வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரம்

Advertisement

Eswari kasi

Well-Known Member
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”,

பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,

ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .

அந்த வாசகம் இதுதான் . . . .

இந்த நிலை மாறும்

அவ்வளவுதான்

வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !.

படித்ததில் பிடித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top