதின் பேரில் அழைத்து கொண்டு சென்றான்.

அதன் பிறகு இருவரும் வீடு வந்து சேரும் வரை, அவனின் பேச்சுக்கள் அனைத்தும், அருண் அவன் சம்மந்த பட்டது, அக்குடும்பத்திற்க்கு ஏற்ற மருமகளாக இருக்க வேண்டும், பிறந்த வீட்டிற்கு எந்த கெட்ட பெயரும் வாங்கி தர கூடாது.
அவ்வீட்டு பெரியவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அருண் பாவம், நிறைய வேதனையில் உள்ளான், அங்கு அக்கா இருக்கிறாள் என்றாலும், திருமணத்திற்கு பிறகு, கணவன் கூற்றின் படியே நடக்க வேண்டும்.

இப்படி அருண் பற்றியே அவளிடம் போதனை வழங்கி அழைத்து வந்தான்.
அண்ணனிடம் எதுவும் பேச முடியாமல், அனைத்திற்கும் நன்றாக தலை ஆட்டி வைத்தாள்.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர்.
அமைதியாக வாங்கி வந்த அனைத்தும் அன்னையிடம் காட்டி, தோட்டத்தின் பக்கம் சென்றாள்.

"இப்போ ரொம்ப முக்கியமா கார்த்தி, இவ கேட்டான்னு, தனியா ஒரு பகுதி, மண்ணு போட்டு தோட்டம் வெச்சி கொடுத்து இருக்க , இப்போ இத்தனை செடி வாங்கி வந்து
இருக்கா ."
"இவ நட்டு வெச்சிட்டா போதுமா, இங்க நான் தானே பார்த்துக்கணும்."
"விடுங்க மா, ஆசை படுறா, இங்க வரும் போது எல்லாம், அவ வெச்ச செடின்னு ஒரு சந்தோஷம் தான்."
"நான் தினம் தண்ணி ஊத்தி பார்த்துக்கறேன்."

"ம்க்கும், பக்கத்துல கட்டி கொடுக்குறோம், பாரு, அவ வந்து பார்த்துட்டு போக ."
"பெரியவ அங்க சரியா இருக்குன்னு சொல்றா , சாதாரண நேரத்திலேயே அவளுக்கு பேச நேரம் கிடைக்காது."
"இப்போ, அந்த வீட்டு பையனுக்கு கல்யாணம்ன்னு அப்படியே, பம்பரமாட்டம் சுத்துறா."
"நானே போன் போட்டாலும் அப்பறம் பேசுறேன்னு சொல்றா."
"நம்ம கவி கூட, இந்நேரம் அவ இருக்கனும், என்ன செய்றது, ஒரே வீட்டுல கொடுக்குறதால, அவ இப்போ, மூத்த மருமகளா அங்க தான் பார்க்கணும்."

அவரின் புலம்பலுக்கு இடையில் கவி, அண்ணனுடன் சேர்ந்து, அவள் வாங்கி வந்து செடிகள் விதைகள், என்று அனைத்தும் நட்டு முடித்தாள் .
"கவி, இன்னைக்கு நாள் நல்லா இருக்கு, இப்போவே, போய் இந்த உடுப்பு எல்லாம், அந்த புது பையில வெச்சிக்கோ."
"நாளைக்கு நம்ம ஜனம் வந்துரும், அப்போ இது எல்லாம் வெச்சிக்கிட்டு இருக்க முடியாது."
"கல்யாணம் முடிஞ்சி, அன்னைக்கே நேரா அங்க போறோம் தெரியும்ல."

காவ்யா அன்னை கூறியது எல்லாம் கேட்டு கொண்டே, அவர் கூறியதை செய்தாள் .
இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்த கார்த்திக் "அம்மா நம்ம பக்கத்துல இருக்குற, அப்பா சொந்தத்தையும் கல்யாணத்துக்கு கூப்பிடலாம்."

"அவன் கூறியதும் அவரிடம் இருந்த இலகு தன்மை எங்கோ பறந்து கத்த ஆரம்பித்தார்.
"நம்ம எதுக்கு டா கூப்பிடனும், நமக்கு யார் அவங்க."
"ப்ரியாவுக்கு கூப்பிடலையே இப்போ சின்னவளுக்கு மட்டும் என்ன ."
"புதுசா எந்த சொந்தமும் வேண்டாம்."
"நம்ம பட்டது எல்லாம் போதும் ."
"நான் எதுவும் மறக்க விருமபல."

கார்த்திக்கும் அன்னைக்கு பதில் கொடுத்தான் .
"உங்கள எதுவம் மறக்கவோ மாணிக்கவோ சொல்லல மா, உங்களுக்கு தெரியாது, அன்னைக்கு, அப்பாவோட அண்ணன் கடைசி நேரத்தில இருந்த போது, நம்ம தெரு ஜனங்க சொன்னாங்களேன்னு, நானும் கவியும் அவரை பார்க்க போனோம் ."
"உங்கள கூப்பிட்டு நீங்க வரல, நம்ம அப்பாவும் சொந்த அண்ணன்னு கூட பார்க்காம, இந்த நேரத்திலும் வீம்பு காட்டிட்டு வெளிய போய்ட்டாரு."
"அப்போ தான், இந்த மரணம் அந்த பெரியப்பாக்கு எவ்வளவு கொடுமையா இருந்ததுன்னு, நான் தெரிஞ்சிகிட்டேன்."
"கண்ணை திறக்க முடியாம, கஷ்ட பட்டு, எங்களை பார்த்தாரு."
"அவர் வயசுக்கு மன்னிப்பு கேட்க தயங்குனாரு, வாழ்க்கையோட, நியதிய ஒரு வார்த்தையில சொல்லிட்டாரு."

"மறப்போம் மன்னிப்போம், " இந்த ஒரு வார்த்தை தான் சொன்னாரு."
"நான் அவர் கைய பிடிசிட்டு வந்துட்டேன் ."
" அன்னைக்கு எனக்கு மனசே சரியில்ல."
"எனக்கு எப்படி இருந்தது தெரியுமா, அடுத்த நாள் காலையிலேயே இறந்தும் போய்ட்டாரு."
"இவ்வளவு தான் மா அவர் ஆடுன ஆட்டமும், அவருக்கான தண்டனை ஆண்டவன் கொடுத்துட்டான்."

" இந்த தெருவுக்கே பத்திரிகை கொடுத்தோம், அந்த இரண்டு குடும்பத்துக்கு கொடுக்குறதுல என்ன இருக்கு."
"அவங்க எப்படியோ போட்டோம், நம்ம நல்லதே நினைப்போம்."
"இந்த பகை எல்லாம் எதுவும் வேண்டாம், அதே நேரத்தில் ஒட்டி உறவாடவும் வேண்டாம்."
"அவங்க ஏமாத்தி இருந்தாலும் ஏமாந்தது நம்ம அப்பா மேல தான் தப்பு."
மகன் கூறியது நியாயமாகவே பட்டது காமாட்சிக்கு.
"கார்த்தி நீ வேணும்னா போய் அழைப்பு வெச்சிட்டு வா, நான் அந்த வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்."
"என்னையும் இங்க இருக்குற நம்ம தெரு ஜனம் கூப்பிட சொன்னாங்க."
"எதுவும் மாறாது, அவங்க அவங்க நியாயம் அவங்களுக்கு," என்று மகனுக்கு செல்லுமாறு பணித்து அவர் மகளுடன் துணிகள் எடுத்து வைப்பதில் இறங்கினார்.

தாய் இந்த அளவிற்கு சம்மதம் கூறியதே பெரிது, என்று அவனும் அந்த இரு குடும்பத்திற்கு பத்திரிகை எடுத்து சென்றான்.
அடுத்து, வேலைகள் துரிதமாக நடந்தது.
அடுத்த நாள் காலையில் காமாட்சியின் தூரத்து சொந்தங்கள் என்று ஊரில் இருந்து வந்து சேர்ந்தனர்.

கார்த்திக் அவன் நெருங்கிய நண்பர்கள் என்று சிலரும் சேர்ந்து, திருமண வேளைகளில் இறங்கினர்.
இதோ மணடபத்தில, முதல் நாள், மாலை நிச்சயம் என்றும், அடுத்த நாள் விடியலிலே முகுர்த்தம், அதன் பிறகு, அங்கிருந்து, அன்று மாலையே, மும்பையில் வரவேற்பு.

வரவேற்பிற்கு, உறவினர்கள் அன்றி, ரங்கநாதனுக்கு தெரிந்த நட்பு வட்டம் வரை தான்.
இதோ மண்டபத்தில் காமாட்சியின் உடைகள் நகைகள் என்று பார்த்து ப்ரியாவும் ஆச்சர்யம் அடைந்தாள் .
அவளுக்கு வேலைகள் சரியாக இருந்ததால், அவள் புகுந்த வீட்டினருடன், நேராக மண்டபத்திற்கு நிச்சயத்திற்கு சிறிது நேரம் முன்பு தான் வந்து சேர முடிந்தது.

அங்கு வாசலில் புண்ணியக்கோடியும் காமாட்சியும் வந்தவர்களை வரவேற்பதில் இருப்பதை கண்டு அவர்களின் உடை, நகை என்று ப்ரியா பார்த்ததும் அவளுக்கும் தன் பிறந்த வீட்டின் முன்னேற்றம் ஆச்சர்யமே.

"வாங்க அண்ணி, வாங்க சம்மந்தி," என்று ரங்கநாதன் ரமா தம்பிதியினரை , காமாட்சி மற்றும் புண்ணியகோடி வர வேற்றனர் .
"வாங்க மாப்பிளை, வா ப்ரியா, எங்க சின்ன மாப்பிளை," என்று காமாட்சி கேட்டார்.
"தம்பி, அங்க அவர் பிரெண்ட்ஸ் எல்லாம் அங்க அண்ணா வெளிய இருக்குறது பார்த்துட்டு, அங்க இருக்காங்க, உனக்கு இந்த புடவை நல்லா இருக்கு மா, நகை எல்லாம் போட்டு, உன்னை இப்படி பார்க்க எத்தனை வருஷம் ஆச்சு."

" எல்லாம் உங்க அண்ணா தான், அவன் கஷ்டப்படலான்னா ஆச்சா, இந்த சரடு உங்க அப்பா கொடுத்த காசு தான்."
"எவ்வளவு நேரம் ஆச்சு நீங்க வரதுக்கு."
"அந்த பக்கம் இருக்குறவங்க இவ்வளவு தூரம் வர முடியாதுன்னு, நாளைக்கு அங்க வரவேற்ப்புன்னு சொல்லிட்டீங்க."

"அதுக்கு தான் உடனே கிளம்புனுமான்னு உன் தங்கச்சி முகமே எப்படியோ இருக்கு."
"இப்போ, மாப்பிள்ளைக்கு எல்லா எடுத்து வெச்சிட்டு, அந்த ரூம்ல உன் தங்கச்சி இருக்கா பாரு அவ கூட போய் இரு ."

ப்ரியாவும் தலையாட்டி ரமாவிற்கு எல்லாம் உதவி விட்டு, தங்கையை பார்க்க சென்றாள் .
அவளின் கலவர முகம் கண்டு, ப்ரியாவரிக்கு சிரிப்பு தான் வந்தது.
"ஒய் கல்யாண பொண்ணு, நாளைக்கு நீ எங்கயோ, தெரியாத இடத்திற்கா போற, கூடவே நான் இருக்கேன்."

"அங்க மாமாக்கு தெரிசவங்க நிறைய பேரு அங்க தான் இருக்காங்க."
"அவர் பக்க சொந்தகாரங்க, நம்ம பக்கம், எல்லாம் கல்யாணம் பாக்கணும்ன்னு, இங்க கலையிலேயே முகுர்த்தம் வெச்சிட்டாங்க."
"அதுக்கு பிறகு, அண்ணா நம்ம அம்மா அப்பா, நம்ம வரை பிளைட்ல கிளம்புன்னா, நாளைக்கு சாயந்திரம் வரவேற்புக்கு சரியா இருக்கும்."
"என் புருஷனுக்கும் சரி, தம்பிக்கும் சரி, வேலை சரியா இருக்கும் டா ."

"இதுக்குன்னு லீவ் கிடைக்காது."
"இன்னொரு நாள், நீ வந்து அம்மா கூட தங்குவியாம், சரியா ," என்று தங்கையை ஒரு வழியாக தேற்றி, அவளின் உடை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு வழியாக அவள் அலங்காரங்கள் சரி பார்த்து, தங்கையை நிச்சயத்திற்கு, மன மேடை அழைத்து வந்தாள் .
காவ்யா மணமேடைக்கு வந்ததும், அருணின் நண்பர்கள் கொடுத்த உற்சாக குரலில், காவ்யா இன்னும் தலையை தாழ்த்தி கொண்டாள் .
அருணுக்கு கவியின் தடுமாற்றம், அவனுக்கு சுவாரஸ்யம் கொடுத்தது.

"டேய், போதும் அடங்குக, கவி இப்படியே பயந்து ஓட போற, என் கல்யாணத்துல கும்மி அடிக்காதீங்க டா," என்று அவன் அழாத குறையாக கேட்டதில் அங்கு சுற்றி உள்ள அனைவரின் சிரிப்பு சத்தத்தில் கவிக்கு தான் வெட்கமாக போனது.
நிச்சய பத்திரிகை வாசித்து, சம்மந்தி இருவரும் தட்டு மாற்றி கொண்டனர்.

பிறகு, ரமா, ரங்கநாதன் முறையாக கொடுத்த, தாம்பூல தட்டு, அவர்களிடம் ஆசி பெற்று வாங்கி கொண்டு, ஓடாத குறையாக அறைக்குள் சென்று மறைந்தாள், காவ்யா .
அடுத்த நாள் காலையில், பிரம்ம முகுர்த்ததில், பெரியவர்கள் முன்னிலையில் காவ்யாவின் கழுத்தில் தாலி அணிவித்து, அருணின் சரிபாதி, ஆனால் அவனின் நாயகி .


Thanks for all your support frends
Please read andh give your suggestions
All take care






























































 

achuma

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ் கண்ணுல இன்பெக்ஷன், சென்ற வாரம் கண்ணு திறக்கவே முடியல, இப்போ கொஞ்சம் பரவாயில்ல.
தாமதத்திற்கு மன்னிக்கவும் பிரெண்ட்ஸ் .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top