இருள் வனத்தில் விண்மீன் விதை -15 2 7533 அவளோடு அவன் நெருங்கி நின்று கொள்ள, தள்ளிச் சென்றாள். “குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கட்டுமேன்னுதான்…” என இழுத்தான். “இதமா இருக்கிறது இருக்கட்டும், யாராவது பார்த்தா?” “ஓ அதான் பிரச்சனையா, யாரும் வர மாட்டாங்க” என குறும்பாக சொன்னான். அவள் அடக்கப் பட்ட சிரிப்புடன் கடல் நீரின் பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள அவளை உரசிக் கொண்டு நின்றான். அவள் விலகிச் செல்லாமலும் இவனை விலக்கித் தள்ளாமலும் இருக்க தோளை சுற்றி கை போட்டுக் கொண்டான். அவள் குரலை செரும, “உன்னை சர்ப்ரைஸ் பண்ணனும்னு ரொம்ப யோசிச்சு அழைசிட்டு வந்திருக்கேன், இந்த நெருக்கம் கிடைக்க டிஸர்விங் ஆளுதான் உன் ஹஸ்பண்ட், தாராளமா நீ அனுமதிக்கலாம்” என அவனுக்கு அவனே சிபாரிசு செய்து கொண்டான். மனம் உவந்தே அவனுடனான நெருக்கத்தை அனுமதித்தாள். கடலை மையப்படுத்தி அவனுக்கு தெரிந்த விஷயங்களை சுவாரஷ்யமாக சொன்னான். அவளும் ஆர்வமாக கேட்டுக் கொண்டாள். பேச்சின் இடையே “கடல்கன்னி கதையெல்லாம் சொல்றாங்களே, அதெல்லாம் நிஜமா?” எனக் கேட்டாள். “கடலை பத்தி விஞ்ஞான ரீதியா சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா கடல்கன்னி பத்தி கேட்குற!” “ஆமாம் கடலை பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்ய போறேன்? இங்க அழைச்சிட்டு வந்து ரொமான்டிக்கா பேசாம கடல் ஆமை, டால்ஃபின்னுன்னு பேசுறீங்க, இதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க” என்றாள். விழித்தவன், “சரி சரி, என்ன கேட்ட, கடல்கன்னியா? நேர்ல பார்க்காத வரை அதையெல்லாம் நம்ப மாட்டேன் நான்” என்றான். “என் பாட்டி கடல்கன்னி கதையெல்லாம் சொல்வாங்க. ரொம்ப அழகா இருப்பாளாம், இடுப்புக்கு கீழ மீன் மாதிரி இருப்பா, கடல்ல விழுந்த ஒரு இளவரசனை காப்பாத்தி அவனையே கல்யாணம் பண்ணிக்குவாளாம், கொஞ்ச நாள் கழிச்சு அவன் அவனோட நாட்டுக்கு திரும்ப போயிடுவானாம், இளவரசி அவனை நினைச்சிட்டே தனியா உட்கார்ந்து அழுதிட்டே இருக்கிறதா சொல்வாங்க, அவ அழுகை ஸ்டாப் ஆகாததாலதான் கடல்ல தண்ணி வத்திப் போறதே இல்லையாம்” என்றாள். “அப்ப உலகத்துல இருக்க எல்லா கடல்லேயும் ஏதோ ஒரு கடல்கன்னி அழுதிட்டே இருக்காளா? காமெடி பண்ணாத” அவனை முறைத்தவள், “கதைக்கு சொன்னாங்க பாட்டி” என்றாள். “சேட் எண்டிங் கதைகளே எனக்கு பிடிக்கிறது இல்லை மித்ரா” “உண்மைதான், அந்த இளவரசி அழறத கற்பனை பண்ணி பார்த்திட்டு நானும் அழுதிருக்கேன், சாப்பாடு வேணாம்னுலாம் சொல்லியிருக்கேன். அப்பா வந்து சமாதானம் பண்ணியும் அழுதேன், அந்த இளவரசனை பிடிச்சிட்டு வந்து கடல்கன்னிக்கிட்ட கொடுக்கிறேன்னு பிராமிஸ் பண்ணித்தான் என்னை சாப்பிட வச்சார்” என பழைய நினைவுகளில் மூழ்கினாள். “சொன்ன படி செஞ்சாரா உன் அப்பா?” எனக் கேட்டான். சிரித்தவள், “செஞ்சீங்களான்னு நானும் அவர்கிட்ட கேட்டேன். ஏதோ கார்ட்டூன் போட்டோஸ் காட்டி ஆமாம்னு என்னை நம்ப வச்சிட்டார்” என்றாள். “அதான் தெரியுமே!” என கிண்டலாக சொன்னான். “என்ன?” “உன்னை ஏமாத்துறது சுலபம்னு” என்றவனை மீண்டும் முறைத்தாள். அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், “ஒரு முறை ஒருத்தியை ஏமாத்திட்டா திரும்ப அந்த நம்பிக்கையை அவகிட்ட ஏற்படுத்தறது எவ்ளோ கஷ்டம்னும் நீதான் எனக்கு புரிய வச்சிருக்க” என்றான். “கதைல கூட இந்த ஆம்பளைங்கதான் பொண்ணுங்கள ஏமாத்துறாங்க!” என சொல்லிக் கொண்டே அவனது விலாவில் முழங்கை கொண்டு இடித்து விலக முற்பட்டாள். “அந்த கடல்கன்னி உண்மையா அந்த இளவரசனை லவ் பண்ணியிருந்தா அவனால அவன் நாட்டுல ஹேப்பியா நிம்மதியா இருந்திருக்கவே முடியாது. யாரா இருந்தாலும் அன்புக்கு அடிமைதான். உன் பாட்டிக்கு முழுக் கதையும் தெரிஞ்சிருக்காது. அங்க அவன் நாட்டுல பொறுப்பா வேற யாரையாவது நியமிச்சிட்டு திரும்ப கடலுக்கே அவன் லேடிகிட்டேயே வந்திருப்பான்” என்றான். “ஆம்பளைங்களுக்குத்தான் நீங்க சப்போர்ட் பண்ணுவீங்க” என்றவள் சாகுந்தலை வரலாறெல்லாம் சொல்லி ஆண்கள் ஏமாற்று பேர்வழிகள் என தர்க்கம் செய்தாள். “நான் ஒண்ணும் துஷ்யந்தன் இல்லை, உன்னை கையோட அழைச்சிட்டு வந்த கண்ணியவான். பொண்டாட்டிங்கிற உரிமை இருந்தும் உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தள்ளி நிக்கிற உத்தமசீலன்” என அவனை அவனே புகழ்ந்து கொண்டான். “அஹ்ஹாஹா… தற்பெருமை தவக்கள, சுயதம்பட்ட சூரப்புலி!” “என்ன வேணா கிண்டல் பண்ணு, உனக்காக என்ன வேணா செய்வேன்னு சொல்றவன் இல்லை நானு, செயல்ல காட்டுறவன்” என்றான். “ஓ அப்படியா எங்க இந்த கடல்ல விழுங்க” என்றாள். “நிஜமாதான் சொல்றியா?” “ஏன் பயமா இருக்கா?” “இல்லை எங்க போனாலும் உன்னை விட்டுட்டு போகக் கூடாதுன்னு எனக்கு நானே உறுதி எடுத்திருக்கேன்” என்றான். “அதனால என்ன? என்னையும் தள்ளி விட்டுட்டு நீங்களும் குதிங்க. ஜலசமாதி…” மித்ரா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளைப் பிடித்து கடலில் தள்ளி விட்டான். என்ன நடக்கிறது என்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவளை தள்ளி விட்ட அடுத்த நொடியே அவனும் கடலில் குதித்திருந்தான். லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததாலும் நீச்சல் தெரிந்தவர்கள் என்பதாலும் கடலில் மூழ்கி விடவில்லை இருவரும். மீன் பிடிக்கப்பலின் தலைமை பொறுப்புள்ளவன் இவர்களை அழைத்து வந்தவனை திட்ட, அவன் ஏதோ சொல்லி அவனை சமாளித்தான். இருவருக்கும் ஆபத்தில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அமைதியடைந்தான் அவன். பயத்தில் மலங்க மலங்க விழித்தவளின் முகத்து நீரை துடைத்து விட்டவன், “ஆர் யூ த்ரில்டு?” எனக் கேட்டான். பட்டென அவனது கன்னத்தில் அடித்து விட்டாள். இதை எதிர்பார்க்காதவன் அதிர்ந்து போய் பார்க்க, செய்ததை உணர்ந்து அவளும் அவனை திகைப்பாக பார்த்தாள். தன் அடிபட்ட கன்னத்தை தடவிக் கொண்டவன், முதலில் முறைத்து பின் சிரித்தான். “ப்ச் போங்க, நான் ரொம்ப பயந்திட்டேன்” என்றாள். “தண்ணில விளையாடத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமே. நாலு சுவத்துக்குள்ள சின்ன பாத்டப்ல விளையாடுறது காட்டிலும் இப்படி பரந்த கடல்ல விளையாடுறது சூப்பர் ஃபீல் இல்லையா?” எனக் கேட்டவன் தண்ணீரை அள்ளி அவளின் முகத்தில் தெளித்தான். அவள் பொய்யாக முறைக்க, “சந்தடி சாக்குல என் கன்னத்தை சிவக்க வச்சிட்ட, உண்மையை சொல்லு, பிளான் பண்ணிதானே அடிச்ச?” எனக் கேட்டான். சின்ன குரலில் “ஸாரி” என்றாள். “பூரி மாதிரி வீங்கிப் போச்சு என் கன்னம், ஸாரி எப்படி போதும்?” வம்பாக அவன் கேட்க, “இன்னொரு பூரி வேணுமா?” எனக் கேட்டு கலகலவென சிரித்தாள். கடலில் அப்படி இருந்த நிலை அவளுக்குமே உற்சாகத்தை கொடுத்தாலும் சின்ன பயமும் இருந்தது. “ஸேஃபாதான் இருக்கோம். நிஜமா வேணாம்னா கப்பல்ல ஏறிடலாம்” என அவன் சொல்ல பயத்தை விலக்கி வைத்து விட்டாள். அவனது அருகாமையிலேயே இருந்து கொஞ்சமாக ஆட்டம் போட்டாள். “ச்சீ ரொம்ப கரிக்குது இந்த தண்ணி” என முகம் சுளித்தாள். “நீ சொல்லு, இனிக்க வச்சிடுவோம்” என அவன் கூற, அவளுக்கு ஒரே சிரிப்பு. அரை மணி நேரத்துக்கு பின் கப்பல் ஏறினார்கள். சூடான சப்பாத்தியும் மீன் வறுவலும் தந்தனர். அதை வாங்கிக் கொண்டு மீண்டும் மேல் தளம் சென்றனர். அவன் சட்டையை கழட்டி பிழிந்து அங்கிருந்த பிடியில் விரித்துப் போட்டு விட்டு அவளை பார்த்தான். சுடிதார் டாப்பின் கீழப் பகுதியை பிழிந்து விட்டவள் தலை முடி பின்னலை பிரித்து விரித்து விட்டாள். “இது என் பிளான்ல இல்லை, இருந்திருந்தா வேற ட்ரெஸ் எடுத்திட்டு வந்திருக்கலாம்” என்றான். பரவாயில்லை என்றவள் மீன் வறுவலை எடுத்து சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் வேகத்தை பார்த்து சிரித்தவன், “ஒண்ணு மட்டும் போதும், மத்தது எல்லாம் உனக்குத்தான்” என்றான். “நீங்கதான் என்னை தண்ணில தள்ளி விட்டீங்க, குளிச்சா எனக்கு ரொம்ப பசிக்கும். அந்த ஒண்ணும் வேணுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள். அவன் வாய் விட்டு சிரித்தான். கப்பலின் பின் பகுதிக்கு சென்று விசில் அடிக்க அவர்களை அழைத்து வந்தவன் எட்டிப் பார்த்தான். இன்னும் மீன் கிடைக்குமா எனக் கேட்டு உறுதி படுத்திக் கொண்டு கீழே சென்று இன்னொரு பிளேட்டில் இன்னும் மீன் வறுவல் மற்றும் குடி தண்ணீர் எடுத்து வந்தான். வெறும் தரையில் அமர்ந்து கொண்டனர். கல்லூரி படிக்கும் சமயத்தில் சில முறை நண்பர்களோடு இப்படி வந்ததுண்டு என்பதை கூறினான். “கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்ம் கூட வந்தாங்களா?” எனக் கேட்டாள். “அப்படி எத்தனை கேர்ள்ஸ் என் லைஃப்ல இருந்தாங்கன்னு இப்படி ப்ளூரல்ல சொல்ற? ஒன்லி பாய்ஸ், சேர்ந்தாப்ல ரெண்டு நாள் கூட கப்பல்ல இருந்திட்டு போவோம். இப்படித்தான் கடல்ல மணிக்கணக்கா ஆட்டம் போடுவோம், வீட்டுக்கு தெரியாது, செமயா என்ஜாய் பண்ணியிருக்கோம்” என்றான். கடல் காற்றில் அவளது ஆடையின் ஈரமும் பாதி குறைந்து விட்டது. ஆனாலும் குளிர கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்க்க அமர்ந்திருந்தாள். திரும்பலாமா எனும் கேள்வி அவளிடமிருந்து வராமல் போக, அவனும் அதைப் பற்றி பேசாமல் வானத்தை பார்த்தவாறு படுத்து விட்டான். அவளுக்கு அதிகமாக குளிர அவனது உலர்ந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள். பார்த்திருந்தவன், “என்னோடத என்னை கேட்காமலே எடுத்து போட்டுப்பியா?” என்றான். “ஹையோ நான் கேட்டு தர முடியாதுன்னு வேற சொல்லுவீங்களோ?” என்றாள். அவளை நோக்கி கை நீட்டினான். மறுப்பாக தலையசைத்தவள் தள்ளியே அமர்ந்திருந்தாள். பழகிய காலத்தில் அவனுக்கிருந்த மனத்தவிப்பை சொன்னவன், “பிறவிக் கெட்டவன் இல்லை நான்” என்றான். அவள் ம் போட்டுக் கொள்ள, “டீப்பா நம்மள விரும்புறவங்கள யாராலேயும் விட்டுட்டு போக முடியாது, நான் லக்கிதான், உன்னை மிஸ் பண்ணிடல” என்றான். அவளின் பார்வையில் கேள்விகள் தென்பட்டன, சின்ன குற்றம்சாட்டுதலும் இருந்தது. “என் ஆள கல்யாணம் பண்ணி அவளை தனியா அழ விட்டுட்டு ஓடிடல நான், அவளை நான்தான் தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன், என்னோடவே என் ராஜ்ஜியதுக்கே அழைச்சிட்டு வந்திட்டேன். என்னை உண்மையா விரும்பினவ என்னை மன்னிச்சு முழு மனசோட ஏத்துப்பான்னு காத்திருக்கேன்” என்றான். அவனது பேச்சில் இருந்த உண்மையை விடவும் ஏற்றுக் கொள் என மறைமுகமாக அவன் யாசித்ததை உணர்ந்தாள் மித்ரா. தானாக அவனருகில் வந்து அவனது கையை பற்றிக் கொண்டாள். அந்தக் கையை எடுத்து தன் கன்னத்தில் பதித்துக் கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே மோன நிலையில் இருந்தனர். “பசங்க எவ்ளோ நாள் வேணும்னாலும் இங்க இருக்கலாம் மித்ரா, நீ… உனக்கு கஷ்டம், கிளம்பலாமா? இன்னொரு முறை நிறைய டைம் இருக்க மாதிரி பிளான் பண்ணிட்டு வரலாம்” என்றான். அவள் சரி என்றாள். “க்ரூஸ்ல ஸ்பெஷல் ட்ரிப் ஏற்பாடு பண்றேன்” என்றான். “வேணாம், இந்த ட்ரிப் கொடுத்த மகிழ்ச்சிய க்ரூஸ் ட்ரிப் தருமான்னு தெரியலை. இதுவே என் மனசுல ஸ்பெஷலா இருக்கட்டும்” என்றாள். வந்தது போலவே படகில் கரை திரும்பி விட்டனர். வீடு வந்து சேர அதிகாலையாகி விட்டது. வந்த பின்தான் பிரதீப்க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த விஷயம் தெரிய வந்தது. இவன் கடலில் இருந்திருக்க இவனுக்கு தகவலை சேர்ப்பிக்க முடியவில்லை. மித்ரா கவலையடைய, சர்வாவுக்கு கவலையோடு சேர்ந்து குற்ற உணர்வாகவும் போய் விட்டது.