மந்திரமாவது நீறு திருநீறு

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும் உயர்ந்த தத்துவம் என்னவென்றால் ‘நாடாண்ட மன்னனும் நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதாகும்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால் அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும்.
அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது.
இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன.
நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

திருநீறு மருத்துவ குணமுடையது.
ஆதலால் திருநீறை நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் தீரும் என்பது இன்று வரையில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறையாக உள்ளது.
திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு ஏற்பட்ட வயிற்று நோய்க்கு அவரது தமக்கையார் வயிற்றில் திருநீறு பூசி குணம் பெறச் செய்த வரலாற்றை பெரிய புராணத்தில் காணலாம்.
திருநீற்றின் பெருமையானது புராண காலம் முதலாக இன்று வரையிலும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது.

திருநீறு அணிய இரு முறைகள்

திருநீறு தரிப்பதற்கு பொதுவாக இரண்டு முறைகள் உள்ளன.
முதலாவது ‘உத்தூளனம்’ எனப்படும் இடைவெளி இல்லாது நெற்றி மற்றும் பிற இடங்களில் பூசும் முறையாகும்.
இரண்டாவதாக ‘திரிபுண்டரம்’ எனும் முறையில், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக பூசும் முறையாகும்.
‘விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும்போது கொடுப்பவரது குணநலன்கள் வாங்குபவரை பாதிக்கும்.
எனவே நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டும் திருநீறை பெற வேண்டும் என்று தமது ‘அகத்தியர் பரிபூரணம்’ என்ற நூலில் அகத்திய மகரிஷி குறிப்பிடுகிறார்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் வெப்பத்தின் காரணமாக முதலில் அது கறுப்பாக மாறும்.
பிறகு படிப்படியாக நெருப்பால் எரிக்கப்பட்டு சுத்த வெளுப்பாக மாறி விடும்.
அது அப்பொருளின் முடிவான நிலையாகும்.
பஸ்பமாக நீற்று வெளுத்துப் போவதற்கு முன்னர் அது கரியாக மாறும்.
‘கார்பன்’ எனப்படும் கரியாகிய வைரம்தான் இவ்வுலகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருக்கிறது.
கரியாக உள்ள பொருளை விட மிகவும் உயர்ந்தது நீற்றுப் போன திருநீறு என்று போற்றப்படுகிறது.

வீட்டில் திருநீறு தயாரிக்கும் முறை

பசுவானது மகாலட்சுமியின் வாசஸ்தலமாக விளங்குகிறது.
பசுவின் சாணத்தை அக்னியில் இட்டு பஸ்பமாக்கி திருநீறு தயாரிக்கப்படுகிறது.
இந்த உடலை சுத்தப்படுத்தி அதற்குள் உள்ள ஆத்மாவை பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றது திருநீறு.
மகா பஸ்பமாக கருதப்படும் பரமாத்மாவும் விபூதி எனப்படும் திருநீறு பஸ்மமும் முற்றும் முடிந்த நிலையில் ஒன்றாக கருதப்படுவதால் விபூதி அணிந்து இறைக்காட்சியையும் பெறுவது சாத்தியமே என்று அருளாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பல்வேறு முறைகளில் திருநீறு தயாரிக்கப்பட்டாலும் வீடுகளில் நாமே தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம்.
காராம்பசுவின் சாணம் பூமியில் விழுவதற்கு முன்னர் பிடித்து (அவ்வாறு இயலாவிடில் துணியை தரையில் விரித்து வைத்தும் பிடித்துக் கொள்ளலாம்) அதன் கோமியத்தை விட்டு கலக்கி சிறு உருண்டைகளாக மாற்றி காய வைத்து தூசிகள் இல்லாது எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அந்த உருண்டைகளை ‘திரிபுர ஸம்ஹார காலமான’ கார்த்திகை மாத பவுர்ணமியில் வரும் கிருத்திகை நட்சத்திரமான ‘கார்த்திகை தீபம்’ நாளில் நெருப்பில் இட வேண்டும்.
பாதுகாப்பான இடத்தில் அது நன்றாக எரிந்து தானாகவே ஆறும் வரையில் சில காலம் விட வேண்டும்.

மார்கழி மாதம் முழுவதும் பனி பொழிந்து அந்த சாம்பலானது நிறம் மாறும் வரையில் விட்டுவிட்டு, தை மாதத்தில் அந்த சாம்பலை கிளறி விடவேண்டும்.
அதன் பின்னர் மாசி மாதத்தில் வரக்கூடிய ‘மகா சிவராத்திரி’ அன்று காலையில் அந்தச் சாம்பலை எடுத்து ஒரு பானையின் வாயில் சுத்தமான மெல்லிய துணியை கட்டி சாம்பலை துணியின் மேல் போட்டு கைகளால் தேய்க்க வேண்டும்.

அதன்மூலம் மென்மையான துகள்கள் திருநீறாக பானைக்குள் சேரும்.
அதை எடுத்து சிவபெருமானுக்கு திருநீறு அபிஷேகம் செய்வித்த பின்னர் வீட்டுக்கு எடுத்து வந்து அதை உபயோகப்படுத்துவதுதான் மேன்மையான முறையாகும்.
இந்த முறையை தவிர சாந்திக பஸ்மம் காமத பஸ்மம், பவுஷ்டிக பஸ்மம் ஆகிய சாஸ்திர ரீதியாக தயாரிக்கும் முறைகளும் நடைமுறையில் உள்ளன.
(மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலாவிட்டால் சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்)

அணியும் முறைகள்

உள்ளங்கையானது பிரம்மா மற்றும் விஷ்ணு பாகமாக கருதப்படுவதால் திருநீறை உள்ளங்கையில்தான் பெற வேண்டும்.
ஆண்கள் ‘திரிபுண்டரம்’ எனப்படும் நீரால் கலக்கி மூன்று கிடைக்கோடுகளாகவும் ‘உத்தூளனம்’ எனப்படும் வெறும் விபூதியாகவும் அணிய வேண்டும் என்பதும் பெண்கள் தண்ணீர் விடாமல் அணிய வேண்டும் என்பதும் சாஸ்திரம்.

மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.
இதில் ஆள்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக் வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களையும் குறிக்கிறது.
மூன்று கோடுகள் இடுவது வேதங்களை குறிப்பது மட்டுமல்லாமல் மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

திருநீறு அணியும் ஆண்கள் தண்ணீரில் அதைக் குழைத்து, ஆள்காட்டி விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து மூன்று கோடுகளாக நெற்றி, கழுத்து, மார்பு, தோள்கள், தொப்புளுக்கு மேல்புறம், முழங்கைகள், மணிக்கட்டுகள், விலா, முழங்கால்கள் ஆகிய பகுதிகளில் அணிய வேண்டும்.
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும் பூஜை காலங்களிலும் விபூதி பூசுவது அவசியம்.

திருச்செந்தூர் திருநீறு

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் முருகன் சன்னிதியில் விபூதி மற்றும் சந்தன பிரசாதமானது பக்தர்களுக்கு பன்னீர் இலையில் வைத்து தரப்படுகிறது.
முருகனுக்கு பன்னிரு கரங்கள் இருப்பது போல பன்னீர் மரத்தின் இலைகளிலும் பன்னிரண்டு நரம்புகள் இருக்கும்.
முருகனை வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களால் விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.

அத்தகைய பிரசாதமானது ‘பன்னீர் செல்வம்’ என்றே பக்தர்களால் வழங்கப்படுகிறது
ஆதிசங்கரர் அந்த இலையில் தரப்பட்ட விபூதியை உட்கொண்டு தமது உடல் நோயை நீக்கிக்கொண்டு ‘ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம்’ பாடியதாக கூறப்படுகிறது.
இந்த விபூதி இலை பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக இருப்பதால் திருச்செந்தூர் செல்பவர்கள் இதைத் தவறாது பெற்று செல்வது வழக்கம்.

தேவாரம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளை, அனைவராலும் முழுமையாக பாட இயலாது.
அதன் சாராம்சத்தை சுருக்கி மந்திரம் மூலம் இறைவனை வணங்க அருளாளர்கள் செய்த உபாயமே ஐந்தெழுத்து சிவ மந்திரமான ‘நமசிவாய’ என்பதாகும்.
திருநீறு அணியும் சமயங்களில் அதை மனதால் நினைத்து அணிவது திருமுறைகளை பாடிய பலனை கொடுக்கும்.
 
Last edited:

Uma Ramesh

Well-Known Member
திருநீற்றை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top