“ஓடிக்கொண்டிருக்கும்
நகர வாழ்வை
சற்றே நகர்த்தி
குளிர் பிரதேசத்திற்கு
ஓர் குடும்பச்சுற்றுலா”
“கொண்டைஊசி
வளைவுகள்
கொண்ட
கொடைக்கானல்
மழை அடிவாரம்
அடைந்தேன்”
“வளைவுகள் கொண்ட
சாலையிலே
வண்டி சென்றிட
வானம் பார்த்தேன்
ஜன்னல் வழியே
என் வசம் இழந்தேன்
கண்ட காட்சியில்”
“மலைகளின் மேல்
அன்பு கொண்ட
மேகம்
தாய் மடி
தவழ்ந்திடும்
சேயாய்
வந்து சேர்ந்ததோ
ஒட்டி உறவாடிட”
“மஞ்சு மேகம்
தன் பஞ்சு
வர்ணத்தால்
பாதி மறைத்ததே
மலைகளின்
இளவரசியை”
“ஏமாற்றம்
எனக்கு அதில்
இருந்தது
இளவரசியை
காணமுடியவில்லை
என்று
கணப்பொழுதில்
வழிவிட்டு
மஞ்சு மேகம்
மறைந்தது”
“மறைந்து
விளையாடிடும்
கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
ஓர் சுவாரசியம்
பிறந்தது
என்னுள்”
“சிறு
தொலைவில்
ஒரு வளைவில்
மீண்டும்
மஞ்சுவின் வரவு
மகிழ்ச்சியில்
என் மனது”
“இம்முறை
ஒளிந்து கொண்டே
வந்தாள்
ஓரிடத்தில்
கண்டு கொண்டேன்
நான் கண்டு கொண்டதில்
நாணம் கொண்டாளோ
மலையின்
மரங்களுக்குள்
ஒளிந்து கொண்டாள்”
“தலைக்கு மேலே
அவள்
தவழ்வது போலே
தோன்றுகிறதே
தவறேதும் இல்லையே
என் கணிப்பில்”
“புள்ளிமானாய்
அவள்
துள்ளி
ஓடுகையில்
அள்ளி அவளை
இருகைகளில்
அடக்கிடத்தான்
ஆசை
மஞ்சு மேகம்
அவள்
மனிதனின் கையில்
சிக்குவாளா
என்ன?”
“தவமிருக்கிறேன்
தரணியெல்லாம்
சுற்றித்திரியும்
மஞ்சுமேகத்தை
தொட்டுப்பார்த்திடத்தான்”