அத்தியாயம் 1
என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்
அவள் பேச ஆரம்பித்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். ஏனெனில் அவள் சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தாள்.
சொல்லப்போனால் அவள் பேசுவது ஊரிலிருந்த அவள் அன்னைக்கே கேட்கும்படி கத்தி கொண்டிருந்தாள். அந்த செயல் பஸ்ஸில் இருந்த அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்தது.
ஏனெனில் அவள் இருந்தது சென்னை மாநகரம். சத்யபாமா காலேஜ் போவதற்காக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவளம் போகும் பஸ்சினை பிடித்திருந்தாள்.
காலை நேரமாதலால் பஸ்ஸில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. அதில் வைதேகி போனில் கத்தி கொண்டிருந்தாள் யார் தான் முகம் சுழிக்க மாட்டார்கள்.
இதை எதுவும் அறியாமல் தன் அன்னையுடன் பேசுவதில் மும்முரமாக இருந்தாள் வைதேகி.
அவள் அன்னை ஜெயந்தி, "வைதேகி.....எந்த ஸ்டாப்னு கண்டக்டர் கிட்ட கேட்டியா.... நீ பாட்டுக்கு வேற எங்கயும் இறங்கிட போறமா.... புது இடம் வேற... இதுக்கு தான் தம்பியையும் கூட அழைச்சிட்டு போன்னு சொன்னேன்....என் பேச்ச கேட்டா தான" என்று அவர் பாட்டுக்கு புலம்ப ஆரம்பித்து விட்டார்.
தன் அன்னையை சமாதான படுத்தி வீட்டில் இருந்து கிளம்புவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு.
இப்பொழுது திரும்பவும் ஜெயந்தி ஆரம்பிக்கவும், தன் அன்னையை சமாதான படுத்துவதே அவளுக்கு முதல் காரியமாக பட்டது. அதனால் அவள் தன்னை சுற்றி இருந்த எவரையும் கண்டு கொள்ளவில்லை.
"கேட்டேன்மா, ஸ்டாப் வந்ததும் கண்டக்டர் சொல்றேன்னு சொன்னாங்க". என்று அன்னையிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது.....
கண்டக்டர்," சத்யபாமா ஸ்டாப்பிங்....எறங்குறவங்களாம் முன்னாடி வாங்க" என்று கூறிக்கொண்டிருந்தார்.
வைதேகி, "அம்மா ஸ்டாப்பிங் வந்துருச்சு நான் உனக்கு அப்புறமா போன் பண்றேன்.... வச்சிடட்டுமா..."
"ஹ்ம்ம்... சரிம்மா" என்று கூறிவிட்டு மறுமுனையில் ஜெயந்தி போனை வைத்தவுடன், வைதேகி தன்னுடைய மொபைலையும் அனைத்து பையினில் (Bag) வைத்து பூட்டினாள்.
சத்யபாமா யூனிவர்சிட்டிக்கு நேர் எதிர் புறமாக பஸ் வந்து நின்றது.
வைதேகி தன்னுடைய பையினை எடுத்து கொண்டு பஸ்சினை விட்டு தன்னுடைய முதல் அடியிணை அந்த பெரிய பிரம்மாண்ட சென்னை மாநகரத்தில் வைத்தாள்.
பஸ்ஸில் இருந்து இறங்கிய வைதேகி, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தினை சுற்றி பார்த்தாள். ஏனென்று தெரியாத ஒரு பய உணர்வு வயிற்றில் இருந்து கிளம்பி நெஞ்சு கூட்டினை வந்து அடைந்தது.
அவளுடைய இதயம் படபட வென்று வேகமாக அடித்து கொள்ள ஆரம்பித்தது. அவளை கடந்து சென்று கொண்டிருந்த சிலர், வைதேகியை இரண்டு நிமிடம் பார்த்து வைத்தனர்.
வைதேகி பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்தாள். நன்றாக எண்ணெய் வைத்து படிந்து வாரிய முடியுடனும், நெற்றியின் நடுவில் வட்டமாக சாந்து பொட்டும் (அதனுடைய அளவு நார்மல் சைஸ் விட கொஞ்சம் அதிகம்), தொழ தொழ வென்று சுடிதாரும், அதனுடன் ஷாலை வேறு ஸ்கூலிற்கு செல்வது போல் மடித்து வேற போட்டிருந்தாள், முகத்தில் எந்த வொரு மேக்கப்பும் இல்லை, அலைச்சலினால் முகம் வேறு சற்று வாடி இருந்தது.
அங்குள்ள சிலர் தன்னை வித்யாசமாக பார்ப்பது எதுவும் அவளுக்கு தோன்றவில்லை.
தன்னுடைய நான்கு வருடங்களையும் இனி இங்கு தான் கழிக்க போகிறோம் என்பதிலேயே அவளுடைய எண்ணங்கள் முழுவதும் இருந்தது.
அவளுடைய கண்கள் சத்யபாமா யூனிவர்சிட்டி என்ற பெயரினை பொருத்தி இருந்த கல்லூரியின் நுழைவு வாயிலை பார்த்தது.
அங்கு செல்வதற்கு தான் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து இரண்டு சாலைகளை கடந்து செல்லவேண்டி இருந்தது.
அங்கே சிலர் சாலையினை கடந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவர்களுடன் இணைந்து சாலைகளை கடந்து ஒரு வழியாக சத்யபாமா யூனிவர்சிட்டியின் நுழைவு வாயிலை சென்றடைந்தாள்.