Uyirin ularal - episode 28

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 28

பானுவால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. எதுவும் செய்யலாம் என்றால் அம்பிகாவோ ஆற போட்டு செய்யலாம் என்று சொல்லிவிட்டாள். என்னத்த ஆற போடுறாளோ ? இந்த ப்ரியா ஏதாவது செய்வாள் என்று பார்த்தால் அவள் என் குடும்பத்தில் கும்மி அடித்துவிடுவாளோ என்ற பயம், சரி நாமாவது ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லை.

அவள் வேலையிலேயும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை ஏனென்றால் இதுவரை ஒருநாள் கூட இவள் தன் கணவனுக்கு என்றோ, மகளுக்கு என்றோ சமைத்ததும் கிடையாது. வேலையாள் சமைத்துவைப்பதை சாப்பிடத்தான் செய்வாள். கைக்கு ஒரு ஆள் காலுக்கு ஒரு ஆள் என்று ஏவுன வேலையை செய்ய வேலையாள். ஆனால் அந்த அபியோ அதிகாலையில் எழுந்து தானே தன் கணவனுக்கு காலை உணவு, மதிய உணவு என்று அனைத்தையும் சமைத்து பம்பரமாக சுழலுகிறாள்.

வேறு மாதிரி ஏதாவது கலகம் பண்ணலாம் என்றால் ஒரு நொடி கூட இருவரும் பிரியாமல் திரிகிறார்கள். ஏதாவது அவளை சொன்னாலோ அந்த ரிஷி கொத்திவிடுவான். என்னதான் செய்வது இதற்கு முடிவே இல்லையா ? வேறு வழியில்லை ப்ரியாவை அழைக்க வேண்டியதுதான் என்று நினைத்தவள் அதற்கு சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிய ரிஷி டல்லாக இருந்தான். நந்து நந்து என்று அபி பேசிக்கொண்டிருக்க அவனோ அவளை விடாமல் கைக்குள்ளே வைத்துக்கொண்டு அவள் தலையில் தன் தாடையை தாங்கி அமர்ந்திருந்தான்.

" அத்தான் உனக்கு இன்று என்ன இறங்கி நிக்குது. நான் லூசு மாதிரி பேசிக்கொண்டே இருக்கேன் நீயோ போனில் பேசுகிறேன் என்ற பெயரில் ம் ம் என்று உச்சு கொட்டுவார்களே அதுபோல கொட்டிக்கொண்டு இருக்கிறாய். விடு என்னை நான் கோபமாக எழுந்து போக போகிறேன் " என்றாள்.

"சும்மா நொய் நொய் என்று பேசாமல் அமைதியாக இரு குரங்கே. நான் இப்போ சொல்வதை கேட்டாலே நீ கோபத்தில் பறந்துவிடுவாய் " என்றான் அவன்.

" என்ன ? " என்றாள்

" நாம் இருவரும் ஒரு ஒருவாரம் டூர் போகலாமா ?" என்றான்.

" எப்போ " என்று அபி சந்தோசமாக கேட்க

" நாளை " என்றான் ரிஷி.

" போடா இவன, இது எந்த மாதம்? மார்ச். நான் வருடாந்த கணக்கை எல்லாம் முடிக்க வேண்டும். தலைக்கு மேல வேலை இருக்கு. வீட்டில் வந்து பைலை கையில் எடுத்தால் ஆடுறியே என்று இப்படி வெட்டியா உன் மடியில் உட்காந்திருக்கேன். இந்த அழகுல டூர் போகணுமாம். நல்ல நேரம் பார்த்தார் டூர் போக " என்று கடித்தாள் அபி.

" அப்படின்னா நான் மட்டும் தனியா போயிட்டுவரேன் " என்றான் ரிஷி. அப்போது அவளது கையை சேர்த்து கட்டிக்கொண்டான். அடியில் இருந்து தப்ப வேண்டாமா ?

" என்ன தனியா போயிட்டுவரியா ? அப்படின்னா ஐயா ஆல்ரெடி பைனல் பண்ணிட்டு என்னிடம் போட்டு வாங்கிரியா ? மகனே செத்த என்னிடம். கையை விடுறியா இல்லையா ? என்று " என்று திமிறினாள் அபி.

" கண்டிப்பா போயே ஆகனும் செல்லம், சொன்னால் கேளு " என்றான் அவன் கையை விடாமல்.

" விடு என்னை, விடு " என்றவள் அவன் விடாமல் போக அவன் கையை கடித்துவிட்டாள். அவன் வலியில் பட்டென்று கையை விலக்க எழுந்தவள்

" உன்னை என்ன செய்கிறேன் பார், டூரா டூர். அதுவும் ஒருநாள் இரண்டு நாள் இல்லை. ஒரு வாரம். போயிடுவாயா நீ ? உன்னை " என்றவள் அவன் முடியை பிடித்து ஆட்ட தொடங்கினாள்.

"ஆ ஆ வலிக்குதடி ராட்ஷசி, விடுடி. விடும்மா ப்ளீஸ். நான் சொல்றதை கேள் ப்ளீஸ் " என்று கெஞ்சினான்.

அவன் முடியை விட்டவள் கோபத்தில் கட்டிலில் போய் அமர்ந்தாள்.

" நீ எதுவும் சொல்ல வேண்டாம், நீ ஒரு அரக்கன், ராட்சஸன் உனக்கு என் மேல் பாசமோ, அக்கறையோ கொஞ்சமும் இல்லை. எருமை என்னிடம் பேசாதே போ, ஒரு வாரம் என்ன ஒரு மாசம், வருஷம் வேணாலும் போ. எனக்கு என்ன ? " என்று பேசிக்கொண்டே இருந்தவள் ஓஒ என்று அழ தொடங்கினாள்.

ரிஷி செய்வதறியாது நின்றான். அவள் செய்யும் ஆர்ப்பாட்டம் அவளின் குழந்தை தனத்தை காட்டியது. எடுத்து சொன்னால் புரிந்துகொள்வாள் என்ற இவன் நம்பிக்கை ஆட்டம் காண இவனின் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தான்.

" இப்போ எதுக்கு அழுற, நான் என்ன ஊர் சுத்தவா போகிறேன், வேலைக்குத்தானே போகிறேன். அந்த மனோ மனைவிக்கோ இதான் மாசம். தனியாக இருக்கும் அவளை விட்டுட்டு போ என்று எப்படி சொல்ல ? வேறு யாரையும் அனுப்ப முடியாது. எல்லாம் உன்னால் தான் வந்தது. உன் கொடுமை பொறுக்க முடியாமல்தான் நான் அந்த ஆந்திரா ப்ராஜெக்ட்டையே எடுத்தேன். நம்மை பார்க்க பிடிக்காமல், பார்க்கும் நேரமெல்லாம் பேயாட்டம் நிற்கிறாளே என்ற வெறுப்பில் எடுத்த வேலை. எடுத்தாச்சு நடுவில் விடவா முடியும். கான்கிரிட் ஒர்க் ஸ்டார்ட் பண்ணனும். நான் போகாமல் முடியாது. நான் என்ன செய்வேன். நானே ஒருவாரம் உன்னை பிரிந்து இருக்க வேண்டுமே என்று நொந்து போய் வந்திருக்கிறேன், இதில் நீ வேற கொதிக்கிற." என்று சத்தத்தை கூட்டி பேசியவன் தலையை பிடித்து கொண்டு சோபாவில் இருந்துவிட்டான்.

அபிக்கோ அவன் பேசியது எதுவும் காதில் விழுந்ததா இல்லையா என்று தெரியவில்லை " என்ன ஆந்திரா போறியா ? ஒரு நேரம் அங்கே போய் என்னை ஒரு பொறுக்கி கையில் கொடுக்க பார்த்த, மறுபடியும் அங்கேயே என்னை தனியே விட்டுட்டு போறியா ?" என்றவள் கேவி கேவி அழ தொடங்கினாள்.

ரிஷி அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறினான். பக்கத்தில் போனால் அடி கடி என்று எல்லாம் கிடைக்கிறது. என்ன செய்யலாம் ?தாயிடம் சொல்லலாமா என்று கூட யோசித்தான். இல்லை அப்புறம் இவளின் கோபம் அதிகமாகத்தான் ஆகும். இப்போதாவது அழுது கோபத்தை வெளியே காட்டிவிடுகிறாள். தாயிடம் கூறினால் சரி சரி என்று கோபத்தை உள்ளே அடக்கிக்கொண்டு மறுபடியும் எதையாவது இழுத்துக்கொள்வாள். இப்போது கொஞ்ச நாளாகத்தான் டப்லெட் போடுவதை நிறுத்தியிருக்கிறாள்.

ஒரு வழியை முயற்சிக்கலாம், இரண்டு மாதம் ஆகியும் சதா ஒட்டிக்கொண்டு நகமும் சதையுமாக இருந்தும் மறந்தும் கூட ஒரு கணவனாக நான் அவளை தீண்டியதில்லை. எனக்குள் இருக்கும் தயக்கம் என் உயிராய் கலந்த அவளை என் உடலால் கலக்க நான் விட்டதில்லை. ஆணான நானே அந்த ஆசையில் அவளை பார்க்காத போது அவள் என்னிடம் அப்படி எப்படி நடப்பாள்.

ஸோ இன்று வரை இருவரும் ஒருவருக்கு ஒருவர் அம்முவும், அத்தானும் தான். ஆனால் இன்றைய நிலையை சமாளிக்க அந்த ஒரு வழிதான் இருக்கிறதோ ? என்ற சிந்தனையில் இருந்தவன் அவளை பார்த்தான். உதட்டை பிதுக்கி கொண்டு ஏங்கி ஏங்கி அழும் அபியை பார்த்தவனுக்கு முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தை தன் தாயை பிரிய முடியாமல் துள்ளி துள்ளி அழுவது போல இருந்தது.

இந்த கடன்காரியும் முதல் நாள் பள்ளிக்கு போகும் போது அப்படிதான் அழுதாள். என்ன ? அம்மா அம்மா என்று அழுவதற்கு பதில் சின்தா சின்தா என்று மழலை மொழியில் அந்த ஸ்கூல் காம்போண்டே அதிரும்படி அழுது புரண்டாள். இவளை சமாளிக்க முடியாமல் நான்காம் வகுப்பில் இருந்த என்னுடன் ஒரு வாரம் இவளை கொண்டு போட்டனர். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி அவளை அவள் கிளாஸுக்கு அனுப்பினேன்.

அட ராமா இதுக்கு முடிவே இல்லையா ? குழந்தையாக அடம் பிடித்து அழும் அந்த குமரியிடம் கணவனாக எப்படி நடப்பேன்." என்று நினைத்து குழம்பி போனவன் அந்த ஐடியாவையும் கைவிட்டுவிட்டு இவனே குழந்தையாக மாறி அவள் மடியில் போய் தஞ்சம் புகுந்தான் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு.

தன் மடியில் படுத்தவனை பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டு பார்த்தவள் அது முடியாமல் போகவே கோபத்தில் அவனை முறைத்து பார்த்தாள். அவன் முகத்தில் இருந்த வேதனை தன்னை விட்டுப்போவதில் அவனும் சந்தோசமாக இல்லை என்பதை காட்டவே மெல்ல அழுகையை நிறுத்தினாள்.

" எப்போ போகணும் " என்றாள்.

" காலையில் 7மணிக்கு " என்றான் அவன் அவள் முகத்தை பாராமல்.

" சரி எழுந்திரு பேக் பண்ணலாம் " என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டு.

இப்போது அவள் முகத்தை பார்த்தவன் எழுந்து அமர்ந்து அவளை கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தம் கொடுத்தான்.

" சாரி செல்லம் இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறேன். இனி வெளியூர் போகும் போது உனக்கும் ஏற்ற நாளாக பார்த்து பிளான் போடுறேன் சரியா ? நான் உனக்கு தினம் தினம் வீடியோ கால் பண்ணுவேன், என் செல்லத்தை நினைத்துக்கொண்டே இருப்பேன் சரியா ?" என்றான்.

அபி சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள். பிறகு இருவரும் தேவையானவற்றை பேக் பண்ண ஆரம்பித்தனர். அப்போது ரிஷி " அம்மு ஒரு வாக்கியம் உண்டு கேள்வி பட்டிருக்கியா ? வைத்தால் குடும்பி அடித்தால் மொட்டை என்று. அது உனக்கு சரியாக பொருந்தும். கல்யாணத்திற்கு முன் என்னை பார்த்தாலே உனக்கு வெறுப்புதான், ஆனால் இப்போது இந்த அழுகை " என்றான் சிரித்துக்கொண்டு.

" இதையெல்லாம் உனக்கு அண்ணிகள் என்ற பெயரில் மூன்று பன்னிகள் இருக்கிறார்களே அவர்களிடம் போய் சொல்லு.. ராட்சஸிகள் என்னமா பேசுவார்கள். அவர்கள் பேச்சில் நான் வீட்டை விட்டு ஓடவில்லையே என்று சந்தோசப்படு அப்புறம் எங்கே உன்னிடம் பேச " என்றாள் அபி கோபத்தில்.

கிளம்பும் முன் ஆயிரம் முறை சொல்லிவிட்டான் டேக் கேர், டப்லெட் யூஸ் பண்ணாதே, மைண்டை ஒர்க்கில் டைவர்ட் பண்ணு என்று.

அபி வாயில் இருந்து பதில் எதுவும் வரவில்லை. தலையை மட்டும் ஆட்டினாள் அவன் கையை இறுக்க பிடித்துக்கொண்டு. அவனை ஏர்போர்ட்டில் டிராப் பண்ணிட்டு வந்த அபிக்கு அந்த அறையின் வெறுமை மிரட்டியது. உடனே ஆபீஸ் கிளம்பி போய் விட்டாள்.

தன் புத்தி வேறு எதையும் பற்றி நினைக்காமல் இருக்க அணைத்து வேலையையும் இழுத்து போட்டுகொண்டாள். வருட கணக்கை முடித்து IT பைல் செய்யும் வேலையும் அவளுக்கு சிந்திக்க நேரம் இல்லாமல் இழுத்து சென்றது. தீவிரவாதிகளால் வெளிநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் பங்கு சந்தையில் பங்குகளின் மதிப்பு தரையை தொட்டது. அதில் புதிதாக சில பங்குகளை வாங்கியவர்கள் பணத்தை இழந்து நஷ்டபட்டு நின்றனர். இவள் அதிலே கவனமாக இருந்ததனால் இரண்டு நாளை எப்படியோ ஓட்டிவிட்டாள். ரிஷி போய் சரியாக மூன்றாவது நாள் ப்ரியா வந்து நின்றாள் அபியிடம் மன்னிப்பு கோரிக்கொண்டு.

முதலில் அவளிடம் பேசவே அபி தயாராக இல்லை. அக்காவிற்கு சளைக்காத தங்கையாயிற்றே என்று. ஆனாலும் அபிக்கு ப்ரியாவிடம் எப்போதுமே ஒரு ஸாப்ட் கார்னெர் உண்டு ரிஷியை ஐந்து வருடம் காதலித்தவள் என்று.

ஆயிரம் நியாயம் பேசினாலும், அவள் அபிக்கும் கெடுதல் செய்யவே நினைத்தாலும் அதன் பின்னனியில் இருப்பது அவளுடைய ஐந்து வருட காதல் அல்லவா. நல்லவள் கெட்டவள் என்பது எல்லாம் காதலுக்கு கிடையாதே என்று நினைத்த அபி ப்ரியாவிடம் பேச ஒத்துக்கொண்டாள்.

" அபி முதலில் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் காதலை இழந்த கோபத்தில் என் அக்கா சொன்னபடியெல்லாம் முட்டாள் தனமாக நடந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு.

என் அக்கா உனக்கு கெடுதல் நினைத்தாள் என்பதற்காக நானும் அப்படியே இருப்பேன் என்று நினைத்துவிடாதே. பேஸிக்கா எனக்கு உன் மேல் எந்த விரோதமும் கிடையாது. ரிஷி காதலிக்கும் என்னை விட உன் மேல் மிகவும் அக்கறையும், அன்பயையும் காட்டுவதை பார்த்த போது அஃப்கோரஸ் உன் மேல் எனக்கு கோபமும், பொறாமையும் வந்தது. அது எனக்கு மட்டும் இல்லை, யாருக்கு வேண்டுமென்றாலும் ஏன் உனக்கே கூட வரத்தான் செய்யும். அது ஹியூமன் நச்சுரல்.

" ஆனால் அத்தான் உங்களை காதலிக்கவில்லை என்று கூறினாரே " என்றாள் அபி ப்ரியாவை நம்பவில்லை என்பதுபோல.

" ஆமாம் என்னிடமும் அதையேதான் கூறினார். எப்போது தெரியுமா ? உங்கள் கல்யாணத்திற்கு முந்திய இரவில். ஐந்து வருடமாக நான் அவரை காதலிக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும், சம்பந்தப்பட்ட அவருக்கு மட்டும் அது தெரியாமல் போகுமா ? அதெல்லாம் பொய். உன்னை அந்த பொறுக்கியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், அதே நேரத்தில் இந்த குடும்ப மானமும் காப்பாற்ற பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தன் ஐந்து வருட காதலையே நெருப்பில் போட்டு கொளுத்திவிட்டார். " என்றாள் ப்ரியா கலங்கிய கண்களுடன்.

" ஆனால் என் அத்தான் என்னிடம் எப்போதுமே பொய் சொல்ல மாட்டார் " என்றாள் அபி விடாமல்.

" ஆமாம் அது உண்மைதான் உன்னிடம் அவர் எப்போதுமே பொய் சொல்ல மாட்டார்தான் அதற்காக உன்னிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவார் என்பதும் இல்லை. உங்கள் திருமண நாளுக்கு முந்தய இரவு நான் அவரை சந்தித்து தோட்டத்தில் வைத்து தனியாக பேசி என் காதலுக்கு நீதி கேட்டேன் அவர் உன்னிடம் அதை கூறினாரா ?" என்று கேட்டு அபியின் வாயை அடைத்தாள் பிரியா.

அதற்கு அபி முகத்தில் படர்ந்த யோசனையுடன் இல்லை என்பது போல தலையாட்டினார்.

" நீங்கள் என்னை திருமணம் செய்யவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறினேன், அதற்கு ரிஷி ஒரு கேவலமான பொய்யை சொல்லி என்னை சமாதானப்படுத்தினார். அதை பற்றி ஏதாவது உன்னிடம் கூறினாரா ? " என்று கேட்டு அபியின் மறுப்பான தலையாட்டலை மட்டுமே பதிலாக பெற்றாள்.

" என்ன சமாதானம் கூறினார் தெரியுமா அவர் . அவர் ஆண்மையற்றவராம். நான் திருமணத்திற்கே தகுதி அற்றவன். அம்முவுக்கு அந்த ஜெய்யிடம் திருமணம் நடந்திருந்தாலும் நான் உன்னை மனந்திருக்க மாட்டேன் என்றார். நான் உயிருக்கு உயிராய் காதலிக்கும் என் கண்மணியான உனக்கு தகுதியே இல்லாத நான் எப்படி தாலிகட்டுவேன் என்றார். அப்படின்னா அபி மட்டும் பாவம் இல்லையா என்று கேட்டதற்கு இந்த கல்யாணம் இப்போது அவளுக்கு மிகவும் முக்கியம் அது இது என்று என் வாயை அடைந்துவிட்டார்." என்றாள் ப்ரியா வராதா கண்ணீரை துடைத்தபடி.

அபி உள்ளே அதிர்ந்து, உடைந்து மலையாட்டும் நிற்க ப்ரியா தொடர்ந்தாள். அவர் மேல் இருந்த கோபத்தில் நான் அவரை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது. கல்யாணம் ஆகி இரண்டு மாதம் ஆகியும் இன்னும் உன்னிடம் அவர் கணவனாக நடந்துகொள்ளவில்லை, அதாவது உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட அவர் இன்னும் படுக்கையை பகிரவில்லை என்று தெரிந்த போதுதான் அன்று அவரை கோபத்தில் விட்டுக்கொடுத்தது தப்போ என்று இன்று வரை தவித்துக்கொண்டிருக்கிறேன் "என்று தன்னுடைய கடைசி ஆயுதத்தையும் குறி தவறாமல் அபியின் மனதிற்குள் எய்தாள் ப்ரியா.

தங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய, இருக்கிறது என்று இவள் நினைத்துக்கொண்டிருந்த அந்தரங்க ரகசியம் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று அபி யோசித்த யோசனையை அவளில் முகத்தை பார்த்தே கண்டுகொண்டாள் ப்ரியா.

" இது எனக்கு எப்படி தெரியும் என்று நான் யாரிடமும் கூற கூடாது. ஆனாலும் நான் பொய் சொல்லவில்லை என்பதை உன்னிடம் நிரூபிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. ரிஷி ஊருக்கு போகும் முன் அவரை நான் வெளியே வைத்து யதேச்சையாக சந்தித்தேன் அப்போதுதான் அவர் முகத்தில் ஒரு புது மணமகனின் சந்தோசத்தை காணாமல் நான் துருவி துருவி கேட்க வேறு வழி இல்லாமல் கூறினார் " உன்னை மனதில் வைத்துக்கொண்டு அவளை எப்படி தொடுவது " என்று என்றாள் ப்ரியா.

அப்போது அந்த பாழாய் போன மூளை கல்யாணம் ஆன புதிதில் சண்டையிட்டு நீச்சல் குளத்தில் நீந்திவிட்டு இரவு சமாதானம் செய்யும் போது தெரிந்தோ தெரியாமலோ தன் வயிற்றின் மேல் பட்ட கையை பட்டென்று விளக்கினானே அதை சரியாக நினைவு படுத்தியது. அதன் பிறகு இரண்டு மாதம் ஒன்றாக ஒரே அறையில் ஒட்டிக்கொண்டு இருந்த போதும் அப்படி ஒரு நிகழ்வு தங்களுக்குள் ஏற்படாததும் நினைவு வந்தது. இது தானாக நிகழ்ந்ததா இல்லை அவன் நிகழ்த்தினானா ? என்று அவனுக்கு சாதகமாக இருக்க ஏதாவது ஒரு க்ளூ கிடைத்துவிடாதா ? இந்த ப்ரியா சொல்வதை பொய் என்று அடித்து கூறிவிட என்று யோசித்தவளுக்கு மறுபடியும் நெகடிவாகத்தான் ஒரு நிகழ்வு நியாபகம் வந்தது.

அபி ரிஷிக்கான அனைத்து வேலையும் தானே செய்தாள். பல நாள் காலை உணவை மேலே எடுத்துவந்து அவனுக்கு ஊட்டித்தான் விடுவாள். அப்படி ஆபீஸ் போக தயாராகும் போது அவனின் ஷர்ட் பட்டனை போட வந்தவளை பதறி தடுத்தான். காரணம் கேட்டதற்கு " நீ என்னை முழு நேர சோம்பேறியாக ஆக்காமல் விட மாட்டாய் " என்று சிரித்தான்.

அபி இதையெல்லாம் நினைத்து முழுவதுமாக உடைத்தாள். ப்ரியா முன்பாக அழுது தன் குடும்ப பிரச்சனையை ஊர் சிரிக்க வைத்துவிட கூடாது என்பதால் தன்னை அடக்க மிகவும் பிரயாச பட்டாள்.

ப்ரியா உண்மை பாதியும் பொய் பாதியும் சொல்லி அவளுடைய காதலை உண்மையாக்கினாலும் அபி அவளை நம்பாதது போலவே பார்த்தாள்.

அபியை அடிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டாலும் அதை அடக்கிக்கொண்டு " இன்னும் என்னை நீ நம்பவில்லையா ? சரி எல்லாவற்றையும் பொய் என்றே வைத்துக்கொள், ஆனால் நான் என் காதலை நான் ரிஷியிடம் கூறியபோதும், என் பெற்றோர் உன் அத்தையிடம் பேசிய போதும், அபிக்கு திருமணம் முடியட்டும் என்று மட்டும்தானே கூறினார்கள். என்னை மறுக்கவில்லையே, அப்படி அவர் செய்யாததுவே அவர் காதலை காட்டுதே. அபி யூ க்நோவ் ஒன் திங் காதல் என்ற பெயரில் ஊரை சுற்றி, அப்படி இப்படி என்று இருப்பவர்களின் காதல் தோற்றுப்போனால் கூட அதை அவர்கள் உடனே மறந்து விடுவார்கள். ஆனால் அவரை ஐந்து வருடம் உணர்வோடு சுமந்த எனக்கு இனி ஒரு வாழ்க்கை இல்லை.

அதனால் தான் நான் உன்னிடம் சில நேரம் தவறாக நடந்துகொண்டேன் என்னை மன்னித்துவிடு. அப்புறம் அபி என் தரப்பு நியாயத்தை உன்னிடம் கூறினேனே தவிர வேறு எதையும் நான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ரிஷியை என்னை மறக்க செய்துவிட்டு உன்னுடன் வாழ்க்கை நடத்தச்சொல். அப்புறம் நான் கூறியதை ரிஷியிடம் கேட்டு அவரை கஷ்டப்படுத்தாதே" என்றவள் தன் வேலை முடிந்தது என்று சென்றுவிட்டாள்.

அபி அடித்து இறுக்கிய சிலையாய் அசையாமல் நின்றாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
மூதேவி ப்ரியா வில்லி வேலையை ஆரம்பித்து விட்டாள்
இதோடு இவள் விடுவாளா?
இல்லை கச்சேரி இன்னும் இருக்கா?
கரெக்ட்டா ரிஷி இல்லாத நேரம் பார்த்து தன் வில்லி வேலையை ப்ரியா ஆரம்பித்திருக்கிறாள்
இன்னைக்கு மூணு அப்டேட்ஸ் கொடுத்தது ரொம்பவே சந்தோஷம், லதா டியர்
இன்னும் ஒன்பது பத்து அப்டேட்ஸ்தானே இருக்கும்
அதையும் சீக்கிரமா கொடுத்துடுங்கப்பா
அப்படியே அந்த "மெல்லிய நேசம்" நாவலையும் படிக்க கொடுங்கப்பா
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப கெட்ட எண்ணம்

அபி அவ சொன்னத
நம்பிட்டாளே
 

RajiChele

Well-Known Member
Akka thangachi ku Vera velaye Ila!! Epo paru ethavathu kolapam pana vendiyathu!!!

Abi Vera confuse akitale!!!! Rishi Vera urula Ila aduthu ena nadaka pokutho???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top