கவிதையின் தலைப்பு இறுதியில்

Advertisement

பொன் காலைப் பொழுதில்
பெண் மான்கள் காட்டில் உலவுகையில்
விக்கித்து கண்விழித்தேன்
கனவு விடுத்து....


வெண்டை விரலால்
விழியில் ஸ்பரிசித்து
நெஞ்சில் முட்டும்
தேவதையின் தேகம்...


தன் ஈரக்குறும் கூந்தல்
நுனி நிற்கும்
நீர் கொண்டு - என்
நித்திரை
நீங்கச் செய்யும்


குளித்து விட்டு வெளியேற
துவாலை கொண்டு
தலை துவட்டிவிடும்
தங்க மயிலுக்கு
ஆயிரம் முத்தம்


உணவை ஊட்டிவிட்டு
விக்கிக்க.... நீரூட்டுவாள்-
உண்கையில்
செல்லமாய் காதில்
ஈர இதழ் ஒத்தடம் ஈந்திடுவாள்


அலுவலகம் விடுத்து
இல்லம் நுழைகையில்
வாயிலில் நின்று வரவேற்பாள்... என்
வருகையின் மகிழ்வை
முத்தத்தில் காட்டிடுவாள்


வலிக்கும் தலையை
பஞ்சு கரத்தில்
மெல்ல அழுத்திடுவாள்
மடி கிடத்தி கரம் கோர்த்து...
அன்பில் என்னை ஆலிங்கனம் செய்வாள்


யார் இவள்?
காதலியா?
துணைவியா?
இல்லை.....


இவள் என்
தாயாகிப்போன
மகள்.....


என் தாரம் சுமந்து பெற்ற
தங்கத்தின் தங்கம்.....

........................................................
கவிதையின் தலைப்பு
மகளென்னும் தாய்......
(கள்ளிப் பால் பருகி உயிர் நீத்த பெண் சிசுக்களுக்கு தந்தையாக சமர்ப்பணம்)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top