அதிகார விளக்கம் :-
கண்டு கேட்டு சுவைத்து முகர்ந்து தொட்டு கூடி மகிழ்தல் பெண் இடத்தில் மொத்தமாக உள்ளது. நோய் உண்டாக்கிய ஒன்றுக்கு வேறு ஒன்றே மருந்து பெண் இவளோ நோய் செய்து மருந்தாகவும் இருக்கிறாள். பெண்ணுடன் உறங்குதை போல் இனிமையான ஒன்று மாறும் இவ்வுலகில் இல்லை. விலகிச் சென்றால் சுட்டெரிக்கும் புதிய நெருப்பு பெண். அவள் தோள் வேண்டிய பொழுது இன்பம் தரும் என்பதால் அமுதுக்கு ஒப்பானது. இளம் பெண்ணுடன் இணைதல் தன் உழைப்பால் உண்ணும் உணவு போன்றது. காற்றும் இடை புகாத முயக்கம், சிறு பிணக்கு இவை காமத்தின் பயன்கள். அறியாமை அறிந்து அழித்துக் கொள்ளும் பிள்ளை போல் காமத் தொடர்பு செம்மையாக்கும்.
புணர்ச்சி என்ற சொல்லுக்குக் கலத்தல், சேர்தல், இணைதல், கூடுதல் ஆகிய பல பொருள் உண்டு. இச்சொல் உடல் உறவைக் குறிப்பதாகவே பழம் நூல்களில் மிகையாக ஆளப்பட்டுள்ளது. இவ்வதிகாரமும் மெய்யுறுபுணர்ச்சி பற்றியதே.
ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்ட செய்தியுடன் முந்தைய 'குறிப்பறிதல்' அதிகாரம் நிறைவடைந்தது. இவ்வதிகாரம் அவர்கள் ஊடியதையும், ஊடல் நீங்கியதையும் குறிப்பால் உணர்த்தி, மெய்யுறுபுணர்ச்சி அதாவது உடலுறவு கொண்டு இன்புற்றதைச் சொல்கிறது. புணர்ச்சி மகிழ்தல் என்றது களவு ஒழுக்கம் மேற்கொண்ட காதலர் இருவரும் உள்ளம் ஒன்றிக் கூடியபின் அந்த இன்பத்தை நினைத்து மகிழ்வதைச் சொல்வது. களவு ஒழுக்கம் என்பது உலகத்தார் அறியாமல் ஒருவரையொருவர் சந்தித்து, பேசி, உறவாடி, கூடி இன்புறும் காதல் வாழ்வாகும்.
இங்கு விளக்கப் பெறுவது, விலங்கிடத்தும் காணப்படும் கூடல் அன்று; ஈருடலும் ஓருயிருமாக இன்ப அன்பு நிலை எய்தியவர்கள் சேர்க்கையே. அவர்கள் அனுபவிக்கும் காமநலம் சிற்றின்பமாகாது; அது பேரின்பம் என்று சொல்லப்படுவதாகும்.
இருவருமே இன்புற்றுக் களித்தனர். ஆனால் காதலி பெண்ணின் இயல்பான நாணத்தினால் வெளிப்படையாக அதைச் சொல்லமாட்டாள். காதலியிடம் தான் நுகர்ந்த அப்புதிய காம இன்பத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சியுற்ற காதலன் தனக்குள் கூறிக்கொள்வதாக அதிகாரத்துப் பாடல்கள் அமைந்தன. புணர்ச்சுயை மகிழ்ந்து கூறும் முறையில் யாக்கப்பட்ட பாக்களைக் கொண்ட அதிகாரமாதலால் புணர்ச்சி மகிழ்தல் என்னும் பெயர் பெற்றது.
காதலர்கள் கூடியதில் பெற்றது புணர்தல் (இன்பம்) என்ற ஒரு பயன். ஊடல், ஊடல் நீங்கல் என்பன அவர்கள் பெற்ற பிற பயன்கள் என்கிறது இவ்வதிகாரக் குறள் ஒன்று. மாந்தர் இருவர், எந்த சமயத்திலும் எங்காகிலும், பழகும்போது சிறு சிறு மோதல்கள் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்வது இயல்பு என்று உளநூல் அறிஞர்கள் சொல்வர். ஊடல் என்னும் சிறு சண்டை உண்டாவது காதலர் வாழ்விலும் இயல்பானதே. ஊடலின் தன்மையை ஆராய்ந்து அதை நீக்க வழி தேடினால் உறவுகள் நீடித்துப் பலப்படும். இதுவே 'உணர்தல்' என்பது. இப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கின்றனர். ஊடல், உணர்தல், புணர்தல் ஆகியன 'காமம்கூடியார் பெற்ற பயன்' என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று.