தென் பாண்டி மீனாள் 14 1 9988 தென் பாண்டி மீனாள் 14 பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது. கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். “நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா” என்று. “உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க” என்றார் தனபாலன். பானுமதியும், தயாளனும் பெரியவர்களின் பேச்சை ஆமோதித்தனர். “மீனா பொண்ணு” என்று பாட்டி பெண்ணுக்கருகில் சென்றார். அவள் ஒருமாதிரி விழித்திருக்க, “நாங்க கிளம்புறோம். பார்த்துக்கோ” என்றார். வேறெதுவும் பேசவில்லை. மற்றவர்களும் அவளிடம் தனியே சொல்லி கொள்ள, தலையசைப்பு மட்டும். பேச்சு வர வேண்டுமே! கடைசில என்னை மாட்டிவிடவா ஒட்டு மொத்த குடும்பமும் கிளம்பி வந்திருக்கீங்க? வில்வநாதன் மறையா புன்னகையுடன் அவளுக்கு தலையசைத்தான். கையெடுத்து கும்பிட்டு, ‘போய்ட்டு வா ராசா’ என்று விடுவாள். மற்றவர்களுக்காக பொறுத்து, அவளும் அதே தலையசைப்பை கொடுத்தாள். அறிவழகன் முறையை கடைபிபிடிக்கும் பொருட்டு, கார் வரை சென்று அவர்களை வழியனுப்பினார். வில்வநாதனை அப்போது தான் மனிதர் புதிதாகவும் பார்த்து வைத்தார். கண்ணுக்கு நிறைவாக நின்றான் அவன். முகம் கொஞ்சம் தெளிந்தது. அதை அவதானித்தபடி மொத்த குடும்பமும் அங்கிருந்து கிளம்பியது. அதன் பின்னான நேரத்தில் மாப்பிள்ளை, பெண்ணை வீட்டுக்கு அழைக்கும் நிகழ்வு. நல்ல நேரத்தில் செய்ய வேண்டியது என்பதால் எல்லாம் அதில் கவனத்தை வைத்தனர். அன்று மட்டுமில்லை, அந்த வாரம் முழுதும் நாட்கள் கொஞ்சம் வேகமாக சென்றது. குலதெய்வ கோவில் பூஜை, மறுவீடு, சம்மந்தி கலப்பு என்று தொடர்ந்து விஷேஷம். மறுவாரம் அரவிந்தன் மனைவியுடன் தேனிலவு கிளம்பினான். இவர்கள் வீடு பழைய நிலைக்கு திரும்பியது. வினய், மீனலோக்ஷ்னி மேற்படிப்பு முடிந்திருக்க, அடுத்து என்ன என்று கலந்தோலசிக்க வேண்டும். அறிவழகன், அவரின் தங்கை குடும்பம் ஒன்று கூடியது. “கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கு. இன்ன தேதில வேலைக்கு சேரணும்” என்று வினய் சொன்னான். அடுத்து மீனலோக்ஷ்னி. எல்லாம் பேச காத்திருந்தது அவளை பற்றி தானே? “மச்சான் என்ன முடிவெடுத்து இருக்கீங்க?” என்று அரவிந்தனின் அப்பா கேட்டார். “இதுல யோசிக்க என்ன இருக்கு? பெரிய குடும்பத்தை பத்தி நமக்கு தெரியாததா? கண்ணை மூடிக்கிட்டு கொடுக்கலாம். நம்ம பொண்ணு அங்க நல்லா இருப்பா” என்றார் அரவிந்தனின் அம்மா. அறிவழகன் அமைதியாக இருக்க, “என்ன அண்ணி. எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” என்று சுஜாதாவை கேட்டார் அவர். “எனக்கு உண்மையிலே வேணாம்ன்னு இல்லை அண்ணி. ஆனா என்னமோ கொஞ்சம் யோசனையா இருக்கு” என்றார் அவர். “அவங்க வசதியை பார்த்து யோசிக்கிறீங்களா?” “அதையும் சொல்லலாம் அண்ணி. நமக்கு சரியா கொடுத்தா அது வேற. நம்மை விட வசதி அதிகமா இருக்கிறது, அதுவும் இவங்க நம்மை விட, நூறு படியே மேல இருப்பாங்க. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றார் வெளிப்படையாக. “அவங்க என்னைக்கு அதை எல்லாம் பார்த்தாங்க அண்ணி. நம்ம பெரியப்பா நம்மளை மாதிரி சாதராண குடும்பம் தான். பானுவோட வீட்டுக்காரரும் அப்படி தானே?” “அது எனக்கும் புரியுது அண்ணி. ஆனா, ம்ப்ச் சொல்ல தெரியலை” என்றார். “என்ன மச்சான் நீங்களும் தங்கச்சி மாதிரி தான் யோசிக்கிறீங்களா?” என்று அறிவழகனிடம் கேட்டார் அரவிந்தனின் அப்பா. “எனக்கு அவங்களை தெரியும் மாமா. வசதியை வைச்சு அவங்களை வேணாம்ன்னு சொல்லவே முடியாது“ “அப்பறம் என்ன மச்சான்“ “நம்ம கைக்கு மீறி போற எல்லாமே நமக்கு பதட்டத்தை, பயத்தை கொடுக்கும். அப்படி தான் நானும் இருக்கேன்” என்றார் அறிவழகன். “ண்ணா. ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம். நம்மால முடிஞ்சதை நம்ம பொண்ணுக்கு நாம பண்ண தான் போறோம். உங்க சொத்து, பத்து எல்லாம் அவளுக்கு தான். பெரியம்மா நம்ம பொண்ணை கேட்கிறதும் அவளை மட்டும் மனசுல வைச்சுதான். நாமும் அப்படி தான் யோசிக்கணும்” என்றார் அவரின் தங்கை தெளிவாக. “ம்ம். புரியுதுமா” என்றார் அவர். “உடனே எல்லாம் முடிவெடுக்க முடியாது மச்சான். யோசிங்க. ஆனா எங்களுக்கு மீனா அங்க மருமகளா போனா ரொம்ப சந்தோஷம்” என்று அவர்கள் கிளம்பினர். “மாமா. வில்வநாதன் அண்ணா செம ஸ்மார்ட். அவரை விடவா மாப்பிள்ளையை தேட போறீங்க. மீனாக்கு சரியான ஜோடி அவர்” என்று வினய் சொல்ல, மீனலோக்ஷ்னி அவனை முறைத்து வைத்தாள். அறிவழகன் அவசரப்படவில்லை. நாள் சென்று யோசித்தார். இடையில் தயாளனை சந்தித்து பேசினார். நண்பர்கள் போன்ற பழக்கம் இருவருக்குள்ளும். அறிவழகன் குழப்பத்திற்கு, அவரின் தயக்கத்திற்கு எல்லாம் வெளிப்படையாக பதில் சொன்னார். “பானுவோட என் விஷயம் வேற. உனக்கும் தெரிஞ்சிருக்கும். என் மகனுக்கு அதுல கோவம் இருக்கு. அதை நான் மறைக்க மாட்டேன். ஆனா அதனால மீனா பொண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதை நான் உறுதியா சொல்லுவேன்” என்றார். அறிவழகன் மனைவியுடன் பேசி, நிலையான, நல்ல முடிவை எடுத்தார். அன்றிரவு மகளிடம் பேசினார். இத்தனை நாள் ஒளிந்திருந்த பூதம், அவளின் கண்ணுக்கு முன் நின்றது. முதல் முறை பெரிய குடும்பம் சம்மந்தம் பற்றி மகளிடம் கேட்டார். ” பாப்பா. பெரியம்மா மண்டபத்துல வைச்சு உன்னை கேட்டது தெரியும் இல்லை. நீ என்ன சொல்றமா?” என்று கேட்டார். மீனலோக்ஷ்னி அமைதியாக இருக்க, “என்ன பாப்பா. எதுவா இருந்தாலும் பேசு. எங்ககிட்ட சொல்லு ராசாத்தி” என்றார். ஒற்றை மகள், மூவருமாக சிறு கூடு! அவர்களின் எல்லாம் அவள் தான்! இத்தனை வருடங்களில், அரவிந்தனுடன் அவசர கல்யாணம் செய்ய நினைத்தது தவிர, வேறெதிலும் அவளை கட்டாயப் படுத்தியதில்லை. இப்போதும் அப்படி தான். அவளின் விருப்பம் வேண்டும். ஆனால் மகளோ சுஜாதாவின் கைகளை வழக்கம் போல் பற்றி கொண்டாள். அதிலே அவள் பதட்டம் கொள்கிறாள் என்று புரிந்து கொண்டனர். ஒருவேளை மகளுக்கு இதில் விருப்பமில்லையோ? சட்டென அவர்கள் முகம் வாடிப்போனது. பணத்தில், வசதியில் யோசித்ததை விட, அங்கு என் மகள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்பதில் கொள்ளை நம்பிக்கை. ஆனால் மகள் மறுத்தால் என்ன செய்வது என்று முகம் பார்த்து கொண்டனர். மீனலோக்ஷ்னிக்கு அவர்களின் வாட்டம் மனதை தைத்தது. அப்பாம்மாக்கு சம்மதமா? பிறந்த நேரம் அவளின் அழகில் மகிழ்ந்தவர்கள், பின்னாளில் அதனால் ஏகப்பட்ட இன்னல்களை அனுபவித்துவிட்டார்கள். ஆனால் ஒரு போதும் அவளை ஒரு வார்த்தை அவர்கள் பேசியதில்லை. மகள் மேல் எக்கச்சக்க அன்பு மட்டுமில்லை. கடலளவு நம்பிக்கையும் கூட. அப்படி இருக்க, எடுத்ததும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல வார்த்தை வரவில்லை. “நான், நான் யோசிச்சு சொல்லவாப்பா” என்றாள். “சரிமா, சரி ராசாத்தி. யோசி. பொறுமையா யோசிச்சு சொல்லு” என்றார் தந்தை சட்டென மகிழ்ந்து. சுஜாதா மகளை சந்தேகமாக பார்த்தவர், “உனக்கு வேணாம்ன்னா வேணாம் தான் மீனா. எதுவா இருந்தாலும் உண்மையை சொல்லணும்” என்றார். “சரிங்கம்மா” என்று மகள் கேட்டுக்கொண்டாள். இவள் மறுக்கவில்லை. நேரம் கேட்கிறாள் என்பது எல்லோருக்கும் பரவியது. வில்வநாதன் புன்னகைத்து கொண்டான். “அப்பாம்மா பாசத்துல மேடம் வழுக்கிறாங்க போல” என்றான் பாட்டியிடம். “சும்மா இரு ராஜா. அவ யோசிக்கட்டும் இப்போ என்ன? நீயா எதுவும் சொல்லாத” என்றார் கஜலக்ஷ்மி. “இருக்கிறதை சொன்னா யார் நம்புறீங்க?” என்று தோள் குலுக்கி சென்றான். “ஏங்க ஒருவேளை ராஜா சொல்றது உண்மையா இருக்குமா? மீனா பொண்ணு வேணாம் சொல்லிடுவாளா?” என்று கஜலக்ஷ்மி கணவரிடம் கேட்டார். “ராசா சொல்றதை எல்லாம் மனசுல ஏத்திக்காத லட்சுமி. அவனே முதல்ல கல்யாணத்துக்கு தயாரா இல்லை. அதனால தான் நம்மளை குழப்புறான்” என்றார் தனபாலன். “ஆமாம்மா. அப்பா சொல்றது சரி. அவனுக்கு ஒரு நம்பிக்கை, மீனலோக்ஷ்னி வேணாம்ன்னு சொல்லிடுவான்னு. அதனால தான் நம்மளை தைரியமா பொண்ணு கேட்க சொன்னது” என்றார் பானுமதி. “இருக்கும். ஆனா மீனா பொண்ணு ஏன் வேணாம்ன்னு சொல்ல போறா? அவளுக்கு நம்மை பிடிக்கும் தானே” என்றார் பாட்டி. “பிடிக்கிறதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இல்லை லட்சுமி. ஆனா பொறுப்போம், நீ பேத்திகிட்ட பேச நினைக்காத. அவ முடிவை அவ எடுக்கட்டும்” என்றார் தனபாலன். “எஸ்மா. நம்ம வீட்டு மருமகளா வரணுங்கிறது அவளோட முழு விருப்பமா தான் இருக்கணும்” என்றார் பானுமதியும். கஜலக்ஷ்மிக்கும் அந்த எண்ணம் தான் என்பதால், யாரும் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. ஆனால் மீனலோக்ஷ்னிக்கு அப்படி இருக்க முடியாது. அவள் பேசித்தான் ஆக வேண்டும். அதுவும் வில்வநாதனிடம். அப்பாவிடம் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லியாகிவிட்டது. நாட்களும் நின்று போகாதே. எல்லாம் சாதாரணமாக இருக்க, இவளுக்கு தான் கடுப்பு. என்னை ஏண்டா மாட்டி விடுறீங்க? ஆயிரம் பொண்ணு இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸி? என்ற கேள்வியுடன் சுற்றி கொண்டிருக்கிறாள். ஒரு நாளிரவு போன் எடுத்துவிட்டாள். இனியும் தனியா குழப்பிக்க கூடாது. வில்வநாதனுக்கு அழைத்தாள். ‘ரொம்ப சீக்கிரம் கூப்பிடுறாங்க மேடம்‘ “நான் கூப்பிடுறேன்” என்று மெசேஜ் அனுப்பினான் அவன். இரவு உணவு முடித்து படுக்கவும் வந்தாகவிட்டது. இன்னமும் அழைக்கவில்லை. ‘போயா‘ என்று பெண் தூக்கத்திற்கு செல்லும் நேரம், சரியாக அழைத்தான் வில்வநாதன். மீனலோக்ஷ்னிக்கு உர்ரென வந்தது. பேசித்தான் ஆக வேண்டும். மூச்சிழுத்து விட்டு, அழைப்பை ஏற்றாள். “சொல்லுங்க பாண்டி நாட்டு மீனம்மா” என்றான்.