உன் கண்ணில் என்னை கண்டேன் epi 21

Advertisement

Karthikpriya

Active Member
உன் கண்ணில் என்னை கண்டேன்
21

கோபமாக வெளியில் வந்த சித்தார்த் கேன்டீன் சென்று அமைதியாக அமர்ந்து விட்டான். சிறிது நேரம் கழித்து வர்ணா நிலா மற்றும் ரம்யா மூவரும் கேன்டீனுக்குள் நுழைந்தனர்.

அவர்கள் வருவது தெரிந்தும் அசையாது அமர்ந்திருந்தான் சித்தார்த். நிலா மற்றும் ரம்யா சித்தார்த்தின் எதிரில் இருந்த இருக்கைகளில் அமர, வர்ணா மெதுவாக வந்து சித்தார்த்தின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அதற்கும் அவன் திரும்பி பார்க்காமல் அமர்ந்திருந்தான்.

கொஞ்சம் பொறுத்து பார்த்த வர்ணா, “சித்தார்த், ஏன் டா என் மேல கோபமா இருக்க?” என்று உள்ளே சென்று விட்ட குரலை சரி செய்தவாறே கேட்டாள்.

“எதுக்காக இந்த கோர்ஸ் எடுத்த?” என்று கோபத்தை உள் அடக்கிய குரலில் கேட்டான்.

“என்ன டா கேள்வி இது எப்போவும் உன் கூடவே இருக்கணும்னு தான்” என்று பொறுமையாக கூறினாள்.

“இப்படியே போனா டாக்டரா என் கூட இருக்க மாட்ட ஒரு நோயாளியா தான் என் கூட இருப்பனு நினைக்கிறேன்.” என்று கோபமாக கூற. அவள் எதுவும் பதில் பேசாமல் தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

சித்தார்த் அவளின் முகத்தை நிமிர்த்தி, “பார்த்தாயா உனக்கும் இது தோணுது தான?” என்று கேட்க அதற்கும் அவள் மெளனமாக இருக்க, “நான் சொல்றதையும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு வரு. அடிக்கடி இப்படி மயக்கம் போடுறது உன் உடம்புக்கு தான் டா கெடுதி. இன்னும் டைம் இருக்கு வைஸ் பிரின்சிபால் கொடுத்த ஆறு மாதம் டைம் இன்னும் இருக்கு டா வேற கோர்ஸ் எடு. இதே ஊர்ல தான இருக்க போறோம் ஈவினிங் டைம்ல நாம் சந்திக்கலாம். வேற வேற காலேஜ்ல படிக்கறவங்க, வேற வேற ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்களாம் லவ் தான் பண்ணலயா? இல்ல கல்யாணம் தான் கட்டிக்கலயா? வேற கோர்ஸ் படிக்க ஒத்துக்கோ டா ப்ளீஸ் எனக்காக” என்று பொறுமையாக அவளுக்கு எடுத்து கூறினான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த வர்ணா “நான் உன் கூடவே எல்லா இடத்திலும் இருக்கணும்னு ஆசை பட்டேன் டா. ஒன்னாவே சின்ன வயசுல இருந்து படிச்சோம் ஒன்னாவே வளந்தோம் அதே போல் ஒன்னாவே வேலை செய்யணும்னு ஆசை பட்டேன் டா. அதுக்காக தான் பாஸ் ஆவேனா மாட்டேனான்னு சந்தேகத்தோடு படிக்கும் நான், நீ கொடுத்த எல்லா நோட்ஸும் சோம்பேறித்தனம் இல்லாம படிச்சேன். நீ சொன்னதுக்காகவும் உன் கூட படிக்கறதுக்காகவும் தான் இவ்வளவும். இப்போ நீ இப்படி சொன்னா நான் என்ன செய்வேன்?” என்று பரிதாபமாக கேட்டாள்.

சித்தார்த், “நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது டா. ஆனா நாம் இருவரும் ஒன்னாவே வேலைக்கு போகணும்னு ஆசைப்படறத விட, எனக்கு நீ ஆரோகியமா இருக்கணும்ங்கறது தான் டா முக்கியம்” என்று தெளிவாக கூறினான்.

அவன் கூறுவதை பொறுமையாக உள்வாங்கிய வர்ணா, “சரி ஒத்துகிறேன் நான் வேற கோர்ஸ் எடுத்து படிக்கிறேன். ஆனா வைஸ் பிரின்சிபால் கொடுத்த ஆறு மாதத்தில் இன்னும் இரண்டு மாதம் கெடு இருக்கு டா. அது வரைக்குமாவது முயற்சி பன்றேன் டா ப்ளீஸ். இன்னும் இரண்டு மாதம் தான் அது வரை நீ எனக்கு உதவி பண்ணு டா ப்ளீஸ்” என்று கெஞ்சலோடு கேட்க

“நான் இப்போ சொன்ன எதுவும் உன் மண்டைல ஏறல இல்ல. நீ புடிச்ச முயலுக்கு மூணு காலு தான் எப்போவும்.” என்று திட்டிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் எப்போதும் எந்த பிரச்சனையிலும் அவள் தன்னுடனே இருப்பதை விரும்புவாள் என்பதை சிறு வயதில் இருந்து பார்த்தவனால் அவளை அவ்வளவு வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து விலக்கி வைப்பது சரியில்லை என்பது தோன்ற, “சரி நீ சொன்னது போலவே இந்த இரண்டு மாதம் என்னால முடிந்த எல்லா உதவியும் நான் பண்றேன். எப்படியும் இந்த பிரச்சனைல இருந்து வெளிய வந்துடுவோம் கவலைய விடு” என்று புது உத்வேகத்துடன் கூறி அவளையும் ஊக்குவித்தான்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால் வர்ணா எப்போதும் போல் பத்து மணிக்கு மேல் எழுந்து தன்னை தூய்மை படுத்திகொண்டு வந்தாள். அந்த வாரம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த விஜயா அவளை சாப்பிடுமாறு அழைத்தார்.

மிகவும் பசியோடு வந்த வர்ணா ஆர்வமாக உணவுண்ண அமர்ந்தாள். சுட சுட ஆவி பறக்கும் இட்லியை பார்த்ததும் நாவூற தொட்டுக்கொள்ள என்ன என்று ஆர்வமாக காத்திருந்தாள்.


விஜயா அவளின் ஆர்வத்தை பார்த்து சிரித்தவாறே நல்லி எலும்போடு இருக்கும் குழம்பை தட்டில் ஊற்றினார். அதை பார்த்ததும் அவளின் முகம் மாறிவிட்டது. உடனே அங்கு இருந்த தட்டு முழுவதும் ரத்தமாக இருப்பது போல் தோன்ற வேகமாக எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள்.

எங்கு அவசரமாக செல்கிறாள் என்று பார்ப்பதற்காக அவள் பின்னாலே விஜயாவும் வேகமாக வந்தார். குளியலறையில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்த வர்ணவை ஓடி வந்து தாங்கி கொண்டார்.

அவளை சுத்த படுத்தி படுக்கையில் அமர வைத்து, “என்னடா செய்யுது? உடம்பு ஏதாவது சரி இல்லையா?” என்று தன் முந்தானையில் அவளின் முகத்தை துடைத்தவாறே விசாரித்தார்.

“நேத்து லேப்ல ஒரு கெடாவர் கட் பண்றத பார்த்தது நியாபகம் வந்துடுச்சு மா” என்று பாவமாக கூறினாள் வர்ணா.

“அதுக்கு தான் நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் கேட்டா தான?” என்று விஜயா திட்ட ஆரம்பித்தார்.

“அம்மா ப்ளஸ். ஏற்கனவே என்னால முடியல இன்னும் டூ மந்த்ஸ் டைம் கொடுங்க நான் சரி ஆகிடுவேன். நேத்து தான் சித்து கிட்ட பயங்கரமா இதுக்காக திட்டு வாங்கினேன். நீயும் ஆரம்பிக்காத. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் ஹாலுக்கு போங்க மா ப்ளீஸ்.” என்று கூறி அவரை சமாளித்து வெளியற்றினாள்.

அடுத்த நாள் கல்லூரிக்கு வந்த வர்ணாவை பிரின்சிபால் அழைப்பதாக புயூன் வந்து அழைத்தார்.

பிரின்சிபால் அறையில் ஏற்கனவே வைஸ் பிரின்சிபாலும் அமர்ந்திருந்தார். அனுமதி கேட்டு வர்ணா உள்ளே வந்தாள்.

பொறுமையாக அவளை பார்த்த பிரின்சிபால் “சொல்லுங்க வர்ணா நேத்து தான் உங்க பிராப்லெம் பற்றி உங்க அனாடமி சார் கம்பளைண்ட் பண்ணார். உங்க வைஸ் பிரின்சிபால் கிட்டயும் விசாரிச்சேன். அவர் உங்களுக்கு சிக்ஸ் மந்த்ஸ் டைம் கொடுத்ததை சொன்னார். ஏற்கனவே போர் மந்த்ஸ் முடிந்துவிட்டது. ஒரு மாற்றமும் தெரியலையே அதை பற்றி என்ன சொல்ல வரீங்க? “ என்று கேள்வியாக நிறுத்தினார்.

“நேத்து நடந்ததுக்கு பிரஸ்ட் சாரி கேட்டுக்கறேன் சார். இன்னும் டூ மந்த்ஸ் டைம் இருக்கு சார் அதுக்குள்ள இந்த பிரச்சனையில் இருந்து வெளிய வந்துடுவேன் சார் ப்ளீஸ் அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சார்” என்று கொஞ்சம் பயந்தவறே கேட்டாள்.

“நோ வர்ணா இந்த ப்ரோப்லம் உங்களுக்கு மட்டும் தொந்தரவா இருந்தா நீங்க சொல்ற எல்லாம் நாங்க ஆக்ஸப்ட் பண்ணிப்போம். ஆனால் இது கிளாஸ்ல இருக்க எல்லாரையும் திசைதிருப்புது. உங்க மன்னிப்ப ஏத்துக்காததுக்கு சாரி. யு நீட் டு டிஸ்கன்டினியு போர் அதர்ஸ் சேக்” என்று கறாராக கூறி அது தொடர்பான வேலைகளை வைஸ் ப்ரின்சிபாலிடம் விசாரிக்குமாறு சொல்லிவிட்டு வெளியேறுமாறு சைகை செய்தார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top