மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 11

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
மூவருமாய் வீடு வந்து சேர்ந்தனர். சஞ்சனா ஆவலுடனும் நித்தி கவலையுடனும் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தனர். மதுமித்ராவைப் பார்த்ததும் நித்தி ஓடிச் சென்று கலங்கிய கண்களுடன், 'என்னாச்சு மது... ' என்றாள்.

பார்வதி தன் மகளைப் பார்த்து., 'அந்த ஹாஸ்டல் சரியில்லை நித்தி... இப்போதைக்கு மித்ராக்கு ஹாஸ்டல் இல்ல... ' என்றாள். நித்திக்கு அதிக சந்தோஷம் தான். ஆனால் மதுமித்ராவின் முகம் சில நாட்களாகவே சரியில்லை என்பதை அவளும் உணர்ந்திருந்தாள். எனவே வெளிக்காட்டாமல் மித்ராவை உள்ளே அழைத்துச் சென்றாள்.

சஞ்சனா தான் பார்வதியிடம் ஏன் சரியில்லை., எதற்கு போகவில்லை என குடைந்து கொண்டு இருந்தாள். கோபமுற்ற நித்தி., 'என்ன சஞ்சனா உனக்கு பிரச்சனை... உனக்கு இஷ்டம் இல்லைன்னா நீ தாராளமா போகலாம்... ' என்று சீறவும் பார்வதி தான் இடையில் வந்து தன்‌ மகளை அடக்கி வைக்க வேண்டியதாயிற்று...

அழையா விருந்தாளிக்கு எவ்வளவு சங்கடமோ அதே போல் தான் மதுமித்ராவிற்கும் இருந்தது. சரியாக சாப்பிடவும் இல்லை.. தூங்கவும் இல்லை.. அவளைக் கண்ட அபிநந்தனுக்கு தன்னைத் தானே அவள் வருத்திக் கொள்வது வருத்தமளித்தது. அவள் ஹாஸ்டலே சென்று விடலாம் நிம்மதியாகவாவது இருப்பாள் என தோன்றியது..

அவனுக்கு தீர்க்க முடியாத கவலை தான் என்றாலும் அவளாவது சந்தோஷமாய் இருக்கட்டும் என்றெண்ணி அவனும் ஹாஸ்டல் தேட ஆயத்தமானான். சஞ்சனாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை பற்றி பேசி‌ மதுமித்ராவை வருத்திக் கொண்டே இருந்தாள்.

நித்தியிடமும் கூட மதுமித்ரா அதிகமாக பேசவில்லை. அவள் ஒரு பக்கம் அப்படியென்றால் அபிநந்தனும் அதே போல் இருந்தான். அவனிடம் இருந்த சிறுபிள்ளைத்தனம் மொத்தமும் காணாமல் போய் இருந்தது. தங்கையிடம் போடும் சண்டைகளும் சுத்தமாய் நின்றிருந்தன...

பார்வதிக்கு தான்‌ வீட்டின் அமைதி என்னவோ‌ போல் இருந்தது. மதுமித்ராவையும் மகளாய் எண்ணியதாலோ என்னவோ அவளால் தான் இந்த நிலை ‌என அவளுக்கு தோன்றவேயில்லை... இதை மாற்ற தான் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அன்று இரவு அவள் உணவு தயாரித்துக் கொண்டு இருக்கும் வேளையில் அபிநந்தன் உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்ததை அறியாத மதுமித்ரா தண்ணீர் வேண்டி தானும் வாசல் வரை சென்றுவிட்டாள்...

நந்தன் பார்வதியிடம் சென்று., 'ம்மா... ' என்றழைத்தான். மதுமித்ரா அவன சத்தத்தைக் கேட்கவும் அப்படியே நின்று கொண்டாள்.

'சொல்லு அபி... '

'நான் ஹாஸ்டல் பார்க்கப் போறேன்.. அந்தப் பொண்ணுக்கு... '

பார்வதி திடுக்கிட்டவளாய்., 'என்னடா ஒளறுற... உனக்கென்ன கஷ்டம்... அவ இங்க இருக்கிறதுல... ' என்றாள். மதுமித்ராவிற்கு கண்கள் குளமாயின. தண்ணீர் குடிக்க வந்ததை மறந்து விருட்டென்று நகன்றுவிட்டாள். அவ்வளவு தொந்தரவாகிவிட்டதா அவனுக்கு... சஞ்சனாவிற்கும் அவனுக்கும் தான் இடையூறாய் இருக்கிறோம் போல... என்ன ஒரு நிலை இது. ஒரு வீட்டில் அமர்ந்து கொண்டு இப்படியா அசிங்கப்படுவது.

பார்வதி தன் மகனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்... அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே., 'சொல்லு தம்பி... என்ன பிரச்சன... ' என்றாள்.

'எனக்கில்லம்மா பிரச்சன... அவள அட்லீஸ்ட் பார்க்கவாவது முடியுதேனு நான் சந்தோஷமா தான் இருக்கேன்.. ஆனா அவள பார்த்தியாமா... சரியா சாப்பிட மாட்டேங்குறா... தூங்க மாட்டேங்குறா... பரிதாபமா இருக்கும்மா... இன்னும் அவள இங்கேயே வச்சிருந்து சிதைக்கிறதுக்கு ஒரு நல்ல ஹாஸ்டலா பார்த்து அனுப்பிடலாம்மா... இத நான் செய்யலைனா அது என்னோட சுயநலம் மா... அவள இழக்க விரும்பல மா... நான் ஹாஸ்டல் பார்க்குறேன்..'

'இந்த ஊர்ல நீ எங்க போய் ஹாஸ்டல் தேடுவ... அப்படியே கிடைச்சாலும் நல்லாவா இருக்கும்.. தம்பி அவ குழப்பத்துல இருக்கா.. குழப்பம் தெளியட்டும் தம்பி... உன்ன பிடிக்குதோ பிடிக்கலையோ அவளே சொல்லிடட்டும்.. அவ பழையபடி தைரியமாகிட்டான்னா நான் அவள ஹாஸ்டல்க்கு விடுறேன்... இல்லைன்னா அவ இங்க இருக்கட்டும்... அவள சும்மா பேச்சுக்கு தான் மகனு சொல்றேன்னு நெனச்சுட்டியா... அவ மக தான் எனக்கு....' என்றாள் பார்வதி கோபமாக...

மகன் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ளவும்., 'கண்ணா... எனக்கு நம்பிக்கை இருக்குடா... அவள நான் கவனிச்சு இருக்கேன்..‌ அவளுக்கு உன்ன பிடிக்காதுனுலாம் கிடையாது... அவ கிட்ட இருந்து நீ ஒதுங்கி இரு... சீக்கிரமே அவளுக்கு புரியும்..‌ நீ தப்பான எண்ணத்துல செய்யலன்னு... ' என்றாள்.


அம்மாவின் பேச்சில் நம்பிக்கை உற்றவனாய்., '‌சரிம்மா...' என்றுவிட்டு நகன்றுவிட்டான்.

இரவு நெருங்கும் முன் மதுமித்ரா ரூமினுள் சென்று தன் கல்லூரி பையினை எடுக்க சென்றாள். அபிநந்தன் உள்ளே அமர்ந்திருக்கவும் வெளியே செல்ல நினைத்தவள், அவன் புறம் திரும்பி., 'ஹாஸ்டல்... வேகமா தேடுங்க... ரொம்ப நல்லதா இருக்கும் ரெண்டு பேருக்குமே.' என்றாள்.

அபிநந்தன் அவளைப் பார்த்துவிட்டு திரும்பிப் படுத்து கண்ணை மூடிக் கொண்டான்... அவளும் வெளியேறிவிட்டாள். அடுத்து வந்த நாட்களில் இருவரும் சகஜமாகிவிட்டனர். நந்தனும் மதுராவும் ஒருவருக்கொருவர் பேசவில்லையே தவிர அனைவரும் பேசி சிரித்துக் கொண்டனர்.

மதுராவிற்கும்‌ சரி நந்தனுக்கும் சரி அதுவே பெரும் ஆறுதலாய் இருந்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் சிரிப்பை இருவருமே ரசித்துக் கொண்டு இருந்தனர். பார்வதியும் அவ்வப்போது இதனைக் கவனித்தாள்.

ஆனால் அந்த சிரிப்பையெல்லாம்‌ உடைத்து அவளை வீட்டை விட்டு வெளியேறச் செய்யும்‌‌ அந்த வார இறுதி என யாரும் நினைத்திருக்கவில்லை..

அன்று விடுமுறை.. கல்லூரிக்கு செல்லாமல் பெண்கள் மூவரும் வீட்டில் இருக்க., நந்தனும் அன்று வேலை இல்லை என அங்கே இருந்தான். பார்வதி கொள்ளு வைத்து தட்டை செய்து விற்பனை செய்யலாம் என நினைத்திருந்தாள்.‌ அதற்காக கொள்ளு வாங்க வேண்டி இருந்தது.

மகளை உடன் அழைத்துக்‌ கொண்டு 1 மணி நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றாள். மதுமித்ரா, சஞ்சனா, அபிநந்தன் என மூவர் மட்டும் வீட்டில் இருந்தனர்.. மதிய சமையலுக்கு என்று மதுமித்ரா வெங்காயம் வெட்டி வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள். அப்போது தான் கவனித்தாள்.. சஞ்சனா அறைக்குள் சென்று கதவை தாளிடுவதை...

இந்தப் பெண் எதற்கு இங்கே செல்கிறாள். அவன் குளிக்க தானே சென்றான் என அவள் கதவையே வெறித்த வண்ணம்‌ இருக்க 5 நிமிடம் கழித்து ஈரம் அப்பிய உடையுடன் சஞ்சனா வெளியே வந்தாள். மதுமித்ராவிற்கோ பெரும் வியப்பு.. மதுமித்ராவைக் கண்ட சஞ்சனாவோ வெட்கப்பட்டவாறே தலையை குனிந்து கொண்டு சென்றுவிட்டாள்.

கற்பனை எதுவும் பண்ணாதே மது என அவள் மனதிற்குள் நினைக்கும் போதே ஈரத் துண்டில் தலையை துவட்டிக் கொண்டே அபிநந்தனும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.

சில நொடிகளில் நடந்ததை புரிந்து கொண்டவளுக்கு உடம்பெல்லாம்‌ கூசுவதைப் போல் இருந்தது.. இதே நினைப்பில் தானே தன்னையும் அணைத்திருப்பான்... அதுவும் கண்களில் துளியளவும் செய்த தவறைப் பற்றி உருத்தல் இன்றி.

சஞ்சனா அபிநந்தனிடம் சரியாக., 'அபித்தான்... தண்ணி வேணுமா... ' என்றாள்.

'குடு சஞ்சு‌.. ' என்றான் அவனும்...

மதுமித்ரா சட்டென்று வாசல் அருகில் சென்றுவிட்டாள்... ஆனால்‌ பாவம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை., சஞ்சனா மதுமித்ராவைப் பார்த்துக் கொண்டே தான் உள் சென்று அறையைத் தாளிட்டாள். பாட்டிலில் இருந்த தண்ணீரைத் தான் தன் மேல் அப்பிக் கொண்டாள். அபிநந்தன் அவள் உள்ளே வந்ததையும் அறிந்திருக்கவில்லை, வெளியே சென்றதையும் அறிந்திருக்கவில்லை என்று...
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணால் காண்பதுவும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்-ங்கிறதை
மதுமித்ரா மறந்துட்டாளோ?
என்ன நடந்தது-ன்னு
பார்வதியம்மாவிடமாவது
மது சொல்லியிருக்கலாம்,
மதுரயாழினி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top