அத்தியாயம் 18:
கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல…அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்…மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள் ஆகிப் போனது.
போனவன் ஒரு போனும் பண்ணவில்லை…வீட்டிற்கும் வரவில்லை. ஒவ்வொரு நாளும் அவனுக்காக காத்திருந்து அபிக்கு கண்கள் பூத்தது தான் மிச்சம்.
அந்த வீட்டில் உள்ள அனைவரும் அவள் படும் வேதனையை பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.அவர்களாலும் ரிஷியை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மகனின் கோபத்தை கண்டு முதன் முதலாக வருத்தம் கொண்டனர் சுரேஷும்,சித்ராவும்.
பெற்றவர்களின் பேச்சை அவன் எப்பொழுதும் தட்டியதில்லை.அவன் திருமண விஷயம் உட்பட.ஆனால் இன்று அவர்களையும் ஒதுக்கி அவன் சென்று விட்டான்.
அவனுடைய நம்பிக்கை பொய்த்துப் போனதால் வந்த கோபம் தான் என்று அவர்களின் மனம் உணர்ந்தாலும்…..அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அத்தை…” என்றபடி வந்தாள் அபி.
“சொல்லுடா அபி…”என்ற சித்ராவால் அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை.தன்னால் தான் அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதோ என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தவருக்கு…..ஏனோ அவளைப் பார்க்கவே முடியவில்லை.
“அத்தை அது வந்து….” என்று இழுக்க…
“என்கிட்டே என்ன தயக்கம்….அபி….சொல்லுடா…” என்றார்.
“இல்லை காலேஜ் போகவே இல்லை…எனக்கு இது கடைசி வருஷம்…செமஸ்டர் வேற வருது…அதான்…உங்ககிட்ட கேட்டுட்டு…” என்று இழுக்க…
“அட ஆமாமில்லை…இதை எப்படி மறந்தேன் நான்…ஊருக்கு போகனுமா அபி…ஆனா அங்க உங்க வீட்டில்….” என்று சித்ரா இழுக்க…
“அதெல்லாம் ஒன்னும் நடக்காது அத்தை…தாத்தா இருக்கும் வரை என்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது….இத்தனை நாள் அவர் இருந்ததால் தான் என்னால் அங்கே இருக்கவே முடிந்தது…எக்ஸாம் முடிச்சுட்டு வந்திடுறேன்…” என்றாள்.
“சரிமா…..மாமா வரட்டும் அவரையே கொண்டு வந்து விட சொல்றேன்….” என்ற சித்ரா…
“அபி உனக்கு ரிஷி மேல் கோபம் இல்லையே….?” என்றார்.
வெற்று புன்னகை புரிந்த அபி….”அவருக்கு வந்த கோபம் நியாயமானது தானே அத்தை….அவர் இடத்தில் யாரா இருந்தாலும் இப்படி தான் செய்வாங்க…அதனால் அவர் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை…இனிமேலும் வராது…” என்றாள் உறுதியாய்.
“ரொம்ப பெருமையா இருக்கு அபி….அவனோட வேலையில் அவனை புரிந்து கொண்ட மனைவியால் தான் கடைசி வர அவனுடன் வாழ முடியும்…
ஏன் சொல்றேன்னா…அவன் வேலை அப்படி.உங்க மாமாவோட வாழ்ந்த இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனையோ முறை கோபப்பட்டிருக்கேன்…ஆனா ஒரு நாளும் சலிப்பு ஏற்பட்டதில்லை….
அதே மாதிரி நீயும் அவனை புரிஞ்சு நடந்துக்கனுமா….அவனுடைய கோபம் சீக்கிரமே சரியாகிவிடும்….” என்று சொல்ல…
அவரைப் பார்த்தால் அபிக்கு பாவமாய் இருந்தது.இந்த பத்து நாட்களாக அவர் விடாமல் சொல்லும் வார்த்தைகள் தான் இவை…இருந்தாலும் அபி கேட்டுக் கொண்டாள்.சித்ராவின் கவலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“ஆனா அபி…நீ உங்க வீட்டுக்கு போறது அவனுக்கு தெரிஞ்சா….அவன் கோபம் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாதுமா…” என்றார்.
அதுவும் ஒரு வகையில் உண்மைதான் என்று தோன்றியது அபிக்கு.
ஏற்கனவே அவர்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறான்.அதிலும் சரண்யா,பாட்டியைக் கண்டாலே அவன் கண்கள் வெறுப்பை உமிழ்கிறது….என்ன செய்யலாம்..? என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
சிந்தனையுடனே அறைக்கு சென்றவளுக்கு…அங்கு வந்த முதல் நாள் ரிஷி தன்னிடம் நடந்து கொண்டது நினைவிற்கு வர…..அவளையும் அறியாமல் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
அறை முழுதும் அவன் நிறைந்திருப்பதைப் போல உணர்ந்தாள்.அவனை நேரில் பார்க்கவில்லை என்றாலும்….மனதில் பூத்த பசுமையான நினைவுகள் போதுமானதாய் இருந்தது அவளுக்கு.
அங்கிருந்த டேபிள் மேல் இருந்த போட்டோவில்…அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான் ரிஷி.இந்த பத்து நாட்களில் அவளுடைய துணை…ஆறுதல் எல்லாமே அந்த போட்டோதான்.
எப்பொழுதும் அவன் முகத்தில் தெரியும் கம்பீரம் குறையாமல் இருந்தான் அந்த புகைப் படத்தில்.ஒட்ட வெட்டிய தலை முடியும்….அவன் முகத்திற்கு அழகு சேர்க்கும் மீசை…அவனுக்கு கம்பீரத்தையும் சேர்த்து வழங்கியிருந்தது.
ஏனோ அது வரை அந்த புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“என் காதல் கடைசிவரை இப்படி மனதிற்குள்ளேயே வாழ்ந்து மடிந்து விடுமோ….என்னுடைய நியாபகம் அவருக்கு கொஞ்சம் கூட வரவில்லையா…?” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.
“எப்படி வரும்…உன் நினைவு வரும் அளவிற்கா நீ நடந்து கொண்டாய்.. எத்தனை முறை கேட்டிருப்பான்…உன்னைப் பற்றி.அப்பொழுது எல்லாம் சொல்லாமல் விட்டு விட்டு…இப்போ புலம்பி என்ன செய்ய..?” என்று மனம் கிண்டல் அடித்தது.
இரவு நேரம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது……
அந்த ஆள் இல்லா சாலையில்…..தனது ஜீப்பில் சாய்ந்த படி நின்டிருந்தான் ரிஷி.
இரவு நேர ரோந்து பணியில் இருந்தான்.ஊரே அடங்கிய பின்னும்… அவனுடைய கடமையை செய்து கொண்டிருந்தான்.
தனது டிரைவரிடம்..”சூடா ஒரு கப் காபி வேண்டும் அண்ணா…” என்றான்.
“இதோ தம்பி….அங்க ஒரு பேக்கரி இருக்கு…நிமிஷத்தில் வாங்கிட்டு வந்திடுறேன்…” என்றபடி அவர் நகர…அப்பொழுது தான் இன்னும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.
அது அவனுக்கு பழக்கமாகிய ஒன்றுதான் என்றாலும்…ஏனோ அன்று அனுமதியின்றி வீட்டு நியாபகம் வந்தது.
உணவு,உறக்கமின்றி….இரவும் பகலும்…டியூட்டி பார்த்ததில்…அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான்.
“இந்தாங்க தம்பி காபி…” என்று அந்த காவலர் நீட்ட..
“தேங்க்ஸ் அண்ணா..” என்றபடி வாங்கி…அதைப் பருகிய பிறகு தான் கொஞ்சம் தெளிவு வந்தது அவனுக்கு.
“தம்பி இன்னும் நீங்க சாப்பிடலை…” என்று அவர் இழுக்க…
“பசியில்லை அண்ணா…” என்றவன்…
“நாளைக்கு சி.எம் பந்தபஸ்து இருக்கு.நீங்க வண்டியை எடுத்துட்டு போயிட்டு காலையில் ஆறு மணிக்கு சரியா வந்திடுங்க…என்னை இப்போ குவார்ட்ரஸ்ல டிராப் பண்ணிடுங்க…!” என்றவன் ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
தனது குடியிருப்பின் முன் இறங்கியவன்…அவரை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தான்.
இருள் சூழ்ந்த அந்த வீடே அவனை வரவேற்றது.கதவைத் திறந்து உள்ளே சென்று லைட்டைப் போட்டவனுக்கு அந்த தனிமை வெறுமையைக் கூட்டியது.
அந்த நேரத்தில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு…..வெளியே வர..மணி இரண்டைத் தொட்டிருந்தது.
படுக்கையில் விழுந்தவனுக்கு ஏனோ உறக்கம் மட்டும் அவனைத் தழுவவில்லை.
இந்த பத்து நாட்களும் உறக்கமின்றி தவித்தான்.ஏனோ மனதில் குடி கொண்டிருந்த வெறுமையை மட்டும் அவனால் போக்க முடியவில்லை.
எங்கு திரும்பினாலும் அபி அவனை விழி விரித்து பார்ப்பதைப் போன்று தோன்றியது.
“ஏண்டி என்னை இப்படி இம்சை பண்ற….?” என்று திரும்பிப் படுக்க…அங்கு அவள் முகமே ….அதிலும் பயந்து….விழித்த அவளது கண்கள்…அவனை தூங்க விடாமல் இம்சை செய்ய…சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
“அவ மேல் தப்பில்லை என்னும் பட்சத்தில்….ஊட்டியில் நான் கேட்டப்பவே சொல்லியிருக்கலாம்….இல்லை அதுக்கு பிறகு எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தும் ஏன் என்னிடம் சொல்லவில்லை….
எல்லாம் தெரிந்தும் ஊமை மாதிரி இருந்திருக்கிறாள்….” என்று ஒரு மனம் என்ன…
“இருந்தாலும் நீ செய்தது தவறு ரிஷி..ஆயிரம் இருந்தாலும் அவள் உன் மனைவி.ஒரு கணவனாய் உன் கடமையை செய்யாமல் இப்படி வந்து தனியே ஒளிந்து கொள்வதில் யாருக்கு என்ன லாபம்..” என்று இன்னொரு மனம் எடுத்து சொல்ல…கொஞ்சம் இளகினான்.
ஆனால் சரண்யாவின் பேச்சுக்களும்,வள்ளியின் பேச்சுக்களும் கண் முன் வர…தன்னையும் மீறி அவன் உடல் விறைத்தது.முகத்தில் கடினத் தன்மை தானாய் குடியேறிக் கொண்டது.வார்த்தைகளை மறக்க அவன் மனம் தயாராயில்லை.
இந்த விவாதத்தில் இருந்தவனுக்கு உறக்கம் போய்..விடியல் தெரிந்தது. வழக்கம் போல நேரம் ஆறு ஆக…..எழுந்து மீண்டும் டியூட்டிக்கு கிளம்பினான்.
“கிளம்பலாமா…?” என்றபடி அவன் ஜீப்பில் ஏறி அமர…பிறகு கடமை உணர்ந்தவனாய் அபியின் நினைவுகளைத் தள்ளி வைத்தான்.
“அபி…எனக்கு என்னமோ இது சரியா வரும் என்று தோணலை….நீ போனா கண்டிப்பா அவனுக்கு கோபம் இன்னும் அதிகம் ஆகும்…” என்று சித்ரா சொல்ல…
“அத்தை…எக்ஸாம் இருப்பதால் தான் போறேன்….இல்லைன்னா கண்டிப்பா போக மாட்டேன் தான் அத்தை…” என்று அபி எடுத்து சொல்ல…
“விடு சித்ரா…அபி சொல்வதும் உண்மைதான்…உன் மகனுக்கு பயந்து…எல்லாரும் வீட்டுக்குள்ளயே இருக்க முடியுமா…? இதெல்லாம் நடக்குற காரியமா…? நீ கிளம்புமா அபி..நான் வந்து விட்டுட்டு வரேன்…” என்று சுரேஷ் சொல்ல..
“தேங்க்ஸ் மாமா…” என்றாள் புன்னகையுடன்.
“ஆல் த பெஸ்ட் அண்ணி….” என்று தீபி வாழ்த்த…
“தேங்க்ஸ் தீபி…” என்ற அபி வருணின் பக்கம் திரும்பினாள்.
“நீங்க ஒன்னும் சொல்லவில்லையே…?” என்று அபி கேட்க….”நான் இன்னைக்கு மவுன விரதம்…” என்றபடி வாயை மூடிக் கொண்டான் வருண்.
“ஏன் என்னாச்சு…?” என்று அபி கேட்க…
“இல்லை..எப்படியும் நீங்க வாங்கிக் கட்டிக்க போறது உறுதி….அதில என் பங்கு எதுவும் இருக்க கூடாது என்றுதான்…இந்த அமைதி…” என்று வருண் சொல்ல….
“அட அட…உன் நல்ல மனசை எண்ணி நான் வியக்கிறேன்….” என்றபடி தைலா வர…
“ஐயோ அம்மா….தலைவலி…காலையிலையே வந்துட்டா…!” என்று வருண் சொல்ல…
“நான் உனக்கு தலைவலியா….என்று அவனின் தலையில் கொட்டியவள்…. இன்னைக்கு உன் கூட தான் ஹாஸ்பிட்டல் வர போறேன்…சீக்கிரம் கிளம்பு…” என்றவள்….
“அப்பறம் அபி…..”என்றபடி அவளின் பக்கம் திரும்பினாள்.
“அப்பறம் ஒண்ணுமில்லை தைலாக்கா…” என்று அபி சொல்ல…
“அபி…முறைப்படி நீங்கதான் அவளுக்கு அக்கா….ஹா…ஹா…ஆனா இங்க எல்லாமே உல்டாவா…?” என்று சிரிக்க…
“ஹி..ஹி…அவ சின்ன பொண்ண இருந்தா அதுக்கு நானா பொறுப்பு…” என்று தைலா தோளைத் தட்ட..
“ஆமா பின்னே…!! என் நிலைமை..இப்படி கிழவிக்கு வாழ்க்கை குடுக்குற மாதிரி ஆகிவிட்டது…” என்று வருண் புலம்ப…தைலா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“அப்பா ஊர்ல இருந்து வந்துட்டாரா தைலா…?” என்று சுரேஷ் கேட்க…
“இன்னும் இல்லை அங்கிள்…நாளைக்கு தான் வரார்….” என்றாள்.
வந்ததும் முதல்ல உங்க கல்யாணத்தை முடிக்கணும்….வர வர உங்க சண்டையை தாங்க முடியலை…என்று சித்ரா சொல்ல…சிரித்துக் கொண்டாள் தைலா.
“கிளம்பலாமா மாமா..” என்று அபி கேட்க….”ம்ம் கிளம்பலாம் அபி…” என்றபடி சுரேஷ் வெளியேற…சித்ராவின் மனதில் கவலை குடிகொண்டது தன் மகனை எண்ணி.
செல்லும் வழியில் லட்சுமியை அழைத்தாள் அபி.
“ஹலோ…! லட்சு நான் அபி பேசுறேன்…!” என்று ஆரம்பிக்க…
“அடியேய்…கைல கிடச்ச…மவளே நீ செத்த…ஒரு வார்த்தை சொன்னாயாடி….உனக்கு கல்யாணம் நடந்ததைக் கூட பேப்பர் பார்த்து தான் தெரிஞ்சுக்கனுமா…?” என்று லட்சுமி தன் போக்கில் கத்த…
“பிளீஸ் லட்சு…நான் நேர்ல எல்லாத்தையும் சொல்றேன்…!அதுவரை கொஞ்சம் அமைதியா இரு…இப்ப நான் சொல்றதைக் கேளு…” என்று சொன்னவள்…அவள் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்தாள்.
“சரிடி….உனக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா…?” என்றவள்… ”காலேஜ்ல பார்க்கலாம்…” என்றபடி வைத்தாள்.
“அபி…மனசில் வருத்தம் ஒன்னும் இல்லையேம்மா…?” என்று சுரேஷ் கேட்க..
“என் மனதில் எந்த வருத்தமும் இல்ல மாமா…நீங்களும் அத்தையும் கவலைப் படாம இருங்க….நடப்பது எல்லாமே நல்லதாகவெ நடக்கும்…” என்றாள் அபி.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத அபிம்மா….எப்பவும் பெண்கள் இவ்வவு அமைதியா இருக்க கூடாது.உனக்கும் வேண்டும் என்பதை…நீ தான் கேட்டு பெறனும் அபி.சில இடங்களில் அமைதியா போறது நல்லது.ஆனா சில விஷயங்களில்….அமைதியே ஆபத்தாக முடியும்…அதனால் இனியாவது உன் சுபாவத்தில் இருந்து கொஞ்சம் வெளிய வாம்மா…!” என்றார் ஆதுரமாய்.
“மாமா…!!!!”
“புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஒரு அப்பாவா இருந்து சொல்றேன்னு கூட எடுத்துக்கலாம் அபி….” என்று சொல்ல…
“ஒருவேளை இவருக்கு விஷயம் தெரிந்திருக்குமோ…!” என்று அவள் மூளை யோசனைக்குத் தாவ….
“உன்னோட முகமே காட்டிக் குடுக்குது அபி….ரிஷி மேல் உனக்கு இருக்கும் அன்பை…” என்றார்.
வியந்து போனாள் அபி.இதுவரை சுரேஷை மிகவும் கண்டிப்ப்பானவர் என்று நினைத்திருந்தாள்.ஆனால் இவ்வளவு தூரம் கவனித்து இருக்கிறார் என்று நினைக்கும் போது…அவளால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
தன் பிள்ளைகளின் சின்ன சின்ன அசைவுகளையும்….அவர் உணர்ந்து கொள்வதை அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள்.இப்படி ஒரு தந்தையைப் கடவுள் தனக்குக் கொடுக்கவில்லையே….? என்று நினையாமல் அவளால் இருக்க முடியவில்லை.
“என்னை மாமான்னு தான் கூப்பிடணும்ன்னு அவசியமில்லை அபி…அப்பான்னும் கூப்பிடலாம்…” என்றார் சுரேஷ்.
அபியின் கண்கள் கலங்க….”எப்பவுமே பெண்கள் எளிதில் கண்கலங்க கூடாது அபி.கண்ணீர் தான் அவங்க பலவீனம்.சில சமயங்களில்…அது பலம்….ஆனா தொட்டத்துக்கு எல்லாம் கலங்க கூடாது.ஒரு போலீஸ்காரன் மனைவி….இப்படி இருந்தா எப்படி…இனி நீ தைரியமா இருக்க கத்துக்கணும் சரியா…?” என்றார்.
“ச..சரி..மாம்…அப்பா…” என்றாள் உள்ளார்ந்த அன்புடன்.
“இனி உன் வாழ்க்கை…உன் கையில் தான் அபி இருக்கு…!” என்று முடித்தார்.
ஏனோ அவருடைய வார்த்தைகள் அவளுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் அவளுள் வந்தது.
“சி.எம் வருகை தந்த விழா முடிந்து…அவர் திரும்பி செல்லும் வரை…ரிஷியால் தண்ணீர் குடிக்க கூட நகர முடியவில்லை.அவன் கையில் இருந்த வாக்கி டாக்கி அலறிக் கொண்டே இருக்க….தன் பணியில் முனைப்பாய் இருந்தான்.
விழா முடிந்து சி.எம் கிளம்ப…மணி மூன்று ஆனது.அவர் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் அவர்களுக்கு டியூட்டி முடியவில்லை.
ஒரு வழியாய் அனைத்தும் முடிந்து அவன் கிளம்ப மணி ஐந்தைத் தொட்டது.இந்த பந்தபஸ்துக்காக கடந்த ஒரு வாரமாக…அனைவரும் நாயாய் டியூட்டி பார்க்க….முக்கிய பொறுப்பில் இருந்தாலும்…அவனுக்கும் வேலைகள்…விடாமல் இருந்தது.
“குமார் அண்ணா…சாப்பிட்டிங்களா…?” என்றான் ரிஷி.
“இல்லை சார்….ரெண்டு வாழைப்பழமும்…ஒரு டீயும் குடிச்சேன் சார்…” என்றார்.
ஐம்பதின் வயதில் இருந்த அவர் முகம்….களைப்பையும்,பசியையும் காட்ட….”நீங்க வீட்டுக்கு போங்க….நான் வண்டியை எடுத்துட்டு போறேன்…காலையில் வந்திடுங்க…!” என்று அவரை அனுப்பி வைத்தான்.
வண்டியில் ஏறி அமர்ந்தவனுக்கு…கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.தலை பாரமாய் இருக்க….வழியில்… கடையில் …பார்சல் சாப்பாடு வாங்கியவன் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.
மாலை மங்கிய நேரம்…..ஜீப்பை வீட்டின் முன்னால் நிறுத்தியவன்….சாவி கொண்டு கதவைத் திறக்க போக….அது ஏற்கனவே திறந்து இருந்தது.
“கதவு திறந்திருக்கு…!” என்ற யோசனையில் உள்ளே செல்ல…ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.
அரவம் உணர்ந்து அவர் திரும்ப…கலைத்து,சோர்ந்து வரும் ரிஷியைக் கண்டவருக்கு…அவன் மேல் இருந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் போக…
“அப்பா…நீங்க எப்படி இங்க…?” என்றான் புரியாமல்.
“ஏன் எனக்குத் தெரியாதா….?இன்னொரு சாவி தான் என்கிட்டே இருந்ததே…! நானும் இதே டிப்பார்ட்மென்ட்ல இத்தனை வருஷம் இருந்தவன் தான் ரிஷி…” என்றார்.
வாங்கி வந்த சாப்பாட்டை…அங்கிருந்த டைனிங் டேபிளில் வைத்தவன்….தொப்பென்று தந்தையின் அருகில் அமர்ந்தான்.
அவனைப் பார்த்து மனம் தவித்தாலும் வெளியில் தெரியாதவாறு காட்டிக் கொண்டார் சுரேஷ்.
“சரி ரிஷி…நான் கிளம்புறேன்…! நீ வந்த உடனே கிளம்பலாம் என்று தான் இவ்வளவு நேரம் இருந்தேன்…” என்றார்.
“என்ன திடீர்ன்னு….இப்போ இருட்டிடும்…காலையில் போகலாமேப்பா…” என்றான்.
“இல்லை ரிஷி..எனக்காக என் மனைவி அங்க காத்திட்டு இருப்பா…நான் கிளம்புறேன்…” என்றார் பட்டும் படாமல்.
அதற்கு மேல் அவனால் வற்புறுத்த முடியாது.சொன்னாலும் அவர் கேட்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும்.
அதற்கு மேல் தாமதிக்காமல் அவர் கிளம்ப….தனது அறைக்கு சென்றவன்….குளித்து முடித்து….வந்தான்.
சாப்பிடுவதற்காக…..சாப்பாட்டைப் பார்க்க…அது அங்கே இல்லை.
“இங்க தானே வச்சேன்…?” என்று யோசித்தவனாய் நிற்க….
சமயலறையில் இருந்து ஒவ்வொரு பாதார்த்தமாய் கொண்டு வந்து அடுக்கினாள் அபிராமி.
முதலில் அவளை அங்கு பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.ஏதோ பிரம்மை என்று எண்ணியவன்….கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு பார்க்க….அபியே தான்.
அவளோ இவனை சட்டையே செய்யாமல்…தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்க….
“ஏய்….நீ எப்படி இங்க….? ஏன் வந்த….?” என்றான் கைமுஷ்டி இறுக.
அவள் பதில் பேசாமல் அமைதியாய் இருக்க….
“கேட்கிறேன்ல பதில் சொல்லு….எதுக்காக இங்க வந்த…ஏன் நான் நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா…? இன்னும் என்னவெல்லாம் நாடகம் போடலாம்ன்னு நினைச்சு வந்திருக்க…?” என்றான்.
“சாப்பிடுங்க…!” என்றாள்.
“ஏய்…நான் பேசிட்டே இருக்கேன்…சட்டை செய்யாதவ மாதிரி இருக்க…என்ன திமிரா….” என்றான்.
“வாங்க சாப்பிட….எனக்க ரொம்ப பசிக்குது….காலையில் சாப்பிட்டது…” என்றாள்…அவள் போக்கில்.
“நான் பேசிட்டே இருக்கேன்…என்னமோ கண்டுக்காதவ மாதிரி இருக்க…” என்று வாய் சொன்னாலும்…”அவள் எனக்கும் பசிக்குது” என்று சொன்னதைக் கேட்டு அவன் மனம் இறங்கத்தான் செய்தது.
இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாததால் அவன் வயிறும்..”நானும் இருக்கிறேன்….” என்று கெஞ்ச…
முகத்தை கடினமாய் வைத்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
ஒரு பெரிய கலவரத்தை எதிர்பார்த்தவளுக்கு அவன் அமைதியாக சாப்பிட அமரவும்…..ஒரு நிம்மதி மூச்சு வெளி வந்தது.
அமைதியாய் அவனுக்கு பரிமாறினாள்.அவனுக்கு இருந்த பசிக்கு….அவன் வேக வேகமாய் சாப்பிட….அதைப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.
“சாப்பிடாம இருந்திருப்பாரோ…?” என்று எண்ணியவளுக்கு….”எல்லாம் என்னால் தான்…” என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
“பசிக்குதுன்னு சொன்ன…நீயும் உட்கார்ந்து சாப்பிடு…” என்றான்.
மறுபேச்சின்றி…அவளும் அமர்ந்து சாப்பிட…..
பசியில் இருந்த ரிஷிக்கு….அவள் சமைத்த உணவு அமிர்தமாய் இறங்கியது.என்னதான் மனதில் கோபங்கள் இருந்தாலும்…அதை வெளிப்படுத்தாமல்…வயிறு முட்ட சாப்பிட்டான்.
தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும்…அவனுடைய தட்டிலேயே அவள் கவனமாய் இருந்தாள்.
திருப்தியாய் சாப்பிட்டு முடித்து எழுந்தவன்…அவளை கண்டு கொள்ளாது டிவி முன்பு அமர்ந்தான்.
அவளும் சாப்பிட்டு முடித்து விட்டு…அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு….வர….ரிஷி டிவியை விட்டு கண்ணை எடுக்கவேயில்லை.
அவனை நின்று ஒரு நிமிடம் பார்த்தவள்…அங்கிருந்த மற்றொரு அறைக்குள் செல்ல முயல….
“நில்லு…” என்றான் கடினமாய்.
“அவள் அதே இடத்தில் நிற்க…”
“எங்க வந்த….”
“??????”
“சொல்லு எதுக்காக இங்க வந்த…?” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாமல்.
“இதென்ன கேள்வி…நீங்க எங்க இருக்கிங்களோ…அங்க தானே நானும் இருக்கணும்…” என்றாள்.
“யாரைக் கேட்டு வந்த..?”
“யாரைக் கேட்கணும்…?”
“என்னைக் கேட்கணும்…இன்னும் என்ன பொய் சொல்லி என்னை ஏமாத்தலாம்ன்னு வந்திருக்க….” என்றான்
“ஏமாற்ற நீங்க என்ன குழந்தையா….?”
“நான் ஒரு ஆண்…அது பத்தலையா…உங்களுக்கு தான் அது கை வந்த கலையாச்சே…” என்றான்.
“எப்ப கிளம்புற…?”
“நான் ஏன் கிளம்பனும்…??” என்றாள்.
“கிளம்பித்தான் ஆகணும்….விடிஞ்ச உடனே கிளம்பிடு…” என்றான்.
“முடியாதுன்னு சொன்னா…?”
“என்னடி வாய் நீளுது…..! ஒன்னும் தெரியாதவ மாதிரி இருந்த…இப்ப பேச்சுக்கு பேச்சு பதில் பேசுற…?கொன்னுடுவேன்….ஜாக்கிரதை..!” என்றான்.
“சரி..” என்று உடனே முடித்துக் கொண்டாள்.
அதில் அவனுக்கு தான் என்னவோ போல் ஆகியது.மீண்டும் டிவியை வெறிக்கத் துவங்க…..அபி அங்கிருந்த அறைக்குள் சென்றாள்.
உள்ளே சென்றவளுக்கு ஆயாசமாய் இருந்தது.இப்பவே கண்ணைக் கட்டுதே…என்ற ரீதியில் இருந்தது அவளின் நிலை.
இந்த பத்து நாட்களில் ஆளே மாறியிருந்தான்.கண்ணம் ஒடுங்கிப் போய்….முகம் கலையிழந்து….பார்ப்பதற்கே ஒரு மாதிரி இருந்தான்.
இதமாய் ஒரு டம்ளர் பாலை ஆற்றி தரலாம் என்று எண்ணியவள்…வெளியே செல்ல…அங்கு அவனைக் காணவில்லை.
அருகில் இருந்த அறைக்குள் எட்டிப் பார்க்க….அங்கே கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.
“அதுக்குள்ள தூங்கிட்டாரா…?” என்று எண்ணியவள் அருகில் சென்று பார்க்க….நெற்றியை சுருக்கி…புருவ மத்தியில் விழுந்த முடிச்சுடுடன் தூங்கிக் கொண்டிருந்தான்.
வேகமாய் அங்கிருந்த தைல டப்பாவை எடுத்தவள்….அவன் தலையை தன் மடி மீது தாங்கி…இதமாய் தேய்த்து விட…..அந்த இதம் தந்த சுகத்தில்….ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் ரிஷி.
ஒரு வாரமாக உறங்கவில்லை என்பது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.
நிதர்சனமாய் தூங்கும் தன் கணவனையே விழியகலாமல் பார்த்தவள்….அவனின் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
அபிக்குதான் தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது.டிவியை ஆண் செய்தவள்…அதைப் பார்க்க…சிந்தனை மட்டும் எங்கு எங்கோ சென்று வந்தது.
இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் நம்ப….
அது எப்படி விடுவேன் என்று விதி கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது.
என் தேகம் தீண்டும் உன் விரல்…
இன்று கண்ணீர் துடைக்க இங்கில்லை…
என் துணைவனாய்…என் கனவில் அன்று…
என் சோகங்கள் மட்டும் துணையாய் இன்று…..