நதியின் ஜதி ஒன்றே! 11 11906 நதியின் ஜதி ஒன்றே 11 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தாரணி குடும்பம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. கல்யாண் மதிய உணவை பேக் செய்தவன், மகளின் வருகையில் அவளிடம் சென்றான். தாரணி தங்களின் மூன்று வயது மகள், ‘ஜியா‘வை குளிக்க வைத்து கணவனிடம் கொடுத்தாள். “நீ கிளம்பிடு. நான் பாப்பாவை பார்த்துகிறேன்” என்ற கல்யாண், மகளுக்கு உடை அணிவித்து, உண்ண கொடுத்தான். “இந்த ஜீவி போனே எடுக்க மாட்டேங்கிறாங்க” தாரணி தங்கையை அழைத்து கொண்டே வந்தாள். “இன்னைக்கு தானே பர்ஸ்ட் டே ஆபிஸ். கோவில் போயிருப்பா” கல்யாண் சொல்ல, “போன் எடுத்தா என்ன? வர வர அவளோட எனக்கு முடியல. ரொம்ப பண்றா” என்றாள் தாரணி கோவமாக. “என் ஜுனியரை திட்ட கூடாது” கல்யாண் சொல்ல, “ஆமா ஜீவி ஸ்வீட்” என்றாள் மகளும் மழலை மொழியில். “அவளை திட்ட எல்லாம் கூடாது தான். நல்லா இரண்டு கொடுக்கணும். நம்ம வீட்டை வைச்சுக்கிட்டு PGல போய் தங்குறா. நீங்களும் அவளை ஏன்னு கேட்காம PG பிடிச்சு கொடுக்கிறீங்க” என்று கணவனிடம் சண்டைக்கு நின்றாள். “அவ ஒரே பிடியா நிக்கும் போது என்னை என்ன பண்ண சொல்ற தாரு” “எடுத்துக்கெல்லாம் பிடிவாதம் தான் பிடிக்கிறா. அம்மாகிட்ட வேற அப்பா கோவப்பட்டிருக்கார்“ “உன் அப்பா கோவப்படலைன்னா தான் அதிசயம். சரியான முள்ளு மனுசன்“ “என் அப்பாவை பேசுனீங்க அவ்வளவு தான் பார்த்துக்கோங்க” தாரணி எகிற, “ஜீவி போன் எடுக்கலைன்னு என்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கிற நேரத்துக்கு அவ ஆபிஸ் போலாம் இல்லை” என்றான் கல்யாண். “ஆமா இல்லை. நான் இதோ வந்துடுறேன். பாப்பாவை ஸ்கூல்ல விட்டு நாம போலாம்” தாரணி அறைக்குள் ஓட, “எப்படி உன் அம்மாவை சமாளிச்சேன் பார்த்தியா பேபி” என்று கல்யாண் மகளின் நெற்றியில் முத்தம் வைத்து சிரித்தான். முதலில் மகளை பள்ளியில் விட்டு, ஜீவிதாவின் அலுவலகம் சென்றனர். இன்று தான் அவளின் முதல் நாள். இன்னும் பெண் வரவில்லை. “நீங்க போன் பண்ணுங்க” என்றாள் தாரணி. “எடுக்க மாட்டா” கல்யாண் சொல்ல, “நம்பிட்டேன். பண்ணுங்க” என்றாள் தாரணி. கல்யாண் போன் எடுத்தும் அவளுக்கு உடனே அழைத்து விடவில்லை. “கூப்பிடுங்க. நேரம் ஆச்சு. இன்னும் வராம என்ன பண்ணிட்டு இருக்கா. தெரியாத ஊர் வேற“ “சின்ன பொண்ணா அவ? அதெல்லாம் வந்திடுவா“ “நீங்க ஏன் கூப்பிட மாட்டேங்கிறீங்க?” தாரணி சந்தேகமாக கேட்டாள். கல்யாண் கேட்டை பார்க்க, “அவ இப்போ எல்லாம் என்னை, அஜயை தேடுறதே இல்லை. உங்ககிட்ட தான் பேசுறா, வைக்கிறா” தாரணி குறையாக சொன்னாள். “இதோ ஜீவி வந்துட்டா” கல்யாண் சொல்ல, பெண் ஆட்டோவில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். இருவரையும் பார்த்தவள், “பாப்பா எங்க?” என்று தான் கேட்டாள். தாரணி பதில் சொல்லாமல் தங்கையை முறைக்க, “ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டோம் ஜீவிமா” என்றான் கல்யாண். “இன்னைக்கு ஒரு நாள் என் செல்லத்துக்கு லீவ் விட்டிருந்தா என்னவாம்?” ஜீவிதா ஆதங்கம் கொண்டாள். “ஏண்டி என் போனை எடுக்கலை?” அக்கா கேட்க, “போன் சைலன்ட்ல இருந்தது. சரி. எனக்கு நேரம் ஆச்சு” என்று அக்காவை அணைத்து கொண்டாள். “ஆல் தி பெஸ்ட் ஜீவிம்மா” கல்யாண் அவள் கை பிடித்து குலுக்கினான். தாரணி போன் ஒலிக்க, “அஜய்” என்று எடுத்தாள். “இங்க தான் இருக்கா. சரி சொல்லிடுறேன்” என்று வைத்தவள், “உனக்கு விஷ் பண்ணான்” என்றாள் தங்கையை முறைத்து. “நான் கிளம்புறேன்” ஜீவிதா நடந்துவிட்டாள். “பெஸ்ட் விஷஸ்” தாரணி கத்தி சொல்ல, ஜீவிதா நடந்தபடியே தம்ஸ் அப் காட்டி சென்றாள். தாரணி நிமிடம் அங்கேயே நிற்க, கல்யாண் அவள் தோளில் கை வைத்தவன், “நமக்கு நேரம் ஆச்சு” என்று கிளப்பி கொண்டு சென்றான். இருவரும் அதே அலுவலகத்தில் தான் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். வருடங்கள் ஓடிவிட்டது. ஜீவிதா இளங்கலை முடித்து வேலைக்கும் வந்துவிட்டாள். பலராம் சின்ன மகளுக்கும் அதே அலுவலகத்தில் வேலை தயாராக தான் வைத்திருந்தார். ஜீவிதாவோ அங்கே செல்ல மாட்டேன் என்று வேறு கம்பெனிக்கு செலக்ட் ஆகிவிட்டாள். “நான் சொல்ற கம்பெனி தான் போகணும். இல்லை அவ வேலைக்கே போக வேண்டாம்” என்று பலராம் மனைவியிடம் கத்த, மகளோ நாள் கணக்கில் உண்ணாமல், யாரிடமும் பேசாமல் அமைதியாகவே நின்று காரியம் சாதித்து கொண்டாள். “எல்லாம் உன் இஷ்டமே இல்லை. இந்த ஒரு முறை உன் அம்மா கேட்டுக்கிட்டான்னு விடுறேன். அடுத்த முறை எல்லாம் என் முடிவு தான் பார்த்துக்கோ” என்றார் மகளிடம். ஜீவிதாவிடம் பதிலே இல்லை. கல்பனா மகளை சென்னை விட தயாராக, “வேண்டாம்மா. மாமா பார்த்துப்பார்” என்று மறுத்துவிட்டாள். அதில் தந்தைக்கு இன்னும் ஏறிவிட்டது. “நாங்க விட கூட வர கூடாதா? வர மாட்டோம். நீயே பார்த்துக்கோ” என்றுவிட்டவர், “எல்லாம் என்னை சொல்லணும். உன் பெரிய பொண்ணை பார்த்து தான் இவளும் நடந்துகிறா. மூணாவது மனுஷங்களை நம்பி உள்ள விட்டதுக்கு சின்னது கூட என்னை மதிக்க மாட்டேங்கிது. அந்த அஜய் எல்லாம் ஒரு ஆளுன்னு“ “ம்மா. நான் ஷாப்பிங் போறேன்” என்று நொடி கூட நில்லாமல் அப்படியே கிளம்பிவிட்டாள் மகள். “அவனை பத்தி பேசினாலே இவளுக்கு என்ன வந்தது? அப்படியே பேச்சை நிறுத்துறா. கவனமா இருந்துக்க சொல்லு” தந்தையின் குரல் பின்னால் கேட்க தான் செய்தது. முன் மாலை வரை ஷாப்பிங் என்று வெளியே இருந்துவிட்டு, சரியாக இரவு உணவை முடித்து அறைக்குள் அடங்கி கொண்டாள். மறுநாள் அதிகாலையிலே ட்ரெயின் பிடித்து சென்னைக்கும் வந்துவிட்டாள். கல்யாண் ஸ்டேஷன் வர, நேரே PG சென்று உடமை எல்லாம் வைத்து தான் அக்கா வீடு வந்தாள். தாரணிக்கு அவளின் இச்செயல் அதிர்ச்சியுடன் கோவமும். கணவனும் சொல்லவில்லை. பலராம்க்கு தெரிந்து இன்னும் குதித்தார் மனிதர். “தனியா தங்க வேண்டாம். தாரணி வீட்ல தங்க சொல்லி தானே அனுப்பினோம். அப்படியும் தனியா போறான்னு யார் கொடுக்கிற தைரியம் இது?” என்று பேச, கல்பனா தான் இருவருக்கும் இடையில் மாட்டி கொண்டு திணறினார். “அவ இப்போவே ரூமை காலி பண்ணிட்டு தாரணி வீட்டுக்கு போயாகணும். இல்லை நான் வேலைக்கே விட மாட்டேன். இந்தா கார் எடுக்கிறேன் பாரு” என்று கிளம்பவே செய்ய, கல்யாண் தான் மாமனாருக்கு போன் செய்து பேசினான். கடந்த வருடங்களில் அவருக்கு பெரிய மருமகன் மேல் இருந்த அபிப்ராரயம் மாறி போயிருந்தது. மரியாதையும் வந்திருந்தது. பெரிய மகளை கல்யாண் தாங்கும் விதமும், சேனாதிபதியின் அடாவடியான அன்பான உறவையும் ஏற்க ஆரம்பித்திருந்தார். ஒரே ஊர் என்பதோடு இன்னாரின் சம்மந்தி என்பது அவருக்கு எக்கச்சக்க மதிப்பையும் கொடுத்தது. அவரின் பிளான்டிலே சில முறை இவரின் மூலம் உள்ளூர் ஆட்களிடம் பேசினர். அடுத்து வர போகும் பெரிய பதவிக்கு பலராம் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார். எல்லாம் சரியே நடக்க, சின்ன மகள் மட்டும் அவரை மீறி செல்கிறாளோ என்ற குடைச்சல் தந்தைக்கு. ஓர் அளவுக்கு மேல் இறுக்கி பிடிக்கலாம் என்றால், கல்யாண் வந்து நிற்கிறான். அவனை மீறினால் சேனாதிபதி வீட்டுக்கே வந்துவிடுகிறார். இதோ இப்போதும் கல்யாண், “நான் பக்கத்துலே தான் இருக்கேன் மாமா. அவளுக்கு எங்க விருப்பம் இருக்கோ அங்க தங்கட்டுமே” என்று பேச, பலராம்க்கு முணுமுணுப்பு தான். அம்மா, அக்காவும் அவளுக்கு ஆதரவாக வர, “என்னமோ பண்ணுங்க” என்று வைத்துவிட்டார். ஜீவிதாவோ எதையும் கண்டு கொள்ளாமல், ஜியாவுடன் ஒரே விளையாட்டு தான். இருவரும் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு, ஸ்கூட்டியில் ரவுண்ட் அடித்து வந்தனர். “உன் வண்டி இரண்டு நாள்ல வந்திடும்” என்றான் கல்யாண். அவனின் கிப்ட் அது. ஜீவிதா ஏற்று கொண்டாள். “அப்பா ஒரு வழியா ஒத்துக்கிட்டார்டி. நீ தனியா எல்லாம் பேஸ் பண்ணனும்ன்னு மாமா சொன்னதால விடுறோம்” என்று தாரணி இரவு உணவு பரிமாற, ஜீவிதா சாப்பிட்டு கிளம்பிவிட்டாள். மறுநாள் அலுவலகத்திலும் சேர்ந்துவிட்டாள். புது அனுபவம். புது உலகம், புது நடைமுறை. புதிய ஓட்டம். பெண்ணுக்கு சிரமம் என்றாலும் பிடிக்கவும் செய்தது. ஸ்கூட்டியும் வந்துவிட, அதிலே சென்று விடுகிறாள். தாரணி தினமும் நேரில் வந்து தங்கையை பார்த்து சென்றாள். அந்த வார இறுதி வர ஜீவிதா அக்கா வீடு சென்றாள். ஜியா பேபி அவளை பாய்ந்து கட்டி கொண்டாள். சித்தியும் மகளும் ஆட்டம் ஆரம்பித்துவிட்டனர். கல்யாண்க்கு அலுவலகத்தில் வேலை இருக்க, பெண்கள் மட்டும் வீட்டில். மறுநாள் ஞாயிறு என்பதால் இரவு அங்கேயே தங்க திட்டம். “நைட் டின்னர் வெளியே போலாமா?” தாரணி கேட்க, “போலாமே. அப்படியே பீச் கூட. என்ன பேபி” என்று அக்கா மகளை கொஞ்சினாள். தாரணி உடனே கணவனுக்கு போன் செய்து சொன்னாள். “நீங்க ரெடியா இருங்க. நான் சீக்கிரம் வந்திடுறேன்” என்றான் கல்யாணும். “சித்தி சேம் ட்ரெஸ்” என்று ஜியா கேட்க, “சேம் சேம் ட்ரஸ் போடணுமா என் பேபிக்கு. போடலாமே” ஜீவிதா பேசி கொண்டிருக்க, தாரணியின் போன் பக்கத்திலே ஒலித்தது. “அஜய்” எட்டி பார்த்தவள் திரும்பி கொண்டாள். “யாருடி?” அக்கா கேட்க, பதிலே இல்லை. திரும்ப போன் வர, ஜீவிதா எடுத்து ஜியாவிடம் கொடுத்தாள். “அஜு அஜு” என்று அவள் போனில் பேசி கொண்டே அம்மாவிடம் ஓடினாள். தாரணி நிமிடம் சென்று வந்தவள், “நாம இன்னைக்கு வீட்லே சாப்பிடலாம் ஜீவி” என்றாள். “ஏன்?” ஜீவிதா கேட்க, “ஆர்டர் பண்ணிக்கலாம், உனக்கு என்ன வேணும் சொல்லு?” என்று கேட்டாள் அக்கா. “பிளான் ஏன் கேன்சல் ஆச்சுன்னு முதல்ல சொல்லு” தங்கை விடாமல் கேட்க, “இப்போ வீட்லே சாப்பிட்டா என்ன ஜீவி? ஏன் வர வர நீ எல்லாத்துக்கும் பெருசா ரியாக்ட் பண்ற?” தாரணி பதிலுக்கு கேட்டாள். ஜீவிதா அக்காவை சந்தேகமாக பார்க்க, அவள் கல்யாண்க்கு அழைத்து பேசி கொண்டே சென்றுவிட்டாள். “ஜீவி. ஜீவி” என்று ஜியா ஓடிவந்தவள், “அஜு அஜு” என்றாள் சிரிப்புடன். “ஏய் ஜியா அமைதியா இரு” என்று பின்னாலே வந்த தாரணி மகளை அதட்டினாள். “என்ன பேபி” என்று ஜீவிதா அக்கா மகளை கையில் தூக்கி கொண்டு கேட்டாள். “அஜு வரான்” என்றாள் குழந்தை. ஜீவிதா அக்காவை பார்க்க, “ஆமா வரான். பாப்பாவை பார்க்க. ரொம்ப மாசம் கழிச்சு இப்போ தான் சென்னை வரான்” என்றாள் தாரணி சாதாரணம் போல. “ஓஹ், சரி நீங்க பாருங்க. நான் கிளம்புறேன்” ஜீவிதா பேக் எடுக்க ஆரம்பித்தாள். “ஜீவி, என்னை டென்ஷன் பண்ணாத, இரு. அஜய் வந்தா என்ன? ஏன் எப்போ பார்த்தாலும் ஓடுற?” அக்கா அவளின் கை பிடித்து கேட்டாள். “க்கா. ப்ளீஸ்” தங்கை அவள் கை விலக்கினாள். “ஜீவி. எனக்கு இன்னைக்கு பதில் தெரிஞ்சே ஆகணும்? அப்படியென்ன அஜய் பண்ணிட்டான், நீ கடைசியா எப்போ அஜய் பார்த்தன்னு கூட எனக்கு ஞாபகம் இல்லை. போன்ல கூட பேசுறதில்லை. அவனும் எத்தனை முறை கூப்பிட்டிருப்பான்? திடீர்ன்னு என்னாச்சு உனக்கு? அவன்கிட்ட இவ்வளவு ஆட்டியூட் காட்டுற?” “நான் ஆட்டியூட் காட்டுறேனா? இருக்கட்டும்“ “சரி இல்லை. வேறென்ன காரணம்ன்னு நீயே சொல்லு“ “க்கா, நான் கிளம்புறேன்“ “அஜய் உன்னை பார்க்கவே வந்திட்டிருக்கான். பைவ் மினிட்ஸ்டி“ “நான் கிளம்புவேன்“ “ஜீவி இத்தனை வயசுக்கு என்னை உன்னை அடிக்க வைக்காத“ “அடிச்சு பாரு” தங்கை ரோஷத்துடன் நின்றாள். “சண்டைக்கு மட்டும் நில்லு. காரணம் கேட்டா சொல்லாத. நம்ம அஜய்டி, அவன்கிட்ட ஏன் இப்படி நடந்துகிற? கஷ்டமா இருக்குடி. அவனும் முன்ன மாதிரி இல்லை. நிறைய மாறிட்டான். வளர்ந்துட்டான். இப்போ வருவான் நீயே பாரு, அவன்கிட்ட இப்படி நடந்துக்க மாட்ட“ ஜீவிதா முகம் மாறிவிட்டது. “எப்படி.. எப்படி நடந்துக்க மாட்டேன்? வளர்ந்துட்டான், மாறிட்டான்னா அவன் அஜய் இல்லாம போயிடுவானா?” “ஜீவி மரியாதையா பேசு“ “நான் இப்படித்தான் பேசுவேன்“ “ஜீவி. எல்லாம் மாறிடுச்சு, என்னாலே முன்ன மாதிரி அவன்கிட்ட இருக்க முடியல. நீயும் அக்சப்ட் பண்ண பழகிக்கோ. அவன் உனக்காக வரான்னா மரியாதை கொடுக்க கத்துக்கோ“ “எனக்காக அவனை வரச்சொல்லி நான் கேட்கலை. பிஸ்தா பருப்புக்கு இங்க என்ன வேலை“ “ஜீவி, இவ்வளவு தான் லிமிட்“ தங்கை சட்டென வண்டி சாவி எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள். அவளின் சிவந்த முகம். கலக்கமா, கோவமா எதுவென அவளுக்கு மட்டுமே தெரியும். கேட்டை தாண்டி வண்டி வர, அவளுக்கு எதிரில் ஒரு கார் நின்றது. பெண்ணுக்கு பார்வையே தெரியவில்லை. காரை கடந்து சர்ரென பறந்தாள். காரில் இருந்த அஜய் முகம் இறுகி போனது. நான் வரேன்னு தெரிஞ்சா தான் கிளம்பி போறாளா? அப்படி இவளை பார்த்தே ஆகணுமா? அவளுக்காக எடுத்து வந்த பலாப்பழம் பார்த்தான். அதை விரும்பி சாப்பிடும் பெண் நினைவிற்கு வர, இளகினான். இப்போதைய அவளின் செயல் நொடி இளக்கத்தை துடைத்து எடுத்தது. மின்னலாக காரை திருப்பி கொண்டு பெண் சென்ற பாதையில் சென்றான். பிடித்துவிட்டான். அவளின் ஸ்கூட்டி முன் விருட்டென காரை வழி மறைத்து நிறுத்தினான்.