“மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு”
“ண்ணா. டீ கடையிலே லட்சம் சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க”
“டேய் நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ நான் சொல்றதை கேளு. கிளம்பு”
“ஏன் என்னை துரத்திட்டு நீ மட்டும் ஆளாக பார்க்கிறியா?”
செல்வம் தம்பியை முறைக்க, “ண்ணா. நான் ஒன்னும் உன்மேல இருக்கிற பாசத்துல உன்கூட இல்லை. உன்னை விட்டா வேற யாரும் என்னை சேர்த்துக்க மாட்டாங்க. அவ்வளவு தான்” என்றான் தம்பி.
“டேய் புரிஞ்சுக்க மாட்டியா நீ?”
“ண்ணா. என்னால வெளிநாட்டுக்கு எல்லாம் போக முடியாது. எனக்கு இங்க தான் இருக்கணும்.”
“என்னமோ பண்ணு” என்று விட்டுவிட்டான் அண்ணன்.
நாட்கள் தான் சென்றது. செல்வத்திடம் எந்த மாற்றமும் இல்லை. இடையில் ஒரு முறை கோர்ட்டுக்கு சென்று வந்தான்.
லாயர் இவனை வெளியே எடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது.
வழக்கம் போல அன்று அண்ணாச்சியுடன் பஞ்சாயத்து முடித்து கடைக்கு வந்தான் செல்வம். வானம் இருட்டி கொண்டு வர, சூடான டீயுடன் அமர்ந்தான்.
மணி மொபைல் பார்த்து கொண்டிருக்க, “மழை நல்லா வரும் போல. எல்லாத்தையும் ஓரங்கட்டுடா” என, மணி அந்த வேலையை பார்த்தான்.
சேர், பெஞ்ச் எல்லாம் உள்ளே வர, மழையும் பிடித்து கொண்டது.
அந்த மழையில் உள்ள கொதிப்போடு நடந்து வந்து கொண்டிருந்தாள் நாச்சி. ஏதோ பூஜை. வந்தே ஆக வேண்டும் என்று ஊருக்கு வர வைத்தார்கள்.
முத்து நாச்சியும் வந்திருக்க, கோவிலில் வைத்து பெண் பார்க்கும் நிகழ்வு.
அவ்வளவுதான் பெண் அங்கு நிற்கவில்லை. வாசலோடே கிளம்பிவிட்டாள். “கார் ஸ்டார்ட் ஆகலை. கொஞ்ச நேரம் இரு நாச்சி” என்ற ரவியின் குரலை எல்லாம் மதிக்கவில்லை.
வேக நடையுடன் வந்தவளை டீ கடையில் அமர்ந்திருந்த மணி பார்த்தான்.
“ண்ணே அது அண்ணி தானே?” என்று அண்ணனிடம் கேட்க, அண்ணனோ நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் போக்கில் டீ குடித்தான்.
மணி குடையுடன் அவளின் முன் நிற்க, நாச்சி அப்போது தான் இருக்குமிடம் உணர்ந்தாள். “குடை பிடிங்கண்ணி” என்றான் மணி.
நாச்சி கண்கள் அவனுக்கு பின்னால் செல்வத்தை தேடி கடையில் வைத்து கண்டு கொண்டது. சில துளி கண்ணீரும் மழையோடு கரைந்து காணாமல் போனது.
“அங்க. கடைக்கு வரீங்களா அண்ணி?” மணி கேட்க, நாச்சி நொடி யோசித்து தலையசைத்தாள்.
முழுதும் நனைந்திருந்தவளின் நடை தடுமாறி, மெல்ல வந்தாள். சில அடி இடைவெளியில் செல்வத்தின் முகம் தெளிவாக தெரிய, கடைக்குள் நுழைந்தாள்.
மணி அவளுக்கு சேர் எடுத்து போட, மறுத்து கை கட்டி நின்று கொண்டாள். மூவர் மட்டுமே அங்கு. மணி இதோ வரேன் என்று உள்ளே சென்றுவிட்டான்.
இருவர் மட்டுமே இருக்க, பெண்ணுக்குள் என்னென்னமோ எதிர்பார்ப்பு. இத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு அருகில் நிற்கிறாள். அப்பா, அவரின் மிரட்டல் எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது.
செல்வம் மட்டுமே நினைவில் இருக்க, கட்டிப்பிடிச்சு அழுதுடுவோமா? என்று ஏங்க ஆரம்பித்தாள்.
திரும்ப துளிர்த்த கண்ணீர் துளிகள் அவளின் ஏக்கத்தை வெளிப்படையாக காட்டியது.
செல்வமோ அவளை பார்க்காமலே பக்கத்தில் இருந்த அவனின் துண்டை தூக்கி நாச்சி மேல் போட்டான். அதிர்ந்து போன பெண், அவனை பார்த்தாள்.
மிகவும் சாதாரணமாக டீயை காலி செய்து கொண்டிருந்தான். இவள் பக்கமே திரும்ப மறுக்கும் உடல் பாவனை. இத்தனை நாட்கள் கட்டி காத்த அவளின் கட்டுப்பாடு, உறுதி எல்லாம் அவன் முன் சிதற ஆரம்பித்தது.
என்னை பார்க்க கூட மாட்டாராமா? என்ற இவளின் ஏக்கம் கோவமாக உருமாற, துண்டை திரும்பவும் அவன் மேலே எறிந்தாள்.
முகத்தில் விழுந்த துண்டை எடுத்த செல்வம் புதிதாக பார்ப்பவன் போல, “யாருடா மணி இந்த பிகர்” என்று இல்லாத தம்பியிடம் கேட்டான்.
பெண்ணின் பார்வை தீவிர முறைப்புக்கு போக, “மழையில நனைஞ்சதுல கொஞ்சம் அழகா தெரியறாங்களோ?” என்று அவளை மேலும் கீழும் பார்த்து கேட்டான்.
நாச்சி கோபத்துடன் அங்கிருந்த டம்ளரை எடுத்து அவன் மேல் எரிய, கேட்ச் பிடித்து கொண்ட செல்வம், “டீ வேணும்ன்னா கேட்க சொல்லுடா” என்று டீ போட சென்றான்.
காற்றின் வேகம் வேறு அதிகரிக்க, நாச்சிக்கு நன்றாகவே குளிர செய்தது. கைகளை இறுக்கமாக கட்டிக்கொள்ள, செல்வம் கவனித்தவன் துண்டை திரும்ப அவள் மேல் போட்டான்.
பெண் அதை எடுக்க போக, “தூக்கி போட்டா துண்டுக்கு பதில் நான் வந்து மேல விழுவேன்னு சொல்லுடா” என்றான்.