பகுதி 10….

செய்வதை செய்துவிட்டு அவன் பாட்டிற்கு இறங்கிச் சென்றுவிட்டான்…  தான் கண் கலங்குவது எதற்காக என தெரிந்தும்..  எனக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவன் தான் தனக்கு வேண்டுமென ஏன் அவனுக்கு புரியவில்லை.. இல்லை புரியாதது போல் நடிக்கிறானா…  தன் உணர்வுகள் அவனுக்கு புரியவைக்கவே இல்லையா?

என் உணர்வுகளுக்கு இவன் உயிர் கொடுப்பானா? இல்லை உயிரோடு அழிப்பானா!

மனம் கதறி அழுது கொண்டிருக்க.. அதனை அடக்கி… ’எப்போதும் போல்…. சத்ரி எனக்கில்லை…  எனக்கு அவன் வேண்டாம்..’ என சத்ரி ஜெயத்தை உச்சரிக்க ஆரம்பித்தது…  ஆனாலும் ஏக்கத்தில் துடிக்கும் மனதினை என்ன செய்ய!  அது ஒரு புறம் துடித்துக்கொண்டிருந்தது.

சத்ரியின் ஏக்கத்தில் கண்கள் கலங்கிய சாத்வி, சத்ரியின்  மகிழ்ச்சி பொங்கும் நடவடிக்கைகளிலும்   இந்த உலகத்தில் நான் மட்டும் தான் அதிர்ஷ்டசாலி என தம்பட்டம் அடிக்காத குறையாய்  ஆரவாரமாய் ஆர்ப்பாட்டமாய் இருந்த சத்ரியை பார்த்து பைத்தியம் பிடிக்காத குறையாய் அமர்ந்திருந்தாள்….

இவள் சத்ரியை பற்றிய குழப்பத்தில் இருக்க.. ஏனைய நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் நலங்கு வைத்து முடித்து, நிச்சயதார்த்தம் இனிதாய் நிறைவடைந்தது…

அவளை மணமகள் அறைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள். கயலும் சரண்யாவும் வந்து இவளை அழைக்க, அவர்களோடு எழுந்து செல்லும் போது கூட சத்ரியை தான் தேடியது இவள் கண்கள்.

சத்ரியும் ரமேஷூம் ஸ்வாரஷ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு மகிழ்ச்சி தாண்டவமாடிய முகமாய் சத்ரி சாத்வியினுள் அழுத்தமாய் பதிய,  அடிக்கடி சத்ரியின் பார்வையும் சாத்வியை துளைத்துக் கொண்டு தான் இருந்தது.  தனக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை பார்க்கும் உரிமை பார்வையை வீசிக் கொண்டிருந்தான் சத்ரி…

பாவம் சாத்விக்கு தான், அவன் உரிமைப்பார்வை புரியாமலேயே போனது, சத்ரி செய்து கொண்டிருக்கும் அட்டகாசங்களால்..

சத்ரியின் பார்வையை தொடர்ந்து ரமேஷூம் சாத்வியை பார்த்து மெலிதாய் சிரிக்க.. ‘பக்’ என இருந்தது ,இதயம் கூட தன் வேலையை சிறிது நேரம் நிறுத்தியது போல் தோன்றியது சாத்விக்கு.

இருவரின் மீதும் இருந்த பார்வையை பிடுங்கிக் கொண்டு விறு விறுவென  அவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.

மணமேடையில் இருந்து இறங்கி செல்லும் சாத்வியின் பார்வையையும் படபடப்பையும் பார்த்த மஹா குழப்பத்தில் அவள் பின்னேயே சென்று

“கயல் சரண்யா இரண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க… காலையில் நீங்க தான் சாத்வி கூடவே இருக்கனும், இப்போவே லேட் போங்க” என அவர்களை அனுப்ப எத்தனிக்க

“நாங்க இங்கே இருந்தால், யார் உண்மையான மாப்பிள்ளைன்னு போட்டு குடுத்துடுவோம்ன்னு பயப்படுறீங்களா… மா” என கயல் மெதுவாய் மஹாவின் கதை கடிக்க….

“ ஏய் போங்கடி… ” என அவரும் மெதுவாய் மிரட்ட

“ஆனாலும் உங்க மருமகனுக்கு மூளை இவ்வளவு வேலை செய்யக் கூடாது” என இன்னும் பேச

அவர்களை கிட்ட தட்ட விரட்டி விட்டு வந்தார் மஹா….

 “என்ன சாத்வி என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரியாய் இருக்க..?” என  கேட்டு சாத்வியின் கழுத்திலும், நெற்றியிலும் கை வைத்துப்பார்க்க…

உடனே தன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு “உட்கார்ந்தே இருந்தது டயர்ட்டா இருக்கும்மா..” என தன் நகைகளை கழட்ட ஆரம்பிக்க…

அதை நம்பிய மஹாவும்…  அவளுக்கு உதவி செய்தவாரே… ”செட் நகை மட்டும் கழட்டிக்கமா…. தங்கத்தை அப்படியே போட்டுக்கோ” என அவளுக்கு வேறு ஒரு லேசான பட்டுப்புடவையை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்.

சரி என மஹா சொன்னபடியே செய்ய…. சிறிது நேரத்தில் “அத்தை” என சத்ரி கதவு தட்டும் ஓசை கேட்க…

“இதோ வரேண்பா….” என சத்தம் கொடுத்தபடி  மஹா கதவை திறக்க “சாத்வி சாப்பிடலை அத்தை” என வாய் கூற, சத்ரியின் கைகளோ மஹாவின் புறம் தட்டை நீட்டிக் கொண்டிருந்தது.  மூன்று சப்பாத்திகளும்…  காளான் குருமாவும் இருந்தது.

“சாத்வி சாப்பிடலைன்னு நாங்க கூட கவனிக்கலைபா “ என சிரித்தபடியே தட்டை கொணர்ந்து சாத்வியிடம் கொடுத்தார்.

“நீ சாப்பிடுமா… கீழே நிறைய வேலை இருக்கு பார்த்துட்டு வரேன்” என சென்றுவிட்டார்.

சாத்வியோ! தட்டையே வெறித்துப் பார்த்தபடி வெகு நேரமாய் அமர்ந்திருந்தாள்.  மஹா சென்றதை உறுதிபடுத்திவிட்டு சாத்வியை பார்க்க உள்ளே நுழைந்தான் சத்ரி.

லேசான பட்டுபுடவையில் தலை அலங்காரம் கலைந்து, செவி முடிகளும், முன்னுச்சி முடிகளும், ஆங்காங்கே அழகாய் காற்றிற்கேற்ப பறந்து கொண்டிருக்க  தங்க சிலையென காட்டி கொடுத்த மெல்லிய தங்க நகைகளும், தட்டினை வெறித்துக் கொண்டிருந்த அவள் கண்களும், அவளை ஓவியமாகவே காட்டியது.

 சத்ரிக்கு கண்களை அவளிடமிருந்து பிரிக்க முடியவில்லை யாரும் வந்து விடுவார்களோ என பயம் வேறு.  அதற்குள் இவளிடம் பேசிவிட வேண்டும் என மனது எகிறி துடிக்க, லேசாய் தைரியத்தை வரவழைத்து கொண்டு

“வெறிச்சு பார்த்திட்டே இருந்தால் , சப்பாத்தி தானா உள்ளே போய்டுமா“ என திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள் சாத்வி.

அதற்காகவே காத்திருந்தார்ப் போல், இவனை பார்த்த அதிர்ச்சியில் லேசாக பிளந்திருந்த சாத்வியின்  வாயினுள் சப்பாத்தியை திணித்தான் சத்ரி.

சப்பாத்தி உள்ளே செல்ல சாத்வி அனுமதிக்காததால் வாயை அடைத்துக் கொண்டு நிற்க…

ஊட்டிக் கொண்டிருந்த சத்ரி, தன்  விரல் ஒன்றை மட்டும் வாயினுள் வைத்து அழுத்த

சுறு சுறுவென கோபம் ஏறியது சாத்விக்கு…. ஏற்கனவே இருந்த கோபம் கொப்பளித்துக்கொண்டு கிளம்ப…  ‘கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட பாவம் சத்ரிக்கு தான் புரியவில்லை’

“ சாவி , ஏதோ திட்றனு தெரியுது…  வாயில் இருக்கிறதை முழுங்கிட்டு திட்டு.. ஒன்னும் புரியமாட்டுது” என  இவன் சொல்ல…  பட்டென விழுங்கிவிட்டு, மீண்டும் திட்ட வாய் திறக்க, மீண்டும் சப்பாத்தியை திணித்தான்.

இவனது நோக்கம் நன்றாகவே புரிய ‘நீ ஒன்னும் ஊட்ட வேண்டாம்’ என்பதை போல் அவன் கையை தட்டிவிட

“ப்ச் சாப்பிடு சாவி… ” என ஒவ்வொரு விள்ளலாய் ,சாத்வி பேச இடமே கொடுக்காமல்  ஊட்டிக்கொண்டே இருந்தான்….

சாத்வியை பேச இடம் கொடுக்கவே இல்லை சத்ரி…  மீறி மறுத்த போது அவன் முறைப்பே அவளை எரிக்க..எதையும் பேசாமல் எல்லாவற்றையும் உண்டு முடிந்தாள்.

‘குட் கேர்ள்.’ என தலையை ஆட்டி சத்ரி எல்லாவற்றையும் எடுத்துக்  கொண்டு கிளம்ப ஆயத்தமாக… அவன் கையை பிடித்து நிறுத்தினாள்.

“சாப்பிட்டேன்ல,.. இப்போ நான்சொல்றதை கேளு..” என சத்ரியின் கைபிடித்து நிறுத்தினாள்.

சத்ரியின் முரட்டுகைக்களை  தழுவி இருந்த  சாத்வியின் கைகளின் மென்மையை கண்களை மூடி கிரகித்தான் சத்ரி.

சொல்லி வைத்தார் போன்று அவனது மொபைல் சத்தம் எழுப்ப… பட்டென கண்களை திறந்து மறுகையால் ஆன் செய்து “இதோ வரேன் பா” என சாத்வியிடமிருந்து தன் கைகளை உறுவிக் கொண்டு வேகமாய் சென்றுவிட்டான்.

அவன் சென்றதை பார்த்து கண்கள் நிறைய…   அப்படியே கட்டிலில் சாய்ந்தாள் சாத்வி.

 பின் மஹா, க்ருத்திகா என இருவரும் அறைக்குள் வர ‘சத்ரி தான் அனுப்பி வச்சுருப்பான்’ என கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

இருவரும் சாத்வியுடனே துணை இருக்க…    அழக்கூட நேரம் அமையவில்லை சாத்விக்கு.

அறையை விட்டு வெளிவந்தவன் காதில் இருந்து போனை எடுக்காமல் அப்படியே சாத்வியை மனதில் நினைத்தபடி வர…  எதிரே வந்த அவனின் தந்தை

“யாருடா போன்ல, இப்படி சிரிச்சுட்டு வர்ற” என கேட்க….

“ நீங்க தான்பா” என கூறினான் இவன்.

“டேய் மகனே.. பிளான் பண்ணி, எல்லோரையும் லூசாக்கிட்டு இருக்கன்னு நான் பெருமைபட்டேன்…  கடைசியில் நீயும் லூசாயிட்டியாடா?” என மகனை பார்த்துக் கேட்க

அவர் பேச்சில் இதழ்கள் லேசாய் விரிய “சாத்விகிட்ட வாலண்டியாரா போய் சிக்கிட்டேன்பா…  எப்படி தப்பிக்கன்னு யோசிக்கும் போதே…  கஸ்டமர் கேர்…. கால் வந்தது…  நான் ‘உங்ககிட்ட பேசுற மாதிரி‘ எஸ் ஆகிட்டேன். அதே தான்பா அப்படி சொன்னேன்“ என சிரித்தபடி கூற…

அவன் செயலில் வாய் பிளந்த விநாயகசுந்தரம் “நீ பிழைச்சுப்படா” என நக்கலாய் கூறினார்.

அதை கவனிக்காமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள் சத்ரி செல்ல, இவரும் அவனுடன் இணைந்து கொண்டார்.

இரவு அமைதியாய் இருந்த அந்த மண்டபத்தில்…  அணிந்திருந்த நகைகள் சப்தம் எழுப்பாமல்  சத்ரியை தேடி வந்தாள் சாத்வி…

எங்கே மஹாவும் க்ருத்திகாவும் எழுந்துவிடுவார்களோ என  பூனைபோல் மெதுவாய் , அவளின் அறையை திரும்பி திரும்பி பார்த்தவாறே வந்தாள்.

 சாத்வியின் அறையின் நேர் எதிரே இருந்த ஐன்னலின் வழியே தூங்காமல் கொட்ட கொட்ட விழித்து கொண்டிருந்தவன். சாத்வி தங்கள் அறையை நோக்கி வருவதை உணர்ந்து, சட்டென அருகில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை எழுப்பினான்…

அவரும் உடனே எழுந்து அமர்ந்து “என்னாடா,  என்னடா” என தெளிவில்லாமல் அடித்து பிடித்து எழ

“அப்பா சாத்வி , என்னை தான் தேடி வர்ரா போல…  நான் சொல்றதை அப்படியே  அவகிட்ட சொல்லுங்கப்பா ” என  சத்ரி விநாயகத்திடம் கூறி அனுப்பினான்.

‘லவ் பண்ணவனுங்களுக்கு ப்ரண்டா தான் இருக்க கூடாது…. இப்போ அப்பனாவும் இருக்க கூடாது போல பயபுள்ளை தூங்க கூட விட மாட்டுதே‘ என நொந்தவாறே…  சாதாரணமாய் சாத்வியை நோக்கி சென்றார்.

“ என்னம்மா, இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யிற ” என திடீரென விநாயகத்தின் குரல் கேட்க….

திடுக்கிட்டு திரும்பினாள் ஆனாலும் தைரியமாய் அவர் என்ன நினைப்பாரோ  என்றில்லாமல்” சத்ரி எங்கே மாமா…. அவன்கிட்ட பேசனும் ” என

அவளின் தெளிவான பேச்சு.. பிசிர் தட்டாத குரல் எல்லாம் சத்ரியை தேடித் தான் என எளிதில் கண்டு கொண்டார் விநாயகசுந்தரம்.

 பின்னே ரமேஷூடன் திருமணம் என்ற நிலையில் சத்ரியை தேடி வந்திருப்பதாய் கூறுவது எனில் அவன் மீதான அன்பை நினைத்து பெருமை கொண்டார் விநாயகசுந்தரம்..ஆனாலும் அதை மறைத்தவாரே.

சத்ரி சொன்னதை அப்படியே உறைத்தார் “அவன் கொஞ்சம் வெளியே போய் இருக்கான் மா வேணும்னா போன் பண்ணிப் பாரேன் ” என சொல்ல

விநாயகத்தின் பதிலில் முகம் சட்டென சுருங்க…  வேறெதுவும் செய்ய முடியாத தன் நிலையை நொந்தவாரே “சரி….மாமா….” என தலையாட்டியபடி சென்று மறைந்தாள்… சாத்வி தலையாட்டி சென்றவிதம் விநாயகத்திற்கு சற்று குற்ற உணர்ச்சியாய் போனது.