புள்ளினங்காதல் - 10

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
அப்டியே இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, தூக்கம் கண்ணை தழுவியது. காலையில் இருந்து ஓட்டமும் நடையுமாகவே இருந்தார்கள் அல்லவா! பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சொருகியது ஆரூரனுக்கு. முந்தன இரவும் தூங்காமல் அந்த ரூபிக்ஸ் க்யூப் சால்வ் செய்வதிலே கழித்துவிட்டானே! "ஆரூரன். தூக்கம் வருதா? தூங்குங்க" என்று அவிரா கூற, "எனக்கு ஒன்னும் தூக்கமெல்லாம் வரலையே" என்று வீராப்பாக சிறிது நேரம் அமர்ந்திருந்தாலும், தானாய் அவனை வந்து அணைத்துக்கொண்டாள் நித்ராதேவி.

அவன் தூங்கியதும், "நான் தான் அப்போவே சொன்னேனே, தூங்க சொல்லி. எதுக்கு இந்த வெட்டி வீராப்பு" என்று அவனை பார்த்து சிரித்துவிட்டு, அவன் கையில் இருந்த கை கடிகாரத்தை கழட்டி, அதில் அலாரம் வைக்கும் வசதி இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். நல்ல வேலை இருந்தது. காலை ஐந்தரை மணிக்கு அலாரம் செட் செய்து விட்டு, அந்த கைகடிகாரத்தை அவள் கைகளிலேயே கட்டி கொண்டு தூங்கினாள்.

காலை ஐந்தரைக்கு அலாரம் அடித்தவுடன் எழுந்து அமர்ந்துக்கொண்டாள். சூர்யோதயத்தை விட்டுவிட்டால், மீண்டும் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டுமே. அந்த பதட்டமே அவளை அந்த அதிகாலை வேளையிலும் விழிப்புடன் வைத்திருந்தது. அதே பதட்டத்தில் ஆரூரனையும் எழுப்பி விட்டாள்.

இருவரும் சிறுது நேரம் அமர்ந்திருக்க, அவர்கள் எதிர்பாத்த தருணமும் இதோ வந்துவிட்டது. ஆம், சூரியன் மெல்ல மெல்ல உதிக்க தொடங்கிவிட்டான். அந்த சிறுதுளி வழியே வெளிச்சம் உள்ளே வந்து, நேரே அந்த வைரத்தின் மீது பட்டு தெறித்தது.

நிலவின் வெளிச்சம் குறைவாக இருப்பதால், நேற்று குறைவான வெளிச்சமே உள்ளே வந்தது. அனால், இப்பொழுது ஆதவனின் வெளிச்சம் அதிகம் என்பதால், அந்த வைரத்தில் பட்டு தெறித்த வெளிச்சம், அந்த அறையெங்கும் அங்கும் இங்கும் சுவர்களில் பதிந்திருந்த வைரங்களில் பட்டு தெறித்து அறையெங்கும் ஒளி பரவும் அந்த காட்சி கொள்ளை அழகாய் இருப்பினும், அதை ரசிக்க நேரம் இல்லையே இவர்களுக்கு.

பூக்கள் விட்டு, பூக்கள் தாவும் வண்டுகள் போல, அங்கும் இங்கும் அலைந்தது அவர்கள் கண்கள். அந்த அறை மொத்தமும் மேய்ந்தது. எப்பொழுதும் ஒரு வழி அடைபட்டு இருக்கும், அந்த இடரை தகர்த்தெறிந்து அதுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்த முறையோ. வழியில் இடர்கள் எதுவும் இல்லை. ஆனால், பாரபட்சமே இல்லாமல், எட்டு வழிகள் இருந்தது. அதில் எதை தேர்வு செய்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது, அவர்கள் பயணம் தொடர்வதும், இங்கேயே அவர்கள் பயணத்துடன் சேர்த்து, வாழ்க்கையே முடிவதும்.

எப்படி செல்ல வேண்டும் என்பதற்கு எப்படியும் ஏதாவது க்ளூ இருக்கும் என்ற நம்பிக்கை இருவருக்குமே இருந்தது. அந்த நம்பிக்கையுடன் அந்த அறையை ஆராய தொடங்கினர், அதிக நேரம் எடுத்து கொள்ளாமல் .

அந்த அறையில் வேறு என்னென்ன இருந்தது? பட்ட மரம் ஒன்று. அதில் கிளைகளும் இல்லை, இலைகளும் இல்லை. ஆனால் அந்த மரத்தில் ஆங்காங்கு கிளைகள் வெட்ட பட்ட இடங்கள் அப்படியே தெரிந்தது. ஒவ்வொரு கிளை வெட்டப்பட்ட இடத்திலும் ஒரு எண் எழுதப்பட்டிருந்தது. அந்த மரத்தில் சில வரிகள் எழுதி இருந்தது.

அதை படித்தாள் அவிரா.

"திசை எட்டு...
புள்ளின ஆயுள் அதை கணக்கிட்டு..
மதிப்பை அளவிட்டு...
பட்ட மரம் அதில் பொருத்திட்டு,
உச்சத்தின் விரல்நுனி மொழியும்,
எட்டில் ஒன்றை.
மரணத்தின் வாயில் மீதம்.
அதை களைந்து.
வெற்றி வாயில் ஒன்றை கடந்து,
சூடுவாய் வெற்றி வாகை"

என்று எழுதி இருந்தது.

"என்னடா இது. ஒன்றும் விளங்கவில்லை" என்று மீண்டும் நோட்டமிட தொடங்கினர். அங்கிருந்த சுவர்களில் ஆங்காங்கு மனித கைகள் நீட்டினார் போலவும், அந்த கைகள் மீது, வெவ்வேறு பறவைகள் அமர்ந்தது போலவும் சிலைகள் இருந்தன.

"ஆரூரன், 'புள்ளின ஆயுள் அதை கணக்கிட்டுன்னு இருக்கு' அப்போ, இங்க சிலையாய் இருக்கும் அந்த பறவைகளோட ஆயுட்காலத்தை வைத்து தான் ஏதாவது செய்யணும் போல" என்றாள் அவள்.

அவன் அந்த பறவைகளை உற்று நோக்க, அங்கு இருந்த பறவைகள், அனைவரும் நன்கு அறிந்த பறவைகளே. ஓசினிச்சிட்டு, காகம், லவ் பைர்ட், கழுகு, பஞ்சவர்ணகிளி என ஐந்து பறவைகள் இருந்தது.

"அவிரா. இந்த பறவைகளோட ஆயட்காலம் கணிக்கணும். அது சரி. ஆனா? அதை கணிச்சதுக்கு அப்புறம்? என்ன செய்யுறது?" என்று அவன் கேட்க, அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து, யோசனையுடன் அந்த மரத்திடம் சென்றாள். அந்த மரத்தில், கிளைகள் வெட்டப்பட்டது போல், அடையாளம் இருந்த இடங்களில் இருந்த எண்களை நோக்கினாள்.

"இந்த வெட்டப்பட்ட இடங்களில் எண்கள் எழுதி இருக்கு. அப்போ இந்த இடத்துல தான், அந்த கையுடன் கூடிய பறவைகளின் சிலைகளை பொருத்தணும் போல. ஆனா சரியா தெரியல.

இப்போ நீ ஒரு பறவையோட ஆயுட்காலம் மட்டும் சொல்லு. அது சரியா இருக்கான்னு பாக்கலாம்" என்று அவள் கேட்க, "கழுகு, சுமார் இருபத்தி ஐந்து வயதில் இருந்து, முப்பது வயது வரை உயிர் வாழும்" என்று அவன் கூற, அங்கு இருந்த எண்களில் இவன் கூறியது இருக்கிறதா என்று அவள் ஆராய, இருபத்தி எட்டு, '௨௮' என்று இருந்தது. இருபத்தி ஐந்தில் இருந்து முப்பது வரை வேறு எந்த எண்ணும் அங்கு இல்லை. அதனால் இருபத்தி எட்டு இருக்கும் இடத்தில் தான் கழுகு சிலையை பொறுத்த வேண்டும், என்று முடிவு செய்தனர்.

அந்த சுவற்றில் இருந்து ஒரு கை வெளியே நீட்டியது போல் இருந்து, அந்த கையின் மீது தான் பறவைகளின் சிலைகள் இருந்தது. முதலில் அந்த பறவையை மட்டும் வெளியில் எடுத்து பொருத்தமுடியுமா என்று தான் பார்த்தனர். ஆனால் அந்த சிலையை அந்த கரத்தில் இருந்து பிரித்து எடுக்கமுடியாமல் போக, மனித கை வடிவத்துடன் சேர்த்து எடுத்தனர். இருபத்தி எட்டு, என்று தமிழ் எண்களில் எழுதி இருந்த இடத்தில் பொருத்தினர்.

அதே போல, ஓசினிசிட்டுக்கு, ஏழு '௭' என்று பொறிக்கப்பட்டிருந்த இடத்திலும், பத்து முதல் பதினைந்து வருடங்கள் வாழக்கூடிய காகத்திற்கு, பதிமூன்று '௰௩' என்று இருந்த இடத்திலும் பொருத்தினர்.

லவ் பைர்டை, பத்து '௰' என்று இருந்த இடத்திலும் பொருத்துவதில் அவர்களுக்கு சிரமம் எதுவும் இல்லை.

இப்பொழுது பஞ்சவர்ண கிளியை எண்பத்தி ஐந்து '௮௫' என்று இருக்கும் இடத்தில பொருத்த வேண்டும். வெளிச்சம் வேறு குறைய தொடங்கி விட்டது. இவர்கள் பொறுத்த வேண்டிய இடத்தை அன்னார்ந்து தான் பார்க்க வேண்டி இருந்தது. இவர்கள் உயரத்திற்கு அது எட்டுவதாய் இல்லை. இவர்கள் கையில் நேரமும் அதிகம் இல்லை.

"இப்போ என்ன பண்றது ஆரூரன். நம்ப கிட்ட அதிக நேரம் இல்லை. இது வேற உயரமான இடத்தில் இருக்கே" என்று கேட்க, சட்டெனெ அவள் இடை பிடித்து உயர தூக்கினான் அவளை.

முதல் முறையாய் இவ்வளவு நெருக்கமாய், ஒரு ஆணின் ஸ்பரிசம். கூச்சத்தில் நெளிந்தது அவளின் ஒவ்வொரு அணுவும். ஆனால் இதற்கெல்லாம் இது நேரமில்லை என்று அந்த கூச்சத்தை எல்லாம் ஓரம் கட்டி விட்டாள் அவள்.

தன்னால் முடிந்த அளவுக்கு அவனும் உயரமாய் அவளை தூக்க, அவளும் எப்படியோ எட்டி பொருத்திவிட்டாள்.

இவர்கள் அனைத்தையும் சரியாய் பொறுத்தவும், சட்டென அந்த மரத்தில் இருந்து ஒரு ஒளி தோன்றியது. இவர்கள் பொருத்திய மனித கைகள் எல்லாம் மரக்கிளைகளாய் மாறியது. இலைகள் துளிர் எடுக்க தொடங்கியது. இவ்வளவு நேரம் உயிர் இழந்து இருந்த அந்த மரம், உயிர்பெற்றது.

அந்த ஆச்சர்யத்தை கண்ணெடுக்காமல் இவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த அறையின் தளம் இடிந்து விழ தொடங்கியது. இதனால் இருவரும் பதறிப்போனார்கள். வேறு திசையில் நகர்ந்த ஆரூரானையும், பிடித்து இழுத்துக்கொண்டு, அந்த எட்டு திசைகளுள் ஒன்றில் ஓடினாள்.

அவனையும் இழுத்து கொண்டு, விடாமல் ஓடினாள் அவள். அடுத்த அறைக்கு வந்து சேர்ந்ததும் தான் நின்றது அவள் ஓட்டம்.

வந்து நின்றதும், இந்த வழில தான் போகணும்ன்னு எப்படி கண்டுபிடிச்ச, என்று அவன் கேட்க, "பட்ட மரம் அதில் பொருத்திட்டு, உச்சத்தின் விரல்நுனி மொழியும், எட்டில் ஒன்றை" அப்டி இருந்துச்சே. நம்ப கடைசியா பொருந்தியது அந்த பஞ்சவர்ணக்கிளி இருக்கும் கையை தான். அந்த கை காட்டியது இந்த பக்கம் தான் ஆரூரன்" என்று மூச்சிரைத்தபடியே கூறினாள் அவள்.

சற்று நேரம் அமைதையாய் மூச்சிவாங்கிவிட்டு அதன் பிறகு தான் அவர்கள் வந்து சேர்ந்த இடத்தை பார்த்தனர். இதுவரை இவர்கள் கடந்து வந்த இடமெல்லாம் பெரும்பாலும் இருள் சூழ்ந்தவையே. வெளிச்சம் இருந்தாலும், அது கம்மியாகவே இருக்கும். அனால் இப்பொழுது அவர்கள் வந்து சேர்ந்த இடம், நன்கு வெளிச்சம் பரவிய அறை. அந்த அறை முழுவதும் ஆங்காங்கு ஓவியங்களும், சிலைகளும் இருந்தன. அந்த அறையின் ஒரு ஓரத்தில் சுனை ஒன்று இருக்க, அதில் முதலில் சிறிது நீர் பருகிக்கொண்டனர் இருவரும்.

தாகம் அதிகம் எடுத்து குடிப்பதால், இந்த நீருக்கு இவ்வளவு சுவையாய் தெரிகிறதா? இல்லை, இயற்கையாகவே இந்த நீருக்கு இவ்வளவு சுவையா என்று வியந்தனர் இருவரும்.

தாகம் தணிந்ததும், சுற்றி முற்றி பார்த்தனர் இருவரும்.

அங்கு பெரியதாய் இருந்த ஒரு ஓவியத்தில், படங்களில் பார்க்கும் ராஜா ராணி போல இருவர் இருந்தனர். அந்த ராஜாவின் முகத்தில் கம்பீரம் நடனமாடியது. அந்த ராஜாவின் கையில் ஒரு சிறு பெண் பிள்ளை இருந்தது.

அந்த ராஜாவின் மார்பில் இருந்த குறியீடை பார்த்ததும், அவிராவின் இதழ்கள் தானாய் முணுமுணுத்தது, "எழில்வேந்தன்" என்று.

"யார் அவரு? உனக்கெப்படி தெரியும் அவர் பேர்?" என்று ஆரூரன் கேட்க, "எழில்வேந்தன். இந்த மண்ணை ஆண்டவர். நாங்க இங்க ஆராய்ச்சி செய்யும் போது, கிடைத்த ஒரு ஓலைச்சுவடி. அதுல, இவர் மார்பில் இருக்கும் அதே சின்னம் தான் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த ஓலைச்சுவடியை எழுதியது, அந்த எழில்வேந்தர் வம்சத்தில் வந்த ஒரு ராஜா தான்." என்று கூறி நிறுத்தினாள் அவிரா.

ஓவியத்தில் இருப்பது எழில்வேந்தர் தான் என்று கண்டறிந்ததும், பிரமிப்பில் இமைக்க மறந்தன அவள் கண்கள்.

என்ன கேட்பது என்று தெரியாமல், ஆரூரன் அமைதியாக இருக்க, அவளே தொடர்ந்தாள். "இந்த அரசரின் காலம் தான் இந்த மக்களின் பொற்காலம்ன்னு சொல்லலாம். நாட்டுல அமைதி நிலவுச்சு. போர் என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் இருந்துச்சு. சுற்றியுள்ள நாட்டு மன்னர்களுடன் நல்ல உறவு இருந்தது இவருக்கு.

ஆனா...

இவர் ஆட்சி காலத்தில் ஒரு போர் நடந்தது. அந்த மன்னனோட நெருங்கிய நண்பர் மாறவர்மன் மேலயே போர் தொடுத்தார் எழில்வேந்தன். அது பொன்னுக்காகவோ, மண்ணுக்காகவோ நடந்த போர் இல்லை. பறவைகளுக்காக நடந்த போர்.

பறவைகள் மீது தீரா காதல் கொண்ட மன்னன் அவர். அவரோட நண்பரின் நாட்டில் இருக்கும் ஒரு ஏரிக்கு, தன் நாட்டின் குளிர் தாங்காமல் வரும் பறவைகளுக்கும், இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகளுக்கும் முறையான பாதுகாப்பு இல்லை. அதை பல முறை சொல்லியும் அவர் நண்பர் உரிய நடவடிக்கை எடுக்காததால், நண்பர் மீதே போர் தொடுத்தார்.

இது தான் அந்த ஓலைச்சுவடியில் இருந்தது. இது கூட இன்னொரு விஷயமும் இருந்துச்சு.

அந்த மன்னர் ஒரு புதையலை ஒளித்துவைத்ததாகவும், அவர் சந்ததியில் பிறந்த பலர், இந்த புதையல் மீது ஆசை கொண்டு இறந்ததாகவும், அந்த புதையலை இது வரை யாரும் கைப்பற்றவும் இல்லை, எடுக்க சென்ற யாரும் திரும்பி வந்ததும் இல்லைன்னு இருந்துச்சு.

இப்போ இங்க இந்த ராஜாவின் ஓவியம் இருக்குன்னா, அப்போ இங்க தான் அந்த புதையல் இருக்கனும். தெரிந்தோ, தெரியாமலோ, நம்ப அதை தான் தேடி போய்ட்டு இருக்கனும்" என்று கூறிய அவிராவின் குரலில் பயமும் திகிலும் கலந்திருந்தது.

"அவிரா இங்க பாரு" என்று ஆரூரன் அழைக்க, என்னவென திரும்பி பார்த்தாள் அவிரா. அங்கு இருந்தது வேறொரு ஓவியம். ஒரு பெண்ணின் ஓவியம். முக ஜாடையை வைத்தும், அவன் உதட்டிற்கு கீழ், இடது பக்கத்தில் இருந்த மச்சத்தை வைத்தும், மற்றொரு ஓவியத்தில் சிறு குழந்தையாக ராஜாவின் கையில் இருந்தவள் தான் இந்த பெண் என்று கணிக்க முடிந்தது.

ஆனால் இவர்கள் ஆச்சர்யத்திற்கும், குழப்பத்திற்கும் காரணம், அந்த ஓவியத்தில் இருக்கும் பெண், அதாவது எழில்வேந்தனின் மகள், பார்க்க அச்சு அசலாக அவிராவை போல் இருந்தது தான்.

நாட்டிய உடையில் இருந்தாள் அந்த பெண். ஒரு கையில் 'மயூர முத்திரை' வைத்து, மறுகையில் நவரத்தினங்கள் பொறித்த அந்த குட்டி சிலை இருந்தது. அவிரா, அவள் அத்தை அழைத்ததாக கூறிய அதே சிலை அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது. அந்த பெண் இவர்களை நோக்கி, அந்த சிலையை அளிப்பதுபோல் இருந்தது. ஓவியம் தான் என்றாலும், உயிப்புடன்.

தன்னை அறியாமல் அவிரா, அந்த, ஓவியத்தில் இருந்த சிலையை தொட, இவள் கை பட்ட அடுத்த நொடி, பின்னால் ஒரு பெரும் சத்தம் கேட்டது.


இன்னும் மூன்று அத்தியாங்களில் கதை முடிக்கப்படும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top