காசிராஜன் அவரின் தோட்டத்திற்கு சென்றிருக்க, சந்திராவோ மகளிடம் வெந்தய களி கொடுத்துவிட்டவர், மற்ற வீட்டு வேலைகளை செய்துகொண்டு இருக்க, கணேசன் அந்த காலை பொழுதில் எவ்வித முன்னறிவுப்பும் இன்றி வீட்டிற்கு வந்தது கொஞ்சம் திகைப்புத்தான்.
இருந்தாலும் “வாங்கண்ணே…” என்று வரவேற்று தண்ணீர் கொடுக்க,
“வர்றேன் ம்மா.. சொல்லாம திடீர்னு வந்துட்டேன். காசி இல்லையா?” என்று கேட்டபடி அவரும் நீர் அருந்தினார்.
“தோட்டத்துல இன்னிக்கு ஆள் வர்றாங்க வேலைக்கு. அதான் போயிருக்காரண்ணே. இருங்க கால் பண்றேன்..” என்று சொல்ல,
“நானே பண்றேன் ம்மா. போன் போட்டுட்டு வரலாம்னு தான் இருந்தேன். சரி லீவ் தானே வீட்ல இருப்பான்னு வந்துட்டேன்..” என்றவர் காசிராஜனுக்கு அழைத்து வீட்டிற்கு வருமாறு அழைத்தவர்,
“எங்க மீனாவ காணோம்..?“ என்றார் சந்திராவிடம்.
“வெந்தய களி செஞ்சேண்ணே. பெரிய வீடு வரைக்கும் போயிருக்கா, குடுக்கிறதுக்கு. உங்களுக்கு டீ போடவா?” என,
“காசி வரட்டும்மா..” என்றவரின் முகம் பார்த்தாலே தெரிந்தது என்னவோ முக்கியமான விஷயம் என்று.
கணேசன் வீடு வந்திருக்கிறேன், நீயும் வா என்று அழைக்கவுமே காசிராஜனுக்கும் புரிந்துபோனது என்னவோ விஷயமென்று. அதனால் அடுத்த கால் மணி நேரத்தில் அவரும் வந்துவிட, சந்திராவோ இருவருக்குமே தேநீர் கொண்டு வந்து கொடுக்க,
“நீயும் உக்காரு சந்திரா. பேசுறப்போ நீயும் இருக்கிறது நல்லது..” என்ற கணேசன்,
“என்னடா இப்படி கேக்குறானேன்னு என்னை தப்பா எடுத்துக்கக் கூடாது காசி..” என்று பீடிகை போட,
“அட முதல்ல என்ன விசயம்னு சொல்லு கணேசா..” என்றார் காசியும்.
“அது… நம்ம மீனாக்கு கல்யாண பேச்சே ஆறுமாசம் கழிச்சுத்தான் எடுக்கனும்னு நீ சொன்ன. அதுனால நானும் சரின்னு இருந்துக்கிட்டேன். இப்போ என்னடான்னா என் மச்சான், அதான் லட்சுமியோட தம்பி ரொம்ப நெருக்கடி குடுக்கிறாப்ள. அவன் பொண்ணைத்தான் பேசணும்னு. எனக்கும் லட்சும்மிக்கு மீனாவ கொண்டு போகணும்னு தான் விருப்பம்…” என்றுவிட்டு, இருவரின் முகத்தையும் கணேசன் பார்க்க, சந்திராவின் முகம் அப்படியே வாடிப் போனது.
இது ஊருக்குள் பலரின் குடும்பத்தில் நடக்கும் ஒன்றுதான். இந்த காலத்திலும் சொந்தமும், சொத்தும் விட்டுப் போய்விடக் கூடாது என்று முறையில் சில கட்டாய திருமணங்கள் கூட நடக்கத்தான் செய்கிறது.
காசிராஜனோ “சரி கணேசா.. என்ன செய்யலாம் நீயே சொல்லு?” என்றார், நண்பனின் மனதினில் இருப்பது முழுதாய் வெளிவரட்டும் என்று.
“வினோதன் வந்திருக்கான். மீனாளும் இங்கதானே இருக்கு. ரெண்டு பேர்கிட்டயும் நம்ம விருப்பத்தை சொல்லிடலாம் காசி. அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே. என்னத்துக்கு காலத்தை கடத்தணும். சரின்னு சொல்லிட்டாங்கன்னா, நீ சொல்றப்போவே கல்யாணம் வச்சுக்கலாம். இல்லைன்னு எதுவும் மாற்று கருத்து வந்ததுன்னா, அடுத்து என்னன்னு நானும் யோசிக்கணும் இல்லையா.
இன்னிக்கு என் மச்சானும் அவன் பொண்டாட்டியும் வீட்லயே வந்து உக்காந்திருக்காங்க. என்னால நெருக்கடிய தாங்க முடியல காசி. அதனால வேற வழியில்லாம தான் இங்கன வந்தேன் இப்போ. வினோதனுக்கு பார்த்து முடிச்சு எல்லாம் பண்ணா தான், அடுத்து சின்னவனும் இருக்கான். என் நிலைமை இது. தப்பா எடுத்துக்கக் கூடாது..” என்றவர் தயங்கியே மீண்டும் காசி மற்றும் சந்திராவைக் காண, சந்திராவிற்கு இப்போது தான் முகம் கொஞ்சம் தெளிந்தது.
காசிராஜனும், கணேசனும் இப்போது பழகி நண்பர்களானவர்களா என்ன? இல்லையே.. சிறு வயது முதலே நண்பர்கள். ஒருவரின் பேச்சிலும், முகத்தில் தெரியும் சிறு மாற்றத்தையும் வைத்தே அவர்கள் என்னவிதமான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதனை மற்றவர் புரிந்துகொள்வார்களே.
கணேசன் இத்தனை விளக்கம் கொடுத்த பிறகும் கூடவா, காசிராஜனுக்கு நண்பரின் சூழ்நிலை புரியாமல் போகும். ஆதரவாய் கணேசனின் கரம் பற்றியவர் “இதுக்கு நீ இத்தனை டென்சன் ஆகணும்னு இல்லை கணேசா. சொந்தத்துல பொண்ணு மாப்ளை இருந்தா யாரும் பேசுறது தான. மீனா வரட்டும் பக்குவமா எடுத்துச் சொல்றேன். நீயும் வினோதன் கிட்ட பேசு. அவங்க ரெண்டு பேரும் என்ன முடிவு பண்றாங்களோ பண்ணட்டும்…” என்றிட,
“ரொம்ப ரொம்ப சந்தோசம் காசி..” என்று நண்பரின் கரத்தை ஒரு தட்டு தட்டியவர் “நீயும் தப்பா எடுத்துக்காத சந்திரா..” என்று சொல்ல,
“அட நிம்மதியா வீட்டுக்கு போங்கண்ணே.. கலங்க என்ன இருக்கு. நம்ம பிள்ளைங்க முடிவு நல்லதா வரும்னு நினைப்போம்..” என்று தைரியம் சொல்லி அனுப்பின்னார்.
மீனாள் வீட்டில் இருந்திருந்தால் வேறு. ஆனால் இல்லையே. பெரிய வீட்டிற்கு வந்தவளின் பார்வை ப்ரித்வியை தேடினாலும் அவளின் கால்கள் நேராய் நகர்ந்தது என்னவோ அழகராசியின் அறை நோக்கித்தான். ஆனால் அவளே எதிர்பாராதா ஒன்று வினோதன் அங்கிருந்தது.
அவனைப் பார்த்ததுமே “ஆ! யாரது திடீர்னு இங்க?” என்று வேண்டுமென்றே கேலியாய் பேச,
“ஆமா நீ என்ன இங்க?” என்றான் பதிலுக்கு அவனும்.
“எங்க ஆச்சி வீடு நான் வர்றேன்..” என்று கழுத்தை வெட்டியவள் “என்ன தாத்தா..” என்று அவரையும் துணைக்கு அழைக்க,
“உங்க வம்புக்கு நான் வரல ஆத்தா.. வீட்டு வேலை எப்படின்னு பார்க்க வினோதன் வந்தாப்டி போல. பார்க்கவும் நான் உள்ள அழைச்சிட்டு வந்து பேசிட்டு இருக்கேன்..” என,
“ஓஹோ..!” என்றவள் சுற்றிலும் பார்வையை ஓட்டி “எங்க மகாராஜா குடும்பத்துல ஒருத்தரையும் காணோம்..” என்று ரகசியம் போல கேட்க,
“வாலு கழுத..” என்று செல்லமாய் அவளின் தலையில் கொட்டிய பெரியவர் “ஆச்சி உள்ள இருக்கா போ..” என,
வினோதனும் “சரி தாத்தா.. நானும் அப்படியே கிளம்புறேன்..” என்று எழுந்துகொள்ள, சரியாய் அதேநேரம் ப்ரித்வி வந்துவிட்டான்.
“என்ன வினோதன் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டவனின் பார்வை என்னவோ மீனாளின் மீதுதான்.
‘நம்ம நினைச்சது சரிதான்.. செல்லக்கிளி வந்திருக்கு..’ என்று எண்ணிக்கொண்டே அவளைப் பார்த்து கண் சிமிட்ட, அவளோ வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டு அழகரசி அறைக்கு சென்றுவிட்டாள்.
‘கண் சிமிட்டிறது பாரேன்.. இந்த வினோதன் மட்டும் இதை பாத்திருந்தா அவ்வளோதான்..’ என்று எண்ணிக்கொண்டவள் “ஆச்சி..” என்று சத்தமாகவே அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல,
“வாடியம்மா தங்காளே..” என்று வழக்கம்போலவே பேத்தியை கொஞ்சிட
“அம்மா வெந்தய களி குடுத்துவிட்டாங்க ஆச்சி..” என்று அவரிடம் கொடுக்க,
“நான் தான் செஞ்சுதர சொல்லி கேட்டேன். நம்ம ப்ரித்விக்கு தான். ராத்திரி முழுக்க கண்ணு முழிக்கிறான்.. காலைலயும் கட்டட வேலை நடக்குறப்போ அங்கன நிக்கிறான். பாரு கண்ணெல்லாம் செவந்து போச்சு அவனுக்கு.. வந்ததுக்கும் வாடி போயிட்டான். அதான் உடம்புக்கு குளிர்ச்சியா இருக்கும்னு செஞ்சு தர சொன்னேன்..” என்று கதையளந்தபடி, அவள் கொடுத்ததை வாங்கி வைத்துக்கொண்டார்.
‘ஓ..! ப்ரித்வி மாமாக்கு தானா..’ என்று நினைக்கும்போதே ஒரு சிறு சந்தோசம். தன் வீட்டினில் என் அம்மா செய்ததை நான் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்கிற மகிழ்வு.
இருந்தாலும் “இதெல்லாம் அவங்க சாப்பிடுவாங்களோ என்னவோ?!” என்று கேட்டு வைக்க,
“அதென்ன டி இப்படியொரு சலிப்பு உனக்கு. எடுத்துச் சொன்னா சாப்பிடுவான். கற்பகம் பண்ணது அன்னிக்கு பக்குவம் சரியில்ல. ராதாக்கு இதெல்லாம் வர ”போயி இந்த பையை டைனிங் டேபிள்ள வச்சிட்டு, நான் கூப்பிட்டேன் அவனை கூட்டிட்டு வா.. நானும் பின்னாடி வர்றேன்..” என்றிட, ஆசை மாமனை தேடிச் செல்ல அவளுக்கு கசக்குமா என்ன.
உள்ளே எழுந்த துள்ளலை வெளிக்காட்டாமல், அறைவிட்டு வெளியே வர அங்கே யாரையுமே காணோம். வினோதன் கிளம்பியிருப்பான் என்று தெரியும். ஆனால் இந்த ப்ரித்வி.. வீட்டின் பின் பக்கம் வந்து பார்க்க, ப்ரித்வி மீண்டும் அங்கே அந்த வெப்ப மரத்தின் அடியில் இருந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்தான்.
“அதுக்குள்ளே அங்க போயாச்சா?! நான் இங்கதானே இருக்கேன். வேணும்னே பண்றது..” என்று செல்லமாய் கடிந்தவள்,
ஆச்சியிடம் வந்து “இந்த சின்ன மகராஜா அங்க சிம்மாசனத்துக்கு போயாச்சு. இங்க இருந்து நான் போயெல்லாம் கூட்டிட்டு வர முடியாது ஆச்சி..” என்று சொல்ல,
“ரொம்பதான் டி உனக்கு..” என்றவர் “பிருந்தா..” என்று சத்தம் கொடுக்க, அவளோ வினோதனிடம் பேச முடியாத கவலையில் இருந்தவளுக்கு வீட்டில் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்றே கவனத்தில் இல்லை.
மீனாவைப் பார்த்த பிறகுதான் “எப்போ வந்த டி?” என்று வினவ,
“அதுசரி.. என் குரல் கேட்டாலே வெளிய வந்துடுவ நீ.. இப்போ எப்போ வந்தன்னு கேக்குற..” என்று தோழியை ஏற இறங்கப் பார்க்க,
“இல்ல டி தலைவலி கொஞ்சம்..” என்று சமாளித்தாள் பிருந்தா.
ராதாவும் போஸ்ராஜனும் அங்கே ஒன்றாய் வர, மீனாவிற்கு அதற்குமேல் அங்கே இயல்பில் நிற்க முடியவில்லை. முன்னே என்றால் அவள்பாட்டிற்கு நிற்பாள். இப்போதோ ப்ரித்வி மீது இப்படியொரு எண்ணம் பிறக்கவும் அவனின் பெற்றோரிடம் இலகுவாய் பேசக் கூட வரவில்லை.
அதனால் “சரி ஆச்சி நான் கிளம்புறேன். வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு..” என்று சொல்லியவள் “வர்றேன் மாமா.. வர்றேன் அத்தை..” என்று முறைக்கு அவர்களிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியேவிட்டாள்.
ப்ரித்விக்கோ தங்கமீனாள் எப்படியும் இந்த பக்கம் வருவாள் என்கிற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகமாக, பார்வை எல்லாம் வீட்டு பக்கமே இருக்க, அவள்தான் எப்போதோ கிளம்பிவிட்டாளே.
‘என்னதான் செய்றாளோ. எல்லாரோடவும் வாய் பேசுறது. என்கிட்டே மட்டும் நின்னு பேச கூட முடியாது இவளுக்கு. போன் பண்ணாலும் ரெண்டு வார்த்தைல முடிக்கிறது..’ என்று கடிந்துகொண்டே வீட்டிற்குள் வர, அங்கே தான் அவள் இல்லையே.
ஆனால், அவள் எங்கே என்று யாரிடம் கேட்க முடியும்..
போஸ்ராஜனோ “இன்னிக்கு ப்ரீயா இருந்தா என்னோட சூளைக்கு வா ப்ரித்வி..” என்று மகனிடம் பேச,
“மதியம் போல வர்றேன் ப்பா..” என்று அமர்ந்தவனிடம், ஒரு தட்டில் வெந்தய களியும், அதற்கு தொட்டுக்கொள்ள நாட்டுச் சக்கரையும் நெய்யும் கலந்து கூடவே ஒரு வாழைப் பழத்தையும் அந்த தட்டில் வைத்துக்கொண்டு வந்து நீட்டினார் அழகரசி.
“என்ன பாட்டி இது?!” என்று அவன் பார்க்க,
“சாப்பிடு ப்ரித்வி. உனக்குத்தான் செய்ய சொன்னேன்..” என்று குடுக்க,