Nice“மணி மூணாகப் போகுது.. வந்து சாப்பிடுங்க.. ரோகிணி எங்கயும் போக மாட்டா.. பத்து நிமிஷம் கழிச்சு அவளைப் பார்க்கலாம்..” என்றவர் கையோடு அவர்களை டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றார்..
“ஆன்ட்டி சாப்பிடுங்கன்னு சொல்றாங்க.. நீ என் பசி தெரியாம ரோகிணியைப் பார்க்கணும்னு சொல்ற.. அவளைத் தானே ரெண்டு நாள் புல்லா பார்க்கப் போறோம்.. சாப்பாட்டை விட அவ முக்கியமாடி?” உணவை வாயில் வைத்துக் கொண்டே குகா கூற, அகல்யா தலையில் அடித்துக் கொண்டாள்..
“சரியான சாப்பாட்டு ராமி.. உன்னைக் கட்டிக்கப் போறவன் ரொம்ப பாவம்.. தீனி வாங்கிப் போட்டே அவன் சொத்து காலி ஆகிடும்..”
“என் ஆள் கூட பரவால.. உன் ஆள் உனக்கு மேக் அப் செட் வாங்கிக் கொடுக்கவே ஒரு லட்சம் சம்பாதிக்கணும்.”
“ச்சீ பே..”
“நீ பே..”
உணவை முடித்துக் கொண்டு இருவரும் ரோகிணி இருந்த அறைக்குச் சென்றனர்..
“வருங்கால மாமி..” என்று கூறிக் கொண்டே இருவரும் அவளைக் கட்டிக் கொண்டனர்..
“இது தான் வர நேரமாடி? சென்னைல இருந்து நேரா இங்கயே வர வேண்டியது தானே..” தன்னைக் கட்டிக் கொண்ட இருவரையும் விளக்கியவள், முறைத்துக் கொண்டே கேட்டாள்.
“புடவை வீட்ல தானே இருக்கு. அதை எடுக்க தான் வீட்டுக்குப் போயிட்டு அங்க இருந்து வந்தோம். இன்னும் பங்க்ஷன் ஆரம்பிக்கலைல அப்பறம் என்ன..” குகா கூற
“ஆரம்பிச்ச பிறகு வந்திருந்தீங்க இன்னும் டென்சன் ஆகிருப்பேன்..”
“கூல் கூல் மாமி..”
மெத்தையில் ரோகிணி அமர்ந்திருக்க அகல்யா அவள் மடியில் படுத்துக் கொண்டாள்..
“மாமி இனிமே இந்த மடியில எங்களுக்கு இடம் இல்லை.. உங்க அண்ணாக்கு மட்டும் தான் இடம்..” சோகமாக கூறுவைதைப் போல் அகல்யா கூற
“ஐயோ.. மாமி, அண்ணா இப்படி எல்லாம் சொல்லாதிங்கடி.. இந்த ஸ்லாங்கே எனக்குப் பிடிக்கலை..”
“அயர் பையனை உஷார் செஞ்சுட்டு இந்த ஸ்லாங் பிடிக்கலைன்னு சொன்னா என்னடி அர்த்தம்..” சொல்லிக் கொண்டே குகாவும் அவள் மடியில் படுத்துக் கொண்டாள்.
“அவரைப் பிடிச்சுருக்கு.. அவரோட பாமிலி பழக்க வழக்கம் எல்லாம் பிடிக்கலை..”
“மாப்பிள்ளைகிட்ட ஈவினிங் சொல்லிடுவோம்டி குகா.”
“சொல்லிக்கோங்க.. நானே அவர்கிட்ட நிறைய டைம் சொல்லிட்டேன்..”
“அவங்க எல்லாம் ரொம்ப ஆச்சாரமா இருப்பாங்க? நீ எப்படி அங்க குப்பைக் கொட்டப் போறன்னு தான் எனக்கு தெரியலைடி..” அகல்யா கூற
“உன்னை மாதிரி சாயங்காலம் குளிக்கிறவங்க தான் அதுக்கு கவலைப்படனும்.. ரோகிணி காலைல குளிச்சுட்டு தான் சாப்பிடுவா.. நீ பார்த்து நடந்துக்க உன் லவ்வர் வீட்ல குளிச்சா தான் சோறுன்னு சொல்லிடப் போறாங்க..”
“சோறுன்னு சொன்னா நீ தாண்டி பல்லைக் காட்டுவ நான் இல்லை..”
“கூழ் ஆனாலும் குளித்து குடி பாலிசிய நானும் ரோகிணியும் பாலோ பண்ணுவோம்.. ஆபீஸுக்கு போற நாள் மட்டும் தான் மார்னிங்கே குளிப்ப.. மீதி நாள் எல்லாம் குளியலுக்கு லீவ் விடுற கேஸ்.. நீ ஆச்சரத்தைப் பத்தி அவளுக்கு கிளாஸ் எடுக்குற பார்த்தியா? எல்லாம் நேரம்..”
“நீ மூடு..”
“நீ மூடு...”
“ச்சை.. ரெண்டு பேருமே மூடுங்கடி.. அவன் அவன் இங்க கல்யாணக் கவலைல இருக்கான்.. நீங்க வேற..” கடுப்புடன் கூறினாள் ரோகிணி..
“மூஞ்சியப் பார்த்தா கவலை மாதிரி இல்லையே.. கலையா தானே இருக்க..”
“போங்கடி.”
மூவரும் சிறிது நேரம் இப்படியே பேசிக் கொண்டிருந்தனர்.. நான்கு மணி ஆனா சமயம் ரோகிணியை அலங்கரிக்க அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வரவும் மூவரும் அரட்டையை நிறுத்தினர்..
“அகல் நீயும் இப்பவே கிளம்ப ஆரம்பி.. அப்போ தான் ஆறு மணிக்கு முன்ன கிளம்புவ..” குகா சிரித்துக் கொண்டே கூற
“உனக்கு என்ன எப்பப்பார்த்தாலும் என்னையே வம்பிழுத்துட்டு இருக்க.. போ”
மாலை ஆறு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைப்பெற ஆரம்பித்தது.. ரோகிணி மேடையில் மணமகனுடன் இருக்க, தோழிகள் இருவரும் லெஹங்கா அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்..
“குகா..” அகல் அவளின் கையைச் சுரண்ட
“என்னடி..”
“என்னை சோலோ பிக் ஒன்னு எடுத்துக் கொடேன்..”
“எதுக்கு?” என்றாள் புருவங்கள் இடுங்க.
“டிபி வைக்கடி..”
“நம்ம மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை டிபில வை..”
“அடியே ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்ச
“சென்னை போனதும் ஒரு நாள் லஞ்ச் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கணும்.. டீலா?”
“ஒரு போட்டோக்கு இருநூறு ருபாய் செலவு பண்ணனுமா? ஏன்டி இப்படி அநியாயம் பண்ற?” அகல்யா அலுத்துக் கொள்ள
“முடியாதுனா போ..”
“சரி வாங்கித் தரேன்.. இந்தா” போனை அவள் கையில் கொடுத்தாள்..
குகாவும் தோழியை வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்..
இரவு உணவை முடித்துக் கொண்டு தோழிகள் மூவரும் பன்னிரெண்டு மணி வரை பேசிக் கொண்டிருக்க, ரோகிணியின் தாய் தான் அதட்டல் போட்டு மூவரையும் உறங்க வைத்தார்..
மறுநாள் காலை புடவையில் குகாவும் அகல்யாவும் அங்கும் இங்கும் சுற்றியபடி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.. பெண் வீட்டின் சார்பாக ரிஷப்ஷனில் ரோகிணியின் சொந்தத்தில் ஒரு பெண் நிற்க, அவளிற்கு துணையாக குகாவை நிற்க சொல்லியிருந்தார் ரோகிணியின் தாய்..
அகல்யா ரோகிணியின் தாயுடன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்..
திருமணம் இனிதே முடிய, குகாவையே வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரோகிணியின் தாயின் தோழிக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருந்தது..
தன் தோழியிடம் குகாவைப் பற்றி அவர் விசாரிக்க
“நம்ம ரோகிணி கூட படிச்சப் பொண்ணு.. இப்போ சென்னைல வேலைப் பார்க்குறா..” என்றார்
“ரோகிணி வேலை பார்க்கிற ஆபிசா?” அவர் கேட்க
“இல்ல இவ வேற கம்பெனில இருக்கா..”
“நம்ம மாறனுக்கு பார்க்கலாம்ன்னு யோசிக்கிறேன்.. நீ என்ன சொல்ற?”
“தாராளமா கேக்கலாம்.. ரொம்ப நல்லப் பொண்ணு..”
“நீ ப்ரீ ஆனதும் அவங்க வீட்ல இதைப் பத்தி பேசிட்டு, என்ன சொன்னாங்கன்னு சொல்லு..”
“ஒரு வாரம் டைம் கொடு.. நான் அவங்க வீட்ல பேசுறேன்..”
“அந்த பொண்ணு லவ் எதுவும் பண்ணுதா?” ரோகிணி காதல் திருமணம் என்பதால் அவர் அவ்வாறு கேட்க
“அப்படி எதுவும் இல்லை.. எதுக்கும் ரோகிணி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுறேன்..”
“சரி.. நல்லது நடந்த சந்தோஷம்..”
அகல்யா குகா இருவருக்கும் அன்று இரவு தூத்துக்குடியில் இருந்து ரயில் என்பதால் ஒன்பது மணிவரை மண்டபத்தில் தோழியுடன் இருந்தனர்..
மணமக்கள் இருவரையும் கலாய்த்துக் கொண்டே பொழுதைக் கழித்தனர்.. கிளம்பும் தருவாயில் குகா
“ஹேப்பி மேரீட் லைப்டி செல்லம்..” என்று ரோகிணியை அணைத்து வாழ்த்துக் கூறிவிட்டு அவள் கணவனிடம் “சென்னை வந்ததும் ட்ரீட் வெச்சுடுங்க..” என்றாள்
“கண்டிப்பா.. உங்க ரெண்டு பேரை பத்தியும் நிறையா சொல்லிருக்கா.. ப்ரீயா இருக்கப்ப வீட்டுக்கு வாங்க..”
“கண்டிப்பா அண்ணா..” என்றவர்கள், விடைபெற்று ஸ்டேஷனிற்கு சென்றனர்.