பூவே என்னை தள்ளாதிரு – 15

‘என்ன பேசிட்டு இருக்க சித்..?’ என்று அவனது மனமே அவனை எச்சரிக்கை செய்ய,

“ஷிட்..!” என்று தன்னை தானே கடிந்துகொண்டான்.

பூங்கொடியோ, வார்த்தைகள் உபயோகிக்காது பார்வையால் அவனிடம் வினாவெழுப்பி நிற்க “என்ன கொடி?” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

ஆனால் அவளா கண்டுகொள்ளாமல் இருப்பாள்?!

ஏதேனும் சந்தர்ப்பம் வாய்க்காதா என்றுதானே இருக்கிறாள். இப்போது நொடியில் அவனிடம் வந்துபோன தடுமாற்றங்கள் எல்லாம் அவள் கண்ணில் படாமல் இருக்குமா என்ன?!

“ஒன்னுமில்லையே…” என்று அவள் வாய் சொன்னாலும், கண்கள் சந்தேகத்தைக் காட்ட,

“அது.. இந்த லவ்னு வந்துட்டாலே தைரியம் இருக்கிற அளவு எல்லாருக்கும் கோழைத்தனுமும் வந்துடுது இல்லையா.. சிலர் துணிந்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க. ஆனா சிலர் உயிரை விடுறாங்க. அதனால கோபமா சொல்லிட்டேன்…” என்று நிதானமாய் தங்கு தடையின்றி பேசி சமாளிக்க,

“அப்படியா?!” என்றாள் அப்போதும் நம்பாத குரலில்.

“உண்மைதானே.. ஒரு உயிரை காப்பாத்த நாங்க எத்தனை போராடுறோம். ஆனா பாரு, விரும்பினவங்க  கிடைக்கலன்னா இப்போ கொலை கூட பண்றாங்க. இல்லையா தன்னை தானே ஏதாவது பண்ணிடுறாங்க. நாடு அப்படித்தானே போயிட்டு இருக்கு. ஹாஸ்பிட்டல்ல எத்தனை கேஸ் பாக்குறோம் இப்படி…” என்று அவன் தீவிரமாய் சொல்லவும், பூங்கொடி கொஞ்சம் நம்பித்தான்விட்டால்.

‘ஆமால்ல.. இவர் சொல்றதும் சரிதான்…’ என்று எண்ண, அவளது முகத்தில் தோன்றிய சிறு மாற்றத்தையும் தனக்கு சாதகமாய் மாற்றிக்கொண்டான் மருத்துவன்.

“நாளன்னைக்கு போனதுமே ஒரு ஆப்ரேசன் இருக்கு…” என்று மேலும் அவனது மருத்துவம் சார்ந்த விசயங்களை பேச, அவளோ முன்னது மறந்து அவனது வாய் பார்த்துக்கொண்டே துணிகளை அடுக்க

‘அப்பாடி…’ என்று நிம்மதி மூச்சு விட்டான் சித்தார்த்.

நேரம் இப்படியே சென்றிட, அன்று இரவு அனைவரும் உறங்கச் செல்ல தமயந்தியோ “சித்து, ஆர்யன் எங்களோட தூக்கங்கட்டும்…” என்று பேரனை தூக்கிக்கொண்டார்.

“ஏன் ம்மா?!” என்று சித்தார்த் கேட்க,

“இருக்கட்டும் டா.. நாங்க கிளம்பிட்டா நீங்க ரெண்டு பேருமா தானே பார்த்துக்கணும்… அதுவரைக்கும் எங்களோட இருக்கட்டும். அதுமில்லாம ஊருக்கு போயிட்டா நான் ரொம்ப ஆர்யனை மிஸ் பண்ணுவேன்…” என,

“ம்ம் இன்னிக்கு நல்லா தூங்கி எந்திரிங்கம்மா.. நாளைக்கு பார்க்கலாம்…” என்று அப்போதும் சொல்ல,

“இல்ல சித்து. நாங்க கிளம்புற வரைக்கும் ஆர்யன் எங்களோடதான்…” என்று அழுத்தம் திருத்தமாய் தமயந்தி கூறிட, தாயின் பார்வையே அவனுக்கு பல விசயங்களை சொல்லிட,

“ம்ம்…” என்று தோள்களை குலுக்கிவிட்டு “குட் ஆர்யா… பாட்டீஸ் கூட தூங்க போறியா நீ?” என்று மகனிடம் செல்லம் கொஞ்சி கேட்க,

அவனோ இதெல்லாம் பழக்கம் தானே என்பதால் “ம்ம்…” என்று தலையை ஆட்டினான்.

“சரி சமத்தா தூங்கிக்கோ…” என்று இரு கன்னத்திலும் முத்தமிட்டு, “குட் நைட் ம்மா…” என்றுசொல்லி  சென்றுவிட்டான்.

அங்கே தவமணியோ மகளுக்கு அறிவுரைகளை அருவிபோல் கொட்டிக்கொண்டு இருந்தார்.

“பூவு… மாப்பிள்ளை ஒன்னும் நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை. நல்ல குணமா இருக்கார். எனக்குமே மனசுல ஒரு சின்ன உறுத்தல் இருந்தது, உன்னை ரெண்டாவதா குடுக்கிறோமேன்னு. ஆனா இப்போ அதெல்லாம் சுத்தமா இல்லை. அவரை புரிஞ்சு நல்லபடியா வாழ ஆரம்பி…” என,

“ம்மா..!” என்று அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன பாக்குற? அவர் குணம், பேச்சு, நடத்தை எதுலயுமே பொய், பகட்டு இதெல்லாம் இல்லை. நல்லவிதமா யோசிச்சா எல்லாம் நல்லபடியா தான் இருக்கும். நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்…” என்றவர் மகளின் கன்னம் தட்டிவிட்டு உறங்கச் செல்ல, சித்தார்த் ஆர்யனோடு வருவான் என்று அவன் படுக்க வசதி செய்தவள், சித்தார்த் மட்டும் வருவதைக் கண்டு,

“குட்டி எங்க?” என்றாள்.

“அம்மா அவனை அங்க தூங்க வைக்கிறேன் சொல்லிட்டாங்க…”     

“ஏன்?!” என்று கட்டிலை விட்டு வேகமாய் எழ,

“ஏன்னு கேட்டா நான் என்ன சொல்றது? அவங்க சென்னை போயிட்டா ஆர்யனை  ரொம்ப மிஸ்  பண்ணுவாங்களாம். அதனால அவங்க ஊருக்கு போறதுவரைக்கும் அங்கதான்னு சொல்லிட்டாங்க…” என, பூங்கொடிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

‘டாக்டரோட தனியா படுக்குறதா?’ என்று யோசிக்க, சித்தார்த்தோ உடை மாற்றி வந்தவன் “என்ன முழிச்சிட்டு இருக்க?” என்றான்.

“ஒ.. ஒண்ணுமில்ல…” என்றவளுக்கு இதயம் தாறுமாறாய் துடிக்க,

“படு கொடி…” என்றவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல் படுத்துவிட ‘என்ன ஒன்னும் பேசாம படுக்குறாரு…’ என்று அவனையே பார்த்தவள், மெல்ல தலை சாய,

“என்ன மனசுல ஓடுது…” என்றான் சித்தார்த்.

திடுக்கிட்டு, அவன்பக்கம் திரும்பினாலும், அவனது குரலே அவனது உல்லாச நிலையை சொல்ல “எதுவும் ஓடல…” என்றாள் கடுப்பாய்.

“இல்ல நீ என்னவோ எதிர்பார்க்கிற மாதிரி இருக்கே…” என்றவன், அவளை நெருங்கி வந்து படுக்க,

“ம்ம்ச் அதெல்லாம் இல்லை…” என்றவள், திரும்பிக்கொள்ள,

“ம்ம் இது இன்னும் நல்லது.. குளிர் வேற பாரு…” என்றவன், அவளை பின்னிருந்து அணைக்க,

“எ.. என்ன பண்றீங்க?!” என்றாள் பதறி.

“என்ன பண்ணிட்டேன்?!” என்று அவன் ஒன்றும் அறியாதவன் போல முழிக்க,

“நீ.. நீங்க தள்ளி படுங்க…” என்றாள் வேகமாய்.

“இது ஓகே வா…” என்றவன், மேலும் அவளை ஒட்டிப் படுக்க,

“ம்ம்ச் இங்க இல்ல. அந்தபக்கம் தள்ளி படுங்க…” என,

“ஏன்?” என்றான் ஒற்றைக் கேள்வியாய்.

“ஏன்னு கேட்டா என்னர்த்தம்? தள்ளி படுங்க…” என்றவள், தானே தள்ளிக்கொண்டு படுக்க,

“காரணம் சொல்லு. பிடிக்கலையா என்ன?” என்றவனின் குரல் மாற, அதுவேறு அவளது மனதை மாற்றச் செய்தது.

‘பிடிக்கலைன்னு சொல்லிடு பூங்கொடி…’ என்று அவள் யோசிக்க ‘அதெப்படி பிடிக்காமத்தான் கல்யாணம் பண்ணியான்னு கேட்டா என்ன சொல்லுவ?’ என்று அவளது மனம் கேள்வி எழுப்ப,

‘பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா?!’ என்று எண்ணினாள்.

அவள் உள்ளம் அறிந்த உண்மைதானே அது. சித்தார்த்தை பிடித்து இருக்கிறதே. என்ன செய்வது?! வீணாய் ஒரு வீம்பு பிடிவாதம். அவளே பிடித்துக்கொண்டது. இப்போது தனிமை கிட்ட, கணவனாய் நெருங்கும்போது அவள் எப்படி வேண்டாம் என்பாள்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் “என்னை பிடிக்கலையா கொடி?” என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.

அந்த குரல் நிச்சயம் அவளை தடுமாறச் செய்ய “ம்ம்ச் ஏன் இப்படி பேசுறீங்க?” என்றாள் அவளோ ஆறுதல் மொழியாய்.

“பின்ன லேசா ஒட்டி படுத்ததுக்கே இப்படி எரிஞ்சு பேசுற நீ…”

“அப்படில்லாம் இல்லை…” என்றாள் வேகமாய்.

“ம்ம் பின்ன எப்படி?” என்று கேட்டபடி அவளை தன்புறம் திருப்ப, நைட் லேம்பின் வெளிச்சத்தில், அவளது முகம் அத்தனை அழகாய் அவன் கண்களுக்குத் தெரிய, பூங்கொடிக்கோ இதயத்தின் ஓசை செவிகளில் அப்பட்டமாய் கேட்க,

“இல்ல.. அது.. அது…” என்று இழுத்தாள்.

என்ன சொல்ல என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சொல்வதற்கு ஏதேனும் இருந்தால் தானே சொல்ல?!

“ம்ம் பின்ன…” என்றவன், மெதுவாய் அவள் கேசம் விளக்கி, முகத்தை ஆராய,

“அது.. நீங்க  சொன்னீங்க தானே. என் மனசு முழுசா உங்களை ஏத்துக்கிற வரைக்கும்னு…” என்று இழுக்க,

“ம்ம் இப்போவும் அந்த வார்த்தைகள்ல எந்த மாற்றமும் இல்லையே…” என்றான் வெகு இலகுவாய்.

“பின்ன இப்படி எல்லாம் பண்ணா என்ன அர்த்தம்?!” என்றாள் வேகமாய்.

“நான் எல்லை மீறி எதுவும் பண்ணலையே…” என்றான் குறும்பாய்.

“அதுசரி…” என்று முகத்தை சுறுக்கியவள் “எனக்கு ஒருமாதிரி இருக்கு டாக்டரே…” என்றாள்.

“அஹா..!!” என்றவன் “சரி அத்தான்னு சொல்லு நான் ஒன்னும் பண்ணமாட்டேன்…” என,

“போச்சுடா… ஆரம்பிச்சுட்டீங்களா?!” என்றவள் “முடியாது…” என்று கெத்தாய் சொல்ல,

“அப்போ நானும் சும்மா இருக்க முடியாது…” என்றவன், இறுக அணைக்க, பூங்கொடியோ கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“ப்ளீஸ்…” என்று அவளது இதழ்கள் முணுமுணுத்தாலும், அவளது உடல்மொழி அவனுக்கு வேறு கதை சொல்ல,

“பொய் சொல்ற வாய்க்கு என்ன தண்டனை கொடுக்கலாம் கொடி…” என்றான் சித்தார்த்.

அவளோ பதிலேதும் சொல்லாமல், அடுத்து என்ன செய்யப்போகிறானோ என்ற ஒருவித எதிர்பார்ப்பிலும், படபடப்பிலும் இருக்க “சொல்லு டி…” என்றான் அவளது இடை இன்னும் அழுத்தி.

வழியில் கண்களை மேலும் இறுக மூட “நான்.. நான் என்ன பொய் சொன்னேன்?!” என்றாள் மெல்ல.

“பிடிக்கலைன்னு வாய்தானே சொல்லுது…” என,

‘நான் எங்க பிடிக்கலைன்னு சொன்னேன்?’ என்று அவள் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டாலும், வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.

“சரி இப்பவும் சொல்றேன். அத்தான்னு சொல்லிட்டா நான் ஒன்னும் பண்ணமாட்டேன்…” என,

“நீங்க போட்ட டீல் மறந்து பேசுறீங்க டாக்டரே…” என்றாள் வேகமாய் விழி திறந்து.

“என்னது?!” என்று சித்தார்த் கண்கள் சுறுக்கி கேட்க,

“உங்க சுண்டு விரல் கூட என் மேல படாதுன்னு சொன்னீங்க.. இப்போ அப்படியா இருக்கீங்க…” என்று நெளிந்தபடி கேட்க,

“ஓ!” என்று உதடு குவித்தவன் “நீ ரொம்ப தெளிவா இருக்க…” என்று கைகளை விளக்க, சரியாய் அவர்களை அறை கதவும் தட்டப்பட்டது.

“ஆர்யன் தூங்கல போல…” என்று சித்தார்த் சொல்ல, பூங்கொடி இதுதான் வாய்ப்பென்று எண்ணி வேகமாய் கதவினை திறக்க,

“ப்பூ…” என்றுசொல்லி வேகமாய் அவளிடம் தாவிக்கொண்டான்.

“படுக்கவே இல்லை. படுக்க வைச்சா அழுகை. ப்பூ ப்பூ அப்படின்னு…” என்று சங்கடமாய் தமயந்தி சொல்ல,

“வாடா எங்க ‘சிங்க குட்டி…” என்று அவனது முகத்தில் முத்தம் வைத்துக் கொஞ்சியவள் “அதுனால என்ன?” என்றாள் சிரித்தபடி.

“ம்ம் தூங்க வைம்மா.. வந்து தூக்கிட்டு போறேன்…” என்று மேலும் சொல்ல,

“இல்ல அத்தை இருக்கட்டும். அவனா அங்க வர்றேன்னு சொன்னா தூக்கிட்டு வர்றேன்…” என்றவள், ஆர்யனை தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு வர, சித்தார்த்தோ “என்னடா?!” என்றான் மகனிடம் குறும்பாய்.

“ப்பூ…” என்று அவளை கை காட்ட,

“உனக்கும் பூ வாசம் இல்லாம தூக்கம் வரலையா மகனே…” என்றவன் சிறுவனை கொஞ்ச,

“ஷ்.. என்ன பேச்சு?!” என்றாள் செல்லமாய் கடிந்து.

“என்ன பேசிட்டேன்…” என்றவன் “நீ நடுவில படு…” என்று அவளிடம் சொல்ல,

“நானா?!” என்றாள் வேகமாய்.

“ம்ம் நீதான்…” என்றவன் “ஆர்யா நீ ப்பூ கிட்டயா அப்பாக்கிட்டயா?” என்று கேட்க,

“ப்பூ…” என்று சொல்ல,

“பார்த்தியா?!” என்று அவளைப் பார்த்து சிரித்தவன், பூங்கொடியை நடுவில் படுக்கச் சொல்லி, இருப்பக்கமும் அப்பா மகன் இருவரும் படுத்துக்கொள்ள, பூங்கொடிக்கு இது வேறுமாதிரி ஒரு உணர்வைக் கொடுப்பதாய் இருந்தது.

என்னவோ ஒரு சந்தோசம் வந்து ஒட்டிக்கொள்ள “என் தங்கத்துக்கு தூக்கம் வரலையா?” என்று சிறுவனோடு பேச,

அவனோ படுத்துறங்காமல், அவள் மீது ஏறிப்படுக்க,

“டேய் என்னடா நீ?” என்றாள் பூங்கொடி.

சிறுவனுக்கு விளையாட்டு எண்ணம் போல. உறங்காமல் விளையாடிக்கொண்டு இருக்க, இருவரையும் அவன் உறங்கவே விடவில்லை. வேறுவழியில்லாமல் பெரியவர்கள் இருவரும் எழுந்தமர்ந்து அவனோடு விளையாடி, அவனை உறங்கச் செய்ய போதும் போதும் என்றாகிவிட, அப்போதும் அப்பா மகன் இருவருக்கும் இடையில் தான் பூங்கொடி உறங்கினாள்.

அவள் சிறுவனை கட்டிக்கொண்டு உறங்க, சித்தார்த் அவளை கட்டிக்கொண்டு உறங்க, மனது இருவருக்குமே ஒருவித இதமாய் உணர,

“ஹேய் கொடி…” என்றான் மெல்ல சித்தார்த்..

“ம்ம்…” என்று திரும்பாமலே சொல்ல,

“ஒரே ஒரு கிஸ்… ம்ம்…” என்று அவளிடம் ஒப்புதல் கேட்பதுபோல் கேட்க,

“ம்ம்ச் படுங்க பேசாம…” என்றாள் பட்டென்று.

“போ டி உன்கிட்ட கேட்டேன் பாரு…” என்றவன் அவளது பின்னங்கழுத்தில் வேகமாய் இதழ் பதிக்க,

“அச்சோ… என்ன பண்றீங்க நீங்க…” என்று வேகமாய் அவன்பக்கம் திரும்ப,

“சும்மா…” என்றவன் “குட் நைட்…” சொல்லி, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்ள, அவளுக்குத்தான் வெகுநேரம் தேகம் கூசிக்கொண்டு இருந்தது.