அதிகார விளக்கம் :-
சுற்றந்தழால் என்பதற்குச் சுற்றம் தழுவுதல் அல்லது ஆதரித்தல் என்பது பொருள். சுற்றத்தார் இயல்பு, அவரைப் பேணும் விதம், பேணுவதன் பயன், பிரிந்த சுற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற முறைமை போன்றவற்றை இவ்வதிகாரம் விளக்குகிறது.
நல்ல காலத்திலும் சரி கெட்ட காலத்திலும் சரி வந்து சுற்றி நிற்பவர் சுற்றத்தினர் ஆவர். சுற்றம் ஆக்கம் தரும். பக்கபலமாக இருக்கும். மாந்தர் அனைவர்க்கும் சுற்றம் உண்டு. உறவினர், நண்பர் அல்லாதவர்களும் இதனுள் அடங்குவர். ஒருவரது வாழ்வின் உள்வட்டத்தில் இருந்துகொண்டு அவரது செயல்பாட்டில் பங்கு கொள்வோர் அனைவரும் சுற்றமே. தமக்குள் கொள்ளல் கொடுத்தல் உறவு இல்லாமலிருந்தும், இவர்கள் தலைவனுக்கு உண்மையாகவும் பாதுகாவலாகவும் விளங்குவர். இவர்கள் தலைவனது செல்வம், செல்வாக்கு நீங்கிய காலத்திலும் அவனிடம் பழைமை பாராட்டுபவர்கள்.
சுற்றந்தழால் என்பது ஒருவர் சுற்றத்தாரை அணைத்துச் செல்வதும், சுற்றம் தன்னைத் தழுவ ஒருவர் நடந்து கொள்வதும் ஆகும். உள்வட்டத்திலிருந்து சுற்றம் வெளியேறாமல் தடுப்பதற்கான ஒரு அரசியல் தந்திரமாகவும் சுற்றம்தழுவுதல் அதாவது சுற்றம்தாங்குதல் கையாளப்பெறும்.
'சுற்றம் சூழ வாழ்தல் ஒருகலை. சுற்றம் பேணி வாழ்தலுக்கு இடையறாத அன்பு, நினைவில் வைத்துப் பாராட்டுதல், அன்பு காட்டுதல், ஒத்துப் போதல், குற்றம் பாராட்டாது இருத்தல் ஆகியன தேவையானது. நாடாள்வோருக்கும் சரி, தனி ஒருவராய் வெற்றி பொருந்திய வாழ்க்கை நடத்த விரும்புவோருக்கும்சரி சுற்றம் தேவை' (குன்றக்குடி அடிகளார்)
ஒருவர் நிறையச் சுற்றம் சூழ இருந்து வாழ்வதை வள்ளுவர் விரும்புகிறார் என்று இவ்வதிகாரப் பாடல்களிலிருந்து அறிய முடிகிறது.