அதிகார விளக்கம் :-
பயனில சொல்லாமையாவது வீண்வார்த்தைகளைப் பேசாமலிருப்பது. இது பொதுவாக யாவரிடத்திலும் எந்தச் சூழலிலும் பயனற்ற பேச்சுகளைப் உரைக்காமல் இருப்பதைக் குறிக்கும். பயனில்சொல்வான் சீரும் சிறப்பும் இழப்பான் என்று சொல்லப்பட்டு, அவன் நயனிலன் என்றும் மனிதப்பதர் என்றும் இவ்வதிகாரத்தில் இகழப்படுகிறான். சான்றோர், அறிவினார், மாசறு காட்சியவர் போன்றோர் பயனில சொல்லமாட்டார்கள் என இங்கு கூறப்படுகிறது. இயல்பான வாழ்க்கையில் எல்லாமே கருத்தாழம் மிக்க பேச்சுக்களாக இருக்க முடியாது. அதில் அறியாமையுடன் கூடிய மகிழ்ச்சிச் சொற்களுக்கும் இடம் உண்டு. எனவேதான் பயனில சொல்லாமையை மிகப்பெரிய கொடிய குற்றமாகக் கருதாமல் இத்தொகுப்பில் வள்ளுவர் அறிவுரை வழங்கியுள்ளார் போல் தெரிகிறது. பல்லார்முன், பல்லாரகத்து என்ற தொடர்கள் வருவதால், பலபேர் கூடியுள்ள இடத்தில் வெற்றுரைகள் கூறவேண்டாம் என்பது வலியுறுத்தப்படுகிறது.