அத்தியாயம் 3
தனக்கு கொடுக்கப்பட்ட இறுதியாண்டு வகுப்பை முடித்துவிட்டு ஸ்டாப் அறைக்கு சென்ற ஜெயக்குமார் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தன்னை முறையாக அறிமுகபடுத்தி கொண்டான்…
காலையில் தாமதமாக வந்ததால் யாரிடமும் முறையாக அறிமுகமாகவில்லை…அனைவரும் அவனை விட அனுபவம் மற்றும் திறமை நிறைத்தவர்களாவும் இருந்தனர்…
இவன் இதற்கு முன்பு சென்னையில் வேலை பார்த்த கல்லூரியில் அனைவரும் இவன் வயதாகவோ…இல்லை இவனை விட ஒரு நான்கைந்து ஆண்டுகள் மூத்தவர்களாகவும் தான் இருந்தனர்…இங்கு வந்த முதல்நாளே எல்லாம் புது அனுபவமாக இருந்தது…நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்தான்… இக்கல்லூரி தன்னுடைய phd க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றே நம்பினான்…
ஆனால் இவ்வளவு பெரிய ஹை ப்ரொபைல் உள்ள கல்லூரியில் எப்படி தன்னை எடுத்தார்கள் என்றே அவனுக்கு இங்கு வந்து சேரும் வரை புரியாமல் தான் இருந்தது…
சேர்ந்த பின்பு தான் தெரிந்தது தன் மாமாவின் திருவிளையாடல் என்று…இத்துறையின் hod யும் மாமாவும் பால்ய காலத்து நண்பர்களாம்…அதில் இருந்தே அனைத்தும் புரிந்து போயிற்று…
இந்த மனிதன் தன் மகளுக்காக என்னவெல்லாம் செய்கிறார்…தன் கொள்கையெல்லாம் தவிர்த்துவிட்டு சிபாரிசு செய்திருக்கிறார்…இதுமட்டுமா அவளுக்காக செய்திருக்கிறார் எத்தனையோ இருக்கிறது…அது தாங்கள் மூவர் மட்டுமே அறிந்தது…இப்படியான தியாகத்திற்கெல்லாம் அவள் தகுதி ஆனவளா என்றால் அதுவும் இல்லை…
கம்பிரமான தன் மாமா தன் கம்பிரத்தை எல்லாம் தொலைத்து தலை குனிந்து கண்டவனிடம் எல்லாம் மன்றாடியது இன்றும் ஞாபகம் இருக்கிறதே…அவளுக்காக எல்லாம்…அடங்காபிடாரி…
ச்சை இன்னைக்கு என்ன…எங்கே ஆரம்பிச்சாலும் இவ தான் முடிவா இருக்கா…என்று சுருதியின் நினைவுகளை அடித்து விரட்டி விட்டு மீண்டும் நினைவுலகத்துக்கு வந்தான்…
அங்கு வந்த ஒரு பெண் ஸ்டாப் தன் பெயர் வினிதா தேவி என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார்…
வினிதா தேவி முப்பதுகளின் பிற்பகுதியில் இருப்பவர்…மணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும்…அவருக்கும் அவர் கணவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இரு வருடத்திற்கு முன் பிரிந்து விட்டதாகவும் கூறினார்….
இதெல்லாம் முதன் முதலாய் அறிமுகமாகும் தன்னிடம் ஏன் கூறுகிறார் என்று மனதுக்குள் நினைத்தானே தவிர வெளியில் கேட்கவில்லை…
சிறிது நேரம் சென்றவுடன் கல்லூரி நேரம் முடிவடைதற்கான மணி அடித்தது…கல்லூரியில் இருந்து வெளியேறிய ஜெயக்குமார் ஒரு காபி ஷாப்பின் முன் வண்டியை நிற்பாட்டி இறங்கினான்…
உள்ளேயிருந்து அவனை பார்த்த ஐந்து பேர் கொண்ட அந்த நண்பர் குழாமின் “டேய் ஜெய் மாமா…மச்சான்…”என்று பலவிதமான குரல்களின் கத்தல்களுடன் உள்நுழைந்தான் ஜெயக்குமார்…
அந்த காபி ஷாப்பில் இருந்த அனைவரும் இவர்களை ஏதோ விஷஜந்துக்களை போல் பார்த்ததை எல்லாம் அவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை…
“பரதேசிகளா ஏன்டா இப்டி கத்துறிங்க…அமைதியா இருங்க டா…”என்று நண்பர்களை பார்த்த உற்சாகத்தில் அவனும் அதை சத்தமாக தான் சொன்னான்…
“நீ பெரிய lecturer னா அது உன் காலேஜ்ல மட்டும் தான் …எங்ககிட்டலாம் அந்த கெத்த காட்டாதே டா…அதோட புது மாப்பிளை வேற…”என்று கச்சேரியை இனிதே ஆரம்பித்து வைத்தான் தௌபிக்…
ஜெயக்குமாருடன் சேர்த்து இந்த ஆறு பேரின் நட்பானது
“வெயிலோடு விளையாடி….
வெயிலோடு உறவாடி….
வெயிலோடு மல்லுக்கட்டி…
ஆட்டம் போட்டோமே…”என்று பாட்டு போட்டு பயாஸ்கோப் காட்டும் அளவிற்கு இவர்கள் நட்பு பழமையானது…ஜெயக்குமார் போன்ற reserved டைப் ஆளுக்கு இவர்கள் போன்ற நண்பர்கள் கிடைத்தது அதிசயமே…
இவர்களிடம் தன் திருமண விவரத்தை தெரிவிக்கவே இங்கு வரசொல்லியிருந்தான்…தௌபிக் இவனுக்கு மட்டுமல்லாது ஜெயக்குமாரின் குடும்பத்துக்கே நெருக்கமானவன்…அதனால் தான் ஜெயக்குமார் சொல்வதற்கு முன்பே அவனுக்கு தெரிந்திருந்தது…
“நீ திடிர்னு மதுரைக்கு வந்தப்பவே நினைச்சேன்…பொண்ணு யாரு டா…”
“மச்சி arrange marriage ஆ இல்லை ரன்னிங் மேரேஜா…ரன்னிங்னா நா இருக்கேன் மச்சான்…”
“சென்னைல இருந்து யாரையும் கூப்பிட்டு ஓடிவந்துட்டியா மாமா…அவங்க முறை பையன் உங்கள தேடுறானா…”
“கொடுமைக்கார குடும்பத்தில இருந்து அந்த பொண்ணே காப்பாத்தி கூப்பிட்டு வந்து…வர வழில அந்த பொண்ணுக்கு உன் மேல லவ் ஆகி…நீயும் பாவம்னு அதுக்கு வாழ்கை குடுக்கிறியா ஜெய்… “
“அம்மா இல்லாத பொண்ணு அதுக்கு ஒரு கொடுமைக்கார சித்தி…அந்த சித்தி பணத்துக்கு ஆசைப்பட்டு உன் ஆளை பணக்கார மைனர் மாப்பிளைக்கு கட்டி வைக்க போறாங்க…அதான் நீ யாருக்கும் தெரியாம அந்த பொண்ணே கூப்டு வந்து கல்யாணம் பண்ணிக்க போற…அதுக்கு எங்க ஹெல்ப் வேணும் அதானே மச்சி” என்று
ஜெயக்குமாரை பேசவே விடாமல் ஒரு சூப்பர் டூப்பர் லவ் ஸ்டோரியை உருவாக்கியிருந்தனர்…
இதெல்லாம் கேட்டு கடுப்பான ஜெயக்குமார்”நாய்களா…என்னை சொல்ல விடுங்க டா…”என்று கத்தினான்…
“சரி சொல்லு ஜெய்…”என்று அவனிடமே ஒப்பு கொடுத்தனர்…
இப்பொழுது அமைதியான ஜெயக்குமார் நீ சொல்லு என்ற பார்வையோடு தௌபிக்கை பார்த்தான்…
“பொண்ணு பேரு சுருதி…ஜெய்யோட மாமா பொண்ணு…”என்று தௌபிக் கூறியவுடன் அனைவரும் அமைதியாக இருந்தனர்…யாருக்கும் எதுவும் பேசக்கூட முடியவில்லை…ஏனெனில் அவ்வளவு பெரிய அதிர்ச்சியான விஷயம் அது…
சில வினாடிகள் மாற்றி மாற்றி ஜெயக்குமாரின் முகத்தை பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்…கண்ணில் நீர் வரும் வரை சிரித்தனர்…கூடவே இருந்த இவர்களுக்கு தெரியாதா ஜெய் சுருதியின் பானிபட் போர்…
முகத்தில் சிறு சலனமும் இன்றி அவர்கள் சிரிப்பதை பார்த்திருந்தான்…
கொஞ்சம்கொஞ்சமாக சிரிப்பை நிறுத்தியவர்கள்
“மச்சி…நிஜமாலே அந்த படபட பட்டாசு கூட கல்யாணமா…சண்டையும் சச்சரவுமா வாழ்கை நடத்துங்க…கல்யாணம் ஆகிட்டு எங்கே இருப்பிங்க டா….உங்க வீட்டுலயா இல்லை வேற எங்கயுமா…”என்று இன்னும் மீதி இருந்த சிரிப்புடன் கேட்டான் பைபாஸ் என்று நம் சுருதியால் அழைக்க படும் பாலா…
“ஏன் கேக்குற…”என்று சந்தேகமாக கேட்டான் ஜெயக்குமார்…
“இல்லை மச்சி என் மகளுக்கு டாம் அண்ட் ஜெர்ரினா ரொம்ப பிடிக்கும்…ரொம்ப நாளா நேருல காட்டுங்கபானு கேட்டுட்டு இருந்தா…அதான் மச்சி…உங்க சண்டை எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுடைய வாரிசுகளும் கண்டிப்பா பிடிக்கும் மச்சி…சொல்லுங்க டா…நாமெல்லாம் ஜெய் சுருதியோட தீவிர விசிறிகள் தானே…ஸ்கூல் படிக்கும் போது நாம ஸ்கூல்ல ஒரு ரசிகர் மன்றமே இருந்துச்சுல டா…ஆனால் இப்டி போய் மாட்டுவேன்னு நாங்க நினைக்கவே இல்லை மச்சி…”என்று கூறினான்…
உண்மையாகவே இவர்கள் சண்டையை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர்…ஜெயக்குமார் தாங்கள் சண்டைபோடுவது யாருக்கும் தெரிய கூடாது என்று தனியாக அழைத்து சென்று தான் திட்டுவான்….
சுருதி ஜெய் சண்டை போடும் போது மரத்துக்கு பின்னும் மாடியில் நின்றும் ஒளிந்து பார்த்தவர்கள் ஆச்சே…சுருதியின் முகபாவனைகளுக்கும்… யாரிடமும் அளவாக பேசும் ஜெயக்குமார் இவளிடம் மட்டும் மிக அதிகமாக பேசி சண்டை போடுவதையும் பார்க்க அப்டி இருக்கும்…
“ஆமாம் டா ஜெய்…உங்க சண்டை பார்த்து ரொம்ப வருஷம் ஆயிருச்சு டா…இனிமே சண்டை போடுறப்ப வீடியோ கால் போடு மச்சி… “என்று அனைவரும் ஒரு சேர கூறினர்…
“இனிமே இவன்கிட்ட என்னடா நமக்கு பேச்சு…சுருதிகிட்ட நம்ம எள்ளுனு சொன்னா எண்ணையை நிக்கும் டா…”என்று கேக் அண்ணா என்று சுருதியால் பாசமாக அழைக்கப்படும் சக்தி கூறினான்…
“ஏன் டா…நம்ம எல்லாத்தையும் சுருதி ஞாபகம் வைச்சு இருக்குமா டா…அது ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நம்ம 12 த் முடிச்சு வெளியே வந்துட்டோம்…அதுக்கு பிறகு எப்பயாச்சும் இவன் வீட்டுக்கு போனப்ப பார்த்தது…எப்படியும் நம்ம அதை பார்த்து ஒரு 5 வருஷம் இருக்கும்ல டா…”என்று கூறினான் புத்தா என்று சுருதியால் செல்லமாக அழைக்கப்படும் கெளதம் கூறினான்…
அடுத்து யாரோ அதற்கு மறுமொழி அளிக்கும் முன் இடைபுகுந்த ஜெயக்குமார்
“அதெல்லாம் ஞாபகம் இருக்கும்…அவளை என்னடா பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்கீங்க…”என்று மாற்றிமாற்றி அவளை பற்றி பேசும் கடுப்பில் கூறினான்…
எதற்குமே தகுதி இல்லாத ஒருத்திக்கு… பார்த்து ஐந்து வருடங்கள் ஆன தன் நண்பர்கள் கூட இவ்வளவு அன்பு வைத்து இருக்கின்றனரே…
இந்த முட்டாளுக்கு யார் சொல்வது… ஒவ்வொரு மணமான ஆணும் சுருதி போன்ற மனைவி அமைய வேண்டும் என்று நினைக்கின்றனர்…ஆனால் இவனோ இப்டி இருக்கின்றான்…
“வர சண்டே என் நிச்சயதார்த்தம்…இங்கே இருக்க எங்க மாமாவோட பழைய வீட்டுல தான் நிச்சயதார்த்தம்…கண்டிப்பா வந்துருங்க டா…”என்று அவர்களிடம் கோபமாகவே விடைபெற்று சென்றான்…
ஐவரும் தாங்கள் இதில் செய்வது ஏதும் இல்லை என்பதால் அமைதியாக அவனை அனுப்பி வைத்தனர்…அவனாக அவளை பற்றி உணர வேண்டும் …அடுத்தவர் சொல்லி புரியவேண்டிய விஷயம் இல்லை…
ஜெயக்குமார் தன் வீட்டை அடைந்த வேளையில் அவனின் அம்மா லட்சுமி யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்…
“குமார் வந்துட்டான்…நான் வைக்கிறேன்…”என்று இவனை பார்த்தவுடன் தொடர்பை துண்டித்தார்…
லட்சுமி -நாகராஜன் தம்பதியின் மூத்தமகன் தான் ஜெயக்குமார்…அவனுக்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து பிறந்தவன் தான் செல்வகுமார்…லட்சுமி ஒரு அரசு பள்ளியில் தொடக்கக்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்தவர்…இப்பொழுது வீட்டில் தான் இருக்கிறார்…நாகராஜ் ஒரு அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்…இன்னும் இரண்டு வருடங்களில் பணி ஓய்வு பெறப்போகிறார்…பிள்ளைகள் இருவரையும் நல்லமுறையில் படிக்கவைத்தனர்…
பிள்ளைகளும் தங்களது கடமையை உணர்ந்து நன்கு படித்தனர்…மூத்தவன் இன்னும் நன்றாக புரிந்து 10 ,12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடமும்…மாநில அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது என்று எடுத்திருந்தான்…கல்லூரி படிப்பும் யாரும் எதிர்பாக்காத வண்ணம் ஐஐடியில் கிடைத்தது….எத்தனையோ வேலைகள் தேடிவந்த போது கண்டிப்பாக டீச்சிங் பீல்ட் தான் என்று முனைப்பாக இருந்துவிட்டான்…அதைபோல் இப்பொது நல்ல கல்லூரியில் வேலையும் பார்க்கிறான்…எப்பொழுதும் இவனை நினைத்து லக்ஷ்மிக்கு பெருமை தான்…தன் மகன் தன்னை போல ஒரு ஆசிரியர் என்பதில்…இப்பொழுது தன் மருமகளும் டீச்சர் என்பதில் அளவிடமுடியா ஆனந்தம் …
என்று வீட்டிற்குள் நுழைந்த ஜெயக்குமாரை பார்த்தவாறே சிலநொடிகளில் தன் வாழ்வு பயணத்தையே திருப்பி பார்த்துவிட்டார்….
“என்ன அம்மா…அப்டி பாக்குறீங்க…”என்று சிரித்தவாறே நிலைப்படியில் நின்றுகொண்டு தன் ஷூவை கழட்டியவாறு வினவினான்…
“இல்லடா…செல்வா தான் போன் பண்ணான்…இன்னும் ரெண்டு நாள்ல இங்கே வந்துருவாங்கலாம்…அதுக்குள்ளயும் நம்ம பழரச வீட்டுல போய் சமையலுக்கு ஆர்டர் குடுக்க சொன்னாங்க….அதான் உன்னை போக சொல்லமானு பார்த்துட்டு இருக்கேன் …”என்று அவர் முடிப்பதற்குள் ஜெயக்குமார் அவனின் அறையினுள் சென்றிருந்தான்…
“என்னடா பேசிட்டு இருக்கும் போதே போற…”என்று ஒரு அதட்டல் போட்டார்…
இதிலெல்லாம் கண்டிப்பான ஆசிரியர் தான்…வீட்டிலுள்ள அனைவரையும் கட்டுக்குள் வைத்திருப்பார்…military ரூல் தான்… நாகராஜனே லக்ஷ்மிக்கு பயப்படுவார் என்றால் அவரின் நாககுட்டிகளாம் எம்மாத்திரம்…உடனே அறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமார்
“இல்லை மா…தலைவலிக்குற மாறி இருக்குமா…அதான்..ப்ளீஸ் நீங்களே போயிட்டு வந்துருங்க மா…”என்று பணிவுடன் கூறினான்…
“அதை சொல்லிட்டு போறதுக்கு என்ன…போய் டிரஸ் மாத்து…நா டீ போட்டு எடுத்துட்டு வரேன்… “என்று கட்டளையாக கூறிவிட்டு சமயலறையினுள் நுழைந்தார்…
“சரிங்க மா ….”என்று கூறியவனின் காதுக்குள்
“உங்க அம்மா ஒரு லேடி முசோலினி டா…”என்று சுருதியின் பதின்பருவ குரல் கேட்டது…
விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஒரு நூலிழை தான் வித்தியாசம்…
ஆதிக்கம் தொடரும்….