கண்ணே முத்து பெண்ணே 18 9319 கண்ணே முத்து பெண்ணே 18 ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை. “என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க” என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார். கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன், “என்னப்பா?” என்று கேட்டான். “அந்த என்ன தான் என்னன்னு உன் அம்மாவை கேட்டு எனக்கு சொல்லு” என்றார் மனிதர். “எத்தனை வருஷமா இவ்வளவு வைராக்கியம் வைச்சிருந்த?” என்று மனைவியிடம் கேட்க, “என. எனக்கு புரியலைங்க” என்றார் மனைவி. “ஆஹ் உனக்கா புரியாது? எவ்வளவு நேக்கா ஒரு நாள்லே என் மக கல்யாணத்தை முடிச்சுட்டு வந்துட்ட“ “அது. நாச்சிக்கு இஷ்டம்ன்னு“ “அவளுக்கு இத்தனை வருஷமா தான் இஷ்டம். உனக்கென்ன திடீர் இஷ்டம்ன்னு தான் கேட்கிறேன்“ “அது, அதான் அவளை அப்படி, அதுக்கு தான் அந்த தம்பிகிட்டே சேர்த்துடலாம்ன்னு“ “அப்போ உன் புருஷன் கையாலாகாதவன்“ “என்னங்க இப்படி பேசுறீங்க” கமலா பதறி போனார். “நீ பண்ணதை தான் சொல்றேன். ஏதோ ஒரு நேரம் என்னால தவறி போச்சு. அதுக்காக என்மேல நம்பிக்கையே இல்லாத மாதிரி. என் குடும்பமே என்னை இப்படி பண்ணா நான் எங்க போய் சொல்ல?” நாராயணன் விரக்தியுடன் சொன்னார். “ப்பா. என்னப்பா இது? நாச்சிக்கு விருப்பட்ட வாழ்க்கையை தானே?” என்று ரவி சொல்ல வர, “அப்போ நான் அவனை பண்ணது? அவளுக்காக தானே அந்த பையனை சிக்க வைச்சேன். இப்போ நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துட்டு என்னை தனியா விட்டீங்க இல்லை“ “என்னங்க“ “பேசாத. சொந்த அண்ணன் மாதிரி அந்த அண்ணாச்சிகிட்ட இருந்தேன். ஆனா அவர் எனக்கு பெரிய ஆப்பா அடிச்சுட்டார். நீங்க, என் குடும்பம், நீங்களே என்னை ஓரங்கட்டிட்டீங்க. என் பொண்ணை எனக்கு இல்லாம பண்ணிட்டீங்க. இனி நான் அவளுக்கு தேவையில்லாம போயிடுவேன். அந்த பையன் அவளை நெருங்க விட மாட்டான்“ “இன்னைக்கு அவ கல்யாணம். அது கல்யாணமா முதல்ல. நாலு பேர் முன்னாடி ஒரு தாலிகட்டு. அப்பா நான் இருந்தும், அவளுக்கு ஒண்ணுமே செய்யலை. ஏதோ ஒன்னுமில்லாதவ மாதிரி, இவ்வளவு நான் பொழைச்சு என்ன பிரயோஜனம்? யாருக்காக இதெல்லாம்? உன் மகனுக்கா? அதுக்கு தான் இப்படி பண்ணியா நீ? சொல்லு” என்று மனைவியிடம் எழுந்து சென்றுவிட்டார். “ப்பா. ப்பா. ப்ளீஸ்ப்பா” மகன் இருவருக்கும் இடையில் நிற்க, நாராயணனுக்கு இன்னும் அடங்கவில்லை. அவர் எகிறி கொண்டிருக்க, “ரவி அவரை விடு” என்றார் கமலா. “என்னடி. என்ன பேசு” “உங்களை எனக்கு தெரியும். நீங்க நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். ஏன் செய்யலை நீங்க?” என்று கணவரிடம் கேட்டார் கமலா. “உங்களுக்குள்ளயும் ஏதோ ஒரு இடத்துல மருமகன் மேல நம்பிக்கை இருக்க போய் தான் விட்டீங்க. இல்லைன்னு சொல்லுங்க” நாராயணன் முகம் திருப்ப, “நீங்க ஒருத்தரை எப்படி எதிர்ப்பீங்கன்னு எனக்கு தெரியாமலா நான் இதை முன்ன நின்னு செஞ்சிருப்பேன்” என்று கமலா மிகவும் ஆணித்தரமாக கேட்டார். இதையே தான் செல்வமும் அங்கு யோசித்திருந்தான். மனைவி அசப்பில் தூங்கிவிட, இவனுக்கு தூக்கம் இல்லை. அவளை பார்த்தபடி படுத்திருந்தவனுக்குள் பல கேள்விகள். முதலில் நாராயணன் பற்றி தான். இவளுக்கு நான் வேணாம்ன்னு அத்தனை தூரத்துக்கு போனவர், இப்போ ஏன் விட்டார்? என்ன காரணம்? இதுக்கு பின்னாடி எதாவது பிளான் இருக்குமா? அவரை எக்காலத்திலும் நம்ப மாட்டான். வாங்கிய அடி அப்படி. கிட்டதட்ட துரோகமே. நம்பிக்கை காட்டி ஏமாற்றுவது அதில் தானே வரும். ஏன்? ஏன்? என்று யோசித்திருக்க, நாராயணன் மனதில் அதற்கான பதில். துரோகம். ம்ஹ்ம். அதே துரோகம் தான். அண்ணாச்சி அவருக்கு பரிசளித்தத்து. நாராயணன் என்றால் விசுவாசம். அண்ணாச்சிக்கு அப்படி தான் இருந்தார். ஆனால் ஒரு நாள் சண்டைக்கே, முதுகில் குத்திவிட்டார். வலிக்கவே இறக்கிவிட்டார். அவரை என்றால் கூட பரவாயில்லை, அவரின் மகளை. எனக்கு என் பொண்ணு உயிர்ன்னு அவருக்கு தெரியும். ஆனாலும் அவளை இதுக்குள்ள கொண்டு வந்துட்டாரே? தாங்கவில்லை மனிதருக்கு. கமலா கேட்டிருந்தது போல், செல்வம் அனுபவித்ததை தான் இன்று இவர் அனுபவித்து கொண்டிருக்கிறார். என் கறை என் பொண்ணு மேல படதுன்னா, வேணாம். அவ சேர வேண்டிய இடத்துல போய் சேரட்டும். விட்டுவிட்டார் செல்வத்திடம். ஒப்படைத்துவிட்டார் மகளை. ஆனாலும் அதை ஒத்துக்கொள்ள அவரால் முடியாது. எனக்கு இஷ்டம் இல்லாத கல்யாணம் தான் இது. மனைவி கேட்டதுக்கு பதிலே சொல்லாமல் அறைக்குள் அடங்கிவிட்டார். மறுநாள் அவருக்கான நாளாக அது இல்லாமல் போனது. விடியலிலே அவரை தேடி ஆட்கள் வந்துவிட்டனர். “கட்டு கொடுங்க” என்றனர். அவரின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கள், ஆட்கள் அவர்கள் எல்லாம். தன்னை காலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்று மனிதருக்கு புரிந்து போனது. மகன் சமாளித்துவிடுவான். மகள் உரியவனிடம் இருக்கிறாள். போதும். அமைதியாக பெட்டியை எடுத்து வந்தார். அவரின் பேரில் இருக்கும் சொத்துக்கான பத்திரிங்களையும் கேட்டனர். “நானே. யார்ன்னு சொன்னா நான் வந்து கொடுத்திடுவேன்” என்றார். அவர்கள் யாருக்கோ போன் செய்ய, அகிலன் வந்தான். “நீங்க என்கிட்டேயே கொடுங்க” என்றான். அவனை மறுக்க முடியவே முடியாது. கொடுத்துவிட்டார். ரவி அமைதியாக பார்த்திருக்க, அகிலன் கிளம்பினான். இன்னும் விடிந்திருக்க கூட இல்லை. “அடுத்த ஆள் யாரா இருக்கும்? அதுக்குள்ளவா ரெடி பண்ணிட்டாங்க” மகனிடம் கேட்டபடி உள்ளே சென்றார் நாராயணன். ரவி அங்கேயே நின்றான். பணத்துக்கும், சொத்துக்கும் அவர்களுக்கு பிரச்சனையில்லை. பினாமி சொத்துக்கள் எதுவும் நிரந்தரமும் இல்லை. ஆனால் அதில் வரும் வருமானம், அதில் ஒரு பங்காவது பார்த்துவிடுவர். இனி அது முடியாது, அது பற்றி கவலையும் இல்லை. தொழில் நன்றாக வளர்ந்துவிட்டது. ரவி தலையெடுத்து தந்தை தொழிலான மில்லை நன்றாக விரிவுபடுத்திவிட்டான். வாடகை, இடம், நகை என்றும் பல உள்ளது. இரு அச்சங்கள் மட்டுமே. ஒன்று நாராயணன். அவரை அமைச்சர் ஆட்கள் எதுவும் செய்ய துணிவர். அடுத்ததாய் செல்வம். அவனின் மாப்பிள்ளை. அடுத்த நாராயணன் அவன் தான் என்பது. நாச்சி அவன் தங்கை, அவளின் எதிர்காலம். ரவிக்கு காலையிலே தலை இடித்தது. அகிலன் அடுத்து நேரே செல்வத்தை தான் பார்க்க சென்றான். சுப்பிரமணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களை கடையில் அமர வைத்து, அண்ணனுக்கு அழைத்தான். அகிலன் அப்போது தான் கடையை சுத்தி பார்த்து கொண்டிருக்க, செல்வம் கீழிறங்கி வந்தான். அத்தனை ஆட்களும் எழுந்து நின்றனர். செல்வத்தை பார்த்து சிலருக்கு அதிர்ச்சி தான். காட்டிக்கொள்ள முடியாது. மரியாதை கொடுத்து நிற்க, செல்வம் அவர்களை அமர சொன்னான். அகிலன் பேச்சில்லாமல் அவனிடம் பெட்டியை கொடுக்க, தயங்கிய கைகளை இழுத்து பிடித்து அதை பெற்று கொண்டான் செல்வம். “இனி இவர் தான் உங்களுக்கு. கணக்கு இவர்கிட்ட தான் கொடுக்கணும். பார்த்துக்கோங்க” என்ற அகிலன் அவர்களை கிளம்ப சொன்னான். அதிகமே சுமை கொண்ட பெட்டியை செல்வம் கீழே வைக்க, “நான் உள்ள வைக்கவாண்ணா?” என்று சுப்பிரமணி அதை எடுக்க வர, “தொடாத. போடா. தள்ளி போடா” என்று கத்தியேவிட்டான் செல்வம். சுப்பிரமணி முகம் சுண்டிவிட்டது. “நான் எடுக்கலைண்ணா” என்று முனகிவிட்டு சென்றான். “அவனை கத்தி என்ன ஆக போகுது?” அகிலன் கேட்க, “நீ வந்த வேலையை மட்டும் பாரு” என்றான் செல்வம். “அடுத்து நானா? ஒரு டீ மட்டுமாவது கிடைக்குமா?” “மணி இவருக்கு டீ கொடு” என்று தம்பியிடம் சொன்னான் செல்வம். “ரொம்ப பண்ற. உன் கையால டீ குடிச்சா செமயா இருக்கும்ன்னு“ “அது எனக்கு மட்டும் தான்” என்று வந்தாள் நாச்சி. காலையில் எழும் போதே கணவன் அருகில் இல்லாமல் ஏமாற்றம். “வேலை இருக்கும். நாம போலாம்” என்று அவனை தேடி கொண்டு வந்தாள் முத்து பெண். “அடடே. வாங்க. வாங்க கல்யாண பொண்ணே. எப்படி இருக்கீங்க?” அகிலன் உற்சாகமாக அவளிடம் சென்றான். “ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இங்க?” என்று கணவனை பார்த்தபடியே கேட்டாள் முத்து நாச்சி. செல்வம் முகத்தை சாதாரணமாக வைக்க முயன்று, கிட்சனுள் செல்ல, “உங்களை பார்க்க தான். என்னோட வாழ்த்து வேணாமா உனக்கு? கல்யாணத்துக்கு தான் கூப்பிடல” என்றான் அகிலன். “அண்ணா கூப்பிட்டிருப்பான்னு நினைச்சேன், சாரி. இப்போ விஷ் பண்ணுங்க” என்றவள், செல்வத்தை தேடி கிச்சனுக்குள் வந்தாள். ஆட்கள் அங்கங்கு வேலை செய்ய தனிமை இல்லை. சிறு அணைப்பை எதிர்பார்த்தது பெண்ணுள்ளம். “உங்களுக்கு அவரை தெரியுமா?” என்று கணவனிடம் நின்று கேட்க, “ம்ம்” என்றான் மனைவிக்கு டீ கலந்தபடி. “அண்ணா சொன்னானா? நல்ல ஸ்போர்ட்டிவான ஆள் தான், என்னோட ரிஜெக்ஷனுக்கு அப்புறமும் என்கிட்ட நல்லா பேசுவார்” என்றாள் முத்து பெண். “என்ன ரிஜெக்ஷன்?” செல்வத்தின் புருவங்கள் ஏகத்துக்கும் சுருங்கியது. “உங்களுக்கு தெரியாதா?” “நான் கேட்டதுக்கு சொல்லு“ “அது மேரேஜ் ப்ரோபோசல். என்னை கேட்டு, நான் உங்களை சொல்லி” என்றவள், கணவனின் கடுகடு முகத்திற்கு காரணம் புரியாமல் அமைதியாகிவிட்டாள். “ண்ணா டீ” என்று மணி சொல்ல, “கொண்டு போய் கொடுடா. எல்லாம் நானே செய்யணுமா?” என்றவன் மனைவிக்கு கொடுத்து அவளுடன் வெளியே வந்தான். அகிலன் இருவருக்கும் கிஃப்ட்டை எடுத்து வந்து கொடுக்க, நன்றி சொல்லி வாங்கி கொண்டாள் முத்து பெண். செல்வத்துக்கு கை கொடுத்த அகிலனின் நிலை தான் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. வலியை முகத்தில் காட்டாமல் ‘டம்’ கட்டியவன், “ஏண்டா இப்படி?” என்றான் மெல்ல. “அவளை கேட்டியா நீ?” என்று இன்னும் பிடியை இறுக்க, “டேய் அது எப்போவோ. உன்னை தெரியாம, அறியாம பண்ணதுடா. அதுவும் நான் இல்லை, என் வீட்ல. ஸ்ஸ். விடுடா. போதும். டேய். அழுதுடுவேன்டா. உன் பொண்டாட்டி முன்னாடி என் மானம் போகும்“ “அதுக்கு தான் ரவிகிட்ட சொல்லியே ஆகணும்ன்னு நின்னியா? எங்க கல்யாணம் நின்னு போகணும்ன்னு பிளான் போட்டிருக்க” செல்வம் பல்லை கடித்தான். “சத்தியமா இல்லைடா. என்ன இருந்தாலும் அவன் என் பிரென்ட். அவனுக்கு தெரியாம. ஆஹ். அயோ வலிக்குது, விட்டு தொலைடா. ப்ளீஸ்டா. மச்சான். நீ எனக்கு மச்சான்டா” என்று கெஞ்சவே செய்தான். “போய் தொலை” என்று கையை விட, “என்ன அவ்வளவு ரகசியம்? டீ குடிங்க” என்று சொன்னாள் நாச்சி. அகிலன் கையை தூக்க முடிந்தால் தானே. பேக்கெட்டுக்குள் கிடு கிடுவென ஆடி கொண்டிருந்தது. இடது கை நீட்டி எடுக்க, “ஒழுங்கா அந்த கையில குடி” என்றான் செல்வம். “எனக்கு டீயே வேணாம். போடா” என்றுவிட்டான் அகிலன். “நீ போ, நான் வரேன்” என்றான் மனைவியிடம் செல்வம். “நீங்க எதுவும் குடிச்ச மாதிரி இல்லை. இதை குடிங்க” என்று அவளுக்கு கொடுத்ததில் மிச்சம் வைத்து சென்றாள் மனைவி. செல்வத்திற்கு இந்த காலை பொழுது இப்படியா இருக்க வேண்டும் என்றிருந்தது. மனைவியின் மிச்ச டீயை குடித்து, தன் ஏமாற்றத்தை மறைக்க, அகிலன் அவனை கடுப்பாக பார்த்து வைத்தான். அந்நேரம் நாராயணன் அரக்க பறக்க ஓடி வந்தார். “ப்பா. பொறுமையா இருங்க பேசலாம். நாச்சி வேற இருக்கா. அவளுக்கு தெரிய வேணாம்.” என்று அவரின் பின்னே ரவி. “என்ன, என்ன இது?” என்று வந்த வேகத்தில் மாப்பிள்ளையிடம் நேரே கேட்கவும் செய்தார் மனிதர். செல்வம் பதில் சொல்லாமல் அவரை பார்த்தபடி நிற்க, “டேய் கேட்டு சொல்லு. ஏன் இப்படி பண்ணனும்? பினாமிங்கிறது சாதாரண விஷயமா? யாரை கேட்டு இதுக்குள்ள தலையை கொடுத்தான். என் பொண்ணுக்கு, என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போறான். முதல்ல எனக்கு பதிலை சொல்ல சொல்லு. அங்கு ஒத்துக்கிட்டு வந்து இந்த கல்யாணத்தை பண்ணியிருக்கான். என்ன எங்களை பழி வாங்குறானா?” என்று மகனிடம் குதித்தார் நாராயணன். “ப்பா. ப்பா. என்ன பண்றீங்க. மெதுவா பேசுங்க” ரவி அவரை கட்டுப்படுத்த பார்க்க, நாராயணன் இருந்த கோவத்தில், “அவன்கிட்ட கேளுடான்னா என்னை கண்ட்ரோல் பண்ற?” என்று மகனின் கன்னத்திலே ஒன்று வைத்துவிட்டார். ரவிக்கு சுர்ரென ஏறிவிட்டது. தன் கைகளை இறுக்கமாக மூடி நிற்க, “அவன் மேல கை வைச்சீங்க. பாத்துக்கோங்க” என்று செல்வம் முன் வந்து நின்றான். “என்ன, என்ன பண்ணுவ? என் மகன், என் மகளை எல்லாம் என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறியா?” “வளர்ந்த பையன் மேல கை வைக்கிறீங்க. என்ன பண்றீங்க அங்கிள். இது சரியில்லை” என்ற அகிலன் நண்பன் பக்கம் நின்றான். “நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்கடா. யாரை கேட்டு நீ இதை பண்ண?” “யாரை கேட்கணும் நான்?” என்று கேட்டான் செல்வம். “என்னை கேட்கணும்? என் பொண்ணை கட்டிட்டு எகிறினா விட்டுடுவேன்னு நினைச்சியா?” “நீங்க என்ன என்னை விடுறது? முதல்ல நீங்க யார் என்னை கேள்வி கேட்க?” “நான் நான் யாரா? டேய் ரவி பார்த்தியா இவனை? என்ன சொல்றான் பார்த்தியா?” “இது தான் நீங்க, எப்போவும் உங்க நிறத்தை நீங்க மாத்திக்க மாட்டீங்க. இப்போவும் என் பிளான்ல எங்க கல்யாணத்தை நடக்க விட்டீங்கன்னு எனக்கு தெரியல. அது என்னவா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. உங்களை ஒரு கை பார்க்க நான் ரெடியா தான் இருக்கேன்” என்றான் செல்வம். நாராயணன் அவனின் புதிதான பேச்சில், பிளான் என்றதில் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தார். அவரிடம் அப்படி ஏதும் பிளான் இல்லையே. மகள் நல் வாழ்க்கைக்கு தானே பார்த்தார். ஆனால் இவன்? நெஞ்சை அடைத்து கொண்டு வர, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். செல்வம் மூச்சிரைக்க நிற்க, “மாப்பிள்ளை. விட்றா” என்றான் ரவி. “என்னடா. என்னடா விடணும். இவரை கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சாரா? முன்ன இல்லை. இனி எதாவது பண்ணட்டும், நானே முன்ன நின்னு இவரை பார்த்திடுறேன்” என்றான். “டேய். அவர். அவர் உங்களுக்காக தான். இந்த லைனுக்குள்ள நீ வந்தது அவருக்கு பயம். நாச்சி பத்தி எல்லாம் யோசிச்சு டென்சன் ஆகிட்டார்” என்றான் ரவி அப்போதும் அப்பாவிற்காக. “என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும். எங்களை நினைச்சு இவர் டென்சன் ஆக வேணாம்” என்றான் மாப்பிள்ளை. “நான் சொன்னேன் இல்லை. நீ என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிற“ “ஆமா அப்படி தான்” செல்வம் சொல்லிவிட, “என்ன சொன்னீங்க?” என்று வந்தாள் முத்து பெண். “நாச்சி” என்று மகளை பார்க்கவும் வேகமாக சென்று அவளின் கை பிடித்து கொண்டார் தந்தை. “இவனை நம்புன, ஆனா இவன், இவன் என்ன வேலை பார்த்திருக்கான் தெரியுமா?” “ப்பா. என்ன பண்றீங்க” ரவிக்கு பதட்டமே. ஏன் செல்வமிடமும் அந்த பதட்டம் வெளிப்பட்டுவிட, நாராயணன் அதை கவனித்துவிட்டார். இவ்வளவு நேரம் என்கிட்ட எகிறி எகிறி பேசுனவன், நாச்சிக்கு தெரிஞ்சிடும்ங்கிறதுல பதட்டபடுறான். அப்போ பொண்டாட்டி பேச்சு கேட்பான். நொடியில் கணக்கிட்டார். செல்வம் அதில் இருந்து வெளியே வந்தால் போதும் என்ற எண்ணமே முதலில் நிற்க, மகளை பற்றி மறந்துவிட்டார் மனிதர். மருமகனை பார்த்தபடியே “உன் புருஷன் அடுத்த நாராயணனா வந்திருக்கான் நாச்சி” என்றார் மகளிடம். முத்து பெண் அதிர்ந்து கணவனை கேள்வியாக பார்க்க, “அமைச்சர் அடுத்த பினாமியா இவனை தான் போட்டிருக்கார்” என்றார் தெளிவாக.