தென் பாண்டி மீனாள் 13 1 11366 தென் பாண்டி மீனாள் 13 ‘ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’ ‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?’ என்று மீனலோக்ஷ்னி வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். “மீனா பொண்ணு. என்னாச்சு? ரொம்ப வலிக்குதா?” என்று கஜலக்ஷ்மி அவள் தலை வருட, “இல்லை பாட்டி. நான் அந்த ரூம்க்கு போகட்டா?” என்று கேட்டாள். “சரி வா” என்று அவளுடன் செல்ல போக, “நீங்க இருங்க பாட்டி. நான் கூட்டிட்டு போறேன்” என்றான் வில்வநாதன். “இல்லை நான் தனியா போயிப்பேன்” என்று வெளியே சொன்னவள், உள்ளுக்குள், ‘நீங்க உங்க சண்டையை கண்டினியூ பண்ணுங்க ராசா சார்’ என்று முனகி கொண்டாள். “பரவாயில்லை. வா” என்று முன்னால் நடக்க, “இதுக்கு தான் நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். அவளுக்கு அடிபட்டிருக்கு ராஜா” என்றார் பாட்டி. “நல்லாத்தானே நடக்கிறா“ “உன்னை தூக்கிட்டு போக சொல்லலை. அவளோட சேர்ந்து போ” என, “ஓகே” என்று தோள் குலுக்கி கொண்டவன், அவளுடன் இணைந்து நடந்தான். “நல்ல ஜோடி பொருத்தம்” என்று தனபாலன் தைரியமாக வாய் திறந்து சொல்ல, “எங்க இந்த பையன் தான் பிடிகொடுக்க மாட்டேங்கிறானே” என்று ஆதங்கப்பட்டு கொண்டார் கஜலக்ஷ்மி. “அவன் ரொம்ப பேசுறான்மா. எல்லாம் உங்க மூணு பேரால தான். சின்னதுல இருந்தே நாலு போட்டு வளர்த்திருந்தா, நாவடக்கம் வந்திருக்கும்” என்று பானுமதி பொருமி கொண்டார். “பானு. அவன் கோவம் அது. விடு, பரவாயில்லை, இப்போ என்ன நம்மகிட்ட மட்டும் தானே அப்படி பேசுறான்” என்று தயாளன் மகனுக்கு ஏற்று பேச, “நீங்க பண்றதையும் பண்ணிட்டு, என் பேரன் கோவம் கூட படகூடாதுன்னு சொல்றியா நீ?” என்று மகளிடம் கேட்டார் பாட்டி. “ம்மா. புரிஞ்சு பேசுறீங்களா எப்படி? அவனோட கோவத்துல, பார்க்கிற நேரமெல்லாம் எங்களை வார்த்தையால கொல்றது உங்களுக்கு தெரியலையா?” “வார்த்தைக்கே இப்படி துடிக்கிற, அவனோட இந்த வருஷத்து ஏக்கம், அதுக்கு என்ன சொல்வ?” “ம்மா. எங்க தப்பு தான். இல்லை என் தப்பு மட்டும் தான். எதுவானாலும் என்னை பேச சொல்லு. இனி ஒரு வார்த்தை இவரை அவன் பேசினா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்“ “பானு. என்ன பண்ற நீ? எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகுற? முதல்ல நிதானத்துக்கு வா” என்று தயாளன் மனைவி கை பிடித்து தட்டி கொடுத்தார். “முடியலைங்க. அவனோட கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சாலே, நம்மகிட்டே தான் வந்து நிக்கிறான். எங்களை விட்டுட்டு, உன் லைஃபை பாருடான்னா! வளர்ந்தும் இப்படி படுத்துறான்“ “நீங்க அவனை படுத்தினதை விட, இதெல்லாம் ஒண்ணுமில்லை. என்னைக்கோ ஒருநாள் தான் அவன் பேசுறான். ஆனா அத்தனை வருஷம் தனியா போய் அவனை அவனே வருத்திக்கிட்டது, உனக்கு மறந்து போச்சா?” “அம்மா உங்களுக்கு என் மேல பாசம் இருக்கான்னே எனக்கு சந்தேகம் வருது“ “பாசம் இருக்க போய் தான் நான் உங்க விஷயத்துல எதுவும் பேசுறதில்லை” என்று கஜலக்ஷ்மி சொல்ல, “உங்களுக்கும் சேர்த்து தான் உங்க அருமை ராஜா பேசுறானே. அப்புறம் என்ன?” என்று பானுமதி சோர்ந்துவிட்டார். தனபாலன் மகளின் சோர்வில், “என்ன லட்சுமி பண்ற நீ? அவ ஏதோ சொல்றான்னு கேட்டுக்காம, முதல்ல போய் தண்ணீர் எடுத்துட்டு வா. போ” என்றார் கோவமாக. கஜலக்ஷ்மி கணவரின் அரிதான கோவத்தில் அமைதியாக சென்று மகளுக்கு குடிக்க எடுத்து வந்தார். “எனக்கு ஒன்னும் வேணாம் போங்க” என்று மகள் மறுக்க, “பானுமா. குடி. அம்மா ஏதோ பேசிட்டான்னு கஷ்டப்படாத. அவளுக்கு பேரன் பாசம். பாரு உன்னை பார்த்து மாப்பிள்ளையும் வாடி போறார்” என்று மகளின் உச்சி வருடிவிட்டார். “எனக்கு மட்டும் தான் பேரன் பாசம் இருக்கிற மாதிரி” கஜலக்ஷ்மி வாய்க்குள் முணுமுணுத்தார். தயாளனை பார்த்து பானுமதி நிதானம் அடைய, “நாங்க பேரப்பிள்ளைங்ககிட்ட போறோம். பானு மாப்பிள்ளைக்கு குடிக்க காபி சொல்லு” என்று மனைவியுடன் வீட்டுக்குள் சென்றார் தனபாலன். மீனலோக்ஷ்னி கட்டிலில் அமர்ந்திருக்க, “ஓகே தானே? இல்லை டாக்டரை வர சொல்லவா?” என்று கேட்டான் வில்வநாதன். “அந்தளவுக்கு எல்லாம் ஒன்னுமில்லை” என, “ஆடிட்டிருக்கிற ஊஞ்சல்ல இருந்து யாரும் அப்படி எழுந்து நிப்பாங்களா? வளரணும்ன்னு சொன்னா மட்டும் மூக்கு விடைக்கும் இல்லை“ “ஏதோ என் தப்பு மாதிரி சொல்றீங்க. நீங்க சட்டுன்னு கத்தினதுல தான் நான் எழுந்தேன்“ வில்வநாதன் புருவங்கள் நொடி சுருங்கி விரிய, “ரைட்” என்று தலையாட்டி கொண்டவன், “அவ்வளவு பயமா? நம்ப முடியலை” என்றான். மீனலோக்ஷ்னி அவனை உர்ரென பார்க்க, “இதுக்கு தான் நான் அங்க டின்னர் வேணாம் சொன்னேன். என் கண்ட்ரோல்ல நான் இருக்க மாட்டேன். சோ இதை இழுத்துக்கிட்டது நீயே தான்” என்று முடித்தான். “அப்போ என்னால தான் நீங்க கத்தினதும், நான் விழுந்ததும் இல்லை” “அஃப்கோர்ஸ். இனியாவது பெரியவங்க பேச்சை கேட்டு நடக்கிற வழியை பாரு“ மனுஷனா நீ? என்றபடி அவள் கண்களை சுருக்க, “ஒய் பாண்டி நாட்டு மீனம்மா என்ன?” என்று கேட்டான். “ஒன்னுமில்லை. ஒன்னுமே இல்லை” “குடிக்க ஏதும் எடுத்து வர சொல்லவா?” பெண்ணுக்கு புசுபுசுவென வந்தது. உபசரிக்கிறாராம். “ஓய் உன்னை தான் கேட்கிறேன். ஏன் சாக்லேட் டிப் மட்டும் தான் சாப்பிடுவியா?” “ஆமா சொன்னா உடனே என் கைக்கு வந்திடுமா?” “ட்ரை பண்ணி பார்ப்போமா?” என்று போன் எடுத்து பேசி வைக்க, சில நொடிகளில் அவள் கையில் வீற்றிருந்தது. “எல்லாம் பழம் டிப். சாப்பிடு” என, “எனக்கு?” என்று வந்தார் கஜலக்ஷ்மி. “உங்களுக்கு கண்டிப்பா நோ! எங்க பாட்டிக்கு கொடுத்த, உனக்கு தான் அந்த வேப்பங்கொழுத்து பார்த்துக்கோ” என்று அவளை மிரட்டினான். “சாரி பாட்டி. ஐம் ஹெல்ப்லஸ்” என்ற பெண், ஆவலுடன் அதை எடுத்து உண்டாள். கண்களை மூடி திறந்து அதன் சுவையில் திளைக்க, “வேணும்ன்னே வெறுப்பேத்துறயா நீ?” என்று கஜலக்ஷ்மி கேட்க, “இல்லை பாட்டி. சீரியஸ்லி ரொம்ப யம்மி” என்றவள், இறுதியில் ஒன்றை மட்டும் விட்டு வைத்தாள். என்னமோ பாட்டியை விட்டு முழுதும் சாப்பிட மனம் வரவில்லை. “இதுல ஒரு பைட் மட்டும் கொடுக்கவா?” என்று வில்வநாதனிடம் கேட்க, “நீயே சாப்பிடு” என்று கஜலக்ஷ்மி அவளுக்கு ஊட்டிவிட்டார். வில்வநாதன் அவளுக்கு டிஷ்ஷியூ எடுத்து கொடுக்க, “தேங்க்ஸ். ரொம்ப நல்லா இருந்தது” என்றாள். அவளின் விகசித்த முகத்தில், மற்றவர்களுக்கும் மென்புன்னகை. அறிவழகனும் மகளை தேடி வந்துவிட, பெண்ணுக்கு இன்னும் மகிழ்ச்சி. பெரியவர்கள் வெளியே செல்ல, வேகமாக எழுந்து அவளின் உடமைகளை எடுத்தாள். “உனக்கு அடிபட்டிருக்கிறது ஞாபகம் இருக்கு இல்லை” என்று வில்வநாதன் புருவம் உயர்த்த, “அது சின்ன காயம். வலி போச்சு. உங்க சாக்லேட் டிப் அதை மறக்கவே வைச்சிடுச்சு” என்றாள். “இன்னும் உங்கப்பா வீட்டுக்குள்ள கூட வரலை. கொஞ்சம் பொறுங்க மேடம்” “சாரி. அது லேட் ஆகிடும்ன்னு தான்” என்றவள், தோட்டத்தில் அறிவழகனை பார்த்துவிட்டாள். வழியில் அவன் நிற்க, “போலாமா?” என்று அவன் முகம் பார்க்க, ‘உன்னை வைச்சுக்கிட்டு இவங்க ஆசையை பாரு‘ என்று ஆயாசம் கொண்டவன், “வா” என்று அவளுடன் தோட்டத்திற்கு வந்தான். “பாப்பா” என்று அறிவழகன் மகள் வரவும் அவளை ஆராய, மகளும் அவரின் கையை இறுக்கமாக பற்றி கொண்டாள். “ஒன்னுமில்லை தானே ராசாத்தி” “இல்லைப்பா. நான் நல்லா இருக்கேன். சரியான நேரத்துல இவங்க தான் வந்து ஹெல்ப் பண்ணாங்க” என்று வில்வநாதனை காட்டி சொன்னாள். “ரொம்ப நன்றி தம்பி. உங்களுக்கு எப்படி கைமாறு பண்ண போறேன்னு தெரியலை. ஒவ்வொரு முறையும் நீங்க உதவிக்கு வந்து நிக்கிறீங்க. இல்லைன்னா என் பொண்ணு” என்று கலங்கி நின்றார் தந்தை. மீடியா எல்லாம் இருந்தது என்று சொல்லியிருக்க, இன்னமும் அந்த அச்சம் அகலவில்லை. அறிவழகன் குணத்துக்கு இது மிக பெரியதே! “அங்கிள். நான் இல்லைன்னா வேற யாராவது உதவியிருப்பாங்க. ஏன் நீங்களே அதை சமாளிச்சிருக்கலாம். அண்ட் உங்க பொண்ணு ரொம்ப தைரியமா தான் இருக்கா. நீங்க கவலை பட வேண்டாம்” என்றான். “அறிவழகா. நீ கலங்கி நின்னதும் உன் பொண்ணும் கஷ்டப்படுறா பாரு. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே. முதல்ல உட்காரு. தண்ணீர் குடி. பசங்களா நீங்களும் உட்காருங்க” என்று அரவிந்தன், வினயை சொன்னார். அவர்கள் “இருக்கட்டும் மேடம்” என்று மீனலோக்ஷ்னி பக்கத்தில் நின்று கொள்ள, “சுஜாதா எங்க?” என்று விசாரித்தார். “அவங்க கோவில்லே இருந்தாங்க. நேர்த்திக்கடன் செலுத்தாம போக கூடாதுன்னு சொன்னதால, அவங்களை விட்டு நாங்க உடனே வந்துட்டோம். காலையில அவங்களும் வந்திடுவாங்க” என்றான் அரவிந்தன். மூவருக்கும் குடிக்க வர, அறிவழகன் அதிகமே தளர்ந்து போயிருந்தார். தயாளன் அவரருகே அமர்ந்து தோள் தட்டி கொடுத்தவர், “தைரியமா இரு அறிவழகா. நாங்க எல்லாம் இருக்கோம் இல்லை” என்றார். “எங்களுக்கு நேரமே சரியில்லை தயா. ஏதோ இப்போதான் அவ வெளியே போனா. அங்கேயும் வம்புன்னா, நாங்க என்னதான் பண்றது?” என்றார். விஷயம் கேள்விப்பட்ட நொடியில் இருந்து தந்தையாக அவர் பட்டபாடு அவருக்கு மட்டுமே தெரியும். தண்ணீர் கூட தொண்டையில் இறங்கவில்லை. “ஒத்தை பொம்பிளை புள்ளையை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு. போதும்டா சாமி” மீனலோக்ஷ்னிக்கு தந்தையின் வேதனையில் கண்கள் கலங்கிவிட்டது. “அறிவழகா என்ன பண்ற நீ?” என்று கஜலக்ஷ்மி அவரை அதட்டினார். “நீ இங்க வா மீனா பொண்ணு” என்று அவளை தன் கைக்குள் வைத்து கொண்டவர், “அவ தைரியமா தான் இருக்கா. நீ ஏதோ பேசி, அவளை கலங்க வைக்காத” என்று கண்டிப்புடன் சொன்னார். “பெரியம்மா. நானும் தைரியமா இருக்கணும்ன்னு தான் நினைக்கிறேன். அவளை படிக்க வெளியூர் அனுப்பினதும் அப்படி தான். ஆனா“ “ஆனா, போனா எல்லாம் பேசாத. அவளுக்குன்னு இல்லை, எல்லோருக்கும் ஏதோ ஒரு கஷ்டம். சமாளிக்க தான் நாம மனுஷங்களா இருக்கோம். இனி எதிர்மறையா நீ எதுவும் பேசக்கூடாது பார்த்துக்கோ” என்றார். “சரி பெரியம்மா” என்றவருக்கு முகம் மட்டும் தெளிவதாக இல்லை.