இதயத்திலே ஒரு நினைவு – 9
“டி மைத்தி… நம்ம கிளாஸ் தேவி இருக்காள்ல அவளையும் மேத்ஸ் டிப்பார்ட்மென்ட் தினேஷ் இருக்கான்ல, ரெண்டு பேரையும் சஸ்பென்ட் பண்ணிட்டாங்கலாம்…”
ரேகாவின் முகத்தில் அப்படியொரு பதற்றம்…
“தெரியும்…” என்று கூறிய மைதிலியின் முகத்திலோ என்ன இருந்தது என்றே கண்டுகொள்ள முடியவில்லை.
அன்றைய தினம் முதல் வகுப்பிற்குப் பிறகு, கல்லூரி முழுவதும் இதுவே பேச்சாய் இருந்தது. அதிலும் தேவி இவர்கள் வகுப்பு என்றதும், இவர்களது வகுப்பில் சற்று கூடுதல் பதற்றமும்.
ஆளாளுக்கு ஒவ்வொரு கதை பேசினர்..
“ஏன் டி இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணது உனக்குத் தெரியுமா?”
“ம்ம்ச் டூர் வந்தப்போ தான் தெரியும்?”
“அடிப்பாவி உன்னோட தானே நானும் இருந்தேன்… எனக்கு நீ சொல்லவே இல்லையே…” என்று ரேகா கேட்க,
“உன்கிட்ட சொன்னேன்… நீ செல்பி எடுக்கிறதுலயே பிசியா இருந்த.. அப்புறம் நானும் விட்டுட்டேன்…” என்று மைதிலியும் சொல்ல,
“டூர் வந்தப்போ எப்படி உனக்குத் தெரியும்?” என்றாள் ரேகா விளங்காது.
“தேவி தினேஷ் கூட போன்ல பேசிட்டே இருந்தா… அவனும் அவன் பிரண்ட்ஸ் கூட தனியா வந்திருந்தான் போல. ரெண்டு பேரும் தனியா போய் நின்னு பேசிட்டு இருந்ததை ஹெச் ஓ டி பார்த்துட்டார்…” என,
“அச்சோ..!” என்றாள் ரேகா வாயில் கை வைத்து.
“ஆமா…!”
“ஆமா இதெப்படி உனக்குத் தெரியும்..?”
“ஹெச் ஓ டி கூப்பிட்டு அவங்க ரெண்டு பேரையும் திட்டிட்டு இருந்தப்போ பார்த்தேன்…”
“ஓ..!”
“இது தேவையா?! இப்போ பாரு காலேஜ் முழுக்க இதுதான் பேச்சு. திரும்ப இங்க கால் வைக்க முடியுமா? பைனல் இயர் ரெண்டு பேருமே… கடைசி நேரத்துல இப்படியொரு கெட்டப்பேரு தேவையா?! இனி செமெஸ்டர்க்கு மட்டும் தான் அவங்க வர முடியும்.. எவ்வளோ அசிங்கம்…” என்று மைதிலி பொரிய, ரேகா அமைதியாகவே இருந்தாள்.
ஒருவேளை இதனால் தான் மைதிலி சுற்றுலாவில் ஜெகந்நாதனை தவிர்த்தாளோ…
தவிர்க்கிறாளோ..?!
ரேகா இதனை கேட்டே விட்டாள் அவளிடம்.
“இதுவும் ஒரு காரணம். பாரேன் அவங்க பேரன்ட்ஸ் வந்து எப்படி நின்னிருந்தாங்க. யார் முகத்தையும் பார்க்கக் கூட இல்லை. என்னால யார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிற்க முடியாது. எங்கப்பா அம்மாவையும் நிற்க வைக்க முடியாது…”
“அப்போ உனக்கு ஜெகாண்ணாவ பிடிக்கலையா?!”
“பிடிக்கும்… அது உங்க அண்ணனுக்கும் தெரியும். ஆனாலும் வேண்டாம். நான் இங்கயே இருக்கப் போறதில்ல. ஆனா உங்கண்ணன் அப்படியில்ல. இது உங்க ஊரு.. ஒரு சின்ன பிரச்சனை ஆச்சுன்னா கூட, அது அவங்க குடும்பத்தையே தலை குனிய வைக்கும்…” என,
இவளுக்கு அவன் மீது இருப்பது எப்படியானதொரு பிரியம் என்று ரேகா சற்றே வியந்து தான் பார்த்தாள்.
“இது உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரிஞ்சதா இருக்கணும். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சது… அவ்வளோதான்…”
“அப்போ… நீ முடியாதுன்னு சொல்ல போறியா…?”
“எதுவுமே பேச போறதில்லை. இன்னும் கொஞ்ச நாள் தான் படிப்பு முடிஞ்சிடும். அப்பாக்கு சென்னைல ட்ரான்ஸ்பர் வந்திடுச்சு…” என்றாள் மைதிலி சுரத்தே இல்லாது.
“என்ன டி சொல்ற?!”
“ஆமா ரேகா… எங்களுக்குள்ள பிடித்தம் இருந்தாலும் இது சரியா வராது. யாரையும் நான் தலைக்குனிவு செய்ய விரும்பல. கஷ்டம் எங்க ரெண்டு பேரோட போகட்டும்…” என்ற மைதிலியின் குரல் உறுதியாகவே இருந்தது.
_______________________