திரும்பி வந்த மதுரா மாமியார் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாமல் வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
மதியமே பூங்கொடியை மோகன் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தான்.
இரவு உணவாக சாதம், பூண்டு குழம்பு, வத்தல் என இருக்க இரண்டு தட்டுகளில் தானே பரிமாறிக் கொண்டவன் அறைக்கு வர, “இன்னும் என்னென்ன கேட்கணும் நான்? இருபத்தி நாலு மணி நேரமும் உங்கம்மாவோட வில்லுபாட்ட கேட்டுகிட்டே இருக்க முடியாது என்னால” என கோவமாக இரைந்தாள் மதுரா.
“அம்மா ரொம்ப கோவத்துல இருக்குடி, இப்படியே இருந்திடாது” சமாதானமாக சொன்னான் சேரன்.
“எப்டி எப்டி என் அண்ணன் மட்டும் மனசு மாறி வர மாட்டார், உங்கம்மா மட்டும் மாறிடுவாங்களா? என் அண்ணன் உங்களை அடிச்சதுக்கு கொஞ்சமும் குறையாத கொடுமை உங்கம்மா எனக்கு செய்றது. சுதந்திரமா நடமாட கூட முடியலை என்னால” என்றாள்.
“உன் அண்ணன் விட்டா என்னை கொலையே செய்வான், என் அம்மா அப்படி கிடையாது. நான்தான் பேசுறேன்னு சொல்றேன்ல, அமைதியா இருடி” சலிப்பாக சொன்னான்.
உறங்கா விட்டாலும் அவளாவது வீட்டில் ஓய்வாக இருந்தாள். அவனுக்கு ஓய்வும் இல்லையே என நினைத்தவள் வேறெதுவும் பேசாமல் உணவுத் தட்டை கையில் எடுத்து அவனையும் சாப்பிடும் படி சொன்னாள்.