நதியின் ஜதி ஒன்றே 16 2 12713 “என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்” என்றாள் பெண். அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். “நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது” என்றாள் உஷாராக. அஜய், “மேல சொல்லு” என்றான். “அதான் சொல்லிட்டேனே” என்றாள் பெண். “என்ன சொன்ன?” “நீங்க என் அஜுன்னு” பெண் குரல் மெலிதாக மாற, பார்வை அவன் நெஞ்சுக்கு வந்தது. “என்னை பார்க்கணும்” என்றான். குரலில் கடினம். “பார்ப்பேன்” என்று திரும்ப அவன் முகத்திற்கு வந்தவள், “நீங்க உங்க முகத்தை துடைங்க” என்றாள். “முடியாது” “ஈரம் இருக்கு“ “இருந்துட்டு போகுது“ “ப்ளீஸ். எனக்கு டிஸ்டர்பா இருக்கு“ “உனக்கு என்ன டிஸ்டர்ப்“ “துடைக்க கை பரபரக்குது” என்றுவிட்டாள். “தொட்ட கொன்னுடுவேன்” என்றான் அவனும் உடனே. ஜீவிதா அவன் சொன்ன நொடியே, தன் முந்தானை எடுத்து அவன் முகம் துடைத்துவிட்டாள். அஜய் அதிர்ந்து, “ஜீவிதா” என்றான் அதட்டலாக. ஜீவிதாவிற்கு நடுக்கம் தான், காட்டிக்கொள்ளாமல் நின்றாள். “என்ன பண்ணிட்டிருக்கன்னு புரியுதா உனக்கு?” என்று பல்லை கடித்து கேட்டான். “நல்லாவே தெரியும், உங்களுக்கு தான் என்னை புரியலை“ “எப்போ இருந்து இந்த கிறுக்குத்தனம்?” “ரொம்ப முன்னாடியே. என்னோட செகண்ட் இயர்ல இருந்து. உங்களை ஒரு பொண்ணோட ரெஸ்டாரண்ட்ல பார்த்ததுல இருந்து, அவ உங்க கை பிடிச்சதுல இருந்து, நீங்க அவ கை பிடிச்சதுல இருந்து“ அஜய் கண்களை விரித்தான். “அப்போ நீ அங்க இருந்தியா?” என்று கேட்டான். “இருந்தேன், நிறைய அழுதேன். நீங்க என்னை அழ வைச்சுட்டீங்க” என்றாள். “ஜீவிதா, இதெல்லாம் ஒரு காரணம்ன்னு அழுவியா நீ? ஏதேதோ நினைச்சு, அதுக்கு தான் என்கிட்ட இத்தனை வருஷம் பேசாம இருந்தியா?” “ஆமா. உங்கமேல கோவம்“ “என்மேல கோவப்பட என்ன இருக்கு?” “எப்படி நீங்க இரண்டுபேரும் கை பிடிச்சுக்கலாம்” சண்டைக்கு நின்றாள் பெண். அஜய்க்கு என்ன செய்வதென புரியவில்லை. கண்கள் கட்டியது. இவள் சிறுபெண்ணா, பெரியவளா? அவனுக்கு அறுதியிட்டு கண்டறிய முடியவில்லை. “ஜீவிதா. கொஞ்சம் நிதானமா பேசுவோம்” என்றான். ஜீவிதா நீ பேசு என்று பார்த்தாள். “நான் உன்னோடே இருந்துட்டு கூட இருக்க மாட்டேன் சொன்னது உனக்கு கோவம், வேற ஒன்னும் இல்லை” “அதுவும் இருக்கு. அதை அப்பறம் பேசுவோம்” என்றாள் பெண். “கை பிடிக்கிறது எல்லாம் சாதாரண விஷயம். அதை நீ பெருசா எடுத்துக்கிட்ட. அதனால தான் இப்படி” என்றவன் முன் அவள் கையை நீட்டினாள் பெண். “என்ன?” “என் கை பிடிங்க” என்றாள். முன்பென்றால் தயங்காமல் பிடித்திருப்பான், இப்போது அவனால் முடியாது. “சாதாரணம் சொன்னீங்க இல்லை. பிடிங்க” என்றவள், அவன் கை பிடிக்க போனாள். “ஜீவிதா ஸ்டாப்” “இது தான் சொல்றேன். எந்தவொரு பீலிங்கும் இல்லாமல் ஒருத்தர் கையை பிடிச்சிட முடியாது“ “முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு எல்லாம் நாம கை கொடுக்கிறது இல்லையா?” “அது வேற, நான் சொல்றது வேறன்னு உங்களுக்கு நல்லா தெரியும்“ பேச்சு தொனி மாறியது. இருவரின் முகமும் சீரியஸ் ஆனது. “எனக்கு பிடிக்காத விஷயத்தை நீ பண்ணிட்டிருக்கன்னு உனக்கு தெரியுதா இல்லையா?” என்று கேட்டான் அஜய். “உங்களுக்கு தான் பிடிக்காதே. பிடிக்காத விஷயத்தை பண்ண நீங்க எதுக்கு ரெஸ்டாரண்ட் போனீங்க?” பெண்ணும் கேட்டாள். “என்ன நடந்ததுன்னே தெரியாம பேச கூடாது ஜீவிதா. அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை” “எனக்கும், உங்களுக்கும் சம்மந்தம் இருக்கு இல்லை“ “என்ன இருக்கு. ஆஹ்ன் என்ன இருக்கு சொல்லு“ “நீங்க என் அஜு. இது தான் சம்மந்தம்” உறுதியாக சொன்னாள் பெண். “திரும்ப திரும்ப அதையே சொல்லாத” அஜய் இரு கைகளால் தலை பற்றி தேய்த்தான். “சொல்வேன். ஏன் சொல்ல கூடாது?” “ஆட ஆரம்பிக்காத ஆட்டக்காரி. எனக்கு ஷாக்கிங்கா இருக்கு“ “முதல்ல அப்படித்தான் இருக்கும். அப்புறம் சரியாகிடும். என்ன பார்க்கிறீங்க முதல்ல எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. இரண்டு நாள் முழுசா நிறைய அழுது, அழுது யோசிச்சேன். உங்களை போய், நீங்க போய் எப்படி என் அஜுவா ஆனீங்கன்னு“ “உன்னை” அஜய் அவளை கொட்ட கை ஓங்கினான். ஜீவிதா தலையில் கை வைத்து குனிந்து கொண்டவள், “நீங்க கொட்டினாலும் உண்மை அது தான்” என்றாள். “அப்படி கஷ்டப்பட்டுக்கிட்டு எதுக்கு என் அஜு, என் அஜுன்னு சலப்பிட்டு திரியற. போக வேண்டியது தானே. என் ஜீவனாவது குறையாம இருக்கும் இல்லை” “இந்த ஜீவிதாகிட்ட தான் உங்க ஜீவன்னு முடிவாகி போச்சு” “ரைமிங்கா பேசுனா தட்டிடுவேன்“ “ரைமிங்ன்னாலும், சரியான டைமிங் தான்” பெண் முணுமுணுத்தாள். “இதுக்கு நீ என்கிட்ட பேசாமலே இருந்திருக்கலாம். ஆட்டம் காட்டின ஆட்டக்காரியை தேடி வந்து பேசினா ஒரு வார்த்தை என்கிட்ட பேசலை. உனக்காக எடுத்து வந்த பழத்தையும் வைச்சுட்டு ஓடியாச்சு. ஏன், ஏன்னு இவ்வளவு வேலையிலும் உன்னை அவ்வளவு நினைச்சேன். என்ன கஷ்டப்படுத்திட்டோம் தெரியலையேன்னு வேற மண்டைய உடைச்சுக்கிட்டேன். “அப்போ உங்ககிட்ட பேச முடியலை. சாரி“ “அப்படியே இருந்திருக்க வேண்டியது தானே. இப்போ எதுக்கு வந்து இதை எல்லாம் சொல்லி என்னை படுத்துற“ “உங்ககிட்ட சொல்லாம நான் வேற யார்கிட்ட சொல்ல? என் அஜுன்னு நீங்க இல்லாம போயிருந்தாலும் உங்ககிட்ட தான் வந்திருப்பேன்” என்றாள் ஜீவிதா. அதை அஜயால் கூட மறுக்க முடியவில்லை. தன்னை நிதானத்துக்கு கொண்டு வந்தான். “ஜீவிதா இப்போவும் எனக்கு புரியல. எப்படி நீ இப்படின்னு! என்னால நம்ப முடியல” என்றான் அஜய். எதை எதிர்பாத்திருந்தாலும் அவன் இப்படியான ஒன்றை எதிர்பார்த்திருக்கவில்லையே. “நம்புங்க. ஜியா பேரே அதுக்கு சாட்சி” என்றாள் ஜீவிதா. அஜய்க்கு நொடியே பேச்சு வரவில்லை. “ஓஹ் காட்.. ஜியா.. அந்த பேர் என்ன சொல்ற நீ” இன்னமும் என்னவெல்லாம் இருக்கோ? “நீங்க அஜய். நான் ஜீவிதா. சேர்த்து தான் ஜியா” என்றாள் இருவரையும் விரல் நீட்டி சுட்டிகாட்டி. தாரணி மகளுக்கு அந்த பேர் தான் வைக்க வேண்டும் என்று இவள் செய்த அட்டகாசங்கள் ஏராளம். “ஜோசியர் சொன்ன முதல் எழுத்து வேறடி” என்று அக்கா மல்லுக்கட்ட, “முடியவே முடியாது, இந்த பேர் தான் பாப்பாக்கு வைக்கணும்” என்று அவளின் பிடிவாதத்தை கையில் எடுத்தாள். வழக்கம் போல சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் படுத்திவிட்டாள். கல்யாணும் அவளுக்கு சப்போர்ட் செய்ய, தாரணி போன் செய்து அஜய்யிடம் புலம்பல். இறுதியில் அவள் பிடிவாதம் தான் வென்றிருந்தது. அஜய்க்கு அது நினைவிற்கு வர, “இவ்வளவு தான் உன் கிறுக்குத்தனமா?” என்று கேட்டுவிட்டான். “ஏன் இதிலென்ன கிறுக்குத்தனம். பாப்பா நமக்கு பொண்ணு தான். அவ உங்களை மாமா கூப்பிடாம அஜு கூப்பிட வைச்சதே நான் தான். முறை மாறாம இருக்கணும் இல்லை” என்றாள் ஜீவிதா. அஜய் மூச்சை நன்றாக இழுத்துவிட்டவன், அமைதியாக நின்றுவிட்டான். ஜீவிதாவும் அவனுக்கு நேரம் கொடுத்து நின்றாள். வீட்டினர் அதற்கு விட வேண்டுமே? போன் மேல் போன் வர ஆரம்பித்ததுடன், ஆளும் தேடி மொட்டை மாடிக்கு வந்துவிட்டார். அம்மா கூப்பிட்டாங்க என்றவரிடம், “வரேன்னு சொல்லுங்கண்ணா” என்று அனுப்பி வைத்தவன், ஜீவிதாவிடம் திரும்பினான். “என்னை ஏன் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல நிக்க வைக்கிற?” என்று கேட்டான். இந்த நிகழ்வுக்காக நெருங்கிய உறவுகள் அத்தனை பேர் நின்றுவிட்டனர். பெண் வீட்டில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை ஆட்களோ? போதாக்குறைக்கு பெரியப்பா கொண்டு வந்த சம்மந்தம் வேறு. பங்காளிகள் துணை இல்லாமல் அவன் என்ன செய்திருக்க முடியும்? சங்கர் வேலையை விட்டு ஊருக்கு வந்த நாளில் இருந்து உடன் இருப்பவர்கள் ஆயிற்றே? யோசிக்க கூட அவகாசம் இல்லை. அஜய் இக்கட்டு பெண்ணுக்கு முழுமையாக புரியவில்லை. ஆனாலும் கஷ்டப்படுத்துகிறோம் என்று உணர்ந்து கொண்டாள். அதை அவனிடம் கேட்கவும் செய்தாள். “கஷ்டப்படுத்துறேனா?” என்று. “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்லுறது? நீ பேசுறது சாதாரண விஷயம் இல்லை. உணர்வுகள் சம்மந்தப்பட்டது. திடீர்ன்னு வந்து சொன்னா? என் அஜுன்னு உனக்கு தோணுறது எனக்கும் தோணனும் இல்லை. இத்தனை நாள் விட்டு கடைசி நிமிஷத்துல வந்து சொல்லி என்னை போர்ஸ் பண்றது போல இருக்க கூடாது” என்றுவிட, ஜீவிதா அவனை நேருக்கு நேர் பார்த்தவள், மடமடவென நடக்க ஆரம்பித்துவிட்டாள். “ஜீவிதா” அஜய் நின்ற இடத்திலே அழைத்தான். “நில்லு. எனக்கு பதில் சொல்லிட்டு போ“ பெண் நிற்கவில்லை. “அப்போ நான் பொண்ணு பார்க்க போகவா?” ‘போங்க‘ என்பதாய் நடந்தபடியே கை அசைத்து கீழிறங்கிவிட்டாள். ஜீவிதாவிற்கு ரோஷம் வந்துவிட்டது. “இனி பேசலை” என்றாள். “இனி பேசாம இருந்து என்ன ஆக போகுது?” அஜய் வந்து கொண்டே இருந்த போனில் அவளை பார்த்தான்.